சிறப்புப் பாயிரம்

வெண்பா
ஏற்ற மணவாள ரிசைத்தாரந் தாதிவெண்பா
தோற்றக்கே டில்லாத தொன்மாலைப்- போற்றத்
திருப்பதியா நூற்றெட் டினையுஞ்சே விப்போர்
கருப்பதியா வண்ணமுண்டாக.
ஆழ்வார்கள் பன்னிருவர்
பொய்கைபூ தன்பேயார் பொன்மழிசைக் கோன்மாறன்
செய்ய மதுரகவி சேரர்பிரான் - வையகமெண்
பட்டர்பிரான் கோதைதொண்டர் பாதப் பொடிபரணன்
கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு. (1)
நம்மாழ்வார்
பிறவாத பேறு பெறுதற்கெஞ் ஞான்று
மறவா திறைஞ்சென் மனனே!-துறவாளன்
வண்குருகூர் வாவி வழுதிவள நாடுடைய
தண்குருகூர் நம்பிதிருத் தாள். (2)
உடையவர்
முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி. (3)
கூரத்தாழ்வான்
முக்கால மில்லா முகில்வண்ணன் வைகுந்தத்
தெக்காலஞ் செல்வா னிருக்கின்றேன்?-தக்காரெண்
கூரத்தாழ் வானடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ் வானசடம் போட்டு. (4)
பட்டர்
நான்கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மையெல்லாம்
தான்கூட்டி வைத்தநலந் தான்கண்டீர் - ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்க னின்னருளால்
பட்டருக்காட் பட்ட பயன். (5)
திருப்பதிகளின் வகை
ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி
ஓர்பதின்மூன் றாமலைநா டோரிரண்டாம் - சீர்நடுநா
டாறோடீ ரெட்டுத்தொண்டை யவ்வடநா டாறிரண்டு
கூறுதிரு நாடொன்றாக் கொள். (6)