உவமையணி

இந்நூலில் உவமையணி மலிந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணி முதலியவும் உள்ளன. ஈண்டு உவமையணி சில காண்பாம்:-
8.1 தளர்ந்துழி உதவும் கல்வி
முனிவர்கள் தளர்ச்சியுற்றிருந்த போது அவர்களின் தளர்ச்சியைப் போக்கத் துருவாசமுனி வந்தாராம். இதற்கு உவமையாக,
“தளர்ந்துழி உதவும் கல்விதானென” (3-34)
என்பது கூறப்பட்டுள்ளது. சிறந்த உவமை இது.
“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்” (415)
என்னும் குறள் ஈண்டு எண்ணத்தக்கது.
8.2 குழந்தை வளர்ப்பு
மோகினி மாயை என்னும் குழந்தையை அருமையாகப் போற்றி வளர்த்தமைக்கு மூன்று உவமைகள் கூறப் பட்டுள்ளன. அவை:-
“மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்
விளையக் காக்கும் செயல்போலப்
படியில் கல்வி விரும்பினோன்
பாடம் போற்றுமது போல
ஒடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கு முறைபோலக்
கொடிய நோன்பு செய்தீன்ற
கொடியை வளர்த்தாள் மோகினியே” (3.49)
என்பது பாடல். இதில் அரிய பெரிய ஆழ்ந்த கருத்துடைய மூன்று உவமைகளைக் காணலாம்.