எட்டு நாளாய்ப் பேசவில்லை

இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப் பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி
விளைக்குள்ளிருந்த தன்னை அவன் மெல்ல அழைத்ததை கூறுகிறாள். தோழி, அப்படியானால் இப்பொழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்?` என்று கேட்கிறாள். அது பெரிய விஷயமல்ல. சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல்` என்கிறாள் காதலி.
காதலி:
பால் போல் நிலாவடிக்க
பருத்திக்குள்ள நானிருக்க
மின்னுவெட்டான் பூச்சி போல-அவன்
மெல்ல வந்து கூப்பிட்டானே
தோழி:
இரும்பாலே கிணறு வெட்டி-நீ
இருந்து குளிக்கையிலே
கரும்பான அத்தை மகன்
கையலைச்சுப் போராண்டி
காதலி:
ஆத்துல ஊத்துத் தோண்டி
அவரும் நானும் பல் விளக்க
எச்சித்தண்ணி பட்டுதுன்னு-என்னோட
எட்டு நாளாப் பேசலியே
வட்டார வழக்கு : மின்னுவெட்டான் பூச்சி-மின் மினி; கையலைச்சு-கைவீசி; ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்
-----------