சேக்கிழார் - முதல் அமைச்சர்

bookmark

சேக்கிழார் குடி: தொண்டை நாட்டை வளப்படுத்தி நாற்பத்தெண்ணாயிரம் குடிகளை அந்நாட்டிற் குடிபுகச் செய்த முயற்சி சோழன் கரிகாலனுக்கு உரியது என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். அக்குடிகளுள் கூடல் கிழான், புரசைகிழான், வெண்குளப்பாக்க கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் சிறந்தவை. இவற்றுள் முதல் மூன்றும் கூடலூர், புரிசை, குளப் பாக்கம் என்னும் ஊர்ப் பெயர்களை தலாகக் கொண்டவை. சேக்கிழான்"என்பது அப்படியன்று. சே-காளை; சேக்கிழான்-காளைக்குரியவன் எனக் கொள்ளின், எருதுகளைக் கொண்டு வயல் வேலை செய்யும் வேளாளனைக் குறிக்கும்; காளையை வாகனமாகக் கொண்ட உரிமையாளன் எனப் பொருள் கொள்ளின், சிவபெருமானைக் குறிக்கும். இரண்டாம் பொருளே சிறப்புடையதாகும். "சேக்கிழான் என்ற பெயர்கொண்டு தொண்டை நாட்டில் முதல் முதற் குடியேறிய வேளாளன் மரபில் வந்தவர் "சேக்கிழான் குடியினர்" எனப்பட்டனர். அக்குடியில் வந்த ஒவ்வொருவரும் "சேக்கிழான்" என்ற குடிப் பெயரை முன்னும், தம் இயற்பெயரைப் பின்னும் பெற்றுச் "சேக்கிழான்-இராமதேவன்." "சேக்கிழான்-பாலறாவாயன்" என்றாற்போலப் பெயர்பெற்று விளங்கிமுனர்" என்பது சோழர் காலக் கல்வெட்டுகளால் தெரிகின்றது. இச் சேக்கிழார் குடியினர் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுட் பலவற்றிற் குடியேறி வாழ்ந்தனர் என்பது.

1. மணவிற் கோட்டத்து மேலப்பழுவூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் அரையன் சங்கர நாராயணன்…..
2. மேலூர்க் கோட்டத்துக் காவனூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்திமலையன்….
3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்…. என வரும் கல்வெட்டுச் செய்திகளால் நன்கறியலாம். மேலும் இச்செய்திகளால், சேக்கிழார் குடியினர் சோழ மன்னரால் "சோழ முத்தரையன்" முதலிய பட்டங்கள் தரப் பெற்று உயர் நிலையில் வாழ்ந்தவர் என்பதும் புலனாதல் காண்க.
-----------------------
: 585 of 1920 : 183 of 1931 : 208 of 1930

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர்: இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் காண்கையில், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் (பெரியபுராண ஆசிரியர்) காலமுதலே விளக்கம் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியரும் இதனையே குறித்து, "அநபாயன் காலமுதல் சேக்கிழார் குடியினர் அரசியலில் உயர்ந்த பதவிகள் வகித்து வந்தனர்; இன்றும் வகித்து வருகின்றனர்" என்று தம் காலம் வரை சேக்கிழார் மரபினர் சிறப்பைக் குறித்துள்ளார். அவரது இக்கூற்று உண்மை என்பதைக் கீழ்வரும் கல்வெட்டுச்செய்திகளால் அறியலாம்:

அரசன் பெயர்

கல்வெட்டுக் காலம்

சேக்கிழார் குடியினர்

1. இராசராசன் II
(கி.பி. 1116-1173)

கி. பி..1162

சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன்.

2. "

கி.பி. 1164

குன்றத்தூர் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்.

3. குலோத்துங்கன்III
(கி.பி 1178-1218)

கி.பி. 1179

குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறா வாயன் களப்பாள ராயன்.

4. "

கி.பி. 1181

குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகதேவன் என்ற கரிகால சோழப் பல்லவராயன்.

5. "

"

குன்றத்தூர்ச் சேக்கிழான் புவனப் பெருமாள் என்ற துண்டக நாடு உடையன்.

6. இராசராசன் III
( கி.பி. 1216-1246)

கி.பி. 1225

குன்றத்தூர்ச் சேக்கிழான் பட்டியதேவன் ஆட்கொண்டான்.

7. இராசராசன் III
(கி.பி.1216-1246).

கி.பி. 1226

குன்றத்தூர்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்ட தேவன் என்ற முனையதரையன்.

8. "

கி.பி. 1240

குன்றத்தூர்ச் சேக்கிழான், வரந்தரு பெருமான் என்ற திருவூரகப் பெருமாள்.

9. மாறவர்கள் குலசேகர பாண்டியன் (கி.பி. 1270-1305)

கி.பி. 1300

குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்.

---------

குன்றத்தூர் சேக்கிழார் மரபினர், சேக்கிழார் புராண ஆசிரியர் அறிவித்தபடி, நீண்ட காலம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது, அவர்கள் பெற்றிருந்த "உத்தம சோழப் பல்லவராயர், துண்டக நாடு உடையான், அரையன், முனையதரையன்" என்னும் பட்டங்களால் விளக்கமாகிறது. இம்மரபினர் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் பலவற்றுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது மேற்குறித்த கல்வெட்டுகள் குறிக்கும் செய்தியாகும்.

பெரியபுராண ஆசிரியர் யாவர்? மேற்கண்ட சேக்கிழார் ஒன்பதின்மருள் முதல்வரே-சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன் என்பவரே-பெரியபுராணம் பாடிய நம் சேக்கிழாராக இருக்கலாம் என்பது அறிஞர் [4] கருதுகின்றனர். சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலமாகும் என்பது கல்வெட்டு அறிஞர்-வரலாற்று அறிஞர் இவர்தம் முடிபாகும். அவன் காலம் கி.பி. 1133-1150. அவன்மகன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) என்பவன். சேக்கிழார் புராணப்படி, இந்த இராசராசன், சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தபொழுது இளவரசனாக இருந்தவன். இவனது 17 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற்றான் சேக்கிழார் பெயர் குறிக்கபட்டுள்ளது. இராசராசன் காலத்தில் அவர் ஒய்வுபெற்றுச் சிவனடியாராக இருந்தார் என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியர் குறிந்த "உத்தம சோழப் பல்லவராயர்" என்ற பட்டமும் அவர் ஒருவருக்குத்தான் காணப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்க, முதற் கல்வெட்டிற் கண்ட இராமதேவன் என்பவரே பெரிய புராணம் பாடிய சேக்கிழார் என்பதை நம்பலாம்.
----------------------
[4] மு. இராகவையங்கார் "சாஸனத் தமிழ்க்கவி சரிதம்"

இராமதேவன். "இவ்வைணவப் பெயர் சைவமரபில் வந்தவர்க்குப் பெயராக இருந்திருக்குமா?" என்று சிலர் ஐயுறலாம். அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராகிய முனையரையர்க்கு "நரசிங்கர்" என்ற வைணவப் பெயர் இருந்தமையும், ஒன்பதாந்திருமுறைப் பாக்களைப் பாடிய சிவனடியாருள் ஒருவர்க்குப் புருஷோத்தம நம்பி என்ற பெயர் இருந்தமையும் நோக்கினால், இவ்வையம் எழ இடம் இராது. சேக்கிழார் மரபினர் வைணவப் பெயர் தாங்கல் பண்டை வழக்கம் என்பதை எட்டாம் கல்வெட்டைக் கொண்டும் உணரலாம்.

மாதேவடிகள்: சேக்கிழாரது பக்திச் சிறப்பை நோக்கியும் பெரிய புராணம் ஆகிய அருள்நூலைப் பாடிய தகுதி நோக்கியும் அவரைக் "குன்றை முனி சேக்கிழார்", "அருந்தவந்தனில் இருந்தவர்" என்றெல்லாம் சேக்கிழார் புராண ஆசிரியர் செப்பியுள்ளார். இஃதுண்மை என்பதை "மாதேவடிகள்" என்ற அடையால் கல்வெட்டு வற்புறுத்துகிறது. "மகா தேவனுக்கு அடிமை பூண்டவர்" என்பது இதன் பொருள். இச்சிறப்புடைய அடை, சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பிறகு வழக்கிற்கு வந்திருக்கலாம்.

அருள்மொழித் தேவர்: இது சேக்கிழாரது இயற்பெயர் என்று புராண ஆசிரியர் கூறுகிறார். இப் பெயரும் "மாதேவடிகள்" என்றாற் போன்ற சிறப்புப் பெயர்- பெரியபுராணச் சிறப்பு நோக்கி அறிஞர் இட்ட தகுதிப் பெயர் எனக் கோடலே பொருத்தமாகும்.

உத்தம சோழப் பல்லவராயர்: இதனை "அநபாயன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சேக்கிழார்க்கு வழங்கினான்" என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். இப்பட்டம் முதற் கல்வெட்டிலும் காணப்படுதல் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாகும்.

பாலறாவாயர்: "சேக்கிழார் இளவல் பாலறாவாயர் என்பவர்; அவர், சேக்கிழார் அமைச்சர் பதவியிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு சோழ அரசியலில் உயர்ந்த அதிகாரியாக்கபட்டார்" என்பது சேக்கிழார் புராணச் செய்தி ஆகும். இதனை உறுதிப்படுத்துவது போல இராசராசன் காலத்துக் கல்வெட்டும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டும் காண்கின்றன. அவ்விரண்டிலும் "சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்" என்பது காணப்படுகிறது. இப்பெயர் கொண்டவர் திரு அரத்துறை (தென் ஆர்க்காடு மாவட்டம்) கோட்டுர்க் (தஞ்சாவூர் மாவட்டம்) கோவில்கட்குச் *நிலதானங்கள் செய்த சிவ பக்தர் என்பது அக் கல்வெட்டுகளால் தெரிகிறது. இவர்,திரு அரத்துறையிலிருந்து மாசி, வைகாசி விழாக் காலங்களில் ஆளுடைய பிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் நடைபெறும் பூசை முதலியவற்றுக்காக வரியிலியாக நிலதானம் செய்தார்; கோட்டுர்க் கோவிலில் விளக்கெரிக்கப் பணம் உதவி செய்தார்.

அநபாயன்: இவன் சிறந்த சிவபக்தன் என்று கல்வெட்டுகளும், ஒட்டக்கூத்தர் இவன்மீது பாடிய உலாவும் உரைக்கின்றன. இவன் காலத்தில் சிதம்பரம் ஒப்புயர்வற்ற சிறப்பைப் பெற்றது. "இவன், புவன முழுதுடையாள் என்று தன் அரசமாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்தான்; கோபுரங்கள்,சிற்றம்பலம், பல பல மண்டபம், திருச்சுற்று மாளிகை, அம்மன் கோவில் இவற்றைப் பொன் மயமாக்கினான்;பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்; நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெரு வீதிகளும் நாணுமாறு சிறப்பித்தான்; மறையவர்க்குத் தானம் செய்தான்; பட்டம் பெற்றவுடன், சிறைப்பட்டிருந்த பகை மன்னரை விடுதலை செய்தான்" என்று குலோத்துங்கன் உலா, இராசராசன் உலா, தக்கயாகப் பரணி என்பன எடுத்தியம்புகின்றன. இவன், தந்தையான விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்று அரைகுறையாக விடப்பட்ட தில்லைத் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்தான் என்னலாம்.

அமைதியான அரசியல்: இவனது ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லை. சோழப் பெருநாட்டில் அமைதியே நிலவி இருந்தது. இவன் காலத்தில் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே பாண்டிய நாடுவரை பரவி இருந்தது. நாடு முழுவதும் அமைதியும் சமயத் திருப்பணிகளும் குடிகொண்டிருந்தன. கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையில் இருந்த அரண்மனையிலும் அரசன் சென்று தங்குவது வழக்கம். தில்லையிலும் ஒர் அரண்மனை பொலிவுற்று விளங்கினது,

குடும்பம்: அரசனது கோப்பெருந்தேவி தியாகவல்லி என்ற புவனம் முழுதுடையாள்; மற்றொரு மனைவி கோவலூர் மலையமான் மரபினள். அவள் பெயர் முக்கோக்கிழாள் என்பது. மகன் இரண்டாம் இராசராசன்.

"அநபாயன்" - சிறப்புப் பெயர்: குலோத்துங்கன் பெற்றிருந்த பட்டப் பெயர்களுட் சிறந்தது, "அநபாயன்" என்பதே ஆகும். இதனையே குலோத்துங்கன் உலாவும் கல்வெட்டுகளும் குறிக்கின்றன. சேக்கிழார் இஃதொன்றையே அவனைக் குறிக்கும் பத்து இடங்களிலும் வைத்துப் பாடியுள்ளார். இப்பெயரையே இவன் காலத்திற் செய்யப்பட்ட தண்டியலங்கார உதாரணப் பாக்களிலும் காணலாம். இவனது அரசியல் செயலாளன் "அநபாய மூவேந்த வேளான்" எனப்பட்டான். இவன் காலத்துச் சிற்றரசருள் ஒருவன் "அநபாய காடவராயன்" எனப் பெயர் பெற்றான். இவன் காலத்தில் கோவில்கட்கு விடப்பட்ட நிலங்கள் "அநபாய நல்லூர்", "அநபாய மங்கலம்" எனப் பெயர் பெற்றன. இவை அனைத்தையும் நோக்க, இரண்டாம் குலோத்துங்கனுக்கு அநபாயன் என்பதே சிறப்புப் பெயராக விளக்கமுற்றிருந்தது என்பது நன்கு புலனாகும்.

இவன் காலத்துச் சிற்றரசர்:
1. பல்லவப் பேரரசர் மரபில் வந்தவர் சோழப் பேரரசில் உத்யோகமுடையவராக இருந்துவந்தனர். அவருள் மோகன் ஆட்கொல்லி என்பவன் குறிப்பிடத் தக்கவன். அவனுக்குக் "குலோத்துங்க சோழக் காடவராயன்" என்ற பெயரும் உண்டு. அவன், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருமாணிக்குழி என்ற பாடல்பெற்ற தலத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். பின்னர்ப் படிப்படியாகப் பல உயர்ந்த பதவிகளை வகிக்கலானான். திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் போன்ற பெரிய கோவில்கட்கு அவன் செய்துள்ள அறங்கள் பலவாகும். சிறப்பாகத் திருவதிகைக் கோவிலுக்கு அவன் செய்த அறங்கள் மிகப் பலவாகும்.
2. திருக்கோவலூர் உள்ளிட்ட மலைநாட்டை ஆண்ட மலையமான்கள் "சேதிராயர்" என்ற பட்டத்துடன் சோழராட்சியில் குறுநில மன்னராக இருந்தனர். அவருள் சேக்கிழார் காலத்தவர் இருவராவர். அவர் - விக்கிரமசோழச் சேதிராயன், குலோத்துங்கசோழச் சேதிராயன் என்பவர்.
3. கர்நூல், சித்துர், நெல்லூர் முதலிய பகுதிகளை ஆண்ட தெலுங்குச் சோழர் (சோடர்), ரேநாண்டுச் சோழர் மரபினர் ஆவர். "இவர்கள் கரிகாலன் மரபினர்" என்று பட்டயங்கள் பகர்கின்றன. அவர்கள் திருக்காளத்திக் கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள் எண்ணிறந்தன. அவருள், சேக்கிழார் காலத்தில் குலோத்துங்க சோழ கொங்கன் என்பவன் சிற்றரசனாக இருந்தான்.
4. கடப்பை ஜில்லாவில் பொத்தப்பி நாட்டை ஆண்டவரும் சோழ மரபினரே ஆவர். பொத்தப்பி நாடு கண்ணப்பர் பிறந்த நாடாகும். சேக்கிழார் காலத்தில் பொத்தப்பி நாட்டை யாண்ட சிற்றரசன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன்.
குறிப்பிடத்தக்க இச்சிற்றரசர்களைத் தவிர வேறு பலரும் சோழப் பெருநாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் உள்ளடக்கிய சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராகத்தான் சேக்கிழார் இருந்து வந்தார்.[5]
---------------
[5] சேக்கிழார் புராணம். செ - 18

அநபாயன் காலத்துச் சைவத் திருப்பணிகள்: இரண்டாம் குலோத்துங்கனது ஆட்சி கி.பி. 1133 முதல் 1150 வரை இருந்தது. இப் பதினேழு ஆண்டுகளில் எந்த ஆண்டில் சேக்கிழார் சோழ முதல் அமைச்சர் ஆனார் - எந்த ஆண்டில் பெரிய புராணம் பாடினார் என்பன துணிந்துரைக்கக் கூடவில்லை. அதனால், பெரியபுராணம் பாடப்பெற்ற பிறகுதான் பல கோவில்களும் அநபாயன் ஆட்சியில் சிறப்புப் பெற்றன என்று கூறுதற்கில்லை. அவனது குறுகிய ஆட்சியில் திருமழபாடி, திருஆமாத்துர், திருமறைக்காடு, காஞ்சிபுரம், திருப்பழுவூர்,திருநெல்வெண்ணெய். பெண்ணாகடம், சீகாழி, திருக்கோவலூர், திருமாணிக்குழி, திருவையாறு,திருவொற்றியூர், அச்சிறுபாக்கம், திருவைகாவூர், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், திருஒத்தூர், திருநாவலூர்,திருப்புறம்பயம், திருவாரூர், திருவதிகை, திருவெண்ணெய்நல்லூர், திருப்புகலூர், திருவிடைமருதூர்,திருவல்லம், திருஆவடுதுறை, திருமுதுகுன்றம் என்ற பாடல்பெற்ற கோவில்கள் சிறப்புற்றன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.

திருவாரூர்க் கல்வெட்டுகள்:
1. "அநபாயன், தில்லைப் பொன்னம்பலத்துள் ஆடல் கொண்டுள்ள பெருமானது பாத செந்தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு போன்றவன். அவன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்பவர் திருமேனிகட்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்" என்று திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. இதனால் அவனது பக்திப் பெருமதிப்பும் தேவார ஆசிரியரிடம் அவன் வைத்திருந்த பெருமதிப்பும் நன்கு விளங்கலாம்.
2. "சுந்தரர் தாயாரான இசைஞானியார், திருவாரூர் ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன்- சடையனார், இசைஞானியார், சுந்தரர் இவர்தம் திருவுருவச் சிலைகளைப் பூங்கோவிலில் எழுந்தருளச் செய்தான்" என்று மற்றொரு கல்வெட்டு கூறுகிறது.

இங்ஙனம் பரம சிவபக்தனாக விளங்கியவன் அநபாய சோழன். அவன் வழிவழியாகவே சைவராக இருந்து வந்த சோழர் மரபில் பிறந்த வழுவிலா மன்னவன். அவனது நற்காலமோ அன்றித் தமிழ்நாடு செய்த நற்றவமோ,அறியோம் வழிவழிச் சைவராக வந்த சேக்கிழார் மரபில் வந்த பெரிய புராண ஆசிரியர் அநபாயனிடம் முதல் அமைச்சராக அமர்ந்தார். அரசனும் அமைச்சரும் பழுத்த சைவப் பெருமக்களாக விளங்கியதால், சோழப் பெருநாடே சைவ சமய வுணர்ச்சியில் வீறு பெற்றிருந்தது என்னல் மிகையாகாது.

சோழநாட்டுத் திருநாகேச்சரம்: சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சராக இருந்த பொழுது சோழநாட்டுத் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெருமானிடம் கரைகடந்த பக்தி கொண்டிருந்தார். அத்தகைய கோவில் ஒன்றைத் தமது குன்றத்துரில் எடுப்பித்தல் வேண்டும் என்று எண்ணங்கொண்டார்: அவ்வாறே புதிய கோவிலை எடுப்பித்தார். அதற்குத் திருநாகேச்சரம் எனப் பெயரிட்டார் என்பது சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்று.

சோழநாட்டுச் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயர் அஃதுள்ள இடத்திற்கே பெயராகிவிட்டாற் போலவே, குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயரும் அஃதுள்ள இடத்தையே குறிக்கத் தொடங்கி இன்றளவும் வழக்காறு பெற்றுவிட்டது. சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் சேக்கிழார், அவர் தாயார், தம்பி பாலறாவாயர் இவர்தம் உருவச்சிலைகள் இன்றளவும் இருந்துவருகின்றன. சேக்கிழார் குடும்பத்தினர் அக்கோவிற் பெருமானிடம் அன்பு செலுத்தினவராவர் என்பதற்கு அவ்வுருவச்சிலைகளே சான்றாகுமன்றே?

குன்றத்தூர்த் திருநாகேச்சரம். இது முன்னதைப் போலப் பெரிய அளவில் அமைந்ததில்லை. ஆயினும், அழகும் அமைதியும் கெழுமிய இடத்தில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்திய கோவில் என்பதைப் பல சான்றுகள் கொண்டு உணரலாம். வெளிச் சுற்றில் சேக்கிழாருக்குச் சிறிய கோவில் இருக்கின்றது. ஆண்டு தோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் சேக்கிழார் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்தாம் நாள் சேக்கிழார் திருவுருவம் மிக்க சிறப்பாக அணி செய்யப்பட்டு ஊர்வலம் வருதல் காணத்தக்க ஒரு காட்சியாகும்.

கல்வெட்டுகள்: அக்கோவிற் கல்வெட்டுகள் 44 ஆகும்.4 அவை யாவும் இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் என்ற திரிபுவன வீரதேவன் காலத்துக் கல்வெட்டுகளும் விசயநகர ஆட்சிக் காலத்து கல்வெட்டுகளுமாக இருக்கின்றன. அக்கோவிலில் திருவுண்ணாழிகைச் சபையார் இருந்தனர். கோவிற் பூசைகள் நாள்தோறும் குறைவின்றி நடந்து வந்தன. கோவிலை அடுத்த மடம் ஒன்று இருந்தது. அதனில் ஆலாலசுந்தரர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், சித்திரமேழி ஈங்கை, தேவப்பிள்ளை என்ற திருவுண்ணாழிகை நங்கை, உய்யவந்தாள் என்ற திருவுண்ணாழிகை நங்கை முதலிய தேவரடியார் பலர் இருந்தனர். கோவிலுக்குச் சேக்கிழார் மரபினரும் பிறரும் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.
---------------
[4] Ins 187, 231 of 1929 – 30

பெரிய புராணத்திற்கு அடிப்படை: இங்ஙனம் சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சர் வேலை பார்த்துக்கொண்டே சிவபக்தியிற் சிறந்த செம்மலாய் விளங்கிவந்தார். அவர் முதல் அமைச்சராதலின், சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டிய கடமை உடையவர். சிறந்த புலவரும் சிவபக்தரும் அரசியல் அறிஞரும் ஆகிய அவர் தமது தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை மிக்க பயனுடையதாகச் செய்திருப்பார் அல்லரோ? அவர் காலத்தில் சைவ சமயம் நன்றாக வளர்ச்சியுற்று இருந்தது. அது (1) சங்க காலத்தில் எப்படி இருந்தது, (2) நாயன்மார் காலமான பல்லவ மன்னர் காலத்தில் எவ்வாறு இருந்தது, (3) பிறகு சோழ வேந்தர் காலத்தில் எவ்விதம் வளர்ச்சியுற்றிருந்தது, - இவ்வளர்ச்சி அவர் பெரிய புராணம் பாட எந்த அளவு துணைபுரிந்தது என்னும் செய்திகளை இனி அடுத்துவரும் பகுதிகளிற் காண்போம்.