சித்தாந்த சாத்திரங்கள்

சைவசித்தாந்த சாத்திரங்கள்
1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞான போதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா-இருபஃது, 6. உண்மை விளக்கம், 7.சிவப்பிரகாசம், 8. திருவருட் பயன், 9. வினா-வெண்பா, 10. போற்றிப் பஃறொடை, 11. கொடிக்கவி, 12. நெஞ்சுவிடுதூது, 13. உண்மை நெறி விளக்கம், 14. சங்கற்ப நிராகரணம் என்பன சைவ சித்தாந்த சாத்திரங்கள்,. இவை ஒவ்வொன்றைப் பற்றியும், இடச் சுருக்கம் கருதி, ஓரளவு இங்குக் காணலாம்.
1. திருவுந்தியார்
இது சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் . இந்நூல் சிவஞான போதத்தைப் போலச் சித்தாந்தக் கருத்துக்களைக் கோவைபடக் கூறாது, அவ்வப்போது ஆசிரியர்க்குத் தோன்றிய உணர்ச்சி அநுபவத்தைக் கூறும் 45 செய்யுட்களை உடையது. ஆயின், இவ்வநுபவப் பாடல்கள், சமயசாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர்-உலகம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தையும்,பயன்களையும், பயன் அடையும் நெறிகளையும் விளக்குவனவாகும்.
------------
கடவுள் நிலை
பரம்பொருள் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பது; இயற்கையாகவே மலம் அற்றது; அறிதற்கு அறியது; ஆயினும் உயிர்கள் உய்யுமாறு கருணையாக விளங்குவது; அவ்வருள் காரணமாக அருவத்திலிருந்து உருவமாக வெளிப்படுவது; அது தானாகவே அவ்வுருவைக்கொள்ளும். அப்பரம்பொருள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உயிர்கட்குக் கூட்டுவது; பாவனைக்கு அப்பாற்பட்டது; ஆன்ம அறிவால் அறியப்படாதது; உயிர்களைப் பக்குவப் படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று, தியானம்-மந்திரம்-சைவ வேடம் இவற்றால் உயிர்களை நல்வழிப்படச் செய்வது; பக்குவம் முதிர்ந்தபோது குருவடிவில் வெளிப்பட்டு, தீட்சை செய்து, உண்மை ஞானத்தை உணர்த்துவது; உயிர்கள் செய்தவத்திற்குப் பயன் அளிப்பது; தன் தன்மை அருளி, உயிர்களை வீடு பெறச்செய்வது.
-----------
உயிரின் இயல்பு
உயிர்கள் பல. அவை பாச பந்தத்தால் கட்டுப்பட்டவை. முத்தி நிலையில் பாசம் என்னும் மலம் அற்று நிற்பவை. மெஞ்ஞான நிஷ்டை கூடிய மக்கள் பிறவிப் பெருங்கடல் நீந்தினவராவர்; அவர்கள் ஞானக்கண்ணால் நோக்கும் இயல்பினர்; கசிந்த உள்ளம் உடையவர் ஆதலின் கடவுளை உணரும் சக்தி பெற்றவராவர்,. முத்தி நிலையிற் சிவமாந் தன்மை பெற்றவராயினும் உயிர்கள் உயிர்களே.
சிவமாந்தன்மை பெற வழி
மக்கள் மலம் நீங்கி நிற்றற்கு முயற்சி, சிவன்பால் மறவாத அன்புடைமை, சிவத்தைப் பற்றியே எண்ணியிருத்தல் என்பவை வழிகள் ஆகும்; இவற்றால் உலகின்பாற் செல்லும் பற்றுச் சிவத்தின்பால் செல்லும்; வழிபாடு உறுதிப்படும்;அந்நிலையில் சிவம் குருவாக வந்து, சிவ-தீட்சை செய்து, சிவஞானம் சேர்க்கும். அதனால் திருவருட்சக்தி மனத்தின்கண் பொருந்தியிருக்கும்.
முக்தி நிலை
இது சொல்லொணா இயல்புடையது. அறிவிற்கு எட்டாத உயர்நிலையது; திருவருள் பெற்றவர் இன்புறு நிலை. இந்நிலை அடைந்தோரே, "தொண்டர்" எனப்படுவர். நனவில் தூய மேல் நிலையில் இருப்பவர். அவர்கட்குச் சிற்றின்பமும் பேரின்பம் ஆகும். அவர்கள் பித்தரைப் போலக் காணப்படுவர். ஆயின், அவர்கள் கருத்தும் உயிரும் இறைவன் நினைவை விட்டு நீங்கா இயல்பின.
----------
2. திருக்களிற்றுப்படியார்
இதுவும் சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் மேற்சொன்ன உய்யவந்த தேவ நாயனார் மாணவர்க்கு மாணவர். இவர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் என்னும் பெயர் கொண்டவர். இந்நூல் 100 வெண்பாக்களை உடையது. திருவுந்தியாரின் கருத்தைச் செவ்வையாக விளக்குவது. இது பொன்னம்பலத்திலுள்ள திருக்களிற்றுப்படியில் வைக்கப்பட்டுப் பாராட்டப் பட்டதாதலின், திருக்களிற்றுப் படியார் எனக் காரணப் பெயர் பெற்றது. இந்நூலில், நாயன்மார் வரலாறுகளிலிருந்தும் உதாரணங்கள் தந்து வல்வினை, மெல்வினை என்பன விளக்கப்பட்டுள்ளன. சாத்திர விளக்கங்கள் சில உவமைகளால் தெரிவிக்கப்படுகின்றன. திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் கொண்டு அவற்றின் பொருளை விளக்கும் செய்யுட்கள் இன்பம் பயப்பன.
-----------
இறை
பரம்பொருள் சக்தி-சிவமாக விளங்கும். அவ்வாறு விளங்குவது உலகிற்குத் தாயும் தந்தையுமாகிய நிலையாகும். தூய பொன்னின் நிறம், நகைகளாக மாறிய போதிலும் பொற்கட்டியாய் நின்றபோதும் ஒரு தன்மையாய் விளங்குதல் போல, இறைவன் உலகில் அத்துவிதமாகக் கலந்து ஒன்றன்றாய் இரண்டன்றாய் நிற்பன். கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுபோல, இறைவன் அருளாலே திருமேனி கொள்வான். இவ்வாறு கொள்ளும் திருமேனிகளுள் ஆசிரியத் திருமேனி சிறப்புடையது.
------------
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது-வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்." (செ.45.)
கடல் நீரை முகந்து சென்று நன்னீர் பொழியும் முகில்போல -ஆசிரியனாக வெளிப்படும் இறைவன் அநுபவப் பயனை அறிவுரையாக உபதேசிப்பன். இறைவன் மெய்ஞானிகளைச் சார்ந்து ஆவேசித்து நின்று உபதேசித்தலும் உண்டு. இவ்வுபதேசம் மெய்ஞ்ஞானிகளது செயலன்று; இறைவனது செயலே ஆகும்.. மலம் எல்லாம் நாற்றம் உடையனவாயினும், தூய்மை பொருந்திய பசுவின் சாணம் பிறமலங்களை எல்லாம் நீக்குதல்போல ஆசிரியன் மக்களுள் ஒருவனே எனினும், சிவன் அவனை நிலைக்களமாகக் கோடலால், அவன் பிறவியை ஒழிக்க வல்லவனாவன். கடலகத்தே அலைகளால் அலைப்புறாது ஆடும்படி நின்றவர்க்கும் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளத்தல் அரிது. அதுபோலக் கடவுள் அருள் பெற்றவராயினும் அவர்கள் அவனது முழுப் பெருமையை அறிந்தவராகார். உயிர்கள், தம் அறிவிற் சிவம் விளங்கத் தலைவனையும் (கடவுளையும்) தம்மையும் உணரும்; உணர்ந்த பிறகு உடலுடன் இருப்பினும் பற்று நீங்கப்பெற்றுச் செத்தாரைப் போலத் திரியும்; அவை சிவன் வயப்பட்டு நிற்குமாதலால் மீண்டும் உலக நிகழ்ச்சிகளில் புகா. ஆற்றுநீர் கடலில் கலந்து கடல் நீராகி, மீண்டும் ஆற்றின் படுகையில் மேலேறினும் உப்புத்தன்மை மாறுவதில்லை. அதுபோல, சிவத்தோடு ஒன்றி நிற்கும் மாய்ஞ்ஞானிகளினது அறி- செயற்கருவிகள் மாயை நிலையில் இல்லாமல் சிவ கரணமாக விளங்கும். அவர்களது பற்றற்ற நிலை மணியின்கண் தூங்கும் நாக்கிற்கு ஒப்பாகும். படிகம் தன்னைச் சார்ந்துள்ள பொருளினது நிறத்தைக் காட்டும். தனது நிறத்தைக் காட்டாது. அதுபோல உலகத்தைச் சார்ந்து அவ்வண்ணமாய் இருத்தலும், முத்தி நிலையில் இறைவனைத் தழுவிநின்று அவன் வண்ணமாக இருத்தலும் உயிர் நிலையாகும் .
-----------
சாதனம்
சரியை, கிரியை, யோகம், ஞானம், என்பன உயிர்கட்குச் சாதன நெறிகளாகும். சிவனறம்- வல்வினை, மெல்வினை என இருவகைப்படும். இறைவனைத் துணையெனக் கருதி ஒழுகுவதும், பூசை, தியானம், பாடல், ஆடல் முதலியன நிகழ்த்துவதும் மெல்வினை எனப்படும். சிறுத்தொண்டர் பிள்ளை அரிந்ததும், சண்டீசர் தந்தையைக் கொன்றதும்,அரிவாள் தாயர் தம் கழுத்தையே அரிய முயன்றதும் வல்வினைச் சிவனறமாகும். திருவுருவ வழிபாடும், ஆறு ஆதாரங்களில் இறைவனைத் தியானித்தலும், "ஆதாதர யோகம்" எனப்படும். இறைவனை அகண்டமாய் அருள் வெளியில் மௌனமாக இருந்து வழிபட்டு அவனோடு ஒற்றுமையுற்று நிற்றல் "நிராதார யோகம்" எனப்படும் . ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) இறைவனைக் காட்டும் இயல்புடையது. நாத தத்துவத்திற்கு அப்பால் உள்ள இறைவனை, யோக முடிவில் கேட்கும் சிலம்பொலி வழியே சென்று அடைய முயலவேண்டும். "நான் பிரமம்" என்பது மயக்கவுணர்ச்சியேயாகும். உயிரினிடம் சிவ வடிவமாகிய ஞானத்தைக் கண்டு வணங்கிச் சிவபெருமானுக்கு அன்பு நீரால் திருமஞ்சனமாட்டித் தன்னை அவனுக்கு வாடாத ஒரு மலராகச் சார்த்தி வழிபடின் பிறவி ஒழியும். அறிவு நெறியும் அன்பு நெறியும் பிறப்பை அறுக்க வல்லவை.
------------
இறைவனை அணைந்தோர் இலக்கணம்
இறைவனை அணைந்தவரே அடியாராவர். ஆலமரத்தைத் தன்னகத்தே அடக்கிய வித்துப் போலத் திருவருளைத் தன்னகத்தே அடக்கியவர் அடியார். இறைவன் பெருமையை அடியார் அறிவர். அடியார் பெருமையை இறைவன் அறிவான். இதற்குக் கண்ணப்பரும் காளத்தியப்பருமே சான்றாவர். இறைவன் பக்தி வலையிற்படுபவன் என்பது தெளியலாம். ஞான நெறி நின்றவர்க்குக் காலம், இடம், திசை, இருக்கை என்பன இல்லை . சிவஞானமும்,சிவபோகமும் வித்தும் முளையும் போல்வன.
-----------
3. சிவஞானபோதம்
இது மேற்சொன்ன 14 சாத்திரங்களில் தலைசிறந்தது. சித்தாந்த உண்மைகள் கோவைபடச் செய்யப்பட்ட செந்தமிழ் நூல். திருவெண்ணெய் நல்லூர்-மெய்கண்ட தேவர் என்னும் வேளாள அறிஞர் செய்தது; உரைநடைப் பகுதியும் செய்யுட் பகுதியும் உடையது; உரைநடைப்பகுதி மேற் கோள்களையும் ஏதுக்களையும் உடையது; செய்யுட் பகுதி 12 சூத்திரங்களாகவும் 81 வெண்பாக்களாகவும் உள்ளது. இப்பன்னிரண்டு சூத்திரங்களும் ரௌரவ ஆகமத்தில் உள்ள 12 வடமொழிச் சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு என்பது டாக்டர் ரமண சாஸ்திரி போன்ற ஒருசார் அறிஞர் கருத்து. சுவாமி வேதாசலம், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்ற அறிஞர்கள் அது முதல் நூலே என்று கருதுகின்றனர். தென்னிந்திய சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவரான M.பாலசுப்பிரமணிய முதலியார் (B.A., B.L.,) சிவஞான போதம் மொழிபெயர்ப்பன்று என்பதற்கு 120 காரணங்கள் காட்டி 1949-இல் சிறுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெய்கண்டார் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் பரஞ்சோதி மா முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் நூலில் உள்ள முதல் மூன்று சூத்திரங்கள் பிரமாண-இயல் எனவும், அடுத்த மூன்றும் இலக்கண-இயல் எனவும், அடுத்த மூன்று சூத்திரங்கள் சாதன-இயல் எனவும், கடைசி மூன்றும் பயன்-இயல் எனவும் பெயர்பெறும்.
---------
பிரமாண -இயல் பதி, பாசம், பசு என்னும் மூன்றும் உண்மை என்பதை 3 சூத்திரங்களால் விளங்கும். இலக்கண- இயல் பசு, பாசம், பதி என்னும் மூன்றன் இலக்கணங்களை முறையே மூன்று சூத்திரங்களால் விளக்கும். சாதன-இயல் என்பது சாதனம் அடைதற்குரியவர் உயிர்கள் என்பதையும், இறைவன் திருமேனி கொண்டு ஞானம் உணர்த்தலையும், அங்ஙனம் ஞானம் கைவரப் பெற்ற உயிர் ஐந்தெழுத்து ஓதிப் பயன்பெறலும் முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். பயன்-இயல் என்பது பாச நீக்கம், சிவப்பேறு, சிவப்பேற்றினை நிலை நிறுத்த நிகழ்வன இன்னவை என்பன முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். இவ்வுண்மைகள் யாவும் தருக்க முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
1. பிரமாண இயல்
முதற் சூத்திரத்தில் கடவுள் உண்மையும், அவர் எல்லாவற்றையும் ஒடுக்கி மீளத் தோற்றுவிக்கும் முதற் பெருமானாகிய சிவன் என்பதும் கூறப்பட்டுள்ளன. கடவுள் உயிர்களுடன் அத்து விதமாக நின்று அவைகட்கு வினைப்பயனை ஊட்டும் முறையும் உயிர்கட்கு மலபந்தத்தால் பிறப்பு இறப்பு நிகழும் முறையும் 2-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. மூன்றாம் சூத்திரம் உயிர் சூன்யத்தை அறிவது, பருவுடல், அறிகருவிகள், நுண்ணுடல், பிராணவாயு முதலியவற்றிற்கு வேறானது, தானே அறிவதன்றி உணர்த்த உணர்வது, உடற் கரணங்கள் கூடியிருப்பினும் அவற்றிற்கு வேறாய் நின்று அறிவது என்பன குறிக்கப்பட்டுள்ளன.
2. இலக்கண இயல்
உட்காரணங்கள் ஆகும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பவவற்றுள் ஒன்று அன்றாய் வேறாய் நிற்பது உயிர். அது அநாதி கால முதலே ஆணவ மலத்தாற் கட்டுண்டு கிடப்பது. புற-அகக் கருவிகளும் உயிரும் அமைச்சும் அரசும் போல விளங்குவன. உயிர்கட்கு அக்கருவிகள் துணை செய்வன. இவை யாவும் தொழிற்படுங்காலம் உயிர்கட்கு "நனவு நிலை" எனப்படும். இவற்றுட் சில குறைந்த காலம் உயிர்கட்குக் "கனவு நிலை"; மேலும் சில குறைந்த பொழுது "உறக்க நிலை" எனப்படும். இவை யாவும் நீங்கி உயிர் தன்னிலை நின்றபோது "பேருறக்க நிலை" எனப்படும். உயிரின் அகங்காரமும் ஒடுங்கிய நிலை "உயிர்ப்பு அடக்கம்" எனப்படும். இவை அனைத்தும் நான்காம் சூத்திரத்துட் கூறப்பட்டுள்ள செய்திகள்.
கருவிகள் அறிவற்றன ஆதலின் தம்மையும் அறியா; தம்மைச் செலுத்தும் உயிரினையும் அறியா; அவைபோல உயிர்களும் தம்மை அறியா; தம்மைச் செலுத்தும் இறைவனையும் அறியா என்பது ஐந்தாம் சூத்திரத்துப் பொருளாகும். சத்து, அசத்து என்னும் இரு மொழிகட்கும் இலக்கணம் உரைப்பது ஆறாம் சூத்திரம். "சத்து" என்றும் *கெடின்றி விளங்கும் பொருள். எனவே, இறை ஒன்றே அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகும்; ஆயினும் சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களாகிய இறை, உயிர், உலகம் என்பன என்றும் உள்ள பொருள்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவை. ஆதலின் அவை மூன்றும் "சத்தே" ஆகும். உயிரும் உலகமும் விகாரமடைகின்றமையின், அசத்தாதல் பெறப்படும். இம்மூன்றினையும் வேறு பிரித்து அறிதற்கு அவை முறையே சிவ-சத்து, சத-சத்து,சட-சத்து என்று குறிக்கப்பட்டன.
3. சாதன இயல்
சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் சிறப்பிலக்கணம். அஃது அசத்தாகிய உலகத்தையும் சத்தாகிய பரம் பொருளையும் அறியவல்லது; அசத்தை விட்டுச் சத்தைப் பற்றக்கூடியது என்பது ஏழாம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. உயிர்களின் தவத்தால் இறைவன் குருபரன் வடிவங் கொண்டுவந்து, பக்குவம் உடையார்க்கு ஞானத்தை உணர்த்தித் தன்பால் அவர்களைச் சேர்ப்பன் என்பதை எட்டாம் சூத்திரம் விளக்குவதாகும்; ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஓதி, ஞான நிலையைக் காக்க வேண்டும் என்பது ஒன்பதாம் சூத்திரத்திற் கூறப்படுகிறது.
4. பயன் இயல்
இவ்வாறு ஞானத்தைப் பேணும் -உயிர்கள் இறைவன் தம்முடன் ஒற்றித்து நிற்றலால் பாச நீக்கம் பெறும் என்பது பத்தாம் சூத்திரத்துள் விளக்கப்படுகிறது. இறைவன் உயிர்கட்குத் துணையாக நின்று சிவப்பேறு அல்லது முத்தி நிலையைக் காட்டுவான், அவை காணுமாறு உதவியும் செய்வான் என்பது பதினோராம் சூத்திரத்தில் கூறப்படுகிறது. சீவன் முக்தர்கள் மலநீக்கக் கருத்துடையவராய், அடியார் இணக்கம் உடையவராய், சிவ வேடத்தையும் சிவன் கோவிலையும் வழிபடும் நியமம் உடையவராய் நிற்பர் என்பது 12-ஆம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது.
4. சிவஞான சித்தியார்
இதனையும் அடுத்துவரும் இருபா இருபஃது என்னும் நூலையும் இயற்றியவர் மெய்கண்டார் முதல் மாணவராகிய அருள்-நந்தி-சிவாசாரியர் என்பவர். "சிவஞான சித்தியார்" என்றும் நூல் சிவஞான போதத்தின் வழிநூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. சிவஞான போதத்தில் அவையடக்கம் கூறிய ஒரே பாட்டினை அடிப்படையாகக்கொண்டு, "பரபக்கம்" தோன்றியது. "சுபக்கம்", சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களின் பொருளை 12 அதிகாரங்களில் விரித்து விளக்குவது.
சிவ ஆகமப் பிரமாணங்களை ஒப்புக்கொள்ளாத சமயங்கள் புறச்சமயங்கள் எனப்பட்டன. வைதிகச் சார்பில்லாத சமயங்கள் "புறப்புறச் சமயங்கள்” எனவும். வைதிகச் சார்புடையவை "புறச்சமயங்கள்" எனவும் கூறப்பட்டன. புறப்புறச் சமயிகளுள் உலகாயதர், சௌத்ராந்திகர், யோகசாரர், மாத்யமிகர், வைபாடிகர் ஆகிய நால்வகைப் பௌத்தர், நிகண்டவாதிகள், ஆசீவகர் என்னும் இருவகைச் சமணர் அடங்குவர். பட்டாசாரியன் மதம், பிரபாகர மதம் என்னும் இருவகை மீமாம்சக மதமும், சத்தப் பிரமவாதம்-மாயாவாதம்- பாற்கரிய வாதம்-கிரீடப் பிரம வாதம் என்னும் நால்வகை ஏகான்ம வாதமும், பாஞ்சராத்ரிகம் என்னும் வைணவ மதமும் புறச்சமயத்துள் அடங்கும். இவர் அனைவருடைய சமயக் கொள்கைகளைக்கூறி, சித்தாந்தத்துடன் முரண்வனவற்றை மறுத்துச் சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதே "பர பக்கம்" என்பது. இது 301 செய்யுட்களைக் கொண்டது.
சுபக்கத்தில் சிவஞான போதப் பொருளே விரித்துரைக்கப்படுதலின், அது பற்றிய விபரம் இங்குத் தேவை இல்லை. இப்பகுதி 828 செய்யுட்கள் கொண்டது. சித்தியாரின் பெருமையை, "சிவனுக்கு மேல் தெய்வமில்லை, சித்திக்கு விஞ்சிய நூலில்லை" என்னும் பழமொழியாலும் தாயுமானவர் பாராட்டுரையாலும் நன்குணரலாம்.
5. இருபா இருபஃது
இது, ஞான-குருவாகிய மெய்கண்டாரை முன்னிலையாக்கி, வினாவுதல் போலவும், அவர் விடை கூறுதல் போலவும், சித்தாந்தக் கருத்துகளை 20 செய்யுட்களில் கூறும் நூல். ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும்,கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருள் தொடர்களாகிய"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே", "உன்னிலுன்னும் உன்னாவிடில் விட்டிடும்" என்பவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. "இரு நிலனாய்த் தீயாகி" என்று தொடங்கும் அப்பர் திருத்தாண்டகத்திற்கும். "ஆட்பா லவர்க்கருளும் ஆதிமாண்பும்”38 என்றும் திருஞான சம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச்சிறுநூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக்கும் பெருமையுடையது.
------------
6. உண்மை விளக்கம்
இது மெய்கண்ட தேவரது மற்றொரு மாணவரான திருவதிகை-மனவாசகம் கடந்தார் என்பவர் செய்தது; 53 வெண்பாக்களை உடையது; இது முப்பத்தாறு தத்துவங்களையும், ஆணவம் இருவினை என்பவற்றின் இயல்பையும், ஆன்மாவின் இயல்பையும் , கடவுளின் இயல்பையும், ஐந்தெழுத்தின் உண்மையையும், தம் ஆசிரியரிடத்துத் தமக்கு விளக்கும்படி வேண்ட, ஆசிரியர் விடையளித்ததுபோலச் செய்யப்பட்ட நூலாகும். முத்தியிலும் மூன்று பொருளாகும் இறை, உயிர், உலகம் உண்டு என்று விளக்கும் பெருமையுடையது இன்னூல்.
------------
உமாபதி சிவாசாரியார் இயற்றிய நூல்கள்
1. சிவப்பிரகாசம்
இது சிவஞான போதத்திற்குச் சார்பு நூலாகும். இதன் பாயிரத்துள் திருக்கயிலாய பரம்பரை ஆசிரியர்கள் இன்னார் என்பதும், சைவ நூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஓதப்பட்டுள்ளன. நூலின் அவையடக்கத்தில் நூல்களை ஆராய்ந்து உண்மை தெரியும் முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது. பழமை பற்றி ஒன்றை நன்றென்றும், புதுமை பற்றி ஒன்றைத் தீதென்றும் கொள்ளுதல் தவறு என்பது ஆசிரியர் கருத்து.
இந்நூல் நூறு விருத்தங்களை உடையது. இதில், சைவ சித்தாந்த அத்வைத நிலை-உடலும் உயிரும், கண்ணொளியும் கதிரொளியும், உயிரறிவும் கண்ணொளியும் போல இரண்டறக் கலத்தல் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆணவம், கன்மம், வினைப்பயன் வரும் வழிகள், மாயையின் பிரிவுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பல சமயத்தாரின் முத்தி பேதங்கள் வகுத்துக்கூறி, அவற்றிற்கு மேலதாய்ச் சித்தாந்த முத்தி விளங்கும் முறைமை உணர்த்தப்பட்டுள்ளது.
2. திருவருட்பயன்
இது குறள் வெண்பாக்களால் ஆயது; பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வோர் அதிகாரத்தும் பத்துக் குறள்கள் உண்டு. இறைவனது இயல்பு கூறும் முதல் அதிகாரம் "பதிமுதுநிலை" என்னும் பெயருடையது. ஏனை அதிகாரங்களின் பெயரும் இவ்வாறே அவை கூறும் பொருளின் இயல்பை விளக்குவன. அவை உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியுநெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள்நிலை, அணைந்தோர் தன்மை என்பன.
3. வினா வெண்பா
இது பதின்மூன்று பாக்களால் ஆகியது. இஃது ஆசிரியர், தம் குருவாகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளைக் கேட்டுத் தெளியும் முறையில் அமைந்தது. இருளும் ஒளியும் ஓரிடத்தில் கூடல் அரிது என விதந்து, தன்பால் இறைவன் நின்ற வியப்பை அறிவிக்கும் பாடலும், காண்பான்-காட்சி-காட்டப்படும்பொருள் என்னும் மூவகை உணர்ச்சியை நீத்தவர் முத்தி நிலையை அடைவர் எனக் குறிக்கும் திருப்பாட்டும் நுட்பம் செறிந்தவை.
4. போற்றிப் பஃறொடை வெண்பா
இது, உயிர் தொழிற்படும் முறைமை உணர்த்தும் வாயிலாகத் தமக்குச் சிவஞானம் நல்கிச் சிவானுபவம் ஈந்த குருவைப் பஃறொடை வெண்பாவால் வாழ்த்திய நூலாகும். இறைவனது பரநிலையும் அவனது பொதுநிலையாகும் ஐந்தொழில் நடத்தும் திறமும், உயிர்களை மறைத்துநிற்கும் ஆணவத்தின் இயல்பும், அதனை ஒழிக்கவேண்டி இறைவன் சேர்க்கும் மாயை காரியமாகும் உடற்கருவிகள், போகங்கள், உலகங்கள் இவற்றின் பேருதவியும், உயிர்கள் கர்ப்பவாசத்திலும் துன்புறும் துன்பநிலைகளும், பிறகு வினைக்கு ஈடாக நேரும் மறுமைப் பயன்களும், பின்னைப் பிறவிகளில் கூடிய இருவினை யொப்பு முதலிய பக்குவ நிலைகளும், இறைவன் மூவகை உயிர்கட்கு அருளும் திறமும், உயிர்கள் சிவஞானம் பெற்றுச் சரியை முதலிய நெறிகளில் ஒழுகி அடைந்த சிவப்பேற்றின் நிலையும், "நாமே பிரமம்" என்பதன் இழிவும், சைவசித்தாந்த முத்திப் பெருநிலையும் முறையாக நன்கு விளக்கப்பட்டுள்ளன.
5. கொடிக்கவி
இது மிகச் சிறிய நூல்; நான்கு வெண்பாக்களால் ஆகியது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்ற பகுதி இன்புறத்தக்கது. ஐந்தெழுத்தின் நுட்பம் இறுதி வெண்பாவிற் குறிக்கப்பட்டுள்ளது. இது தில்லையிற் கொடியேறும் பொருட்டுப் பாடிய நூலாதலின், "கொடிக்கவி" எனப்பெயர் பெற்றது.
6. நெஞ்சு விடு தூது
இஃது ஆசிரியர் தமது உள்ளத்தை மறை ஞான சம்பந்தர்பால் மாலை வாங்கும்படித் தூதுவிடு முகத்தால் பல நூல்களின் பொருள் முடிபையும் விளக்குவது; கலிவெண்பாவினால் ஆனது; 129 கண்ணிகளை உடையது. தசாங்கம் விரித்துரைக்கும் பகுதி படித்து இன்புறத் தக்கது. ஞானாசிரியன் பாசநீக்கம் செய்யும் திறத்தினை விளக்கும் பகுதி குறிக்கத்தக்கது.
7. உண்மைநெறி விளக்கம்
இது தத்துவரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சத்தி, ஆன்ம வடிவம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம்,சிவதரிசனம், சிவயோகம், சிவ போகம் என்னும் பத்துக் காரியங்களை இனிது விளக்கும் நூல். இத் தசகாரியம் பற்றிய குறிப் புக்கள் முன் சொன்ன சிவப்பிரகாசத்தில் உள்ளன. அவற்றின் விரிவே இந்நூலாகும்.
8. சங்கற்ப நிராகரணம்
இது அகச் சமயங்கள் பலவற்றின் கொள்கைகளைக் கூறி, அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கும் நூல். சிவஞான சித்தியார்-பரபக்கமும் இந்நூலும் சித்தாந்த சைவத்தின் வேறான சமயக் கொள்கை வேறுபாடுகளை அறிதற்கு மிகவும் பயன்படுகின்றன. நிமித்த காரண பரிணாம வாதி சங்கற்பத்தில் அப்பர், சம்பந்தர்தம் திருப்பதிகங்கள், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்பன எடுத்தாளப்பட்டன. சைவசித்தாந்த நிலையே பல்லாற்றானும் மிகச் சிறந்தது என்பதை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது.