பஞ்சம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிக்கடி பஞ்சங்கள் தோன்றின. பசியால் பதறிய மக்கள் முகம் கண்டு தாய்மார் பதறினர். மக்களைக் கொல்ல வரும் பஞ்சத்தில்,தங்களைப் படைத்த கடவுளை நோக்கி மழை வரம் வேண்டுகிறார்கள்.
வானத்தை நம்பியல்லோ
மக்களைத் தேடி வந்தோம்
மானம் பலியெடுக்க மக்கள் பரதேசம்-
மன்னரெல்லாம் தன் நாசம்,
பூமியைத் தேடியல்லோ
புத்திரரைத் தேடி வந்தோம்,
பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம்
புண்ணியரும் தன்னாசம்
சோறு சோறு என்று சொல்லி
துள்ளுது பாலரெல்லாம்
அன்னம் அன்னம் என்று சொல்லி
அழுகுது பாலரெல்லாம்
கோடை அழிய வேணும்,
கொள்ளை மழை பெய்ய வேணும்,
மாவு கொதிக்க வேணும்,
குழந்தை பசியாற வேணும்,
பூமி விளைய வேணும்
புள்ளை பசியாற வேணும்.
உதவியவர்: ஜானகி
சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி, நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
----------------