ஆளுக்கொரு தேசமானோம்

bookmark

பஞ்ச காலத்தில், வேலை தேடித் தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு இளைஞன் சென்றான். மழை பெய்து பயிர் செய்யும் காலம் வந்ததும் திரும்புகிறேன் என்று சொல்லிச் சென்றான். மழை வந்தது. புஞ்சைக்காட்டு வேலைகளும் தொடங்கி விட்டன. அவள் அவனது வாக்குறுதியை எண்ணி வருந்துகிறாள்.

கழுகு மலைக் குருவி குளம்
கண்டெடுத்தேன் குண்டு முத்து
குண்டுமுத்தைக் காணாமல்
சுண்டுதனே கண்ணீரை
வேப்பம்பூ பூராதோ
விடிந்தால் மலராதோ
நேற்று வந்த நேசருக்கு
நேரந் தெரியாதோ!
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ!
வீசுங் கொம்பு மேலிருந்து
வெள்ளை தெரியாதோ
எலுமிச்சம் பழம் போல
இருபேரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்.

வட்டார வழக்கு: சுண்டுதனே-சுண்டுகிறேனே; பூராதோ -பூக்காதோ;தளுக்காதோ-தளிர்க்காதோ.
சேகரித்தவர்: S.S. போத்தையா 
இடம்: நெல்லை மாவட்டம்.
-------------