பிரிந்தவர் கூடினர்

கிராமத்தில் ஆண்டு முழுவதும் விவசாயத் தொழிலாளருக்கு வேலையிராது. எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டொருவர் வேலை தேடிப் பலவிடங்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் இளைஞர்கள் தம் காதலியரைப் பிரிந்திருக்க வேண்டும். மழை தண்ணீர் உண்டானால் ஊருக்குத் திரும்பி நிலத்தைப் பயிர் செய்வார்கள். வேலை தேடிச் சென்ற இளைஞன் ஊர் திரும்பினான். தன்னிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான் என்று அவளுக்கு அவன் மீது கோபம். புஞ்செய் நிலத்தில் அவன் வேலைக்கு வருவதை அவள் காண்கிறாள். அவள் முகத்தைத் திருப்பி கொள்கிறாள். உள்ளுர மகிழ்ச்சிதான். அவன் அவள் ஊடல் தீரப் பசுமையான நினைவுகளைக் கிளறி காதல் ஊற்றைச் சுரக்குமாறு செய்கிறான்.
காதலன்:
வட்ட வளவிக் காரி
வளத்தட்டு சீலக்காரி
கோதுமை பச்சக்காரி
கோபம் உண்டோ என்மேலே
நாணத்தட்ட சோளத்தட்ட
நாலுகைக் கம்மந்தட்ட
கம்மந்தட்ட வீட்டுக்காரி
காட்டம் உண்டோ எம் மேலே
பல்லு வரிசைக் கல்லோ
பட்டுக்கரை நேத்திக் கரை
சொல்லு வரிசைக்கில்லோ-உன்னை
சொந்தமின்னு எண்ணி ருந்தேன்
ஆனை நடையாளே
அமிர்த மொழியாளே
செல்ல நடையாளே-நான்
சில காலம் பிரிஞ்சிருந்தேன்
படுத்தா உறக்கம் வல்லே
பாய் விரிச்சாத் தூக்க மில்லே
உறக்கச் சடவுலயே-கண்ணே
உன் உருவம் தோணுதடி
உன்னைய நம்பி யல்லோ
உட்காந்தேன் திருணையிலே
என்னைய மறந்தியானா-நீ
ஈடேறப் போறதில்லை
வேலி அழிஞ்சுதுண்ணு
விறகுக்கு நீ வாடி
காளை ஒண்ணு தப்புச் சுண்ணு
காட்டு வழி நானும் வாரேன்
இண்டு தழையாதோ?
இண்டம் நிழல் சாயாதோ?
இண்டு நிழலிலேயே-நாங்க
இருந்து கவி பாட
மலையிலே மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழே தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள கொண்டையிலே
செவ்வரளிப் பூவைக் கண்டேன்
பழைய உறவுக்காரி
பாதையிலே கண்டுக்கிட்டு
அவளழுக, நானழுக
அன்னக்கிளி ஒண்டழுக
வட்டார வழக்கு: சடவு-அகதி; இண்டு-முள் மரம்; அழுக-அழ; திருணை-திண்ணை.
குறிப்பு: கம்மந்தட்ட வீடு-கூரை, கம்மந்தட்டையால் வேய்ந்திருக்கும் இத்தகைய வீடுகள் கோவில்பட்டி தாலுக்காவிலும் சங்கரன் கோவில் தாலுக்காவிலும் சில கிராமங்களிலும் காணலாம். .
சேகரித்தவர். S.M. கார்க்கி இடம்: சிவகிரி.
---------------