செங்குட்டுவன் அரசியல்

நம் சேரர்பெருமானது இராஜாங்கமுறைகளை இனி நோக்குவோம். பொதுவாகச் சொல்லுமிடத்து, செங்குட்டுவன் காலத்தனவாகிய சங்கநூல்களிலே அரசியன் முறைகளாக அமைந்தவை யாவும் நம் வேந்தனுக்கும் உரியவையென்றே சொல்லலாம். இவ்வாறு கூறப்பட்ட அரசியல்களை விடாது இங்கு விவரிப்பதாயின் இவ்வதிகாரம் அளவு கடந்துவிடும். அதனால், வேற்றுநூல்களுட் புகாமல், செங்குட்டுவன் சம்பந்தமான செய்யுள்களிலிருந்து தெரியவரும் விசேடச்செய்திகளை மட்டும் இங்கு விளக்குவோம்.
நம் சேரர்பெருந்தகை, சங்ககாலத்துத் தமிழ் வேந்தருள்ளே சிறந்து விளங்கியவன். இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும், அவன் முன்னோரும், வடவாரியருடனும் அயலரசருடனும் அடுத்தடுத்துப் போர்புரிந்து வந்தவராதலால், அவரது பகைமையெல்லாம் இவனுக்கும் இருந்ததென்றே தெரிகின்றது. அதனால், கடல்வழியாகவும் தரைவழியாகவும் பகைவர் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கேற்ற கப்பற்படையும் தரைப்படையும் இவன் உடையனாகவேயிருந்தான்.
"சினமிகு தானை வானவன் குடகடற்
பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப்
பிறர்கலஞ் செல்கலா தனையேம்" (புறநா.126.)
என, மரக்கலப்படையின் மாட்சியால் கடற்றலைமையை அக்காலத்துச் செங்குட்டுவன் வகித்திருந்த சிறப்பைப் பெயர் கூறாது வியந்தனர் ஒரு புலவர்.
கடற்படையைக் கொண்டு இவன் ஒரு காலத்துச் செய்த வீரச்செயலையும், அது பற்றி இவன் "கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் " என வழங்கப்பட்டதையும் இவனது "போர்ச்செயல்கள்" கூறிய விடத்தே விளக்கினோம்: இவ்வேந்தனது தரைப்படையும் அங்ஙனமே அளவாலும் ஆற்றலாலும் மேம்பட்டிருந்தது. பத்தினிக்குப் படிமச்சிலை எடுத்தற்கும், ஆரியரை வெற்றி கொள்வற்குமாக இவன் வடக்கே சென்றுவந்த முப்பத்திரண்டு மாதம் வரை இவனாட்டிற் குழப்பொன்றும் இல்லாதிருந்ததோடு, குடிகளெல்லாம் இவனாட்சியில் மகிழ்ச்சி மிக்கவர்களாய்த் தம் அரசன் வெற்றியைத் தமக்குரிய பெருமையாகவேகொண்டு விளங்கினர் என்றுந்தெரிகிறது.
செங்குட்டுவனது அரசியலில், முற்காலமுறைப்படி, அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவருமே சிறந்திருந்தவர்கள். இவர்களை அரசர்க்குரிய ஐம்பெருங்குழு என்பர் முன்னோர்.† இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல் வினைஞர், தருமவினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என்ற அரசியல்வகிக்குந் தலைவரும் இருந்தனர். ‡ கருமவினைஞர் என்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோரென்றும், கணக்கியல்வினைஞர் என்போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்கும் அதிகாரிகளென்றும்,தருமவினைஞர் நாட்டினறங்களைப் பாதுகாப்போரென்றும், தந்திரவினைஞராவார் படைகளின் சம்பந்தமான தலைமைவகிப்போர் என்றும், பெருங்கணி அரசனது காரியங்கட்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்போன் என்றுந் தெரிகின்றன.
------------
*இந்நூல், 74--5 -ம் பக்கம். †௸.58-ம் பக்கக் கீழ்க்குறிப்பு. ‡ சிலப்,26. 40-1
இவரெல்லாம், அரசனது மந்திராலோசனைக்கு உரியவராவர். செங்குட்டுவனது தரைப்படைக்குத் தலைமை வகித்தவீரன் வில்லவன்கோதை என்பான். இவனே செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுடைய சேனைகளை நடத்திச்சென்று ஆரியவரசருடன் நிகழ்ந்த பெரும்போரில் வெற்றிபெற்றவன். "வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த-பல்வேற் றானைப் படை" என்றார், இளங்கோவடிகளும்(சிலப்.26.251-2). இவனைப்போலவே,தேசவருவாயின் தலைமையைவகித்த அமைச்சன், அழும்பில்வேள்(சிலப்.28.204-5)என்பவன்; இவன் அழும்பில் எனப்படும் வளம் பெருத்த நாட்டின் தலைவன்; இவனுக்கு "வானவிறல்வேள்" என்ற பெயரும் வழங்கியது.("வானவிறல்வேள், அழும்பி லன்ன நாடிழந் தனரும்" என்பது மதுரைக்கைகாஞ்சி (344-5). சேரன் படைத்தலைவனாகிய நன்னனுக்கும் இப்பெயரே வழங்கப்பட்டுள்ளது.இதனால், சேரரது அரசியலில் தலைமைவகித்த ஒருசாரார்க்கு இப்பெயர் வழங்கிவந்ததாகக் கருதப்படுகிறது. (யாம் எழுதிய வேளிர் வரலாறு; 67-ம் பக்கம் பார்க்க.)) இவ்வமைச்சன் செங்குட்டுவற்குச் சமயோசிதமாகச் சூழ்ச்சியுரைக்க வல்லனாயிருந்தான். (சிலப்.25.173-7.)
இனி, நம் வேந்தனது தூதுவருள்ளே தலைமை வகித்தவன் சஞ்சயன் என்றும்,(சிலப் 26.137) இவனுக்கு அடுத்தபடியிலிருந்தவன் நீலனென்றும்(சிலப் 28.109) தெரிகின்றன. இவர்கள்கீழடங்கிய தூதுவரெல்லாம் தம்மரசனிடமிருந்து வேற்றரசரிடம் சமாசாரங்களைத் தெரிவித்து வருதற்குரியர்;
அன்றியும் யுத்தத்திற்கு அரசனுடன் சென்று வேண்டியகாரியங்களை நிர்வகிக்கவும் வல்லவர். இன்னோர் இராஜ சமுகங்கட்கு அடுத்தடுத்துச் சென்று வருபவராதலால், சட்டையும் தலைப்பாகையுந் தரித்திருப்பர். இவரைக் கஞ்சுகமுதல்வர் எனவும் வழங்குவர்; "சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற-கஞ்சுக முதல்வ ரீரைஞ் ஞூற்றுவர்" எனத் தம் தமையனுக்கிருந்த தூதுவரைப்பற்றி இளங்கோவடிகள் குறித்தல் காண்க.* இனிச் சாரணரென்போர் ஒற்றராவார். இன்னோர், இக்காலத்துப்போலவே, முற்காலத்தும் அரசர்க்குக் கண்போன்று விளங்கினர். செங்குட்டுவனுடைய ஒற்றர்கள் அந்நியநாடெங்கும் சஞ்சரித்து வந்தனரென்றும், அவ்வாறே வேற்றரசரொற்றர்களும் பெருவீரனான நம் சேரன் நாட்செய்திகளைத் தெரிதற்பொருட்டு வஞ்சிமாநரில் மறைந்து வசித்தனரென்றும் சொல்லப்பட்டுள்ளன.†மேற்கூறியவர்களன்றிக் கரணத்தியலவர் (கணக்கர்),கருமவிதிகன்(ஆணைநிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனை காவலர்), நகரமாந்தர்,படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் எனப்பட்ட எண்பேராயத்தாரும் செங்குட்டுவன் அரசியலில் தலைமைபூண்டிருந்தனர்.‡
செங்குட்டுவனது அரசியல்முத்திரையானது வில், கயல்,புலி என்னும் மூன்றும் அமைந்ததோர் இலாஞ்சனையாகும். இதனைத் "தென்றமிழ் நாட்டுச் செழுவிற் கயற்
புலி, மண்டலை யேற்ற வரைகீ" என்பதனால் அறிக.
-----------
*சிலப். 26. 137-8.
சோழபாண்டியர் அடையாளங்களாகிய புலியையும் மீனையும் தனக்குரிய வில்லோடுசேர்த்து நம்சேரன் இலச்சினையாகக் கொண்டிருந்ததை நோக்குமிடத்து, அக்காலத்துத் தமிழ் வேந்தருள் இவனே தலைமை வகித்தவனென்பது புலப்படுகின்றது. இவ்வாறே, இவ்வேந்தன் சோழபாண்டியர்க்கும் மேம்பட்டவன் என இளங்கோவடிகள் பல முறை கூறுவர்.
செங்குட்டுவனது தலைமையதிகாரிகளும்,அந்தணர் புலவர் குடிகளும் அவனிடம்வந்து ஒன்று கூறும்போது, பேச்சின் தொடக்கத்தும் முடிவிலும்"அரசே!வாழ்க" என்று அவனை வாழ்த்துதல் பழைய முறையாக இருந்ததென்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுகவும் உணரப் படுகின்றது. இதனை, "வடநாட்டியாத்திரை" "பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்" என்ற அதிகாரங்களைக் கொண்டு அறியலாகும்.
செங்குட்டுவன் திருமுகமெழுதுவோர் "கண்ணெழுத்தாளர்" எனப்படுவர்; "கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன், மண்ணுடைமுடங்கலம் மன்னவர்க்களித்து" எனக் காண்க.† கண்ணெழுத்து என்பது சங்கநாளில் வழங்கிய தமிழெழுத்தின் பழையபெயராத் தோற்றுகிறது. செங்குட்டுவனது வடயாத்திரையில் பண்டங்கள் ஏற்றிச்சென்ற வண்டிகள் இன்னின்ன சரக்குடையவை என்றெழுதப்ட்டிரிருந்தன என்பதை அடிகள் கூறுமிடத்து, "இருபதினாயிரங் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்" என்கிறார்;
---------------
*சிலப். 25.87-90; 26.168-71.
இதனாலும் கண்ணெழுத்து, பண்டைத்தமிழெழுத்தின் பெயரேயாதல் காணலாம். இங்ஙனமாயின், சாஸன பரிசோதகரால் வட்டெழுத்து எனப்படும் பழைய தமிழெழுத்தைச் செங்குட்டுவன் காலத்துக் கண்ணெழுத்தாகக்கொள்ளல் பொருந்தும் போலும். பழையதமிழெழுத்தாய்ச் சாஸனங்களில் மட்டும் காணப்படும் வட்டெழுத்து நம்நாட்டில் வழக்குவீழ்ந்து பல நூற்றாண்டுகளாயினும்,மலைநாட்டுள்ள சோனகர்க்குள் கோலெழுத்து என்று வழங்கப்பட்டு இன்றும் அது வழங்குகின்றதென்பர்.* கண்போன்றிருத்தலாற் கண்ணெழுத்து என்றும், வட்டமாக விருத்தலின் வட்டெழெத்து என்றும், சித்திரித்தெழுதப்படுலாற் கோலெழுத்து என்றும் ஒன்றே பல பெயர் பெற்றதென்க. இனி ஸ்ரீமாந்- கோபிநாதராயரவர்கள், இதுவரை கண்ட சாஸனங்களுக்ளுள்ளே பழமைவாய்ந்த தமிழ்ச் சாஸனமொன்றைச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றனர்.† செஞ்சிக்கடுத்த திருநாதர் குன்றுப் பாறையில் வெட்டப்பட்ட அச்சாஸசனம்,ஜைந ஆசிரியரொருவர் ஐம்பத்தேழுநாள் அநசநவிரதம் (உண்ணாநோன்பு) பூண்டு உயிர்துறந்த செய்தியைக் குறிப்பது. அடுத்த பக்கத்துக்கண்ட அத்தமிழ்ச்சாஸனம் வட்டெழுத்துமுறையினின் சிறிது மாறியுள்ளதென்பது இராயவர்கள் கொள்கை; ஆயினும் அதன் தமிழெத்துக்கள், ஏறக்குறையச் செங்குட்டுவன் காலத்து வழங்கியவை என்பது அவர்களெழுதிய குறிப்பால் அறியப்படுதலால், அத் தமிழெழுத்தின் மாதிரிகையை நம்மவர் அறிந்துகொள்ளுமாறு அச்சாஸனத்தையே தருகின்றேம்.
-----------------
* Dr.Cundert’s Malayalam Grammar (art)) †தொகுதி-5,பக்-410-1.
(graphics to be inserted here)
( இங்கு நான்கு வரிகள் வட்டெழுத்தில் காமப்படுகின்றன.)
1. ஐம்பத்தேழன--
2. சனந்நோற்ற
3. சந்திரநந்தி ஆ--
4. சிரிகர் நிசீதிகை.
செங்குட்டுவன் அத்தாணிமண்டபத்தை யடைந்து அமைச்சர் முதலியவருடன் மந்திராலோசனை புரியும்போது, அவனுடைய கோப்பெருந்தேவியும் (இளங்கோவேண்மாள்) கூட வீற்றிருந்து தன்னபிப்பிராயத்தையும் தடையின்றி வெளியிடற்கு உரியவளாயிருந்தனள். * அரசன் தன் பெருந்தேவியுடன் அத்தாணிக்குவரும் மத்தியிலே அரண்மனையினுள்ள அரங்குகளிற் கூத்தர்கள் நிகழ்த்தும் அழகிய ஆட்டங்களைக்கண்டு மகிழ்வதுமுண்டு. செங்குட்டுவனது ஆஸ்தாநக் கூத்தரிற் சாக்கையர் என்போர் சிறந்தவராகக காணப்படுகின்றனர் (சிலப்.28.65-79).
-----------
* சிலப்.25.107--114; 28.65--6
இச்சாக்கையர் என்ற கூத்தவகுப்பார் மலைநாடுகளில் தம் பூர்வவிருத்தியையே இன்றும் நடத்திவருதல் அறியத்தக்கது.(இச்சாக்கையர் வரலாற்றை ஸ்ரீ.T.K.கோபால பணிக்கர் எழுதிய "மலையாளமும் அதில் வாழ்நரும்"(Malabar and its folk) என்ற ஆங்கில நூலின் 184,185-ம் பக்கங்களிலும், செந்தமிழ் 7-ம் தொகுதி, முதற்பகுதியில் யாமெழுதிய "மூன்று தமிழ்க்குடிகள்" என்ற வியாசத்தினும் கண்டுகொள்க.)
நம் சேரர்பெருமானுக்கு அடங்கியிருந்த அரசர்கள் தத்தம் திறைகளைக்கொண்டுவந்து தலைநகர்ப் பெரியபண்டாரத்திற் சேர்க்குங்காலம் விடியற்காலையாகும். அங்ஙனம் திறைகொணரும்படி அரண்மனையுள் முரசம் அறையப்பட்டு வந்ததென்று தெரிகிறது; " ஞாலங் காவலர் நாட்டிறை பயிருங், காலை முரசங் கடைமுகத் தெழுதலும்" எனக் காண்க.(சிலப்.26.52-3.)
அரசனது பிறந்தநாளானது நகரத்தாரால் ஆண்டுதோறும் ஒரு புண்ணிய தினமாகக் கருதிக் கொண்டாடப்படும்.(மணிமே.28.9) இப்பிறந்தநாள் பெருநாள்(சிலப்.27.44) எனவும் பெருமங்கலம் எனவும் வழங்கும். இக்காலத்தே, அரசன் உயிர்களிடங்காட்டும் கருணைக்கறிகுறியாக மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, சிறைப்பட்டவரை-யெல்லாம் விடுவிப்பதும், தன் தானைவீரர்களைத் தக்கபடி கௌரவிப்பதும் மரபாகும். இதனையே தொல்காப்பியனாரும் "சிறந்த நாளணிசெற்ற நீக்கிப்-பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்" என்று சிறப்பிப்பர்.
இக்காலத்தே, நகரத்தாரெல்லாம் உற்சாக மிக்கவர்களாய் துருத்தி முதலியவற்றால் நீர்கொண்டு இறைத்து விளையாடி மகிழ்வர்.மணிமேகலை மணி பல்லவத்தினின்று வஞ்சிநகர் புகுந்தபோது,செங்குட்டுவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதென்று தெரிகின்றது.இக்காலத்தும், திருவனந்தபுர அரசர்க்குள் ஜன்மதினக் கொண்டாட்டம் சிறப்பாகவே நடைபெறுதலோடு, அவ்வரசர் "மூலந்திருநாள், விசாகந்திருநாள்"எனத் தங்கள் பிறந்தநாள்களையே பெயராகக்கொண்டு விளங்குதலும் கண்டுகொள்க.
விசேட நாள்களிலே, அரசன் ஒருதட்டிற் பொன்னும் ஒருதட்டிற் றானுமாகத் துலையிலேறித் தன்னை நிறுத்து அந்நிறுத்த பொன்னை மறையவர்க்குத் தானஞ்செய்தல் மரபாகும். செங்குட்டுவன் கங்கைக் கரையிலே பத்தினிப் படிமத்தை நீராட்டித் தூய்மைசெய்தபின்னர்,மாடலன் என்னும் அந்தணனுக்கு மேற்கூறியபடி தானஞ்செய்தான் என்று அடிகள் கூறுவர்.† இவ்வாறு "துலாபாரதானம்" செய்வது
மலைநாட்டரசர்க்குள் இன்றும் நடைபெற்றுவரும் வழக்கமென்பது யாவரும் நன்கறிந்தது.
அரசன் மலைப்பிரதேசங்கட்குச் செல்லும்போது, அம் மலைவாணராகிய குன்றக்குறவர் தம் நாட்டிற் கிடைக்கக்கூடிய அரும்பொருள்களைச்சேகரித்து அவற்றைத் தலைமேற் சுமந்துகொண்டு கூட்டமாக வந்து அரசனை அடிபணிந்து
அவன் திருமுன்பு காணிக்கை வைப்பர்.‡ இம்மரியாதை திருவனந்தபுரம் கொச்சி முதலிய மலைநாட்டரசர்களுக்கு இன்றும் நடந்துவருவதொன்றாகும்.
-------------
* தொல். பொருளதி.91 . † சிலப். 27.175-6) ‡ சிலப்.25. 35-56;
அப்போது மலைநாட்டுக் கூத்தர்கள் வந்து தங்களாட்டத்தால் அரசனை மகிழ்விப்பதும் அவர்கட்கெல்லாம் ஆஸ்தானத் தலைமைகூத்தன் கூறிய முறையே அரசன் பரிசளிப்பதும் பூர்வ வழக்கம்.(சிலப். 26.125-126.)
அரசன் யுத்தயாத்திரையாகப் புறப்படுமுன்னர்த் தன் படைத்தலைவர்க்கும் சேனைகட்கும் பெருவிருந்து செய்து அவர்களை மகிழ்விப்பதும் வழக்கமாம்: இதனைப் "பெருஞ்சோற்றுநிலை" என்பர் தொல்காப்பியர்.(தொல். பொருளதி. 63.; பக். 130.) "வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான்போலவந்து ஒருமுகமன் செய்தற்குத் தானே பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்" என்பர் நச்சினார்க்கினியர்.
அரசன் யுத்தத்திற்காக யாத்திரைசெய்ய நேரும்பொழுது, குறித்த நன்முகூர்த்தத்தில் தான் பிரயாணஞ்செய்ய இயலாதாயின், தன் வெற்றிவாளையும் கொற்றக்குடையையும் யானைமேலேற்றி மிக்கஆடம்பரத்துடன் கோட்டைக்கு முதலிற் "பரஸ்தானம்"செய்துவைப்பது தமிழ் வேந்தரது பண்டை மரபாகும்.(தொல். பொருளதி33-45.) இதனை நாட்கோள் என்பர் தொல்காப்பியனார்.(தொல். பொருளதி. 68.) இதன்பின்பே, அலங்கரிக்கப்பட்ட அரசுவாவின் மேல் அரசன் ஆரோகணித்துப் பிரயாணமாவான். இங்ஙனம் புறப்படும்போது,சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களின் பிரசாதங்களை வணங்கிப் பெற்றுக்கொண்டும், நான்மறையோர் வளர்க்கும் நித்தியாக்கினிகளை நமஸ்கரித்தும் செல்வது வழக்கமாகும். (இந்நூல்.வேறு பக்.)
இங்ஙனமாக அரசன் யாத்திரைசெல்லுங் காட்சி மிக்க ஆடம்பரமும் அழகும் வாய்ந்ததாம்: வழிநெடுகவும், நாடகக்கணிகையரும், சூதர் மாகதர் வேதாளிகரும், யானை குதிரை காலாள்வீரர்களும் தம்மரசனை மனமாரவாழ்த்திப் பெரிதும் ஆனந்திப்பர். இவ்வாறு செல்லுகின்ற அரசனுடன்,நால்வகைச் சேனைகள்மட்டுமன்றி, நாடகமகளிரும், நகை விளைத்து மகிழச்செய்யும் வேழம்பர் என்போரும், வாத்தியம் வாசிப்போரும் உடன்செல்வது முண்டு. செங்குட்டுவனது வடயாத்திரையிற்சென்ற அளவற்ற காலாட்படையுடன் அடியிற் குறித்த சேனைகளும் பரிவாரங்களுஞ் சென்றன என்று இளங்கோவடிகள் கூறுவர்.(சிலப். 26. 128-140.)
நாடகமகளிர் 52; யானை 500;
குயிலுவர் (வாத்தியகாரர்) 208; குதிரை 10,000;
நகைவேழம்பர் 100; பண்டங்களேற்றிய வண்டிகள் 20,000;
தேர் 100; சட்டையிட்ட அதிகாரிகள் 1000.
இன்னின்ன சரக்குடையது என்றெழுதப்பட்ட பண்டங்களேற்றிய சகடங்கள் இருபதினாயிரமும், அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தொகை ஆயிரமுமாயின், நம் வேந்தனுடன் சென்ற காலாட்படையினளவு கணக்கிறந்தது என்பது சொல்லவும் வேண்டுமோ?
இளங்கோவடிகளும், இச்சேனைப்பெருக்கை வரையறுக்கவியலாமல், "தண்டத்தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத, மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட,உலக மன்னவன்" சென்றான் என்றார்.(சிலப். 26. 80-83.) யாத்திரையிற் சேனைகட்குத் தளர்ச்சியுண்டாகாது உள்ளக் கிளர்ச்சியடையுமாறு நாடகமகளிரும், நகைவேழம்பரும், குயிலுவரும் தங்கள் ஆடல் பாடலழகுகளாலும், விநோதப் பேச்சாலும், வாத்திய இசைகளாலும் மகிழ்ச்சி விளைத்தற்கு உடன்செல்வது பண்டைமரபென்பது இதனால் விளக்கமாகும்.
செங்குட்டுவன் காலத்து நடந்த யுத்தமுறைமையானது தொல்காப்பிய முதலிய முன்னூல்களிற் கண்ட புறத்துறைகட்கும், பழைய தமிழ்வழக்குகட்கும் ஒத்ததாகவே புலப்படுகின்றது. எனவே, செங்குட்டுவன் காலம்வரை அத்தொல்காப்பியமரபுகள் சிதைந்தன வல்லவென்பது பெறப்படும். அம் முறைகளையெல்லாம் இங்கு விவரிப்பதாயிற் பெருகும்; இளங்கோவடிகளது வஞ்சிக் காண்டத்தைக்கொண்டு அறிக.
போரில் அரசன் வெற்றியடைந்தபின்னர், விழுப்புண்பட்டு இறவாதிருந்த வீரர்களையும், வீரசுவர்க்கம் பெற்ற சூரர்களுடைய மைந்தர்களையும் தன் ஆஸ்தானத்தில் அழைத்து அவர்களையெல்லாம் பெரிதும் அபிமானித்து ஊக்குதல் பழைய மரபாயிருந்தது. நம் வேந்தர்பெருந்தகை,கங்கைக்கரையில் அமைக்கப்பட்ட பாடியிற் பேரோலக்கமாக வீற்றிருந்து, மேற்குறித்த வீரர்க்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களைச் சூட்டிப்புகழ்ந்து அவர்களை உற்சாகப் படுத்திய செய்தியை இளங்கோவடிகள் அழகுபெறக் கூறுதல் அறிந்து மகிழத்தக்கது.(சிலப் 27.23-44.)
இக்காலத்து நம்மையாளும் அரசாங்கத்தாரும் போரிற் பெருந்திறல் காட்டும் வீரசிகாமணிகட்குப் பட்டமும் பதக்கமும் (Victoria Cross) அளித்துப்பாராட்டிவரும் முறையானது, பழைய தமிழ்வேந்தராற் கைக்கொள்ளப்பட்டதொன்றே என்பதையறிய நம்மவரில் யார்தாம் மகிழார்? இவ்வளவோ? போரிற் பகைவரை வென்றுகவர்ந்த பொருள்கள் எத்துணை அருமையும் பெருமையும் உடையவையாயினும், அவற்றைத் தம் வீரர்களுக்கும், போர்க்களம்பாடும் புலவர்க்கும், மற்ற இரவலர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு அளித்து மகிழ்வதும் பண்டை அரசர்கொண்ட ஒழுக்கமாகவுந் தெரிகின்றது. செங்குட்டுவன் தந்தை இங்ஙனமே"நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்-பணிதிறை தந்த பாடுசால் நன்கல"ங்களை வேண்டியவர்க்கு அளித்தானென்று மாமூலனாரும்,(அகநானூறு.127) அச்சேரலாதன் மகனான செங்குட்டுவன் "பெரிய வாயினு மமரகத்துப் பெற்ற-தரியவென்னாது ஓம்பாது வீசி" னானென்று பரணரும் (பதிற்றுப்பத்து.44.) கூறியிருத்தல் குறிப்பிடத்தக்கது.
போரில் தம் பெருந்திறமையைக் காட்டி இறந்த வீரர்க்கு வீரக்கல் என்ற நடுகல் நாட்டி அவரைக் கௌரவிக்குமுறை தொல்காப்பிய முதலிய முன்னூல்களில் விளங்கக் கூறப்பட்டுள்ளது.(தொல்.பொருளதி.60.)ஆனால், தம் கணவருடன் உயிர் நீத்த பத்தினிகளுக்கு அவ்வாறு கல்லமைத்துக் கௌரவிக்கும் வழக்கை அந்நூல்களிற் காணுதல் அரிதாம்.
ஆயினும், செங்குட்டுவன் காலத்தே கற்பின்மாட்சியை நிறுவிய பத்தினிகளிடம் தெய்வபாவனை வைத்து-வீரர்க்குச்செய்வதுபோலக்-கற்காண்டலும், கல்லெடுத்தலும், அதனை நீர்ப்படுத்துத் தூய்மைசெய்தலும், பிரஷ்டித்தலும், வாழ்த்துதலும் பெருமரபாயிருந்தன என்பது மேற்குறித்த வஞ்சிக் காண்டப் பகுதிகளால் நன்கறியப்படும். கண்ணகியின் கற்பினை வீரக்கற்பு அல்லது மறக்கற்பு என்றும், அவளை வீரபத்தினி யென்றும் (("ஆரஞருற்ற வீரபத்தினி"(பதிகம்)) அடிகள் கூறியதற்கேற்ப வீரர்க்குரியதாக நடைபெற்றுவந்த நடுகல்வழக்கத்தைக் கண்ணகி முதலியோர்கும் பண்டையோர் கொண்டனர் போலும். இவ்வாறு வீரசுவர்க்கம் பெற்ற சூரர்கட்குமட்டுமன்றி, சககமனஞ்செய்த பத்தினிகட்கும் கல்நாட்டிவந்த வழக்கமானது,பிற்காலத்தே பிரபலமாகவிருந்த தென்பது, தென்னாட்டின் பலபாகங்களிலும் அத்தகைய வீரக்கற்களும் ஸதிகற்களும் விசேடமாகக் காணப்படுதலால் விசதமாகின்றது. பிற்கூறிய ஸதிகல்லை மாஸ்திகல் என்பர் கன்னடநாட்டார். [இது மஹா ஸதி கல் என்பதன; மரூஉ] ஸ்ரீமாந்-கோபிநாதராயரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதிய சிறந்த ஆராய்ச்சியுரை யொன்றில் அவ்விருவகைக் கற்களின் மாதிரிகளாகக் காட்டிய படங்களை அடுத்த பக்கங்களிற்(*modify) கண்டுகொள்க.
பண்டையரசர்கள் மேற்கூறியவாறு வீரபத்தினிகளைச் சிறப்பித்தற்குரிய சிலைகளை இமயம் பொதியம்போன்ற பெரிய பர்வதங்களினின்றும் எடுத்து வருதலும், அவ் வெடுத்தவற்றைக் கங்கை காவிரிபோன்ற புண்ணியநதிகளில் நீராட்டித் தூய்மை செய்வித்தலும், அம்முயற்சியில் இடையூறு விளைக்கும் பகையரசரை அடக்கி மீளுதலும் வழக்கமென்பது,செங்குட்டுவன் செய்திகளினின்றுந் தெரியலாம்.
பண்டைத் தமிழ்வேந்தரது அரசியலுரிமை, பொதுவாக, மக்கட்டாயமாய் ஜேஷ்டாநுக்கிரமமாக வந்ததேயாகும். அம்மானுரிமை மருமகனுக்கு வரும் மருமக் கட்டாயம் செங்குட்டுவன் போன்ற சேரர்காலத்து வழங்கியதேயன்று. சரித்திரவறிஞர் சிலர், நம் சேரன்காலத்தில் மருமக்கட்டாயமே வழங்கியதாகக்கொண்டு, அக்கொள்கைக் கேற்பப் பழைய பாடல்களைத் திருத்திச் செல்வர். சேரலாதனை இளங்கோவடிகட்கு மாமன் என்ற முறையிற் கூறாது, தந்தையென்ற முறையில் வைத்து "நுந்தை தாணிழலிருந்தோய்"(சிலப்.30.174.) எனத் தேவந்தி அவ்வடிகளை அழைத்திருப்பதும், சேரவரசுக்குரியவர்களை,மருகரென்னாது புதல்வர் என்னுமுறையிற் பதிற்றுப்பத்துக் கூறுதலும் (70, 74). அவர்கொள்கைக்கு முழு விரோதமாதலோடு, முன்னூல்வழக்கே யின்மையாலும் அது பொருந்தாதென உணர்க.
நம் சேரர்பெருமானது மற்ற அரசியலடையாளங்கள்,சேரர்க்குப் பொதுவாக நூல்களிற் கண்டனவெல்லாம் அமையும். முக்கியமாக, செங்குட்டுவன் முன்னோர் "எழுமுடி" என்று பெயர்பெற்ற மாலையொன்று உடையராயிருந்தனர் எனப்படுகின்றது (பதிற்றுப்.14,16,40,45.).செங்குட்டுவனும் அதனை அணிந்திருந்தவன் என்பது "எழுமுடி மார்ப"(சிலப்.28.169.)என்னும் இளங்கோவடிகள் வாக்கால் தெரியலாம். அரசரெழுவரைச் சேரர் முன்னோர் வென்று, அவ்வெற்றிக் கறிகுறியாக அவரது எழுமுடிபோலச் செய்யப்பட்ட மாலையை அணிந்துவந்தவராதலால், அஃது அப்பெயர்பெற்ற தென்பர் (பதிற்றுப்.14.உரை).