108 திருப்பதி அந்தாதி - குறிப்புக்கள்

திவ்ய கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராசர பட்டரின் சீடர் எனத் தெரிகிறது. இவரை 'அழகிய மணவாள தாசர்' எனவும் அழைப்பார்கள். இவர் அஷ்டப்ரபந்தம் என்ற பிரபந்தத் தொகுதியினை இயற்றியுள்ளார், அவை திருவரங்கக்கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்க நாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, 108 திருப்பதி அந்தாதி ஆகியவையாகும். இந்நூலில், 108 திருப்பதி எம்பெருமான்களையும் பற்றி ஒருவருக்கு ஒரு பாடல் வீதம் 108 பாடல்கள் அந்தாதி முறையில் அமையப்பெற்றுள்ளது.
“ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா” எனத் தொடங்கும் முதல் வெண்பா பாடலின் அர்த்தம், 108 திருப்பதிகளையும் சேவிப்பவர்கள், தமக்கு மீண்டும் தாயின் கருவில் சேராதபடி செய்ய அழகிய மணவாள தாசர் என்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாத பழமையான திருமாலைத் துதிக்கும்படியாக வெண்பாவினால் ஆன இந்த நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியை இசைத்தார், பாடி அருளி உள்ளார்.
ஈரிருவதாம் சோழம், ஈரொன்பதாம் பாண்டி;
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு- ஓர் இரண்டாம் சீர் நடுநாடு;
ஆறோடு ஈரெட்டு தொண்டை-ஆறிரண்டு அவ்வடநாடு
கூறு திருநாடு ஒன்றாக் கொள்.
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40; பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் -18, மலை நாட்டுத் திருப்பதிகள் (கேரளா) -13, நடு நாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வட நாட்டுத் திருப்பதிகள் - 12 பரமபதமான திருநாடு - 1 என்ற 108வைணவத்திருப்பதிகளை நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் வரிசையில் இனி அனுபவிக்கலாம்.