ஆதி வரலாறு

bookmark

தமிழ்மொழியின் வரலாற்றைக் குறித்து யாம் ஏதேனுஞ்சொல்லப் புகுமுன்னர், அஃது ஆதிகாலத்தில் வழங்கிக் கொண்டிருந்த நாட்டின் இயல்பினைப்பற்றிக் கூறுதல் இன்றியமையாத தாகின்றது. ஆகவே பண்டைக்காலத்து இந்தியாவின் நிலைமையைப்பற்றிச் சிறிது கூறுவோம்.
 
பல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது. அக்காடுகளில் தீயவிலங்குகள் திரிந்து கொண்டிருந்தன. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்தகாலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்க ணிருந்தனரெனத் 'தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை'யிற் கூறாநின்றனர். மரங்களினடியிற் புற்றுக்களிற் பெரும்பாம்புகள் மண்டலமிட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் நகராதல், ஊராதல், வழியாதல், வீடாதல் காண்டலரிது. இங்குமங்குங் காட்டுமனிதர் சிலர் கரடிகளெனக் குகைகளில் வசித்தனர். வேறு சிலர் குரங்குகளென மரங்களிற் படுத்துத் தூங்கினர். அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறிய வுடலினர். அவர்கள் காய்கனிவேர் கிழங்குகளையும் மான்பன்றி முதலிய மிருகங்களின் இறைச்சிகளையும் தின்று பிழைத்து வந்தனர். அன்னார் காலத்தில் வாள் முதலிய கருவிகளில்லை. ஆயினும் கூரிய சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு அறுத்தல் வெட்டுதல் முதலிய தொழில்கள் செய்தனர். ஆதலின் அவர்கள் 'கற்கால மனிதர்' என்னப்படுவர். அவர்களுக்குக் கற்களைத் தேய்த்துத் தீயுண்டாக்கவும் தெரியும்.

இவ்வாறு வெகுகாலம் வாழ்ந்துவந்த பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிறிது நாகரிகமடைந்து சீராய்ப் பிழைக்கக் கற்றுக்கொண்டனர். காடுகளில் தாங்கள் உறைவதற்குச் சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டனர். இலைகளையும் விலங்குகளின் தோலையும் ஆடையென வுடுத்தனர். அவர்கள் வழங்கிய படைகள் வில்லும் அம்பும் கூரிய முனையுள்ள ஈட்டிகளுமாம். தம் முன்னோரிலும் உயரிய உணவு உண்டு வந்ததனால் அவர்கள் மிகப் பருத்தவர்களாயும் மிக்க பலமுள்ளவர்களாயு மிருந்தனர். மண்ணெடுத்துச் சட்டிகள் செய்யவும் அவற்றில் உணவாக்கவும் அவர்கட்குத் தெரியும். அதன்மேல் இரும்பு முதலிய உலோகங்களின் வேலை செய்யக் கற்றுக் கொண்டனர். அவற்றாற் கோடரி ஈட்டி முனை முதலியன செய்து கொண்டனர். இக்காலத்து மனிதர்களை 'உலோககாலமனிதர்' என்பர் பௌமிய நூலோர்.

கொஞ்ச காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக் கப்பாலிருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சம பூமிகளிற் கண்ட இக்காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேககாலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் 'நாகர்கள்' என்னப்படுவோர். இவர்களிற் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர்.

இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவார். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். அங்கே பொறுக்க முடியாக் குளிரினாலும், மழையின்மையாலும், நிலம் கற்றரையா யிருந்ததனாலும், ஆறுகளும் அதிகமில்லாமையாலும், தானியம் முதலியன விளையாமையாலும் இவர்கள் சீவனஞ் செய்வதற்கே மிகவுங் கஷ்டப்படுவார்கள்; தங்கள் ஆடுமாடுகளுக்காகப் புல்லைத் தேடிக்கொண்டு ஊரூராய்த் திரிவார்கள்; இத்தகையோர் இமயமலைக்குத் தெற்கே வெப்பமும் வெயிலு முடையனவாய்ப் பெரிதுஞ் செழிப்பாக வளர்ந்த புல்வெளிகள் நூற்றுக் காவதத்திற்குமேற் பரந்திருத்தலையும், அவ்வெளிகள் வழியாய்ப் பெரிய ஆறுகள் ஓடுதலையும், அங்கே பலவகைத் தானியங்களும் நன்றாய் விளைதலையும் கண்டாற்கைப் பற்றிக் கொள்ளாது எளிதின் விடுவார்களோ?

ஆதலால் அவர்கள் இந்தியாவிற் புகுந்து முன்னிருந்தாரைத் துரத்தி விட்டு மேற்கூறிய புல்வெளிகளையே தமது சொந்த தேசமாக்கிக்கொண்டனர். இவர்கள் வடமேற்குக் கணவாய்களின் வழியாகவந்து சிந்துநதிச் சமவெளியிற்றங்கி-யிருந்து இடம் போதாமையாற் பிறகு கங்கைநதிச் சமவெளியிலும் குடியேறினாரகள். தமிழர்கள் எத்துணைக்காலம் இங்கே தங்கியிருந்தனரென்பது தெரியவில்லை.

அதன்மேற் சிலகாலஞ் சென்றபின்னர், வடகிழக்குக் கணவாய்களின் வழியாகத் 'துரானியர்' என்னும் வேறொரு முரட்டுச் சாதியார் இந்தியாவுட் புகுந்து தமிழர்களை வென்று துரத்திவிட்டனர். அவர்கள் மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர்; 'மஞ்சணிற மாக்கள்' என்ற பெயரும் அவர்கட்குண்டு. அங்ஙனந் துரத்தப்படவே, தமிழர்கள் விந்தியமலையின் கிழக்குமுனையைச் சுற்றியும், கடற்கரையோரமாகவுள்ள நெருக்கமான சமவெளியினூடும் மேலும் மேலும் சென்றனர். சிலர் தம்மை வென்ற துரானியரோடு கூடிக் கொண்டு முன்னிருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். சிலர் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய்களின் வழியாகப் போய்த் தக்ஷிண பீடபூமியில் வந்து தங்கினர். இறுதியாக அநேக ஆண்டுகள் திரிந்து பலர் தென்னிந்தியாவிலுள்ள பெரிய சமவெளிகளில் வந்து தங்கிவிட்டனர். தமிழர்கள் தெற்கு முகமாக நோக்கி வரும்பொழுது பன்னெடுநாட் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தமையின் அவர்களுட் சிலர் இளைப்படைந்து இனிமேற் போதல் இயலாதென்று எண்ணி அங்கங்கே தங்கி விட்டனர்.

இப்படி அங்கங்கே நின்றுவிட்டோர் தமிழ்மொழியின் பாகதங்களை இன்னும் பேசிக்கொண்டு வாரா நிற்கின்றனர். வடமேற்குச் சிந்துநதிச் சமவெளியில் ஒருசாதியாரும் விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் மற்றொரு சாதியாரும் தமிழின் பாகதங்கள் இன்னும் பேசுகின்றனர். இனி இவ்வாறின்றித் தமிழர் இந்திய சுதேசிகளே யென்று கொள்வாருமுளர். வேறு சிலர் கடல் கொள்ளப்பட்ட 'இலெமுரியா' வென்னும் நாட்டினின்றும் தமிழர் பரவி இந்தியாவிலுட் புகுந்தனரென்பர். முதன் முதலில் தமிழர்கள் எல்லோரும் 'தமிழ்' என்ற ஒரே பாஷையைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்த பின்னர் அவர்கள் பேசிய பாஷை சிறிது சிறிதாக மாறுதலடைந்தது. ஒரே தமிழ்ப் பாஷையைப் பலவேறு விதங்களாகப் பேசத் தொடங்கினர்.

இவ்வாறு தமிழ்ப்பாஷையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலை நின்றனவாம். இக்கருத்தினையே காலஞ் சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள் தமது 'மனோன்மணீய' நாடக நூலில் தமிழ்தெய்வ வணக்கங்கூறுமிடத்து,

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற்
கன்னடமுங் களிதெலுங்குன் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுழகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே"

என்ற இனிய பாஷைகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க. மொழி நூற்புலமையும் வடநூற்புலமையும் ஒருங்கே நடாத்திக் காலஞ்சென்ற சேஷகிரி சாஸ்திரியவர்களும் தாமெழுதிய 'ஆந்திர சப்ததத்துவம்' என்ற நூலின் கண்ணே தெலுங்கிற்குத் தாய் தமிழென்றே கூறி அமைக்குமாற்றையுங் காண்க.

தமிழர்கள் துரானியர்களால் வென் றடக்கப்பட்ட போது அத்துரானிய பாஷைச் சொற்களிற் சில தமிழ்ப் பாஷையின் கண்ணே புகுந்திருத்தலு மியல்பே. இனித் துரானியரை வடக்கிருந்து போந்த ஆரியர் வென்று துரத்தலும், அவர்கள் தெற்கே வந்து தமிழர்களுடன் கலப்பாராயினார். அப்பொழுதுஞ் சில துரானியபாஷைச் சொற்கள் தமிழ் மொழியின் கண்ணே இடம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே தமிழ்ப் பாஷையின்கண் முதன்முதற் கலக்கப் புகுந்தது துரானிய பாஷையே. சரித்திரவுண்மை யிவ்வாறா யிருந்தலின், தமிழ்ப்பாஷையைத் துரானிய பாஷையொடு சேர்த்து ஓரினமாக்கிப் பாகுபாடு செய்தல் அசம்பாவிதமாம்.

இதுநிற்க, அக்காலத்திருந்த தமிழரின் நாகரிகநிலை மிகவும் வியக்கத் தக்கதா யிருந்தது. அவர்கள் உழவுத் தொழிலில் மிகக் கைதேர்ந்தவர். அதிகாரஞ் செலுத்து முறையும் நன்கறிந்தவர். ஆகவே அவர்கள் தமக்குள்ளே தலைவர்களை யேற்படுத்திக்கொண்டு அமைதியுடன் அரசாட்சி செய்யத் தொடங்கினர். இவ்வாறு அமைதியுற்ற காலங்களே தேசாபி விருத்திக்கும், பாஷாபிவிருத்திக்கும் ஏற்றனவாம்; ஆதலின் தமிழ்நாடும் ஓங்கி வளர்வதாயிற்று; அதனோடு அருமையான சிற்சில தமிழ் நூல்களுஞ் செய்யுளுருவத்தில் ஏற்படுவனவாயின. தமிழர்கள் படைக்கலப் பயிற்சிசெய்து தெற்கே படையெடுத்துச் சென்று பல நூற்றுக்காவத நிலங்களைத் தமவாக்கிக்கொண்டு தமிழ்மொழியை ஆங்கெல்லாம் பரப்பினர். இவ்வாறு தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெருநிலப் பரப்புமாயிருந்தது. இதற்குக் 'குமரிநாடு' என்பது பெயர். தமிழர்களை வென்ற துரானியர் தொகை வரவரச் சுருங்கப் புகுந்தமையின், தமிழரே தலையெடுத்துத் தமிழ் மொழியையே யாண்டும் பரப்பி ஆளுவாராயினர்.

இப்படி யிருந்துவருஞ் சயமயத்தில், வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ளதும், ஐரோப்பாக் கண்டத்தி னொரு பகுதியுமாகிய 'ஸ்காந்திநேவியம்' என்ற இடத்தினின்றும் 'ஆரியர்' என்ற சாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள 'துருக்கிஸ்தானம்' என்ற இடத்திற்றங்கினர். இவ்விடந்தங்கிய ஆரியர்களே 'கைபர்கணவாய்' வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமஇ தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு ஆரியர்கள் பெரும் பிரயாணஞ்செய்து பற்பல விடங்கட்கும் பிரிந்துபோனமையால் அவர்களது பாஷையாகிய 'ஆரிய' மும் பல்வேறு வகையினவாயின. அவை 'இலத்தீன்', 'கிரீக்கு', 'சமஸ்கிருதம்', 'எபிரேயம்' என்பனவாம். இவற்றுள் 'சமஸ்கிருதம்' பேசும் ஆரியரே இந்தியாவிற்கு வந்தனர். வந்து இந்துஸ்தானத்திருந்த தமிழர்களையுந் துரானியர்களையும் வென்று துரத்திவிட்டனர்.

இவ்வாரியர் இந்தியாவிற் புகுமுன்னரே, தென்மேற்றிசையிலுள்ள அரபிக்கடல் வழியாகத் தமிழர்கள் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். மயிலினைக் குறிக்குந் 'தோகை' என்னுஞ் செந்தமிழ்ச்சொல் எபிரேய பாஷையில் 'துகி' என வழங்குதலுங்காண்க. வடமேற்றிசை வாணிகராகிய பின்ஷியர்கள் பலமயில்களைத் தம்மரசன் சாலமோனுக்காகக் கொண்டு சென்றுழி இத்தமிழ்ச் சொல்லையுங் கொண்டு சென்றனர். எகிப்தியருந் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களுடன் கி.மு. 500-க்கு முன்னரே வாணிகஞ்செய்து வந்தனரென்பது மலையிலக்கே. அங்ஙனம் அவர்கள் வடமேற்றிசை யாரியர்களோடு வாணிகஞ் செய்யப்புகுந்தபோது கணக்கு முதலியன குறித்தற்கும் சிறு விஷயங்க ளெழுதுவதற்கும் எழுத்துஞ் சுவடியும் அவர்களுக்கு இன்றியமை யாதனவாயின. ஆகவே அவர்களே நெடுங்கணக்கு வகுத்தனர். அந்நெடுங்கணக்குத் தமிழ்நாடெங்கும் பரவிற்று. அதுமுதற் பேச்சுவடிவின் மட்டிலிருந்த தமிழ்ப்பாஷை ஏட்டுவடிவு மடைவதாயிற்று.

பேச்சு வழக்குத் தழிழ் ஏட்டுவழக்கும் அடையும்போது சிறிதளவு வேறுபட்டே யிருத்தல் வேண்டும். அஃதாவது பேச்சுத் தமிழ் எழுதப்படும்போது திருத்தியே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஏட்டுவழக்குத் தமிழும் பேச்சுவழக்குத் தமிழும் என்றும் ஒன்றாயிருந்ததில்லை. எனவே ஏட்டுத்தமிழ்தான் இருந்தவாறே என்றும் பேசப்படவில்லை. இப்பொழுது பண்டை நூல்களிற் காணப்படுகின்றபடியே அக்காலத்துச் சாமானிய சனங்களும் பேசினார்களென்பது பொருந்தாது.

முற்காலத்தில் சுவடியை 'நெடுங்கணக்கு' என்று கூறுதலும் எழுத்தறிவிற்கும் ஆசிரியனைக் 'கணக்காயன்' என்று கூறுதலுங் காண்க.

"கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
பெற்றதாம் பேதையோர் சூத்திர - மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன்
புல்லறிவு காட்டி விடும்."

என்ற 'நாலடியா'ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு, ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப்படிக்கத்தெரியும். 'எழுத்து' 'சுவடி' யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டன ரென்பதும் பொருந்தாமையறிக.

இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும், தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை 'வடமொழி' யென்று உரைப்பாராயினர். அது வடமொழி யென்னப் பட்டவுடனே தமிழ் மொழி 'தென்மொழி' யெனப்படுவதாயிற்று. தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமையற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமிழொடு மருவுமுன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலேதான் தமிழ்மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.

இவ் வழிமொழிகளிலே தெலுங்குதான் வடபொழியோடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப்பா டடைந்தது; தனாது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதைவிடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.

இவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமை யான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ 'பழங்கன்னடம்' என்றும் 'புதுக்கன்னடம்' என்றும் அஃது இரு வேறு பிரிவினதாகி யியங்குகின்றது. மழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர்.

இனி மலையாளமோ வெகுநாள்காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏற்குகறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் 'எழுத்தச்சன்' என்பா-னொருவனால் மிக்கத் திருத்தப்பாடு அடைந்த்து; உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது.

மேற்கூறிய தெலுங்கு கன்னடம் மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையு முடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.

இனித் தமிழ்மொழியும் கலந்தியங்கு மாற்றைப் பற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.

ஆதிவரலாறு முற்றிற்று