புனவாயில்

பாடல் 1325
ராகம் – ரஞ்சனி, தாளம் - ஆதி
(எடுப்பு - 3/4 இடம்)
தனனந் தந்தன தானன தந்தன
தனனந் தந்தன தானன தந்தன
தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது
விழியும் பஞ்சுபொ லானது கண்டயல்
உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால்
ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது
முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது
உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி
வரவொன் றும்பலி யாதினி என்றன்பின்
உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ
மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ....... இயல்தோகை
மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய
வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித
வனமின் குஞ்சரிமாருடன் என்றன்முன் ...... வருவாயே
அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள
கவியின் சங்கமி ராகவ புங்கவன்
அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன்
அருளுங் கண்டத ராபதி வன்புறு
விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய
அகமும் பைந்தொடி சீதமை றைந்திட ...... வழிதோறும்
மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள்
கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான
மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண்
முழுதுங் கண்டந ராயணன் அன்புறு
மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே.