நம்ம துரை

bookmark

காதலியின் கண்களுக்கு காதலன் உலகத்திலேயே சிறந்தவனாகத் தோன்றுவான். உருவத்திலும், பண்பு நலன்களிலும் அவனே இணையற்றவன் என அவள் நினைப்பாள். காவியங்களில் வரும் காதலனைக் காதலி வருணிக்கும் முறைகளை நாம் கண்டிருக்கிறோம்.
கீழ்வரும் பகுதியில் காதலியர், தமது காதலர்களின் மேன்மையை வியந்து வருணிக்கும் பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒருவனைக் குறிப்பதில்லை; பாடுபவளும் ஒருத்தியல்ல. ஆகவே பாட்டுக்குப் பாட்டுச் சில முரண்பாடுகள் காணப்படும். ஆனால் பொதுவில் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நலன்கள் யாவும் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சேக்கு ஒதுக்கி விட்டுச் 
செந்துருக்கப் பொட்டு வச்சி 
சோக்கு நடை நடந்தாச்
சொக் குதையா உங்க மேலே

மலையிலே நிழ லோட்டம் 
மலைக்குக் கீழ் நீரோட்டம் 
ஒங்க மேலே கண்ணோட்டம் 
ஓடு தில்ல ஒரு வேலை

நறுக்குச் சவரம் செய்து 
நடுத் தெருவிலே போறவரே 
குறுக்குச் சவளுதையா 
கடந்த லொரு பாகத்துக்கு

கண யாழி மோதிரமே 
நிழலாடும் பச்சைக் கல்லு 
பச்சைக் கல்லும் பாவனைக்கும் 
இச்சை கொண்டே(ன்) உங்க மேலே

ஆளும் சிகப்பல்லோ 
அவரு நிறம் தங்க மல்லோ 
குணமே சரஸ்வதியோ உங்க 
குண மிருந்தாப் போதுமையா

புளிய இலை போல 
புள்ளித் தேமல் விழுந்தவரே 
அணை வாரு மில்லாமல் 
அழியுதையா உங்க தேமல்

ஏடு படிச்ச வரை 
எழுத்தாணி தொட்டவரை 
பாரதம் படிசசவரை 
பார்த்து வெகு நாளாச்சி

முன்னங்கையில் தங்கக் காப்பு 
முகம் நெறஞ்ச அருப்பக்கட்டு 
காதவழி வந்தாலும் 
கைவீச்சில் நானறிவேன்

அச்சடிப் புத்தகமே 
அரும் பரும்பாப் பேனாக் குச்சி 
பேனாக் குச்சி தொட்டெழுதும் 
பேர்ப் போன என் சாமி

பல்லிலே இடை காவி
பணத்திலே செலவாளி 
மேவரத்து நெல்லளக்க 
மெத்தச் செலவாளி

ஒரு பாகம் தலைமுடியாம் 
ஒதுக்கி விட்ட புருவக் கட்டாம் 
புருவக் கட்டை நேர் பார்த்து 
பூசுமையா திரு நீற்றை

இரும்படிச்சா கல கலங்கும் 
ஏலந் திண்ண வாய் மணக்கும் 
கரும்பு திண்ண வாயினிக்கும் 
கண்ணாளன் தந்த ஆசை

ஈனாத வாழை போல 
இளவாழைக் கண்ணு போல 
காலையிலே காங்கலைண்ணா 
கண்ணு ரெண்டும் சோருதையா

வந்தா வழி மணக்கும் 
வாச லெல்லாம் பூ மணக்கும் 
கட்டி அணைஞ்ச கையி 
எட்டு நாளும் பூமணக்கும்

மதுரையிலே குதிரை வாங்கி 
மல்லிகைப் பூக் குஞ்சம் கட்டி 
அடித்து வரும் எம் பெருமான் 
ஆத்து மணல் தூள் பறக்க

சிந்துதையா சீனிப் பொடி 
சிதறுதையா பூ மலரு 
அள்ளுதையா தன்னழகு 
ஆளோடி நிற்கும் போது

அஞ்சு வயசிலேயே 
அழகு தேமல் விழுந்தவரே 
பற்றிப் படருதையா 
பச்சைக் கிளி தேகத்துலே

நானும் நடந்திருப்பேன் 
நடப்பாரைக் கண்டிருப்பேன் 
அந்தச் சாமி நடையைப் போல 
சைகையிலே காணலியே

மொச்சிச் செடியே நீங்க 
முழக்கமுள்ள தாமரையே 
பிச்சி மலர்க் கொடியை
பிரிய மனம் கூடுதில்லை

ஒத்தத் தட்டு வேட்டிகளாம் 
உல்லாசத் துண்டுகளாம் 
பக்கத்துல நிக்கயிலே 
பத்து தையா என் மனசு

பட்டு அரை ஞாண் கொடி 
பாவி மகன் வாயருமை 
விட்டிட்டி ருந்தாலும் 
வேறொருத்தி லாவிருவா

குறுக்குச் சிறுத்தவரே 
கூத்தாடி மன்னவரே 
நாக்குத் திருத்தத்துக்கு 
நானுமில்ல ஆசை கொண்டேன்

வந்திருவார் இந்த வழி 
வாச்சிருவார் தங்கக்கட்டி 
தந்திருவார் வெற்றிலையும் 
தயவு வார்த்தை சொல்லிடுவார்

பச்சைக்கல்லு மேமுருகு 
பதினெட்டு வானப் பச்சை 
மலங்காட்டு மாசிப் பச்சை 
மணக்குதையா உங்க மேலே

ஆல மரத்துக் கிளி 
ஆசாரம் பேசுங் கிளி 
நான் வளர்த்த பச்சைக் கிளி 
நாளை வரும் இந்த வழி

கம்பி போட்ட வேட்டிக்காரா 
கம்பளத்துப் பிள்ளையாண்டா 
கடைக் கண்ணுப் புருவத்திற்கு 
கான மயில் ஆசை கொண்டேன்

பல்லு விலை பெறுமே 
பணம் ஐந்து சொல் பெறுமே 
சொல்லு விலை பெறுமே 
சோலைக் கிளி வாய் திறந்தால்

பூகம் பொடியுண்டு 
பொடியடைக்க கம்பியுண்டு 
நாசிப் பொடியுண்டு 
நான் இணங்குஞ் சாமியிட்ட

புதன் கிழமை தலை முழுகி 
போக வரச் சிக்கெடுத்து 
கண்ணு ரெண்டும் சோரவிட்டு 
கடைக்கி மின்ன நிக்காக

வில்வ மரத் தோரம் 
விரிச்ச தலைப் பூ மணக்கும் 
கருத்தப் பொடி மணக்கும் 
கருத்தச் சாமி போற வழி

ஓடையிலே ஒரணேறு
ஒருத்தி மகன் கருத்தாற 
கருத்தாற வாய் திறந்தா 
கனக மணி ஓசையிடும்

மஞ்சள் எடைக் கெடையாம் 
மரிக் கொழுந்து ரெண்டெடையாம் 
நானெ ணங்கும் சாமியிட்ட 
நல் குணங்கள் நாலெடையாம்

அருணாக் கொடி அஞ்சி ரூவா 
அதுக் கெசஞ்ச ஓடாணி 
ஓடாணி மின்னலுல 
ஒளி விடுதே உங்க தேகம்

மஞ்சனத்திப் பலகை போல 
மார்படந்த என் சாமி 
நெஞ்சில் படுத்துறங்க 
நினைவு மெத்தத் தோணுதையா!

மலையிலே பிரம்பு வெட்டி 
மலைக்குக் கீழே சிலம்படிச்சி 
தெரு மறிச்சுச் சிலம்படிக்கும் 
செல்லச் சாமி நம்மதுரை

கம்பத்துத் துண்டு களாம் 
கலர் கொடுத்த நேரியலாம் 
மலையாளத் துண்டுகளாம் 
மறக்க மனம் கூடுதில்லை

மார்பிலே சந்தணமாம் 
மணிக்கையிலே தங்கக் காப்பாம் 
தங்கக் காப்பு போட்ட சாமி 
தய விருந்தாப் போதுமையா

வட்டுக் கருப்பட்டிய 
வாசமுள்ள திப்பிலிய 
சில்லுக் கருப்பட்டிய 
சினந்தாலும் மறப்பதில்லை

உங்க உயரத்துக்கு 
உங்க காலு கெச்சத்துக்கு 
தங்கக் கைத்தானத்துக்கு 
தானாசை கொண்டனையா

சாரட்டு வண்டியிலே 
சிகரெட்டுக் குடிக்கையிலே 
சிகரெட்டு வெளிச்சத்துலே 
தெரியுதையா உங்க முகம்

எண்ணைத் தலையழகா 
எழுத்தாணி மூக்கழகா 
கோயில் சிலையழகா 
கொல்லுதடா உன்னாசை

முழிக ரெண்டும் கிளியப் போல 
முளிப்புருவம் கத்தி போல 
உருட்டி முழிக்கையிலே 
ஊடுருவிப் பாயுதடா

கல்லுரலு வீதியிலே 
கனக ரட்ன மேடையிலே 
இன்பமுள்ள ரதிக்கிளியே 
இருங்களேன் சாவடியில்

கடலாடிக் கடை துறந்து 
காரிக்கன் மல்லெடுத்து 
மெல்லுசமாப் போட்டுவரும் 
மிதந்த முளி நம்ம துரை

மண் வெட்டி கொண்டு 
மடை திறக்கப் போற சாமி 
மடையைத் திறந்து விடும் 
மஞ்ச நீராடி வாரேன்

எழுதிய ஓடு போல 
எழுத்தாணிச் சட்டம் போல 
வாரிய ஓலை போல 
வளையுதே ஒங்க மேனி

பட்டுக் கவரிலங்க 
பாளையத்து முத்திலங்க 
ஒட்டுக் கடுக்கனுக்கு 
ஒளி விடுதே ஒங்க தேகம்

வீசினார் கையல்லலோ 
விரிச்சார் தலைமுடியை 
பூசினார் திரு நீற்றை 
புருவக் கட்டை நேர் பார்த்து

அள்ளி எறிஞ்சது போல் 
அஞ்சாறு தேமலுண்டு 
பருத்தி இலை போல 
படருதையா தேகமெல்லாம்

கம்மங் கருதிலேயோ 
கணுவுக் கொரு கோணலுண்டு 
என் சாமி தேகத்துல 
எள்ளளவு கோணலில்லே

தூத்துக்குடி யிலேயோ 
துரை மாரு ஆபீஸிலே 
பஞ்சு விலை மதிக்கும் 
வஞ்சிக் கொடி என் சாமி

பெரிய கம்மா பரவு தண்ணி 
அதிலொரு நாள் ஸ்னானம் பண்ணி 
செங்க மங்கத் தண்ணியிலே 
தெரியுதையா உங்க முகம்

மிஞ்சியோ மின்னுறது 
மேல் முருகோ கொஞ்சுறது 
தங்கத் துரைகளுக்கு 
தாயத்தோ மின்னுறது

மருவு படர்ந்த கிளி 
மனித ரோட பேசுங்கிளி 
தேமல் விழுந்த கிளி 
தினம் வருமாம் இந்த வழி

எண்ணைத் தலை முழுகி 
என் தெருவில் போற மன்னா 
வண்ணத் தலை மயிரு 
கண்ணைப் பறிக்குதையா

கட்டக் கம்பு கையிலெடுத்து 
காரணமா வார சாமி 
சினந்து வழி நடந்தா 
சிங்க முடி போலிருக்கும்

வட்டார வழக்கு: லாவிருவா-சேர்த்துக் கொள்வாள்.
(பல பாடல்களின் தொகுப்பு)
சேகரித்தவர்: S.S. போத்தையா 
இடம்: நெல்லை மாவட்டம்.
-----------