உலகம் பொறுக்குதில்லை

முன் பாடலில் வரும் காதலி பாடுவதைப் போலவே இப் பாடலிலும் ஒர் காதலி தன் காதல் ஊரில் வெளியாகி விட்டதை எண்ணி வருந்துகிறாள். காதலன் காதில் எட்டும்படி தனது கவலையைப் பாட்டில் கூறுகிறாள். அவனும் தன்னைப் பற்றியும் பிறர் தூற்றுவதை அவளுக்குத் தெரிவிக்கும் முறையில் பாடுகிறான்.
பெண்.: எண்ணெய்த் தலை முழுகி
என் தெருவே போறவரே
பாராதீரு என் முகத்தை
பழிகள் வந்து சேர்ந்திருமே
ஆலமரமுறங்க
அடி மரத்து வண்டுறங்க
உன்னோட நானுறங்க
உலகம் பொறுக்குதில்லை
கல்லோட கல்லுரச
கடலுத் தண்ணி மீனுரச
உன்னோட நானுரச
உலகம் பொறுக்கலையே
வெத்தலை தந்தவரே
வினையிழுத்து வச்சவரே
போயிலை தந்தவரே
போதுமையா உம்முறவு
ஆண்: பார்த்தனடி உன் முகத்த
பகைச்சனடி என் சனத்த
கேட்டனடி கேவலங்கள்
கிளிமொழியாள் உன்னாலே
அருகுபத்திப் பிஞ்சையிலே
ஆகுருவி விரட்டையிலே
சொருகு கொண்டை வெள்ளையம்மா
சொல்லுக் கிடம் வச்சவளே
வட்டார வழக்கு: அருகுபத்தி-அருகம்புல் படர்ந்த; வச்சவரே-வைத்தவரே; வச்சவளே-வைத்தவளே: ஆகுருவி-புஞ்சைக்கு வரும் குருவி.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்:, தங்கம்மாள்புரம், விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
------------