தத்துவமசி வாக்கியம்

bookmark

2568
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1
2569
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2
2570
ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3
2571
துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4
2572
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே. 5
2573
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே. 6
2574
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்
துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே. 7
2575
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8
2576
பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9
2577
நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10
2578
உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்து
இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற வோமய மாமே. 11
2579
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12
2580
அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13
2581
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14
2582
அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி 
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15
2583
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. 16
2584
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17
2585
துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18
2586
மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19