முருக தூதன் புறப்படுதல்

இந்திரன் முதலிய வானவரிடம் விடைபெற்றுச் சென்று வீரவாகு கடற்கரையினருகே யமைந்த கந்த மாதன மலையின் மீது, கலி கலீர் எனக் கால்களில் அணிந்திருந்த வீரக் கழல்களில் ஒலிக்க விரைந்து ஏறினார்; அம் மலையின் உச்சியில் நின்று முருகப் பெருமானின் திருவுருவத்தைத் தியானித்துக் கை கூப்பித் தொழுது, திருமாலும் பிரமனும் வியந்து நோக்கப் பெரியதோர் உருவங்கொண்டார். சூரனது நகரத்தின்மேற் பாயத் துணிந்து காலையூன்றினார்; அப்போது, "ஆறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க, அயில்வேல் வாழ்க, அறப்படை யணைத்தும் வாழ்க, அரனார் திருமகன் வாழ்க" என்று வாழ்த்தினார். மலைச்சிகரத்தினின்று உள்ளக் கிளர்ச்சியுற்று எழுந்தார்; அந் நிலையில் தலையி லணிந்த மணிமகுடம் அண்ட கோளத்தின் முகட்டிற்குச் சென்று முட்ட வீரபத்திரன் சரப வடிவம் கொண்டு சென்றாற்போல மலைபோன்ற மாடமாளிகை நிறைந்த வீரமகேந்திரத்தை நோக்கிப் பறந்தார் வீரக் கழல் அணிந்த வீரவாகுதேவர். இவ்வாறு கடலைக் கடந்து, சூரனது நகரத்தின் வட திசையில் யாளிமுக அசுரனால் காக்கப்பட்ட இலங்கா புரத்தை நண்ணினார்.
இலங்காபுரத்தில் எதிர்ப்பு
யாளிமுகனுடைய படைத்தலைவனாகிய வீரசிங்கன் . வீரவாகுவைக் கண்டு பெருஞ்சேனையோடு எதிரே சென்று, "இன்றளவும் எம் கடிநகருள் வந்தார் யாரும் இலர்; தன்னந் தனியனாய் வந்த நீ யார்? உயிர்மீது உனக்கு ஆசையில்லை போலும். நின்னைக் கொல்லு முன்னே நீ வந்த காரியத்தைச் சொல்” என்று வினவினான். அது கேட்ட முருக தூதர் அவ் வசுரனுடைய கரங்களையும் தலையையும் வாளால் அறுத்துக் கடலில் எறிந்தார்; பின்பு நெடிய வாளை உறையில் இட்டு வெற்றியோடு சென்றார்; இலங்கையின் மீது பாய்ந்தார்; யாளிமுகனுடைய மைந்தனாகிய அதிவீரனும் மற்றைய அசுரரும் கலங்கி ஏங்கி, இடியோசை கேட்ட நாகம் போல் உடல் நடுங்கி விழுந்தார்கள். விழுந்த அதிவீரன் உடனே எழுந்தான்; தன் சேனையாகிய பெருங்கடலின் நடுவே ஊழிக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தாற்போல நின்ற வீரவாகுவின் நிலையை நோக்கினான்; உடனே தனது வாளை எடுத்து, "இந்த வாள் அயனால் எனக்கு அளிக்கப்பட்டது. இதனை விலக்குதல் எவராலும் இயலாது; இன்று நீ மடிதல் திண்ணம். என் எதிரே வருவாயாக" என்று வீரமொழி பேசிக்கொண்டு நெருங்கினான். வீரவாகு அவனைப் பார்த்து, "நன்று நன்று நின் வலிமையும் வீரமும், நின்று வீரம் பேசுவதேன்? வந்து பார் வெற்றி வீரர் தம்மைத் தாமே மெச்சுவாரோ?" என்று கூறுதலும், அதிவீரன் சீற்றமுற்றான். இருவரும் எதிர்த்தனர்; பெரு மேகங்களில் மின்னல் எழுந்து வீசுதல் போல வீரர் இருவரும் வாள் வீசிப் போர் புரிந்தார்கள். அப்போது வீரவாகு தேவர் சமயம் பார்த்து மாற்றானது அடியையும் முடியையும், மார்பையும் தோளையும் துணித்துத் தள்ளினார். காலன் அவன் உயிரைக் கவர்ந்து சென்றான்.
வீரமகேந்திரத்தில் வீரவாகு
அதிவீரன் இறந்த பின்னர், வீரவாகு இலங்கையை விட்டு வீரமகேந்திரத்தில் எழுந்தார்; பின்னும் ஆயிரம் யோசனை தூரம் பறந்து வானவர் பகைவனாகிய சூரன் வாழ்ந்த மகேந்திரபுரியின் முன்னே போந்தார். அந்நகரின் வடக்கு வாயிற் கோபுரத்தின் அருகே கோரன் அதிகோரன் என்னும் கொடிய வீரர்கள் படையோடு காவல் செய்திருந்தனர். "இவ் வழியாகச் சென்றால் இங்குள்ள சேனை எதிர்த்துப் போர் செய்யும். இதனைப் பொருது அழிப்பதற்குள் பொழுது போய்விடும் போர் முடிந்திடாது; பின்பு வீரமாநகரில் உள்ள நால்வகைச் சேனை வெள்ளமும் எழுந்து வரும். எவராலும் வெல்ல முடியாத சூரனும் பின்னர் வந்து எதிர்ப்பான்; அவனோடு பல நாள் போர் புரிந்தாலும் இறைவன் அளித்துள்ள வரத்தினால் அவன் இறக்கப் போவதில்லை. அடியேனுடைய ஆதி நாயகன், ஆறுமுக நாயகன், ஆசற்ற சோதிநாயகன் - அவனன்றிச் சூரனை யாவரே அழிக்க வல்லர்; ஆதலால், போர் புரிதல் ஏற்றதன்று; அன்றியும் எம்பெரு மான் இட்ட பணியும் அதுவன்று: தூதர்க்கு அது முறையும் அன்று. ஆதலால், போர் இன்றி நகரின் உள்ளே புகுதலே முறை" என்று கருதினார், வீரவாகு. வடக்கு வாயிலின் வழியே செல்லாமல் தென்புறம் சென்று நாடக் கருதிப் புறப்பட்டார்.
கயமுகாசூரனைக் கொல்லுதல்
அவ் வழியில் கப்பலைக் காக்கும் மீகாமனைப் போல் வானில் நின்று வீரமாநகரைக் காத்த வீரனாகிய கயமுகன் என்பவன், ஆகாய வழியே சென்ற வீரவாகுவைக் கண்டு பேசலுற்றான்: "அடே! நீ வலிய காவலைக் கடந்து வந்தாய்; மாயம் புரிந்து புகுந்தாயே? காற்றும் எமது ஆணை கடந்து வரும் ஆற்றல் உடையது அன்றே உன்னை அனுப்பியவர் யார்? ஆலகாலத்தை அருந்திய அரனோ? மாலோ? அயனோ? வெள்ளை யானையுடைய கள்வனோ? இந் நகரத்தைச் சுற்றினாய் நீ ஒற்றனாக வந்தாய் போலும்! நீ வந்த காரியம் யாதோ? பேதாய் உன் உயிரை விற்றாய்! நீ இனிப் பிழைக்கு-மாறுண்டோ? " இவ்வாறு முழங்கிக்கொண்டு கயமுகன் ஒரு குன்றத்தைப் பறித்தெடுத்து, "இஃது உன் உடலையும் உயிரையும் ஒழித்துவிடும்” என்று ஆரவாரித்து வீசினான். அவ் வசுரன் வீசி எறிந்த குன்றம் விசையற்று நிலைகுலைந்து விழுந்தது. அறநெறி தவறிச் சேர்த்த அரும்பொருளை அயலார் கொள்ளப் பறிகொடுத்து ஆக்கங்கெட்ட மாந்தரைப் போல் கயமுகன் திகைத்து நின்றான். தீப்பொறி பறக்கும் கண்களோடு பின்னும் அவ் வசுரன் வீரவாகுவின்மீது விட்டெறிவதற்கு வேறு மலைகளைப் பெயர்த்தெடுத்தான்; அப்போது முருகதுரதர் தம் வாளை எடுத்து, அவனருகே பேர்ந்து, ஆயிரம் துதிக்கைகளையும் அறுத்தெறிந்தார். கரம் இழந்தும் உரம் இழவாது நின்ற கயமுகன் பின்னும் போர் புரிய முனைந்தான், அந் நிலையில் அவனை உதைத்துத் தள்ளினார், வீரவாகு. அலறி விழுந்தான், அசுரன் ஆவி துறந்தான். அவன் மார்பினின்று பொங்கிப் பாய்ந்த குருதி அலைகடலை நோக்கிச் சென்றது. "அருமறைகளாலும் அறிய வொண்ணாத முருகப்பெருமான் இட்ட பணியை மறந்து, பெருமையற்ற இவ் அசுரருடன் போர் புரிந்து நிற்றல் பேதைமையாகும். ஆதலால், சூரன் நகரினுள்ளே இனி விரைந்து செல்வேன்” என்றார், வீரவாகு. சிறிய அணுவிலே சாலச் சிறிதாகியும், பெரிய பொருளிலே மிகப் பெரிதாகியும் எங்கும் நிறைந்து நிற்கும் அறுமுகச் செவ்வேள் திருவடியை அன்பொடு போற்றி, அப் பெருமான் அருளால் ஓர் அணுவின் உருவம் கொண்டார், முருகதுரதர். சிவபெருமான் எல்லா உலகங்களையும், எழுவகையான உயிர்த்தொகைகளையும் மற்றுமுள்ள பிண்டப் பொருள்களையும் படைத்து ஓரிடத்தில் நிறைத்து வைத்த தன்மைபோல் விளங்கிய மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வீரவாகு வியப்புற்றார்.
நகரத்தின் சிறப்பு
இந் நகரில் எழுகின்ற குழலின் ஒலியும், யாழின் ஒலியும், பாட்டின் ஒலியும், விழாவின் ஒலியும் கடலொலியினும் மிகுந்துள்ளது. வில் எடுத்துப் பயில்பவர் ஒருபால்; மற்றைய படைக்கலம் பயிலும் மறவர் ஒருபால்; மற்போர் பயிலும் மதுகையர் ஒருபால்; மாயப்போர் பயில்பவர் ஒருபால்; மந்திரம் முயல்பவர் ஒருபால்; ஆகப் பார்க்குமிட மெங்கும் வீரர்களே பரந்து தோன்றுகிறார்கள். நரம்பெழுந்த மேனியரும், ஊன் ஒடுங்கி உலர்ந்தவரும், நரைத்து வற்றிய தலையினரும், தண்டூன்றித் தள்ளாடித் திரிபவரும், கூற்றுவனால் குமைக்கப்படுவோரும், நோய்களால் நலிவோரும், வறுமையால் வாடுவோரும் இந் நகரில் எங்குமிலர்; இது தவத்தின் வலிமையேயாகும். சிறந்த இந் நகரத்தின் செல்வத்திற்கு ஓர் அளவில்லை; இவ் வளத்தையெல்லாம் காண்பதற்கு எண்ணிறந்த கண்கள் வேண்டும்; அவற்றைப் பெற்றாலும் இக் காட்சியை ஒரு நாவால் உரைசெய்ய ஒண்ணாது. ஆயிரங்கோடி நாவினைப் பெற்றால் எடுத்துரைத்தல் கூடும். இவ்வாறு எண்ணி முருகதுர்தர் இமயமலை போன்ற கீழ்த்திசைக் கோபுரத்தின் மேல் நின்று, அந் நகரின் சில வளங்களைக் கண்டு, சூரன் இருந்த திருநகரினுள்ளே செல்லத் துணிந்தார். பின்னும் முருகப்பெருமானது திருவருளைத் துணைக்கொண்டு ஆகாய வழியாகச் சென்று, சூரனுடைய முதற் புதல்வனாகிய பானுகோபனது மாளிகையைப் பார்த்தார். பின்பு, அவன் மந்திரிகளுள் தலைமை பெற்று விளங்கிய தருமகோபனது மாளிகையின்மீது தங்கினார். அங்கிருந்து வானவரும் சயந்தனும் அசுரர் காவலிற் சிறையிருந்த சூழலைக் கண்ணுற்றார்.
சிறையிருந்த சயந்தன்
தெய்வத் தன்மை வாய்ந்த தெள்ளிய மரகத மணியாற் செய்த . அழகிய வடிவம் மாசடைந்தாற் போலவும், குளிர்ந்த பொய்கையில் மலர்ந்த நீல மலர்களால் தொடுத்த மெல்லிய மாலை வாடியுலர்ந்தாற் போலவும் தோன்றினான், சயந்தன். ஐவகைப்பட்ட தேவதருவின் இனிய நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை நினைப்பான், அவன்; மெல்லிய நறுமலர் விரித்த பூம்பள்ளியை நினைப்பான்; வான நங்கையர் நலத்தினை நினைப்பான்; விண்ணாட்டுச் செல்வத்தை யெல்லாம் எண்ணி மயங்குவான். பொன்னகரம் பொரிந்து கரிந்ததையும், என்னை அசுரர் கொண்டுவந்து அருஞ் சிறையில் அடைத்ததையும் கேட்கும் பொழுது என்னைப் பெற்ற தாய் என்னென்ன நினைத்து ஏங்குவாளோ என்றெண்ணி வருந்துவான். "அறம் என்னைத் துறந்ததோ? மறத்தின் கொடுமை நிறைந்ததோ? மாதவத்தின் பயன் தேய்ந்ததோ? நன்மை குறுகிற்றோ? தின்மை பெருகிற்றோ? மறையும் இறந்ததோ? இறைவனும் இல்லையோ? என்று மறுகுவான். "எம்பெருமானே! விலங்காகிய யானைக்கு விரைந்து அருள் செய்தாய் கரிக்குருவிக்கும் நாரைக்கும் கருணை புரிந்தாய்! ஊர்ந்து செல்லும் பாம்புக்கும் சிலந்திக்கும் பரிவு கூர்ந்தாய்! நின் திருவடி மறவாத தேவரையும் என்னையும் கத்தருளாயோ?
"கங்கை சூடிய எங்கள் நாயகனே! நஞ்சுண்டு கண்டம் கறுத்த நாதனே ! நெற்றிக் கண்ணுடைய நிமலனே! பிறைமதி யணிந்த பெருமானே! செம்மையேயாய சிவனே! சிவனே! என்று நின் அடியார் எல்லோரும் ஓலமிடுகின்றோமே உயிர்க்குயிராகிய தலைவா! அவ் வுரையும் கேட்டிலையோ? திருமாலும் பிரமனும் தேடிக் காணாத தேவ தேவா மன்னுயிர்க்கெல்லாம் நீயன்றி யாரே உற்ற துணையாவார்? இந்த ஏழையைக் காக்க எழுந்தருளி வாராயோ!" இவ் வண்ணம் பல வகையாகப் புலம்பி, நஞ்சு தலைக்கேறினாற் போன்று நடுங்கும் துயரால் உணர்விழந்து ஒன்றும் அறியாதவனாய் மயங்கினான்; இறந்தாரைப் போல் சாய்ந்தான், இந்திரன் மைந்தன்.
கந்தவேள் சயந்தனுக்குக் காட்சியளித்தல்
செவ்விய பாலனாய்ச் செந்தூரில் வந்து, வானவரது வினைப் பயனாகிய துன்பத்தை விலக்கி நின்ற விமலன், சிறைக் கோட்டத்தில் மயங்கிக்கிடந்த சயந்தனுக்குத் திருவருள் புரிய விரும்பி, அவன் கட்சியளித்தல் கனவிலே தோன்றினர். வலப்புறமுள்ள ஆறு கரங்களில் வீரக் கொடியும் வச்சிரப் படையும், அங்குசமும் அம்பும், அயில் வேலும் அபயமும் கொண்டு, இடப்புறமுள்ள திருக்கரங்களில் வரதமும் கமலமும், மணியும் மழுவும், கதையும் வில்லும் தாங்கி ஆறுமுகச்செவ்வேள் விளங்கினார். தந்தையற்ற பெருமானைத் தந்தையாகவுடைய கந்தவேள் அளித்த காட்சியைச் சயந்தன் நுண்ணுடலில் அமைந்த மனக்கண்ணாற்கண்டு வணங்கிக் கூறலுற்றான்: "ஐயனே! அடியேன் படும் அல்லலை அறிந்தாய். அதனை அகற்றத் திருவுளங்கொண்டு அருள் கூர்ந்து எழுந்து வந்தாய். நின் திருவுருவைப் பார்த்தால் நீ திருமாலும் அல்லை; பிரமதேவனும் அல்லை; அவர்க்கு மேலாய சிவபெருமானும் அல்லை. என்னை ஆட்கொள்ள வந்த நீ யார் என்று அறிவித்தருளல் வேண்டும்? " என்று விண்ணப்பம் செய்தான். அப்போது ஆறுமுகப்பெருமான், "யாம் சிவகுமாரன்; உனது துயரத்தையும் உருக்கத்தையும் மயக்கத்தையும் உணர்ந்து இங்கு வந்தோம். உன் தந்தையாகிய இந்திரன் தனது குறையையும் தேவர் குறையையும் எம்மிடம் வந்து முறையிட்டான். அந் நிலையில் யாம் அளவிறந்த சேனையோடு இந் நிலவுலகிற் போந்து கிரவுஞ்சம் என்னும் மலையையும், தாரகாசூரனையும் அழித்தோம்; அதற்கும் பின்பு திருச்செந்தூரில் வந்து அமர்ந்தோம். பிரமதேவனும், திருமாலும், உன் தந்தையும் நம்மிடத்தில் உள்ளார். உன் தங்கை மகாமேரு மலையிலே உள்ளாள். நீ வருந்தாதே, இன்றைப் பொழுது கழிந்ததும் நாளையே செந்திலம் பதியை விட்டுப் புறப்பட்டு இங்கு வருவோம். இந் நகரின் அருகே தங்கி நின்று பத்து நாள்களில் அசுரரது பரந்த சேனையையும், அல்லல் விளைத்த சூரனையும் அழித்திடுவோம். பின்னர், உன்னையும் தேவரையும் கொடிய சிறையினின்றும் விடுவித்து உமது செல்வங்களையெல்லாம் தருவோம். ஆதலால் துயரம் தீர்க” என்று அருளி மறைந்தார் முருகவேள். அப் பெருமான் அருளிய மொழிகளைக் கேட்டான் சயந்தன், வாட்டம் தீர்ந்தான்; மகிழ்ச்சி யடைந்தான்; மெய்ம்மயிர் சிலிர்த்தான்; கண்ணி வடித்தான்; நஞ்சு தலைக்கேறிச் சாய்ந்தவர் மந்திரத் திறனால் மயக்கம் தீர்ந்தாற் போன்று எழுந்தான். ஆதி நாயகனாகிய ஆறுமுகப் பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர்மையையும், அருள்புரியும் தன்மையையும் நினைந்து, அவர் திருவடிகளை மறைகளாற் போற்றித் தொழுதுகொண்டு இருந்தான்.
முருக தூதர் சயந்தனைக் காணுதல்
இவ் வண்ணம் வானவரோடு சயந்தன் சிறையிருத் தலையும், அசுரர்கள் செறிந்து சிறைக்கோட்டத்தைக் காவல் செய்திருத்தலையும் வித்தகராகிய வீரவாகு கண்டார். கருணையின்றிக் கடுஞ்சிறையைக் காத்து காணுதல் நின்ற அசுரர் காணாது மயக்கமுற்றுக் கிடக்கவும், வானவர் காணவும் ஒரு வகை செய்யக் கருதினர். மூல மந்திரத்தின் பொருளாய், உயிர்க்குயிராய் நின்று நிலவும் குமரேசனை நினைத்தார்; அவர்க்குரிய மந்திரமாகிய ஆறெழுத்தை அன்புடன் ஒதினார்; தீமையே உருவாகி நின்ற அசுரரது சிறைச் சாலையினுள்ளே புகுந்தார். அப் பொழுது புகை நிறம் பொருந்திய அசுரர் வலிமையற்று மந்திர வலையிற்பட்டு மயக்கமுற்றார். அந்த வேளையில் வீரவாகு சிறைக்களத்தினுள்ளே சென்று வேலேந்திய முருகப்பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்தார். பொன்னுலகத்தை யாளும் பீடிழந்த சயந்தன் முன்னே போந்து அமர்ந்தார்.
முருகன் பெருமையை எடுத்துரைத்தல்
வியப்புற்று நின்ற சயந்தனை நோக்கி, "ஐயனே கேள்: முதல்வன் பெற்ற முருகவேளின் பின்னவன் யான். அவன்தன் தூதனாய வந்தடைந்தேன். வீரவாகு என்னும் பெயருடையேன், உங்களைச் சிறையினின்று விடுவிக்கும்படி சூரனிடம் சொல்ல வந்தேன். சிவபெருமான் வேண்டிக்கொண்டமையால் பிரம தேவனைச் சிறையினின்றும் விடுவிக்க அறுமுக வள்ளல் உங்களிடம் நிறைந்த கருணை பாலித்தார். அவரருள் முன்னிற்கும் பொழுது உம்முடைய பாவமும் பழியும், தீமையும் துன்பமும், பிற குறைகளும் அழிந்தொழிதல் அரிதாகுமோ? பிறவியாகிய பெருங் கடலையும் கடந்தீரன்றோ? ஒப்புயர்வற்றதாய்,அரிய பேரொளியாய், அப்பாலுக் கப்பாலாய் நின்ற பரம்பொருளே ஆறு முகமும் பன்னிரு தோளும் கொண்டு, பாலகன் போலத் தோன்றி, கந்தன் என்றொரு பேரும் பெற்று எல்லோரும் காணக் காட்சி தருகின்றார். ஏழு கடலும், எண்ணிறந்த மலையும் ஏனைய பொருளும் கொண்ட நிலவுலகத்தையும்,மேலும் கீழுமாய் நின்ற பதினான்கு உலகங்களையும், மற்றுமுள்ள அண்ட்ங்கள் அனைத்தையும் நொடிப் பொழுதில் உண்டு ஒழிக்க வல்லது முருகன் கைவேல்; சூரனையும் அசுர குலத்தையும் வீட்டுவது அதற்கு ஒரு விளையாட்டே-யாகும்” என்று இன்னோரன்ன செய்திகளை இந்திரன் மைந்தனும் இமையவரும் உணரத்தக்க வ்கையில் வீரவாகு எடுத்துரைத்தார். அந் நிலையில் அன்னார் மனமகிழ்ந்து, "வேலனுக்கு இளைய வீரா! நீ வெற்றி பெற்றிடுக" என்று தனித்தனியாக ஆசி கூறினர்.
தூதர் சூரனது மாளிகைக்குச் செல்லுதல்
சிறைக்களம் விட்டு நீங்கினார், முருக தூதர்; வானின் வழியே விரைந்து சென்றார். சூரன் நகரத்தைச் சூழ்ந்திருந்த அகழிகளைக் கடந்து போயினார். கோட்டை நகரில் அமைந்த செய்குன்றின்மேல் நின்று சூரனது மாளிகையின் வளத்தை யெல்லாம் கண்ணும் மனமும் பொருந்த நோக்கினார்.
முருக தூதருக்கு அரியாசனம் வருதல்
பின்னர் அவ்விடம் விட்டு நீங்கிப் பறந்து சென்று, வெற்றி வீரனாகிய சூரன் அரியாசனத்தில் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தை அடைந்தார்; "மேரு மலையை வில்லாகக் கொண்ட மேலவன் மைந்தனாகிய தூதன் யான்; அசுரர்கோன் அரியாசனத்தில் இருக்க, எளியனாய் அவனுக்குத் தாழ்ந்த நிலையில் சென்று நிற்றல் எம்பெருமான் பெருமைக்கு இழி வாகுமே" என்று எண்ணினார்; அறுமுகப் பெருமானது திருவடியை நினைந்தார். அந் நிலையில் அவர் அருளால் ஆயிரம் கோடி சூரியர் ஒருங்கு சேர்ந்து எழுந்தாற் போன்று ஒளி வீசிய பீடம் ஒன்று விரைவில் அங்கு வந்துற்றது. அசுரர்கோன் எதிரே நின்ற அரியாசனத்தைக் கண்ட முருக தூதர் "எம்பெருமான் இதை அனுப்பினார் போலும்" என்றெண்ணி அகமகிழ்ந்து, அவர் திருவடி களை மனமாரப் போற்றி, அத் தவிசின்மீது ஏறி வீற்றிருந்தார்.
சூரன் எரிந்து பேசுதல்
அதைக் கண்டான், சூரன்; கடுங்கோபங் கொண்டான்; பற்களைக் கடித்தான்; சிரித்தான்; உறுமினான்;உடம்பெல்லாம் வியர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க வாய் புகைந்திடப் பேசலுற்றான்: "அடா! அற்பனே! சுற்றம் துறந்து வற்றிய காட்டில் சுற்றித் திரிந்து, இலைகளைத் தின்று உடம்பினை வருத்தும் சிற்றறிவுடையோர் செய்யும் சித்தின் தன்மை இது! நீ கற்ற வித்தையை நம் முன்னே காட்டினாயோ? சித்தர்களும், திருமால் முதலிய தேவர்களும் தத்தம் இடங்களில் இத்தகைய வித்தைகள் புரிவார்களே யன்றி என் முன்னே காட்டிடக் கலங்குவர். நம்மிடம் இது காட்டக் கருதிய நீ பித்தன் போலும்! அடே! பேதாய்! இது மிக அரிய வித்தை என்று எண்ணினாயோ? இந்நகரத்தில் பெண்டிரும் இது செய்வர்,கருவிலுள்ள குழவியும் செய்யும்; அறிவற்ற மலைகளும் செய்யும்; விலங்குகளும் செய்யும்; ஆதலால்,இதை வியப்பவர் இங்கு யாரும் இலர், அது நிற்க. இங்குத் துணிந்து வந்த நீ யாவன்? இந்திரன் ஓடி ஒளித்தான். ஏனையோர் இவ்வாறு செய்யார். திருமால் இதனை மனத்திலும் நினையான். பிரமன் ஆசி கூறித் திரிகின்றான். எல்லார்க்கும் மேலாய இறைவன் என்னிடம் எளிதாக வரமாட்டான் ஆதலால், நீ யாவன்?” என்று வினவினான், சூரன்.