இரவல் புருஷன்

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டறையில்
ஏதில் பிணம்தழீ இயற்று”
என்று வேசியர் உறவைக் கண்டித்தார் வள்ளுவனார். அதைக் கடைபிடித்து ஒழுக எண்ணும் இளைஞன் ஒருவன், தன்னை மயக்க இனிய மொழி பேசும் வேசியிடம் தனக்காக மணத்துக்கு காத்திருக்கும் குப்பாயியைப் பற்றி கூறி இணங்க மறுக்கிறான். இதற்குள் குப்பாயியே நேரில் தோன்றி வேசிக்குப் புத்தி கூறுகிறாள்.
வேசி : சின்ன சின்ன ரோட்டிலே
சீப்பு சீப்பா வாழைப்பழம்
இன்பமாக ரோட்டிலே
இருவருமாய்த் தின்னலாம்
அவன் : ஆத்தோரம் கொட்டாயாம்
அத்தை மகள் குப்பாயி
குப்பாயி பட்ட பாடு
கொமரிப் பெண்ணெக் கேட்டுப்பாரு
ஆத்தோரம் தோட்டக்காலாம்
அணியணியா வெத்திலையாம்
போட்டாலே செவக்கலையே
பொண்ணாளே உன் மயக்கம்
அஞ்சாறு வீட்டுக்காரி
அதிலே ஒரு பாட்டுக்காரி
பாட்டையும் பாடுவாளாம்
பசங்களையும் தேடுவாளாம்
குப்பாயி : சுத்தி பகிளிக் காரி
சுத்தாலை வீட்டுக்காரி
எட்டி எட்டிப் பார்த்தாலும்
இரவல் தாண்டி உம்புருஷன்
வட்டார வழக்கு : கொமரி-குமரி ; பகிளி-மினுக்கு ; சுத்தாலை-சுற்றுச் சுவர் ; கொட்டாய்-கொட்டகை.
சேகரித்தவர் : S. சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்.
---------