சொல்லாட்சி

bookmark

6.1 அள்ளிக் கொள்ளும் அழகு
அல்லமப் பிரவுவை “அள்ளிக் கொள்ளும் பேரழகன்” (51-31)
என்று அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அழகை அள்ள முடியாது. மிகுந்த அழகு என்னும் பொருளில் இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டுச் சுவை பயக்கிறது.

6.2 நீங்கிய உடையாள்
அக்கமாதேவி என்பவள் துறவு முதிர்ச்சியால் உடையின்றிச் சென்றாளாம். இதை, "நீங்கிய உடையாள்" என எதிர் மறுக்கும் உடன்பாட்டால் கூறியுள்ளார். இது, அகநானூற்றில உள்ள "சென்று சேக்கல்லாப் புள்ள" (42-8) என்பது போலவும், திரு முருகாற்றுப் படையில் உள்ள "கழிந்த உண்டியர்" (4- 31) என்பது போலவும், கம்ப ராமாயணத்தில் உள்ள "பயில்வு இல் கல்வியார்" (4-3-32) என்பது போலவும் உள்ள சொல்லாட்சியாகும். இஃது ஒர் இனிய இலக்கிய நடையாகும்.

6.3 பறந்திடா வண்டு
கொக்கு என்னும் சொல்லுக்கு, மாமரம், பறக்கும் ஒரு பறவை என்ற பொருள்கள் உண்டு. பறவாக் கொக்கு என்றால், இத்தொடர் பறக்காத மாமரத்தைக் குறிக்கும். அதுபோல், வண்டு என்னும் சொல்லுக்கு, வளையல், பறக்கும் வண்டு என்னும் பொருள்கள் உண்டு. பறந்திடா வண்டு என்றால், இத்தொடர், பறக்காத வளையலைக் குறிக்கும். சிவப்பிரகாசர் கைலாச கதியில் உள்ள.

“பறந்திடா மணிவண்டு படுமலர்” (23)
என்னும் பாடலில் "பறந்திடா மணி வண்டு" என வளையலைக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சுவையான சொல்லாட்சியாகும். (மணி = அழகு. மலர் = மலர் போன்ற கை)

6.4 எட்டிப் பார்த்தல்
மாயை வளர்ந்து வருகிறாள். மார்பில் கொங்கைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. மாயையின் பேரழகால் துறவிகளாம் பறவைகளும் காம மயக்க வலையில் விழுவார்களாம். துறவிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிய மார்பில் இருந்து கொண்டு முலைகள் எட்டிப் பார்த்தனவாம்.

மார்பில் முலைகள் சிறிய அளவில் முளைத்திருப்பதை, இவ்வாறு "எட்டிப் பார்த்தல்" என்னும் சொல்லாட்சியால் கூறி இலக்கியச் சுவை தந்துள்ளார் அடிகளார். பாடல்:
“முட்டித் துறவாம் பறவை மயல்
வலையில் படுதல் மெல்ல மறைந்து
எட்டிப் பார்ப்பு என முகங்கொண்டு
எழுந்தன மார்பில் இள முலைகள்” (3-56)
என்பது பாடல் பகுதி. வலையில் பறவை விழுவதை மறைந்திருந்து தானே வேடர்கள் பார்ப்பார்கள். இங்கே முலைகள் மறைந்திருத்தல் என்பது மேலாடையால் மூடப்பட்டிருப்பதாகும். இந்தச் சொல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு, "அம்பிகாபதி காதல் காப்பியம்" என்னும் நூலில் இந்த அமைப்பு பின்வருமாறு புனையப் பட்டுள்ளது.

“இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
மடமுழு தினையும் மடக்குவோர் மான
எட்டிப் பார்க்க இடம் சிறிதளவே
விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்
தட்டிக் கொண்ட தளதள நகில்கள்” (2:21-25)
என்பது பாடல் பகுதி. இத்தகைய நயமான சொல்லாட்சிகள் பல, நூலில் இடம் பெற்றுள்ளன.