தனி - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1060

பவளத் தடவரை போலுந்திண்

டோ ள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும்

பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக

நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை

சூடும் பனிமலரே.

4.114.1

1061

முருகார் நறுமலர் இண்டை

தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி

னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா

னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக்

கீழோர் தலைமறைவே.

4.114.2

1062

மூவா உருவத்து முக்கண்

முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு

மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி

மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க்

கழிந்த திரிபுரமே.

4.114.3

1063

பந்தித்த பாவங்கள் அம்மையிற்

செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்

னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு

முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி

லாவிட்ட நன்னெஞ்சமே.

4.114.4

1064

அந்திவட் டத்திளங் கண்ணிய

னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்

றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை

யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை

வளாவிய நம்பனையே.

4.114.5

1065

உன்மத் தகமலர் சூடி

உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை

தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும்

பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தோர் இளம்பிறை

சூடிய சங்கரனே.

4.114.6

1066

அரைப்பா லுடுப்பன கோவணச்

சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி

வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை

யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி

யாலெங்கள் உத்தமனே.

4.114.7

1067

துறக்கப் படாத உடலைத்

துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும்

பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி

வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்

கிடந்து மறுகிடுமே.

4.114.8

1068

வேரி வளாய விரைமலர்க்

கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை

புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற்

கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது

போலும் இளம்பிறையே.

4.114.9

1069

கன்னெடுங் காலம் வெதும்பிக்

கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான்

மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்

சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்

டீரிப் புகலிடத்தே.

4.114.10

1070

மேலு மறிந்திலன் நான்முகன்

மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற

தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம்

விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற்

கரியான் கழலடியே.

4.114.11

திருச்சிற்றம்பலம்

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்.