பரசுராமப் படலம் - 1379

1379.
‘இரிசிகன் எந்தைக்கு ஈய.
எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது. நீ நொய்தின்
வாங்குதிஆயின். மைந்த!
குரிசில்கள் நின்னொடு ஒப்பார்
இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென். நின்னொடு; இன்னம்
புகல்வது கேட்டி’ என்றான்.
இரிசிகன் எந்தைக்கு ஈய - இரிசிக முனிவன் (தன் மகனாகிய) என்
தந்தைக்கு அளித்திட; எந்தையும் எனக்குத் தந்த வரிசிலை இது -
என் தந்தையாகிய சம தக்கினி முனிவர் என்னிடம் கொடுத்த அழகிய
வில் இது; நீ நொய்தின் வாங்குதி ஆயின் - நீ (இதனை) எளிதாய்
(வளைத்திடுவாய்) என்றால்; மைந்த - வல்லமை வாய்ந்த மகனே;
நின்னொடு ஒப்பார் குரிசில்கள் இல்லை - உனக்கு ஒப்பாகும்
மன்னர்களே (உலகில்) இல்லை (என்பேன்); நின்னொடு யான் குறித்த
போரும் புரிகிலென் - உன்னோடு நான் புரியக் கருதி வந்த
போரினையும் புரியேன்; இன்னம் புகல்வது கேட்டி’ என்றான் -
மேலும் சொல்வேன் கேட்பாய் என்று உரைத்தான் பரசுராமன்.
பரசுராமன் இந்த வில்லினைக் கொண்டு 21 தலைமுறை மன்னர்
குலத்தை வேர் அறுத்தவன். ஆதலால். இந்த வில்லை நீ
வளைத்துவிட்டாய் ஆனால். உன்னை வெல்லும் மன்னர் உலகம்
முழுதிலும் இல்லையென்று மன்னர் வலியநுபவமும் தன் வில்
அநுபவமும் படக் கூறினான். இவ்வில்லை வளைப்பது அவன்
வலிமையை வளைப்பதாகும். ஆதலின். “வாங்குதியாயின் குறித்த
போரும் புரிகிலென்” என்றான். “நொய்தின் - வாங்குதி ஆயின்.’
என்பது எளிதாகக் கையில் வாங்குவாய் ஆயின் என்றும்
பொருள்படும். பரசுராமன் குறித்தமட்டில் அவ்வில் அவன் தவிர
மற்றையரால் கைக்கொள்ளவும் அரிது என்பதாம். 31