சுவையான சில செய்திகள்

bookmark

5.1 வெறுத்து விரும்பல்
பொழிலின் குளிர்ச்சி மிகுதி புலவர்களால் பலவாறு புனையப்படும். வானளாவிய குளிர்ந்த பொழில் ஒன்றின் வழியாக ஞாயிறு செல்வதால், வெப்பமான ஞாயிற்றை இழுத்துச் செல்லும் குதிரைகள் ஒரளவு களைப்பு குறைந்து மீண்டும் செல்லும் ஆற்றலைப் பெற்றனவாம் எனக் கம்பர் மராமரப் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:
“திக்கும் வானமும் செறிந்த அத்தருநிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்கில இரவி தேர்ப்புரவி” (5)
என்பது பாடல்.

சிவப்பிரகாசர் வசவண்ணர் கதியில், ஒரு பொழிலின் குளிர்ச்சியின் மிகுதியைப் பின்வருமாறு புனைந்துள்ளார்: கடுமையான வெயிலில் வழி நடந்து வெப்பம் தாங்காமல் களைப்படைந்து அந்தப் பொழிலில் வந்து தங்கினவர்கள், அந்தப் பொழிலின் குளிர்ச்சி மிகுதியால் உடல் நடுங்கி மீண்டும் வெயிலை விரும்பினார்களாம். பாட்டு:
“தனைவிரும்பி வந்துஅடைந்தவர் தம்மைமுன் வெறுத்த
தினகரன்கதிர் விரும்புறச் செய்து. பொழில் திகழ்வது” 14-11)

5.2 பிடியின் ஊடல்
மக்களினத்தில், கணவன் மற்றொரு பெண்ணை விரும்புவதாகத் தெரிந்தால் மனைவி ஊடல் கொள்ளும் செயல், அஃறிணை உயிரிகளிடமும் நிகழும் போலும், இது பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஒரு மாடத்தில் பல பழ வகைகளும் கிளி முதலிய பறவை வகைகளும் பொம்மையாகச் செய்து வைக்கப் பெற்றிருந்தன. உயிர் உள்ள ஓர் ஆண் கிளி, பொம்மை வடிவில் உள்ள பெண் கிளியின் பக்கத்தில் நின்று அங்கிருந்த பொம்மைக் கனியை உண்மைக் கனி என்று கொத்திற்றாம். எட்டிய தொலைவில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் கிளி, தன் கணவனாகிய ஆண் கிளி இன்னொரு பெண் கிளியை விரும்பி அதன் அருகில் நிற்பதாக எண்ணி ஊடல் கொண்டதாம். இவ்வாறு பல கற்பனைகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சிவப்பிரகாசரின் படைப்பில் உள்ள இத்தகைய ஊடல் ஒன்றைக் காண்பாம்.

திருப்பருப்பதம் என்னும் மலைச் சாரலில், ஒரு களிறு (ஆண் யானை) தளிர் இலைகளைப் பறித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் (பெண் யானையின்) வாயில் கொடுத்துக் கொண்டிருந்ததாம். இந்தக் காட்சி, பக்கத்தில் இருந்த பளிங்கு அறைச் சுவரில் தெரிந்ததாம். தளிரை உண்டுகொண்டிருந்த பெண்யானை பளிங்குச் சுவரில் இதைக் கண்டு, தன் கணவனாகிய களிறுதான் வேறொரு பிடிக்கு உணவு தருவதாக எண்ணிக் களிற்றின்மேல் ஊடல் கொண்டதாம். பாடல்:
“தளிர்க் குளகினைத் தேன்தோய்த்துத்
தனதுவாய் கொடுக்கும் செய்கை
பளிக்கறை அதனுள் கண்டு
பரிந்து வேறொன்றினுக்கு இங்கு
அளித்த தென்று உளம்மயங்கி
அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக்
களிற்றினை முனிந்து செல்லும்
கம்பலை உடைத்து அக்குன்றம்” (19-23)
என்பது பாடல். குளகு = இலை உணவு.

5.3 பறவைகளை மிரட்டும் பொய்த் தீ
ஒரு பொய்கையில் அரக்கு ஆம்பல் எனப்படும் சிவந்த ஆம்பல் மொக்குகள் வாய் அவிழ்ந்து நிரம்ப மலர்ந்தனவாம். அதைக் கண்ட தாய்ப் பறவைகள், தண்ணீர் தீப்பற்றி எரிகிறது என்று அஞ்சி, தம் குஞ்சுகளைச் சிறகாகிய கைகளில் ஒடுக்கிக் காத்தனவாம். இக்கற்பனை முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்றில் உள்ளது. பாடல்.
“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்புஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு” (110)
என்பது பாடல். பார்ப்பு = குஞ்சு. கவ்வை = கூச்சல் ஒலி - இதிலிருந்து பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

திருப்பருப்பத மலையில் உள்ள ஒளிமரத்தில் பகலில் பறவைகள் கூடுகளில் முட்டையிட்டு வெளியில் சென்று இரைதேடிப் பின் இருள் தொடங்கும் மாலையில் மரத்தை அடைந்தபோது, அம்மரம் ஒளிமயமாகத் திகழ்ந்ததால், மரம் தீப்பற்றிக் கொண்டது என அஞ்சி மேலேயே வட்ட மிட்டு வருந்தினவாம். பாடல்:
“செங்கதிரவன் எழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப்
பொங்குஒளி மரத்தில் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்துக்
கங்குலின் அடைகிடப்பக் கருதிவந்து அதனைக் கண்டு
வெங்கனல் கொளுந்திற்றுஎன்று மீமிசைச் சுழன்று இரங்கும்” (19-19)
என்பது பாடல். திவா = பகல்; குடம்பை = கூடு; பொறை உயிர்த்தல் = முட்டையிடுதல்,ஒளிமரத்திற்குச் சோதி மரம் என்ற பெயரும் உண்டு. இம்மரம் இரவில் ஒளி வடிவாகத் தெரியுமாம்.

5.4 திங்களின் கொடுமை
திங்கள் (நிலா) தோன்றி, தன்னைப் பெற்ற தாய் அலை மோதித் தலைசாயும் படிச் செய்கிறதாம். தன்னுடன் பிறந்தவளின் வீட்டை மூடிப் பூட்டிவிடுகிறதாம். இவ்வாறு தாய்க்கும் தமக்கைக்குமே கேடு செய்யும் திங்கள், உறவு இல்லாத அயலாரை என்ன பாடு படுத்துமோ?

இவ்வாறு, அல்லமப் பிரபுவைக் காதலித்துக் காம வேதனை கொண்டுள்ள மாயை என்பவள் திங்களைத் திட்டுகிறாள்: பாடல்:
“தாய்வா யடைந்து மிருந்தலையை
மோதிமோதிச் சலித்தலறக்
காய்வாய் கிலவே உடன்பிறந்தாள்
இருந்து வாழும் கடிமனையை
நீ வான் எழுந்து வந்தழிப்பா
யென்றால் அந்தோ நிலையின்றித்
தேய்வாய் நின்னோடு இயைபில்லா
என்னை என்ன செய்யாயோ” (5.57)

திங்களும் திருமகளும் கடலில் தோன்றியதாகக் கூறுவது புராண இலக்கிய மரபு. இதே சிவப்பிரகாச அடிகளார் தம் நன்னெறி என்னும் நூலில், "தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல்," (18) என்றார். தண்ணென் கதிர்= திங்கள். முழு நிலாப் பருவ நாளில் கடல் மிகவும் அலைமோதி மோதி அலறும் - இரைச்சலிடும். அதை இப்பாடலின் முதலடியில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்தலையை மோதி என்னும் தொடரில், தாயாகிய கடல், நிலவால்,தலையை மோதி மோதி வருந்துகிறது என்னும் பொருள் நிழலோடுகிறது. இதையே "மிகுந்து அலை மோதி" எனப் பிரிக்கின், அலை மிகுதியாய் அடிக்கிறது என்னும் பொருள் தெரிகிறது. இவ்வாறு இருபொருள் (சிலேடை) அமையப் பாடப்பட்டுள்ளது ஒரு சுவையன்றோ?

அடுத்தது, உடன் பிறந்தவளின் மனையை மூடி அழிப்பது. உடன் பிறந்தாள் திருமகள். திருமகள் தங்கியிருக்கும் மனை (வீடு) செந்தாமரை, நிலா தோன்றியதும் தாமரை மலர் முடிக்கொள்ளும் அல்லவா? அதைத்தான், இவ்வாறு உடன் பிறந்தவளின் மனையைக் கெடுப்பதாகக் கூறியுள்ளார்.

பிரிந்த தலைவி திங்களை வெறுத்துப் பேசுவதாகக் கூறுவது இலக்கிய மரபல்லவா? எனவே,தாய்க்கும் தமக்கைக்கும் தொல்லை கொடுக்கும் திங்கள், ஓர் உறவும் இல்லாத எனக்குத் தரும் தொல்லையைச் சொல்லவா வேண்டும் என்று கூறும் முறையில் மாயையின் வாயிலாக அடிகள் பாடியுள்ளார்.

திங்கள் தேய்வதும் வளர்வதுமாய் இருப்பதைக் குறிப்பிட்டு, நிலையில்லாமல் தேய்கின்ற நிலவே எனக் கூறித் திட்டுகிறாள் மாயை.

5.5 கொங்கைக் குடம்
கெளசிகன் என்னும் மன்னன் அக்கமாதேவி என்னும் பெண்ணைத் தனிமையில் கண்டு, நெருப்பில் உருகிய அரக்கு போல உள்ளம் உருகி, பூங்கொடியே காமக் கடலை நான் கடப்பதற்கு உன் கொங்கையாகிய குடத்தைத் தருவாயாக என்று கெஞ்சினான் பாடல்:
“மடந்தையைத் தனிக்கண்டு அங்கி
மருவிய அரக்கே போல
உடைந்து நெக்குருகி ஆற்றா
உள்ளமோடு இளம்பூங் கொம்பே
கடந்திடற்கு அரிய காமக்
கடல் கடந்தேறக் கொங்கைக்
குடம்தரத் திருவுளத்தில் கோடி
என்று அரசு இறைஞ்ச” (10.44)

கொங்கைக்குக் குடத்தை ஒப்புமையாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, கொங்கையாகிய குடம் எனக் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டுள்ளது. 

கொங்கைக்கு யானைக் கொம்பு, தாமரை மொக்கு, மலை முதலியவற்றை உவமையாகக் கூறுவதும் உண்டு. இங்கே, கொங்கைக் கொம்பைக் கொடு - கொங்கை மொக்கைக் கொடு - கொங்கை மலையைக் கொடு என்றெல்லாம் கூறாமல், கொங்கைக் குடம் கொடு என்றது ஏன்? ஆற்றைக் கடப்பதற்குக் குடத்தைக் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு நீந்திச் செல்லும் வழக்கம் உண்டு. இங்கே காமக் கடலாகிய பெரிய நீர்நிலையைக் கடக்க வேண்டுமாதலின் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டது. "கும்பத்தின் அணைத்தவும் அணையா" என்பது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம். கும்பம்-குடம்.

5.6 மருங்குல் வெளி
தெருவில் செல்லும் இராமனைக் காணப் பெண்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். முன் வரிசையில் நின்றவர்கள் எளிதாக இராமனைக் காண முடிந்ததாம். பின் வரிசையில் நின்றவளுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் மறைத்துக்கொண்டிருந்ததால் காணமுடிய வில்லையாம். அதாவது, முன்வரிசையில் நின்றவர்களின் இடுப்புக்கு மேல் உள்ள பருத்த முலை, அடர்ந்த கூந்தல், இடுப்பின் கீழே உள்ள அல்குல் பரப்பு ஆகியவை மறைத்துக்கொண்டிருந்தனவாம். ஆனால் அவர்களின் இடை மெலிந்திருந்ததால், முன் வரிசையில் நின்ற இரண்டு பெண்களின் இடையின் நடுவே உள்ள இடைவெளி வழியாகப் பின் வரிசையில் உள்ளவள் இராமனைக் கண்டாளாம். பாடல்! இதனைக் கம்பர், பால காண்டம் உலாவியல் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:
“கருங்குழல் பாரம் வார்கொள்
கனமுலை கலைசூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டுஓர்
நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந்தடங் கண்ணி காணும்
பேரெழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிக ளூடே
வள்ளலை நோக்கு கின்றாள்” (17)
என்பது பாடல். பிரபுலிங்க லீலைக்கு வருவோம்:

இளவரசியாகிய மாயை என்பவள், ஆடவர்கள் வராதபடி வாயிலை அடைத்துக் கோயிலின் ஒரு புறம் நடனம் ஆடினாள். இதைக் காண விரும்பிய இளைஞர்களுள் சிலர் மதிலிலுள்ள துளைவழியாகக் கண்டார்களாம். சிலர் மதில் ஓரம் இடம் கிடைக்காமையால்,நின்றிருந்தவர்களின் தோள்மேல் ஏறிக் கொண்டு மதிலின் மேல் துளை வழியாகப் பார்த்தார்களாம். (திரைப்பட அரங்கில் கட்டணச் சீட்டு (டிக்கெட்) வாங்க, கும்பலாக நின்றிருப்பவர்களின் தலைமேல் ஒருவர் கவிழ்ந்து படுத்துக் கொண்டு நீந்திச் செல்வதைக் காணலாம்).

இந்த இளைஞர்கள் என்ன கண்டார்கள். மாயையின் மருங்குல் (இடை) என்னும் வெற்றுவெளியைக் கண்டார்களாம்:
“பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும்
துன்னி முனம் நின்றவர் தோளிடை இவர்ந்தும்
மின்னென நடம்புரியும் மெல்லியல் மருங்குல்
என்னும் வெளிகானிய இடர்ப்படுவர் மைந்தர்” (4-55)

பெண்கட்கு இடை சிறுத்திருப்பதால், இடையே இல்லை எனக் கற்பனையாகக் கூறுவது இலக்கியமரபு. அவ்வாறே, கம்பர் "மருங்குலின் வெளி" என்றும், சிவப்பிரகாசர் "மருங்குல் என்னும் வெளி" என்றும் கூறியுள்ளனர்.

இடுப்பு மடிப்பு விழுந்திருக்கும் பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. "உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு" என்றபடி உண்டி சுருங்கி மெல்லிய இடுப்புடன் இருப்பவர்கட்கு மகப்பேறு எளிதாயிருக்கும்; குழந்தை விரைவில் வெளியில் வரும்படியான அழுத்தம் (Pressure) உண்டாகும் என்றெல்லாம் கருத்து கூறப்படுகிறது.