பெண் தாலாட்டு

பெண் குழந்தை நடை பயிலுகிறது; தாய் அதன் தளர் நடையைக் கண்டு மகிழ்கிறாள். அவள் மனத்தில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. தன்மகள் பக்கத்து வீதிகளுக்குச் செல்லும்பொழுது அவள் வயதுப்பெண் குழந்தைகள் அவளோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டு அவளுடைய பந்தையும், செண்டையும் மறைப்பதை மனக் கண்முன் காண்கிறாள். குழந்தைக்கு இரண்டு அத்தைமார்கள் உண்டு; அவர்களுடைய தெரு
வழியே செல்லும்பொழுது அவளைக் கண்டு அத்தை மக்கள், அவளது அழகில் ஈடுபட்டு அவள் வாயை முத்தமிடுகிறார்களாம். அத்தை மகன் பெண்ணுக்கு மாப்பிள்ளை முறையாவான். பல கணவர் முறை நிலவியிருந்த காலத்தில் கூட்டு மண முறைக்கு அத்தைமகன், மாமன் மகன் இவர்கள் மாப்பிள்ளை முறையாக இருந்தார்கள். சொத்துரிமை தந்தை வழியாக இறங்கத் தொடங்கிய பின்பு கூட்டு மணமுறை படிப்படியாக மறைந்துவிட்டது. அப் பழைய வழக்கத்தின் எச்சமாகவே முறைமாப்பிள்ளை முறைப்பெண் என்ற வழக்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது.
பாப்பார வீதிக்கு-எங்க பொன்னு
பந்தாடப் போனாலும்......
பாப்பாரப் பொன்னுகண்டா
பந்தெடுத்து மறைச்சிடுவா
செட்டித் தெரு வீதிக்கு
செண்டாடப் போனாலும்
செட்டிச்சி பொண்ணு கண்டா
செண் டெடுத்து மறைச்சிடுவா,
கடலையே திண்ணுக் கிட்டு
கட வீதி போனாலும்
கட கெட்ட அத்தை மவன்
கட வாயே முத்த மிட்டான்
வெல்லத்தே திண்ணுக்கிட்டு
வீதியிலே போனாலும்
வெக்கங் கெட்ட அத்த மவன்
வெறு வாயே முத்தமிட்டான்.
வட்டார வழக்கு: திண்ணுக்கிட்டு-தின்று கொண்டு
சேகரித்தவர். முத்துசாமி
இடம்: நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
------------