சோழர் காலத்தில் சைவ சமயம் (கி. பி. 900 - 1300)

வட இந்தியாவில் சைவ சமயம்
சோழர்கள் பேரரசை ஏற்படுத்தி ஆண்ட நானூறு ஆண்டு காலம் (கி. பி. 900-1300) இந்தியா முழுவதும் சைவசமயம் நன்கு வளர்ந்த காலமாகும். காஷ்மீர் நாட்டில் பல சிவன் கோவில்கள் சிற்புற்றிருந்தன. கோவில்களை அடுத்து மடங்களும் தோன்றி வளர்ந்தன.
நேபாள நாடு அசோகருக்கு முன்பிருந்தே பெரிய சைவமடத்தைப்பெற்ற நாடாக இருந்தது. அங்குள்ள பசுபதி கோவிலும் அதனைச் சார்ந்த சைவமடமும் சிவாசாரியார் பலரைத் தோற்றுவித்தன.
கூர்ச்சரம், கத்தியவார் நாடுகளிலும் சிவன் கோவில்கள் சிற்புற்றிருந்தன. அப்பகுதியையாண்ட சாளுக்கிய மன்னர்கள் லகுலீச பரசுபத ஆசார்யர்களைத் தாங்கள் கட்டிய மடங்களின் தலைவர்களாக வைத்தனர்; அவர்களிடம் தீட்சை பெற்றுத் தங்களைப் `பரம மாகேசுவரர்` என்று கூறிக்கொண்டனர்; தங்கள் கல்வெட்டுத் தொடக்கத்தில் `ஓம் நமசிவாய` என்று எழுதினர். இவர்தம் ஆட்சியில் லகுலீசர் தோன்றிய காரோணநகர் சிறப்புற்றது.* லகுலீச பாசுபதரும் சிறப்புற்றனர்.
[* லிகுலீசபாசுபதர்களின் தொடர்புடைய கோவில்களை நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், கச்சிக்காரோணம் என்பன.]
மாளவம், இராசபுதனம் இவற்றை ஆண்ட மன்னர் பெரும்பாலும் சைவரே. உச்சையினிலிருக்கும் மகாகாளர் கோவில் மிக்க சிறப்புற்றது. கௌட தேசத்துச் சிவாசாரியர் அரசர் குருமாராக இருந்தனர்.
பண்டில்கண்டு பகுதியை ஆண்ட சந்திராத்ரையர் என்ற மரபினர் சிறந்த சிவபக்தர்கள். இவர்களும் தீட்சை பெற்றுத் தங்களைப் `பரம மாகேசுவரர்` என்று கூறிக்கொண்டனர். இவர்கள் கல்வெட்டுக்களும் `ஓம் நமசிவாய` என்பதையே தொடக்கமாகக் கொண்டவை.
இராசபுதனம், பஞ்சாப் இவற்றை ஆண்ட சாகமான மன்னர்களும் சிவபக்தர்களே. இவர்தம் நாட்டில் புராணமகாதேவர் கோவில், சித்தீச்சரம், கபாலீசுவரர் கோவில் என்பன சிறப்புற்றவை. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் லகுலீச பாசுபதத் துறவிகள் இருந்தனர்.
ஐக்கிய மாகாணங்களிலும் நடு மாகாணத்திலும் ஆண்ட ஹெய்ஹயர் வட இந்தியாவில் பல இடங்களை ஆண்டனர். இவருள் ஒரு பிரிவினர் கங்கைக்கும் நருமதைக்கும் இடைப்பட்ட ஒன்பது லட்சம் சிற்றூர்களைக் கொண்ட தாகள நாட்டை ஆண்டனர். அவர்தம் தலைநகர் திரிபுரி என்பது. அவர்கள் சிவநெறியில் சிறந்து விளங்கினர்; சிவாசாரியர்கட்கு மடம் கட்டித்தந்து, அவர்களையே தங்கள் குருமாராகக் கொண்டனர். கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் ஹெய்ஹய அரசனாக இருந்த முதலாம் யுவமகாராசன் சோணையாற்றங்கரையில் ஒரு கோவிலையும் மடத்தையும் கட்டி, சத்பாவசம்பு என்பவரிடம் ஒப்படைத்தான்; அவருக்கு மூன்று லட்சம் சிற்றூர்களையும் சமய வளர்ச்சிக்காக வழங்கினான். அச்சிவாசாரியரே கோளகீ மடத்தை ஏற்படுத்தியவர். அவர் மரபில் வந்த சிவாசாரியர் விசுவேசுவர சம்பு என்பவர் ஹெய்ஹய அரசர்களுக்கும் தீட்சாகுருவாக விளங்கினார்.
விந்த மலைக்குத் தென்பாலிருந்த இராஷ்டிரகூடர்கள் எல்லோராக் குகைகளில் கயிலாசநாதர் கோவில் போன்ற கோவில்களை அமைத்துச் சைவ வளர்ச்சிக்கு உதவி புரிந்தனர். இராஷ்டிரகூடர்க்குப் பின் வந்த சாளுக்கியர் காலத்திலும் பம்பாய் மாகாணத்தில் சைவம் ஓரளவு வளர்ச்சியுற்றது.
இவ்விவரங்களால், சோழப் பேரரசு ஏற்பட்ட காலத்திலும் அதன் பின்னரும் சிறப்பாக வட இந்தியாவில் சைவ சமயம் நல்ல வளர்ச்சி பெற்றது என்பதை உணரலாம். இச்சூழ்நிலையே சோழநாட்டில் சைவம் நன்கு வளரக் காரணமாயிருந்தது.
சோழர் சமய நிலை
சேர-சோழ-பாண்டியருள் சைவத்துள் மிகவும் அழுத்தமான பற்றுடையவரும் நூற்றுக்கணக்கான சிவன் கோவில்களைக் கட்டியவரும் சோழரேயாவர். அழுத்தமான சைவப் பற்றுடைய சோழர்கள் பல்லவரை முறியடித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்திய பிறகும் சைவத்தை வளர்பதிலையே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர் என்பதில் வியப்பில்லை அல்லவா?
சோழவேந்தர் துங்கபத்திரை ஆறு முதல் கன்னிமுனை வரையிலும் உள்ள தென்இந்தியாவை ஆண்டவர். சோழப்பேரரசு ஏற்படுத்திய ஆதித்தன் காலத்தில் தமிழகத்தில் பாடல்பெற்ற கோவில்கள் ஏறத்தாழ ஐந்நூறு இருந்தன. பாடல்பெறாத கோவில்களும் இருந்தன. இவ்விருவகைக் கோவில்களும் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பெற்றன. ஆதித்தன் முதலிய சோழ மன்னர் தத்தம் ஆட்சிக் காலத்தில் புதியனவாக எடுப்பித்த கோவில்கள் பலவாகும். சோழர் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்கள் பல. அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகள் பல. சோழமாதேவியாரும், சிற்றரசர் மனைவியரும், அரசாங்க அலுவலர் மனைவியரும் செய்த திருப்பணிகள் பலவாகும். துறவிகள் முதல் சாதாரண குடிமகன் ஈறாக இருந்த மக்கள் செய்த திருப்பணிகள் எண்ணில.
ஆதித்த சோழன் முதலியோர்
ஆதித்த சோழன் (கி. பி. 871-907) செய்த திருப்பணிகளுள் சிறந்தது, காவிரியின் இருகரைகளிலும் இருந்த பாடல்பெற்ற கோவில்களைப் புதுப்பித்தமையாகும். பாடல்பெற்ற கோவில்கள் அழியத்தக்க மண், மரம் முதலியவற்றால் ஆனவை, சோழன், அவை அழியாமலிருக்க வேண்டி, அவற்றைக் கற்றளிகளாக்கினான். இங்ஙனம் ஆதித்தனால் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சோழ அரசர்களாலும் அவர்தம் மாதேவியராலும் பிறராலும் அவர்களது ஆட்சி முடிய நடைபெற்று வந்தது என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. சமயவளர்ச்சிக்குத் தாயகம் கோவில்கள். அவை என்றும் அழியாமல் இருந்தாற்றான் சமயம் வளர முடியும். ஆதலாற்றான் ஆதித்த சோழன் கோவில்களைக் கற்றளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான். கோவில் கருவறையும் விமானமும் கற்றளியாக மாற்றப்படடன. இவ்வாறு ஆதித்தன் கற்றளியாக்கியதே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவில். அஃது அவன் கால முதல் ஆதித்தேச்சரம் எனப் பெயர் பெற்றது.
ஆதித்தன் மகனான முதற்பராந்தகன் (கி. பி. 907-953) சிறந்த சிவபக்தன்; புலவர் புரவலன். இவன் செய்த திருப்பணிகளுள் மிக்க சிறப்புடைய்யது தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தது. பராந்தகன் மூத்த மகனான இராசாதித்தன் திருநாவலூர்க்கோவிலுள் ஒரு பதிய கோவிலைக்கட்டினான். இராசாதித்தன் தம்பியான கண்டராதித்தர் (கி. பி. 947-957) திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர். அவர் திருப்பழனத்துக்குப் பக்கத்தில் கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊரைக் உண்டாக்கினார்; அங்கு சிவன் கோவிலைக் கட்டினார்.
----------
செம்பியன் மாதேவியார்
இவர் கண்டராதித்தர் மனைவியார். இவர் செய்துள்ள திருப்பணிகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசியும் செய்யாத அளவினவாகும். இவர் பாடல்பெற்ற கோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவக்கரை,திருமுதுகுன்றம், தென்குரங்காடுதுறை முதலிய கோவில்களைக் கற்றளியாக்கினார். ஐயாறு, தலைச்சங்காடு, ஆரூர், திருப்புறம்பியம், திருவெண்காடு முதலிய பல கோவில்களுக்கு நிலதானமும் பொன் வெள்ளிப் பாத்திரங்களும் நகைகளும் பிறவும் உதவியுள்ளார்.
முதலாம் இராசராசன் (கி.பி.985-1014)
தன் காலம் வரையிலும் தமிழகத்தில் ஏற்பட்டி ராத பெரிய அளவில் மிக அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோவிலை அமைத்தவன் முதலாம் இராச ராசனே ஆவன். அவன் ஆறுஆண்டுகள் அரும் பாடுபட்டுத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். அதில் கடவுளர் திருமேனிகளையும், நாயன்மார் படிமங்களையும் எழுந்தருளச் செய்தான்; ஒவ் வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகளை அளித் தான்; பூசைக்காகவும், விழாவுக்காகவும் பல சிற்றூர்களை மானியமாக விட்டான். அவனைப் பின்பற்றி அரச குடும்பத்தினரும் அரசாங்க அலுவலரும் மிகப் பல அறப்பணிகள் செய்தனர். தமிழ் நாட்டுப் பல கோவில்களிலிருந்து தஞ்சைப் பெரிய கோவிலில் இசை நடனக் கலைகளை வளர்க் கப் பதியிலார் நானூற்றுவர் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொருத்திக்கும் ஒரு வீடும், ஒரு வேலி நிலமும் தரப்பட்டன. திருப்பதிகம் ஓத நாற்பத்தெண்மர் அமர்த்தப்பட்டனர். இவ்வாறே கோவில் பணிகளை நன்கு கவனித்துச் செய்யப் பல கோவில்களில் இருந்து பலர் நியமனம் பெற்றனர். இந்த விவரங் கள் அனைத்தும் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் நன்கு அறியலாம்.
-----------------------
இராசராசன் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தில்லையில் அடக்கம் செய்யப் பட்டிருந்த முதல் ஏழு திருமுறைகளைத் தொகுப் பித்தான். இவன் `சிவபாத சேகரன்` என்று பாராட்டப்பட்டவன். இவன் காலமுதல் திருமுறைகள் நாடெங்கும் பரவலாயின. இவனைப் பின் பற்றிய அரசரும் பிறரும் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாயினர்.
முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1044)
இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் உடையார்பாளையம் தாலுகாவில் பெரிய நகரம் ஒன்றை நிறுவினான். அதன் பெயர் கங்கைகொண்ட சோழபுரம் என்பது. அந்நகரத்தில் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலப் பெரிய சிவன் கோவில் கட்டப்பட்டது. அதுவே கங்கைகொண்ட சோழேச்சரம் என்பது. அஃது அமைப்பிலும் வேலைப்பாட்டிலும் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருந்தது. அப்பெருங்கோவில் இராசேந்திரன் கால முதல் சோழராட்சி வீழ்ச்சியுறும் வரையில் மிகச் சிறந்த நிலையில் இருந்தது.
முதற் குலோத்துங்கன் (கி. பி. 1070-1120)
இவன் திருநீற்றுச் சோழன் எனவும் பரமமாகேசுவரன் எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படலால், தீட்சை பெற்ற சைவன் என்று அறியப்படுகிறான். இவன் காலம் முதல் வேங்கி நாட்டுத் திராட்சாராமம் - பீமேசுவரர் கோவில் சிறப்படையத் தொடங்கியது. இவன் தில்லையில் கூத்தப் பெருமான் ஊர்வலம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தான் என்பது தில்லையுலா என்னும் நூலிலிருந்து தெரிகின்றது. சமயக்குரவர் நால்வர் தேர்கள் முன் சென்றன;சேரமான் பெருமாள் வரகுணபாண்டியன் இவர்கள் சேவிப்பச் சிவபெருமான் உலாச் சென்றான். அனைவர்க்கும் முன்பாகக் குலோத்துங்கன் குதிரைமீது சென்றான். தில்லைச் சிற்றம்பலத்தில் `நமசிவாய` என்னும் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட பொன்னோடுகள் வேயப்பட்டிருந்தன.
-------------
விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135)
இவன் குலோத்துங்கனுக்கு மகன். இவ்வரசன் தன் சிற்றரசர் கொடுத்த திரைப் பொருளின் பெரும்பகுதியைத் தில்லைக்கோவிலைப் புதுப்பிக்கவும் விரிவாக்கவும் செலவிட்டான்; பொன்னம்பலம் சூழ்ந்த திருமாளிகை, கோபுரவாசல், கூடசாலைகள், பலுபீடம், தேர் இவற்றைப் பொன்வேய்ந்தான்; தன் பெயரால் திருவிக்கிரமன் திருவீதியும் மாளிகையும் அமைத்தான்; கூத்தப்பெருமான் உலாப்போகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தான்; பல பொன் தட்டுகள் செய்து உதவினான். இவன் ஒட்டக்கூத்தன் மாணவன்; அவரால் உலாக்கொண்டவன்.
இரண்டாம் குலோத்துங்கன் (கி. பி. 1133-1150)
இவன் விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்ற தில்லைத் திருப்பணிகளை முடித்தவன். இவ்வேந்தன் தில்லையில் எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்; அம்மனுக்குத் திருமாளிகை அமைத்தான்; பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். இவன் நடராசர் பாத தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இப்பெரியோன் திருவாரூர்க் கோவிலில் இருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்கட்குப் பூசை நடக்கத் தானம் அளித்தவன். இம்மன்னன் அநபாயன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன்; ஒட்டக்கூத்தரது மாணவன்; அவரால் உலாவும் பிள்ளைத் தமிழும் பாடப்பெற்றவன். சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணம் பாடச்செய்த பெருந்தகை இவனே.
இரண்டாம் இராசராசன் (கி. பி. 1146-1173)
இவன் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் (இராசராசபுரத்தில்) பெரிய சிவன் கோவிலைக் கட்டினான். அதன் பெயர் இராசராசேச்சுரம் என்பது. அக்கோவில் கட்டடக் கலைக்கும் சிற்ப வேலைப்பாட்டுக்கும் மிக்க புகழ்பெற்றது. இவ்வரசன் ஒட்டக்கூத்தரது மாணவன்; அவரால் உலாவிலும் தக்கயாகப் பரணியிலும் பாராட்டப்பட்டவன்.
மூன்றாம் குலோத்துங்கன் (கி. பி. 1178-1218)
இப்பேரரசன் திருவிடைமருதூர்க்கருகில் திருபுவன வீரேசுவரம் என்னும் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன்;தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று முதலியவற்றைப் பழுது பார்த்தவன். பல சிவன் கோவில்களைப் பழுது பார்த்தவன். `நம் தோழன் திருபுவன வீரதேவன்` என்று இவனைச் சிவபெருமான் குற்ப்பிட்டதாகத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. இவன் காலத்திலும் பிற்பட்ட சோழர் காலத்திலும் திருமுறைகளைப் பாதுகாக்கக் குகைகளும் சமய வளர்ச்சிக்காக மடங்களும் நாட்டிற் பெருகின.
-------
அரச மாதேவியார்
ஆதித்த சோழன் தொடங்கிய சைவத் திருப்பணிகள் அவனுக்குப் பின் வந்த சோழவேந்தர் தொடர்ந்து வளர்த்தது போலவே, ஆதித்தன் மனைவி தொடங்கிய திருப்பணிகள் அவளுக்குப் பின் வந்த சோழமாதேவியர் தொடர்ந்து செய்யலாயினர், திருப்பூந்துரித்திக் கோவில் ஆதித்த சோழன் மனைவியாலும், திருவூரல் கோவில் முதற் பராந்தகன் மகளாலும், செம்பியன் மாதேவியில் உள்ள கோவில் உத்தம சோழன் மனைவியர் ஐவராலும். திருவெண்காடு,திருவிசலூர், திருவையாறு இவற்றிலுள்ள கோவில்கள் முதலாம் இராசராசன் மனைவியராலும், திருவலஞ்சுழியில் உள்ள சிவன் கோவில் முதலாம் இராசராசன் மகளாலும், திரு விசலூர், உடையார்குடி இவற்றிலுள்ள கோவில்கள் முதலாம் இராசேந்திர சோழன் மனைவியராலும், சிதம்பரம் கோவில் முதற் குலோத்துங்கன் சகோதரிகளாலும்,திருவிடைமருதூர்க் கோவில் விக்கிரம சோழன் மனைவியராலும், திருமழப்பாடிக் கோவில் இரண்டாம் குலோத்துங்கன் மனைவியராலும், திட்டிடைக்குடிக் கோவில் இரண்டாம் இராச ராசன் மனைவியராலும்,திருவெண்ணெய் நல்லூர்க் கோவில் மூன்றாம் இராசேந்திரன் மனைவியாலும் திருப்பணிகளிலும் தான வகைகளிலும் சிறப்புற்றன.
சிற்றரசரும் திருப்பணிகளும்
சோழப் பேரரசர்க் கடங்கிய நுளம்பாதிராசர் முதலியோர் பேரரசரைப் பின்பற்றித் தமிழகத்தில் பல கோவில்களில் பலவகைத் திருப்பணிகள் செய்துள்ளனர். நுளம்பாதிராசர், யாதவராயர், சாம்புவராயர், வாணகோவரையர்,பொத்தப்பிச்சோழர், மிழலை நாட்டுத் தலைவர், வைதும்ப மகாராசர், சேதிராயர், மழவராயர், காடவராயர்,முத்தரையர்,முனையதரையர் என்ற சிற்றரசர்கள் தில்லை, திருநாவலூர், திருக்காளத்தி முதலிய ஊர்க்கோவில்களில் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் நடு நாட்டில் உள்ள சேந்தமங்கலத்தை ஆண்டு வந்தவன். இவன் வீரத்திலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான்; தில்லைக் கோவிலில் தெற்குக் கோபுரத்தைக் கட்டினான்;ஆக்கூர்க் கோவிலைப் புதுப்பித்தான்; திருமுதுகுன்றம் முதலிய பல கோவில்களுக்குத் தானங்கள் அளித்தான். இவனும் இவன் மனைவியும் திருவண்ணாமலைக் கோவிலுக்குத் தானங்கள் அளித்தனர். இவன் மகனான மகாராச சிம்மன் தில்லையில் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான். திரிபுராந்தகம், திராட்சாராமம், காளத்தி, கஞ்சி, திருவதிகை, மதுரை என்னும் இடங்களிலுள்ள சிவன் கோவில்களுக்கு நிபந்தங்கள் விடுத்தான். 6 கோப்பெருஞ்சிங்கனும் அவன் குடும்பத் தாரும் செய்த திருப்பணிகளைக் கொண்டே, பிற சிற்றரசரும் அவர் குடும்பத்தாரும் செய்த திருப் பணிகளை ஒருவாறு உய்த்துணரலாம்.
---------
காலிங்கராயன் திருப்பணிகள்
முதற் குலோத்துங்கன் தானைத்தலைவனான நரலோக வீரன் என்ற காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகள் அளவிறந்தன. இவன் சித்தலிங்க மடத்தில் சிவனுக்குக் கற்றளி எடுத்தான்; திரு புவனை, திருப்புகலூர்க் கோவில்களில் மண்டபங்கள் அமைத்தான்; வேறு பல தானங்களையும் செய்தான். இப்பெருமகன் தில்லையில் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை-(1) தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் அகன்ற சாலையை அமைத்தமை, (2) கடற் கரையில் மாசிமகத்தின்போது கடவுள் தங்க மண்டபம் சமைத்தமை, (3)கோவிலில் நூற்றுக்கால் மண்டபம் அமைத்தமை, (4) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தமை, (5) தேவாரம் ஓத மண்டபம் அமைத்தமை என்பன.
இவன் திருவதிகையிலும் பல திருப்பணிகள் செய்துள்ளான். அவற்றுள் - (1) நூற்றுக்கால் மண்டபம் கட்டினமை, (2) அப்பர்க்குத் தனிக் கோவிலை அமைத்தமை, (3) அப்பரது மடத்திற்கு 48 ஆயிரம் குழி தானம் செய்தமை, (4) அதிகைக் கோவிலைச் சுற்றி அகன்ற திருச்சுவற்றை அமைத்தமை, (5) நாடக சாலை அமைத்தவை குறிக்கத்தக்கவை.
--------------------
முடிவுரை
இவ்வாறு பேரரசர், சிற்றரசர் அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகளால் தூண்டப்பட்ட வணிகர் முதலிய குடிமக்கள் தத்தம் நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கோவிலிலும் தானங்கள் செய்துள்ளனர். என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுருங்கக்கூறின், சோழர் காலத்தில் அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த அனைவரும் சமயத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுதல் பொருத்தமாகும்.
பாடல் பெற்ற கோவில்கள் எல்லாம் சோழர் காலத்தில் கற்றளிகளாக மாறின; சிறிய கோவில்கள் பெரிய கோவில்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு கோவிலிலும் நாட்பூசனையும் விழாக்களும் சிறப்புற நடைபெற நிலமும் பொருளும் வழங்கப் பட்டன. கோவில் சொத்துக்களைக் கண்காணிக்க ஆட்சிக்குழு அமைந்திருந்தது. கோவிலுக்கு அவரவர் செய்த தானபாத்திரங்கள் சிவபண்டாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. அதே சமயத்தில் அவை கோவில் சுவர்களிலும் வெட்டுவிக்கப்பட்டன. எல்லாக் கோவில்களின் வரவு செலவும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்பட்டன. கோவில்களில் பெருமக்கள், ஊரவையார் என்பவர் முன்னிலையில் கோவில் நகைகளை மதிப்பிட்டுக் கணக்கிட்டனர். வருவாயற்ற கோவில்கள் வருவாயிருந்த கோவில்களின் பொருளுதவியால் கவனிக்கப்பட்டன. இத்தகைய திட்டமான கோவிலாட்சியால் பொதுமக்கள் கோவில் செல்வத்தைப் பெருக்க முனைந்தனர். அதனால் கோவில்கள் செல்வ வளத்தில் பெருகின; பக்தர்களின் அறங்கள் குறைவின்றி நடந்தன். கோவில் பண்யாட்கள் தத்தம் கடமைகளைத் தவறாது செய்தனர். கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல், பாடல்,நாடகம், திருமுறை ஓதுதல், சமய போதனை செய்தல் என்பன் காலம் தவறாது நடைபெற்றன. இத்தகைய சிறப்புகளால் சோழராட்சியில் சைவசமயம் பெருஞ்சிறப்புற்று விளங்கியது என்று கூறுதல் பொருத்தமாகும்.