ஆசாரக்கூடம்

bookmark

நடுத் தெருவில் தண்ணீர் கேட்கும் காதலனுக்கு காதலி கூறும் விடையை முன்னர் வந்த பாடல்களில் நாம் கண்டிருக்கிறோம். இப்பாடலில் அலங்காரம் செய்யப்பட்ட மணமேடைக்கு வந்து தண்ணீர் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. பாடல் காதலர்களின் உரையாடல்.

காதலன்: நீளக் கயிறு போட்டு
நின்னு தண்ணி யிறைக்கும்
தாளம் போட்ட கையாலே
தண்ணி தந்தால் ஆகாதோ?

காதலி: தண்ணியும் தான் தருவேன்
தாகமதைத் தீர்த்திடுவேன்
கூடத்துக்கு வந்தியானா
குளிர்ந்த ஜலம் நான் தருவேன்

காதலன்: கூடமும் தானறியேன்
குளிர்ந்த சாலை நானறியேன்
அடையாளம் சொன்னியானால்
அங்கு வந்து சேர்ந்திடுவேன்

காதலி: கெண்டை கொண்டு தூண் நிறுத்தி
கெளிறு கொண்டு வளைபரப்பி
அயிரை கொண்டு மேஞ்சிருக்கும்
ஆசாரக் கூடமது

வட்டாரவழக்கு: ஆசாரக்கூடம்- மணமேடை

குறிப்பு: கடற்கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து உவமைகள் எடுத்தாளப்பட்டன. ஆகவே கடற்கரை மக்களின் படைப்பாக இப்பாடல் இருக்கலாம். கெண்டை, கெளிறு, அயிரை மீன் வகை. மீன் போல் தோரணம் கட்டுவது தமிழ் நாட்டு வழக்கம்.

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு 
இடம்: தூத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம்.
----------