வடமொழிக் கலப்பு

bookmark

வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லா-திருந்த 'அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.

"முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்"

என்று ஆரியரை நோக்கி முழங்கும் 'கபிலரகவ'லையுங் காண்க. இன்னும அவர்தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும்அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் 'கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.

இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழிழைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.

வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடி யியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகள்ளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரதிற் கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சம்ஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.

அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்திலும் வட சொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். 'தொல்காப்பியம்' என்னும் இலக்கணத்தினுள்ளும் 'எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு' என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டிலும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்க முற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப்புலவர்கள் தங்களாற் கூடிய மட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்க வொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றிவிட்ட, வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய்விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிது காலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிது காலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலே தான் 'செந்தமிழ்' 'கொடுந்தமிழ்' எனத் தமிழ் இரு பிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம்.

இனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத்தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பௌத்தரது முயற்சியா லேற்பட்ட கரைகள் ஆரியபாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்தசமய முந்தலை தாழ்ந்தது.

இந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண்டனர்; அஃதன்றியும் வடமொழியின் கண் விசேஷ கௌரவ முடையராய் அதனைப் பெரிதும் பயில்வாராயினர். வடமொழியின் பாகதங்களையும் அவற்றி னிலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டனர்; இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ் மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களை யேற்றினர்.

அத்துணையோடமையாது 'மணிப்பிரவாளம்' என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்தபாஷையாம். மணியும் பவளமுங் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக் கின்பம் பயத்தல் போலத் தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த பாஷை கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. 'ஶ்ரீபுராணம்' என்னும் சைன நூல் முழுவதும் மணிப்பிரவாள மென்னும் இவ்வாபாச நடையின் இயன்ற தாமாறு காண்க.

இவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்துகொண்டு செல்லாநிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப்புலவர் சிலர் தமிழ்மொழியை யப்பியசித்துக்கொண்டு நீதிமார்க்கத்தையும் சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்பேமெனப் புகுந்து, தமது கருத்துக்களை யெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப்படுத் துரைப்பாராயினர். 'நாலாயிரப்பிரபந்தம்' என்ற தமிழ்நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப்பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பலதிறத்தாலும் வடசொற்கள் வந்து தமிழின்கண் அளவின்றி யேறின.

தமிழின்கணுள்ள 'இரட்டைக்கிளவி' யென்பது ஒருபுறமிருக்க, 'இரட்டைப்பதம்' என்பதொரு வகையும் மற்றொருபுறத்தி லேற்படா நின்றது. ஒரே சொல் நேரே வடமொழியினின்றும் தமிழிற்போந்து, வழங்குவதன்றியும், வட மொழியின் பாகத வழியாகவும் வந்து தமிழில் வழங்குகின்றது. உதாரணமாக, 'விஞ்ஞாபனம்' என்பது நேரே வடமொழியினின்றும் போந்தசொல்; 'விண்ணப்பம்' என்பது வடமொழியின் பாகத வழியாக வந்த சொல். இவ்விரண்டிற்கும் பொருளொன்றே. இவ்வாறு வேண்டாச் சொற்களும் தமிழின் கணேறின, ஏறுகின்றன, ஏறும்!

தமிழ் மொழியின் நிலைமை யிவ்வாறாதலும், வடமொழி யிலக்கணத்தைக் கலந்து தமிழிலக்கணமும் வகுக்கப் புகுந்து விட்டனர் சிலர். 'தொல்காப்பிய'த்திற்கு உரைவகுத்த ஐவருள் முதனால்வரும் ஏறக்குறையத் தமிழ்ப் போக்கையே பற்றி யுரைவகுத்துச் சென்றனராகச் சேனாவரைய ரொருவர்மட்டில் வடமொழிப்போக்கைச் சிறிதளவு கலந்து சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தனர். தனித்தமிழ்நூலாகிய 'திருக்குற' ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே யுரைவகுத்தேகினர். 'நன்னூல்' செய்த பவணந்தியாரும், 'கின்னூல்' செய்த குணவீரபண்டிதரும் வடநூலிலக்கணப் போக்கைத் தழுவுவா ராயினர். 'வீரசோழிய'மும் அதன் உரையுமோ சொல்ல வேண்டுவனவல்ல. இவை விசேஷமாய் வடமொழி யிலக்கணங்களைத் தமிழின்கட் புகுத்துவனவாயின. அதன் மேற் 'பிரயோகவிவேகம்' என்னும் இலக்கண நூல்வகுத்த சுப்பிரமணிய தீக்ஷிதர் வடமொழிச் சத்தசாத்திரத்தைத் தமிழின்கட்கூறித் தமிழ்மொழியோ டொப்பிட்டுச் சீர்தூக்கி யாராய்வாராயினர். பின்னர் 'இலக்கணக்கொத்துரை' செய்த ஈசானதேசிகர் வடமொழி யிலக்கணத்தைத் தமிழொடு கலந்தனர்; கலந்தமட்டில் நில்லாது தமது நூற்பாயிரத்தின்கட் கூறிய சில கூற்றுக்கள் அறிவுடையோர் ஒதுக்கற்பாலன வாகின்றன.

"அன்றியுந் தமிழ் நூற் களவிலை, யவற்றுள்
ளொன்றே யாயினு தனித்தமி ழுண்டோ?
அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவு நாணுவ ரறிவுடை யோரே;\
ஆகையால் யானு மதுவே யறிக;
வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக"

என்ற விவையனைத்தும் 'பாஷை நூல்' என்னும் அரிய சாஸ்திரத்தில் பயிற்சியும் சரித்திரக்கண்ணும் இல்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களா மென்பது திண்ணம். இவை கேட்டுப் பேரறிவாளராயினார் நகைத்து விடுப்பரென்பது நிச்சயம். இவர் தேற்றேகார மிரட்டித்துக் கூறியதற்கு மாறாக, ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமது 'தொல்காப்பியப் பாயிரவிருத்தி'யிலே "தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளுங் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறமெனும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்டு முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா" என்று கூறுவராயினர். இது யாவரும் நன்குணர்ந்தது; தமிழ்மொழியும் வேறே; வடமொழியும் வேறே; இதன்கண் ஐயப்பாடு எள்ளளவு மில்லை.

நன்னூலார் தமது பதவியலினிற்றிலும் மெய்யீற்றுப் புணரியலினீற்றிலும் வடசொல்லாக்கமும் வடசொற் சந்தியும் முறையே கூறுவாராயினர்.

இனிச் சம்ஸ்கிருத மொழியின் கண்ணே பால்வகுப்புச் சொன்னோக்கத் தாலேற்பட்டுளதேயன்றிப் பொருணோக்கத்தா லேற்பட்டிலது. உதாரணமாகக், கையெனப் பொருள்படும் 'கரம்' என்றசொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே, 'தாரம்' என்பது ஆண்பால், 'களத்திரம்' என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஓராற்றானமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொரு ணோக்கத்தாலேற் பட்டுளவே யன்றிச் சொன்னோக்கத்தா லெற்படவேயில்லை. இது தமிழ்மொழியின் சிறப்புக்களுள் ஒன்று. வடநூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோ டியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடையனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிக ளெல்லாம் பொருணோக்கப் பால்வகுப்புச் சிறப்புடையன. இவ்வுண்மை யொன்றே தமிழ் மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்க சான்று பகரும்.

அன்றியும்,
"கேட்கு போலவுங் கிளக்கு போலவும்
இயங்கு போலவு மியற்று போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே"

என்ற நன்னூற் சூத்திரவிதியிற் கூறப்பட்டுள அணி நலன் ஆரியபாஷைச் சொற்களுக்குப் பெரும்பாலும் இல்லாது போதல் காண்க. அணி நூற் புலவர் முன்னர் ஆரியபாஷைக்கு அஃதோ ரிழுக்காமுமன்றே?

அகப்பொருளும் அதன் றுறைகளும், புறப்பொருளும் அதன் றுறைகளும், இவ்விருவகைப் பொருள்களினியைபுகளும் வடமொழியினின்றும் என்றென்றும் கிடைத்தலியலாத அரிய தனித் தமிழ் விஷயங்களாம். இவற்றினின்றும் ஆதியிலிருந்த தமிழர்களது ஒழுக்க நிலை இத்தன்மைத் தென்பதும், அவர்களது நாகரிக நிலை இத்தன்மைத் தென்பதும் நன்கு விளங்குகின்றன.

வடமொழியின் 'இலகு குரு கணயதி விருத்தம்' என்ற பாகுபாடுகட்குத் தமிழிலிடமே-யில்லை. தமிழின் நால்வகைப் பாக்களும் மூவகைப் பாலினமும், அவற்றின் பாகுபாடுகளும், எதுகை மோனை நியமங்களும், அசை, சீர், தளை ஆகியவற்றினி-யல்புகளும் தமிழ்மொழிக்கே யுரியன. இவை வடமொழிக்கட் காணப்படுவனவல்ல. தமிழிற் 'பா' என்றத னிலக்கணமே மிகவும் இனிமை பெற வமைந்துளது. 'பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும், ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை" என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இது வடமொழியாளர்க்குப் புதுமையாம்.

தொல்காப்பியனார் யாப்பணிகளைப் பொருளதிகாரத்திலேயே அடக்கிச் சூத்திரஞ் செய்து சென்றனர். அதன்கண் 'அணியியல்' என்ற பெயரே காணப்படாது, 'உவமவியல்' என்ற தொன்று அதற்குப் பிரதியாகக் காணப்படுகின்றது. அவ்வுவமவியல் தானும் இக்காலத்தி லுலவுகின்ற அணிநூல்கள் போலாது மிகச் சுருங்கியதாய்ச் சிற்சில பொது தருமங்களை மட்டில் விரித்துக் கூறி, உவமவுருபுகளும் அவை வழங்குமாறும் இவையெனச் சுட்டிச் செல்லா நின்றது. இவ்விஷயத்தை இக்காலத் தியங்குறும் அணி நூல்களொடு ஒத்து நோக்குமிடத்துத் தமிழ் மொழி வடமொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள தென்பது தேற்றம். தமிழ்ப் பாடினியைச் சம்ஸ்கிருதப் பாணன் அணிந்து புனைந்தமை வெளிப்படை.

வடமொழி யிலக்கணத்தொடு தமிழிலக்கணத்தைச் சீர் தூக்கி யாராய்வான் புகுந்த 'பிரயோக விவேக' நூலுடையார் அந்நூலினிறுதியிற்

"சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும்
வேற்றுமை கூறிற் றிணைபா லுணர்த்தும் வினைவிகுதி
மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருயுந்
தேற்றிய *விங்க மொருமூன்று மில்லை செழுந்தமிழ்க்கே."

என்ற காரிகையில் இரு மொழிக்கும் வேறுபாடு கூறினார். ஆயினும் தமிழ்க்கும் வடமொழிக்கும் வேறுபாடு இவ்வளவுதான், இதற்குமேலில்லை யென்பது அவர் கருத்தன்று; " இது வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது" என்று அவர் தாமே அக்காரிகை யுரை முகத்து உரைத்தன னென்க.

இதுகாறும் தமிழ்மொழியின் கண்ணே வடமொழிக் கலப்பைப்பற்றி ஓராற்றான் விரித்துரைத்தோம். இனித் தமிழ் மொழியின், மூவகைப் பாகுபாட்டினைப்பற்றி யெடுத்துரைப்பாம்.

வடமொழிக் கலப்பு முற்றிற்று