தனி - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1050

வெள்ளிக் குழைத்துணி போலுங்

கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி

நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை

சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்

பூசிய வேதியனே.

4.113.1

1051

உடலைத் துறந்துல கேழுங்

கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட

லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்

கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி

மைக்கண் துணிநெஞ்சமே.

4.113.2

1052

முன்னே யுரைத்தால் முகமனே

யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா

யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்

னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்

பிரானுன்னை வேண்டியதே.

4.113.3

1053

நின்னையெப் போது நினையலொட்

டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்

பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்

டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு

வாழி இறையவனே.

4.113.4

1054

முழுத்தழல் மேனித் தவளப்

பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்

பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு

வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு

விக்குந்தன் தொண்டரையே.

4.113.5

1055

விண்ணகத் தான்மிக்க வேதத்

துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்

தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்

துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி

யானெங் கறைக்கண்டனே.

4.113.6

1056

பெருங்கடல் மூடிப் பிரளயங்

கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்

இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர

முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை

நல்வீணை வாசிக்குமே.

4.113.7

1057

வானந் துளங்கிலென் மண்கம்ப

மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு

மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்

வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்

காட்பட்ட உத்தமர்க்கே.

4.113.8

1058

சிவனெனும் நாமந் தனக்கே

யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு

மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்

திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி

யானென் றெதிர்ப்படுமே.

4.113.9

1059

என்னையொப் பாருன்னை எங்ஙனம்

காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்

படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை

வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்

சடைக்கற்றை வேதியனே.

4.113.10

திருச்சிற்றம்பலம்