பேறைநகர்

பாடல் 545
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
காரமிக வேநி றைந்த ...... குழலாலும்
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த ...... மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
கோபவரி நார சிங்கன் ...... மருகோனே
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.