ஏற்றப் பாட்டு-1

பிள்ளையாரே வாரும்
பிள்ளைபெருமாளே
இளைய பிள்ளையாரே
எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்
என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்
பாலு பணியாரம்
கொத்தோடு மாங்காய்
கொலையோடு தேங்காய்
ஈனாக் கிடாறி
இடது கொங்கைப் பாலும்
வாலைக் குமரி
வலது கொங்கைப் பாலும்
தெற்கு மலையேறி தேக்கிலைப்பறித்து
தேக்கிலைக்கும் தண்ணீர்
தெளிக்கும் பிள்ளையாருக்கு
வடக்கு மலை ஏறி
வாழை இலை பறித்து
வாழெலைக்கும் தண்ணீர்
வைப்போம் பிள்ளையாரே
ஓம் முருகா வேலா
ஓடி வந்தாயானால்
ஓடி வந்தாயானால்
கோடிப் பயன் உண்டு
ஒரு பதிலே நில்லு
சிறுவன் தொலை மேலே
ஒத்த மரம் நெல்லி
உயர்ந்த மரம் தோப்பு
ஒத்திரைத்தாயானால்
சித்திரக் கார் பாயும்
ஒத்த குரல் ஓசை
நித்த மணிப் பூசை
ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடம்
ஓடக் கரை யோரம்
வேடப்பய காவல்
ஒரு பணமாம் செம்பு
ஒளி விடுதாந்தேரு
தேரு திரண்டோட
மாலை கழண்டோட
ஓடுதையா நூறு
ஓடுதையா நூறு
பாப்பாரப் பெண்ணே
மோக்கலையா தண்ணி
மோக்கலேடா அண்ணா
முகங்கழுவப் போறேன்
பாலு என்னும் பயலே
தோழனென்னும் தோழர்
பாலு கொண்டு போன
பாலகனைக் காணோம்
தயிரு கொண்டு போன
தங்கம் வரக் காணோம்
இருண்ட நேரம் தோழா
இலுப்பமரம் தாண்டி
இருக்கச் சொல்லிப் போன
இளமயிலைக் காணோம்
இருப்பதென்றால் சொல்லு
கொடுப்போம் கலநெல்லு
இருள் ஆந்தை கூவ
மருள் ஆந்தை சாய
இரும்புலக்கை கொண்டு
திருப்பிவிட்டான் தேரை
இரும்பு வழித்தூணாம்
துலுக்கமல்லி வாசல்
இருந் தடிக்கப்பந்து
நடந்தடிக்கச் சோர்ந்தான்
இருட்டி வந்த மேகம்
மருட்டி மழை பெய்ய
முந்தின குதிரை
தாண்டுதாம் கடலை
முந்தாதே தோழா
மோசம் வரும் சொன்னேன்
முந்தி ஒரு சாமம்
முழிச்சழுதான் பாலன்
முந்தி நட்ட சம்பா
பொங்கலுக்கு நெல்லாம்
முந்திரியும் காய்க்க
மந்திரியின் தலைமேல்
முன்னே நட பெண்ணே
அன்ன நடை பார்க்க
மூக்குக்தியும் தேரடும்
மேற்கத்தியா சாடை
க்குத்தியைத் தாடி
மோதிரங்கள் செய்ய
முன்னே மலட்டாறாம்
வெள்ளம் பிறண்டோட
அஞ்சறையாம் பெட்டி
அதில் நிறைஞ்ச மஞ்சள்
அஞ்சு கொத்து மஞ்சள்
அரைக்கப்பத்து நாளாம்
அம்பலமும் கூத்தும்
ஆடுவாள் குறத்தி
அம்பனுக்கும் தெற்கே
வம்பனுடைய தேசம்
அம்பாலக் கோட்டை
ஆசாரப் பொம்மை
அன்பு மலையாளம்
தம்பி போன தேசம்
அன்பு காட்டி வார்த்தை
அழகு காட்டித் தேமல்
ஆறு அடைக்கக் கட்டை
அமுது அடைக்கச் சேனை
ஆத்து வண்டலோட
பூக்குதடி நாணல்
ஆத்தே இவள் ராணி
வார்த்தை பேச நீலி
ஆத்தாங் கரையோரம்
ஆனை விளையாட்டாம்
ஆத்தரளி தின்றால்
மாத்திரைகள் உண்டோ
ஏழு மூங்கி வெட்டி
எமதூண்டி போட்டான்
ஏழைக்குலப் பெண்ணாம்
சோலைக் குயில்போல
ஏழை வச்சான் வாழை
ஏறி வெட்டலாமோ
ஏழைக்குல வண்ணான்
சாதிலம் கேட்டான்
எழுத்தாணி கொண்டு
எழுதிய குடமாம்
குமரியின் தலைமேல்
எழுக்கோடா செட்டி
பருசப்பணம் பத்து
எழுத்து வர்ண சேலை
வெளுத்து வாடா வண்ணா
எங்கமதயாணை
கொம்பு மதயானை
வங்கணக் குறத்தி
எங்கிட்டு வருது
தங்கிச்சி வரிசை
எட்டிப் பூப்பூக்க
பொட்டில் இடும் மையாம்
எட்டுதில்லை தண்ணி
வத்து தில்லை பொய்கை
செம்பருத்தி காயாம்
இளம் பருத்தி நூலாம்
துவக்குதடி பாக்கு
தோழியிடம் சொல்ல
மணக்குதடி மஞ்சள்
மாரியிடம் சொல்ல
தோழி கட்டும் சேலை
தொண்ணூறு முழமாம்
நான் அளந்து பார்க்க
நாற்பது முழமாம்
தோழி கடல் ஏற
வாரி அலைமோத
தோத்துப் போன சேவல்
நேத்து வந்து கூவ
தோப்புக் குள்ளவாடி
தொகுத்தே கவி பாட
தோப்பிலுள்ள மாங்காய்
காப்பணமாம் நூறு
சென்றதையா நூறு
சொல்லத் தொலைமேலே
வந்ததையா நூறு
வைக்கத் தொலைமேலே
ஆலையும் கரும்பும்
ஆடி வர நூறு
சோலையும் கரும்பும்
சுத்திவர நூறு
தங்க மயில் ஏறி
சாமி வர நூறு
புள்ளி மயில் ஏறி
வள்ளி வர நூறு
ஒற்றை அடிபோல
சுட்ட ரொட்டி நூறு
ஆனை அடிபோல
அதிரசங்கள் நூறு
குதிரை அடிபோல
கொளுக் கட்டைகள் நூறு
மாடு கட்டும் தும்பு
மறு விலங்கு நூறு
கன்று கட்டும் தும்பு
கயிறணையும் நூறு
எருது கட்டத் தும்பு
எடுத்தனையா நூறு
ஆனதைய்யா நூறு
ஆறுமுக வேலா
ஒரு நூறும் போல
திரு நீறும் பூசி
இரு நூறும் பாழ்
இரணியந் தேர் ஓடி
முன்னூறூம் பாடி
மூவணத் தேர் ஓடி
நானூறும் பாடி
நாக நாதர் ஓடி
ஐந்நூறும் பாடி
ஐயனார் தேரோடி
அறு நூறும்பாடி
ஆரணித் தேர் ஓடி
எழுநூறும் பாடி
இரணியந் தேர் ஓடி
எண்ணூறும் பாடி
ஈஸ்வரந் தேரோடி
தொளாயிரமும் பாடி
ஆயிரமாங் கோடி
ஆயிரத் தைச் சேர்த்து
கோபுரத்தைப் பார்த்து
கோபுரத்து மேலே
கும்பத்திலே தண்ணி
இஞ்சிக்கும் பாச்சி
எலுமிச்சைக்கும் பாச்சி
மஞ்சளுக்கும் பாச்சி
மற்படுதாம் வெள்ளம்
கைமாத்துக்காரர்
கச்சைக் கட்டும் தோழர்
நான் இரைத்த நேரம்
நீ இரைக்க வாடா
கை வழியே வாடா
கைவலியும் தீர
மேல் வழியே வாடா
மேல்வலியும் தீர
காளியாத்தா தாயே
கால்கள் வலியாமல்
மீனாட்சி அம்மா
மேலுவலியாமல்
கருப்பண்ண சாமி
கைகள் வலியாமல்
முத்து முனியாண்டி
உத்த துணை நீயே
ஏர்வாடி அல்லா
எனக்குத் துணை நீயே!
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------