பரசுராமப் படலம் - 1378

bookmark

1378.

‘மீட்டும் போர் தொடங்கும் வேலை.
   விண்ணவர் விலக்க. வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை.
   நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும்.
   கார்முகம் அதனை. பாரில்.
ஈட்டிய தவத்தின் மிக்க
   இரிசிகற்கு ஈந்து போனான்;
 
மீட்டும்    போர் - மீண்டும் போரானது; தொடங்கும் வேலை -
தொடங்கும் போது; விண்ணவர் விலக்க - தேவர்கள் (இடையே) வந்து
விலக்கிட;  நெற்றிக் கண்ணன் - நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமான்
(போர்  ஒழிந்து); வல்வில்  தேவர்  கோன் கை நீட்டினன் - (அந்த)
வலிய  வில்லைத்  தேவேந்திரனின்  கைகளில்  கொடுத்தான்;  வெற்றி
காட்டிய   கரியமாலும்   -   வெற்றியைக்   காட்டி   நின்ற   கரிய
நிறத்திருமாலும்;  கார்முகம்  அதனை  -  (தன் கையிலிருந்த  ஒடியா)
வில்லாகிய அதனை; பாரில் ஈட்டிய தவத்தின் மிக்க- பூமியில் (தான்)
செய்து  சேர்த்த தவத்திற் சிறந்த; இரிசிகற்கு ஈந்து போனான் - (என்
தந்தையின்  தந்தையாகிய)   இரிசிக  முனிவரிடம்  அளித்து   விட்டுச்
சென்றான்.

வல்வில்:     வலிமை  மிக்க  வில்.   (முறிந்ததனால்)   இகழ்ச்சிக்
குறிப்புமாம்.  கீழே.  கார்முகப்  படலத்தில்.  இவ்வில்லைச்  சிவபிரான்
தக்கன்  வதத்திற்கு  எடுத்துச்  சென்று  வென்று  வந்ததாகக்  குறிப்பு
உள்ளது   (கம்ப.   677)   விசுவ   கர்மன்   செய்த   இருவில்களுள்
ஒன்றையெடுத்துச் சென்று. சிவபெருமான். தக்கனை  வென்றான்.  பிறகு
தேவர்  விரும்பியவாறு வலிமையறியச்  சிவபிரானுக்கும்  திருமாலுக்கும்
போர்   நடக்கையில்   சிவதனுசு   முறிந்ததால்.   அதனை   மிதிலை
மன்னனாகிய  தேவராதனுக்கு.   சிவபிரான்  தந்துவிட்டுச்   சென்றான்.
அது சனகன் கைக்கு வந்து என வில்லின்  வரலாற்றை  விரித்துணர்ந்து
கொள்க.    இரிசிகன்:    பரசுராமனின்    பாட்டன்.    பரசுராமனின்
தந்தையாகிய சமதக்கினியின் தந்தை.                           30