திருக்கயிலாய மலை

திருக்கயிலாய மலை, ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது; எல்லாம் வல்ல ஈசனார் வீற்றிருக்கும் திருக்கயிலாய பெருமை சான்றது; இந்திரன் முதலிய மலை தேவர்களும், எண்ணிறந்த முனிவர்களும்,பூத கணங்களும் அன்புடன் போற்றும் பேறு பெற்றது.
உமையம்மை இறைவனை வேண்டுதல்
இத்தகைய மலையில், சிவபெருமானோடு அமர்ந்திருந்த உமையம்மை, அந் நாயகனை நோக்கி"கற்பனையும், காரணமும், காரியமும் கடந்த இறைவனை கண்ணுதற் பெருமானே! தன் நிகரில்லாத் வேண்டுதல் தலைவனே! நின்னை இகழ்ந்த தக்கன் என்பவன் மனையில் நெடுங்காலம் வளர்ந்தேன்;அவன் பெற்ற புதல்வி யென்றும் பேசப்பட்டேன். அங்ஙனம் பெற்ற பெயரையும் அவன் உணவை உண்டு வளர்ந்த இவ்வுடலையும் இன்றளவும் தாங்கி நின்றேன்; இனி அத் தீயவன் வழியாக வந்த நாமமும் உருவமும் தரித்தற்கு அஞ்சுகின்றேன்; அவற்றை விட்டு ஒழிப்பேன். ஆனை தரல் வேண்டும்" என்று வேண்டினாள்.
"நங்கையே! நீ சொன்னது நன்று; நின் கருத்து முற்றுப்பெற வேண்டுமாயின், ஒன்று கூறுகின்றோம்,கேள், மேருமலையோடு உறவு பூண்ட இமயமலையின் அரசன் உன்னைத் தன் மகளாக முறைமையோடு எடுத்து வளர்த்து, பின்பு காதலோடு எமக்குக் கடிமணம் செய்துகொடுத்தற்காகக் கடுந்தவம் புரிகின்றான். ஆதலால், நீ குழந்தை வடிவம் எய்தி அம்மன்னனை அடைவாயாக. அவன் மலையில் நீ வளர்ந்து தவஞ் செய்யும் காலத்தில், உலகில் உள்ள சிவ கணங்களும், எண்ணிறந்த பெருந் தேவரும் சூழ்ந்துவர, நாம் அங்குப் போந்து, நின்னை மணம் செய்து, இக் கயிலை மலைக்கு அழைத்து வருவோம்” என்றார் சிவபெருமான்.
உமையம்மை இமயம் சேர்தல்
தலைவனைப் பிரிய நேர்ந்ததே என்ற துன்பமும், தக்கன் வழியாக வந்த சிறுமை தீர்ந்தது என்ற அன்பும்,மன்னுயிர்பால் வைத்த பெருங்கருணையும் முன்னே செல்ல, உமையம்மை கயிலை மாமலையை விட்டு விரைவில் இமயமலைக்கு எழுந்தருளி எழுந்தருளினாள்.
நீலமேகம் மின்னலோடு விளங்கும் நெடிய முடியை உடைய இமயமலை, மாயவன் திருமகளோடு பொருந்தி உறங்கும் பாற்கடலின் அனந்த சயனத்தை ஒத்தது. அத்தகைய மலையில் உள்ள அழகிய தடாகத்தில், மலையரசன் உமையம்மையை மகளாக அடையவும், அம் மங்கையை இணையற்ற ஈசனுக்கு மணம் செய்து கொடுக்கவும் கருதி, முன்னமே அருந்தவம் புரிந்துகொண்டிருந்தான். மெய்த்தவம் இயற்றிய மலையரசன் கண்ணெதிரே, தடாகத்தில் மலர்ந்த தாமரை மலரின் மேல்,உலகெலாம் என்ற உமையாள், ஒரு பசுங்குழந்தை வடிவத்திலே தோன்றினாள். அவ் வடிவத்தைக் கண்ட அரசன், "அடியேன் பொருட்டு என் அம்மை ஆண்டவனை விட்டு நீங்கினாளோ!" என்று ஏங்கினான்; "இத் தவத்தை ஏன் செய்தேன்?" என்று இரங்கினான்; எனினும், "இவையெல்லாம் ஈசன், திருவருள்” எனத் தெளிந்து, ஆனந்தக் கடலுள் மூழ்கினான்; தாமரைத் தவிசில் அமர்ந்த குழந்தையைத் தன் தடக்கையால் எடுத்தான்; தலையின்மீது தாங்கினான்; விரைந்து சென்றான்; மாளிகையை அடைந்தான்; மேனை என்னும் மனைவியின் கையிற் கொடுத்தான்.
மன்னுயிரையும், மாநிலத்தையும், மற்றும் உள்ள பொருள் அனைத்தையும் ஈன்று வளர்க்கும் அன்னையாகிய உமையாளையும் வளர்ப்பார் உண்டோ? மலையரசனும் அவன் மனையாளும் அவளை வளர்த்தனர் என்பது பொருளற்ற பேச்சே! அவர் மனையிலே வளர்ந்து, அம்மை தன் அருளின் தன்மையைப் புலப்படுத்தினாள் போலும்!
உமையம்மை தவம் புரிதல்
இவ்வாறு அவர்களிடம் வளர்ந்த உமையாள் ஐந்து வயது கழிந்தவுடன், பிரமன் முதலாய தேவர்களுக்கும் பிதாவாகிய சிவபெருமானது திருவருளைச் சிந்தித்துத் தவம் செய்யக் கருதினாள். தன் உள்ளக் கருத்தை மலையரசனிடம் உணர்த்தினாள். அன்னையின் கருத்தறிந்த அரசன், "அம்மா! கேள். எம்மை விட்டு நீங்கி நீ அருந்தவம் புரிதற்கு இஃது ஏற்ற பருவமன்று. வயது ஐந்துதான் ஆயிற்று. தவத்தின் கடுமையை நின் திருமேனி தாங்காது. ஆதலால், இப்போது இக் கருத்தை விட்டுவிடு" என்று வேண்டினான். அது கேட்ட உமையவள் புன்னகை புரிந்து, "எல்லோரையும் காப்பவன் ஈசன் ஒருவனே. அவனன்றி யாரும் தம்மைக் காத்துக் கொள்ளல் இயலாது. இஃது உண்மை. இப்பொழுது நான் சொல்லிய செய்கையும் அப் பெருமானுடைய பேரருளேயாகும். ஆதலால், தடை சொல்ல வேண்டா”என்று கூறினாள்.
அரசனும் அன்புடன் இசைந்தான்; இமயமலையின் ஒருசார் அரியதொரு தவச்சாலை அமைத்தான்; தன் உறவினர் தவம் செய்து அரிதிற் பெற்ற கன்னியர் பலரை அழைத்து, உமையாளுக்குத் துணையாக அனுப்பினான். நீலமணியின் நிறம் பொருந்திய் உமையவள், மன்னன் தேவியிடம் விடைபெற்றுப் பணிப்பெண்கள் பலர் சூழ்ந்து வர, பரம்பொருளாகிய ஈசனை மனத்தில் அமைத்து, அச்சாலையிற் போந்து அருந்தவம் புரியலுற்றாள்.