திருப்பேணுபெருந்துறை

bookmark

பண் - தக்கராகம்

448

பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை

பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்

செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி

அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்

பேணு பெருந்துறை யாரே.

1.42.1

449

மூவரு மாகி இருவரு மாகி

முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி

பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு

தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார்

தீதில் பெருந்துறை யாரே.

1.42.2

450

செய்பூங் கொன்றை கூவிள மாலை

சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங்

கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை

காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்

பில்கு பெருந்துறை யாரே.

1.42.3

451

நிலனொடு வானும் நீரொடு தீயும்

வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த

புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி

நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்

மல்கு பெருந்துறை யாரே.

1.42.4

452

பணிவா யுள்ள நன்கெழு நாவின்

பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத

சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்

அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்

மல்கு பெருந்துறை யாரே.

1.42.5

453

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ

ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த

வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத

பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்

பேணு பெருந்துறை யாரே.

1.42.6

454

விழையா ருள்ளம் நன்கெழு நாவில்

வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்

பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்

தண்(*)அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங்

கூடு பெருந்துறை யாரே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.

1.42.7

455

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த

பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி

மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த

மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி

அணவு பெருந்துறை யாரே.

1.42.8

456

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட

பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும்

உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின்

முகம்மல ரக்கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்

காமர் பெருந்துறை யாரே.

1.42.9

457

குண்டுந் தேருங் கூறை களைந்துங்

கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு

மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்

தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை

மல்கு பெருந்துறை யாரே.

1.42.10

458

கடையார் மாடம் நன்கெழு வீதிக்

கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்

நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்

பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி

உலகினில் மன்னுவர் தாமே.

1.42.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

திருச்சிற்றம்பலம்