ஐவகை இலக்கணம்

பாஷையாவது, மக்களது இயற்கை வேட்கையில் தோன்றி, அவரது நாகரிக விருத்தி முறைக்கேற்ப் வளர்ந்து வருவதோர் மக்களாக்கப் பொருளாம். அது சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்களாலாயது; இவ் வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களாயின; இச்சொற்கள் தாமும் பகுதி விகுதி இடைநிலை முதலிய பல வுறுப்புக்களாலாயின.
இவ்வுறுப்புக்களுள்ளும் பகுதிகளெல்லாம், பெரும்பான்மையும் ஆதியிலிருந்த தமிழ்மக்கள் சொற்சொல்லத் தொடங்கிய காலத்துப் பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற்களாம்; சிறுபான்மை ஒலிக்குறிப்பு வியப்புக் குறிப்பு முதலியகாரணங்கள் பற்றி வந்த சொற்களாம். இனி விகுதி முதலாயின வெல்லாம் ஒரு காலத்தில் முழுமுதற் சொற்களாய்ப் பொருளறிவுறுத்தி நின்று, பின்னொரு காலத்து மக்கள், குறிப்பின்மை, சோம்பல், பொச்சாப்பு, முயற்சிச் சுருக்கம் ஆகிய காரணங்களாற் சொற் சோர்வுபட மொழிதலாற் பலவாறு திரிந்து மருவி இடைச் சொற்களென்று வழங்கப் படுவனவாயின. நாகரிகம் முதிருந்தோறும் முதிருந்தோறும் பாஷை மாறுபட்டுச் சொற்களைச் சிதைத்து வழங்கும் வழக்கம் மக்களுக்குப் பல அசௌகரியங்கள் விளைவித்தன.
தமிழ்ச்சொற்களை மாந்தர் மேலும் மேலுஞ் சிதைத்து வழங்காதவாறு, ஆசிரியர் அகத்தியனார் தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி, ஆச்சொற்களை மேல்வழக்கு முறைகாட்டி வரம்பறுத்து இலக்கண நூல்கள் வகுத்துத் தமிழ்ப் பாஷையை யொழுங்குபடுத்தி நிறுத்துவாராயினர். இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாத பாஷைகளெல்லாஞ் சில சிதைந்து வழங்கி இறுதியில் உருக்குலைந்து வழக்கமற்று ஒழிந்துபோம்.
மேற்கூறியவாறு தமிழ்மொழிக்கு முதன்முதல் இலக்கண நூல் வகுத்தவர் அகத்தியனார். அவர் இயலிசை நாடகமென்ற முத்தமி ழிலக்கணமும் முறைப்பட வகுத் தோதினார். இசைநாடகத் தமிழிலக்கணங்களை யெடுத்துக் கூறாது இயற்றமிழிலக்கணத்தைமட்டில் வகுத் தோதினார் தொல்காப்பியனார். இப்பொழுது 'அகத்தியத்'தின் சூத்திரங்கள் சிற்சிலமட்டில் ஆங்காங்குத் தொல்லை தூதுரைகளிற் காணப்படுகின்றனவேயன்றி நூன் முழுதுங் காணப்படவில்லை; ஆகவே 'தொல்காப்பிய' மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது; இனியும் இலங்கா நிற்கும். இவ்வியற்றமி ழிலக்கணநூல் 'எழுத்து', 'சொல்', 'பொருள்' என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது.
எழுத்ததிகாரத்தில் எழுத்தினியல்புகளும், எழுத்தானாகிய மொழிகளும் அவற்றின் புணர்ச்சிகளும் முதலாயின விரித்துக் கூறப்பட்டன. சொல்லதிகாரத்திற் சொல்லின் பாகுபாடுகளும், அவற்றினியல்புகளும் முதலாயின விரித்துரைக்கப்பட்டுள. மற்றுப் பொருளதிகாரத்திலோ களவியலுங் கற்பியலுமாகிய அகப்பொருளும் அவற்றின் துறைகளும், புறப்பொருளும் அவற்றின் துறைகளும், மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியலகளும் கூறப்பட்டிருக்கின்றன.
இனி ஐவகை யிலக்கணங்களாவன 'எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி' யென்பன. இவ்வைந்தனுள்ளே 'தொல்காப்பிய'த்தில் முதல் மூன்றை மட்டிலே விரித்துக் கூறுவார், செய்யுளிய லென்றதன் கண்ணே யாப்பை விரித்தோதியும், உவமவியலென்றதன் கண்ணே அணியை யெடுத்தோதியும் ஓராற்றான் ஐவகை யிலக்கணமுங் கூறினாராயினார். அன்றியுந் தொல்காப்பியனார் காலத்தே ஐவகை யிலக்கணமென்ற பாகுபாடின்றி யிருந்திருத்தலு மியல்பே; அல்லது யாப்பணிகள் பொருளதிகாரத்தின் பகுதிகளெனவே கருதப் பட்டிருந்தன வென்றலும் அமையும்.
கடைச்சங்கத்தார் காலத்தி லேற்பட்ட 'இறையனாரகப் பொருளுரை'யிற் " பெய்தபின் அரசன் நாடு நாடாயிற் றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மெனவந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே? பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெர்றிலேம்' எனச் சொல்லாநிற்ப" என்ற கூற்றினை உய்த்து நோக்கி யுணரும்போது, அக்காலத்தில் 'எழுத்து, சொல், பொருள்,யாப்பு' என நால்வகையே வழங்கின வென்பது துணியப்படும். அஃதாவது தொல்காப்பியனார் காலத்திற் பொருளதிகாரத்திலுள்ளடங்கிய யாப்பு, கடைச் சங்கத்தார் காலத்தில் அதனின்றும் பிரிந்து தனித்து ஓரதிகாரமாயிற்று என்பதாம்.
அதன்பின் யாப்பதிகாரம் மிக்க சிறப்படைந்து பல்லோராலும் பாராட்டப் பட்டது. அக்காலத்திருந்த புலவர் பலரும் யாப்பு நூல்கள் பல இயற்றினர். காக்கைபாடினியர், அவிநயனார், மயேச்சுரனார் முதலாயினார் தத்தம் பெயரால் யாப்பிலங்கணங்கள் வகுத்தனர். பின்னர் 'யாப்பருங்கலம்,' 'யாப்பருங்கலக் காரிகை' என்ற நூல்கள் வகுக்கப்பட்டு வழங்குவன வாயின.
இடையிற் பொருளதிகாரப் பயிற்சி குன்றியபோது 'இறையனாரகப் பொருள்' என்ற சிறிய இலக்கண நூலும், மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய 'திருக்கோவையார்' என்ற இலக்கண நூலும் ஏற்பட்டன. அதன் மேற் சில புதிய கருத்துக்களை யுடன்கூட்டி நாற்கலிராஜ நம்பி யென்பவர் 'அகப்பொருள் விளக்கம்' என்ற இலக்கண நூலியற்றினர். பின்னர்க் 'கல்லாடம்', நம்மாழ்வார் செய்தருளிய 'திருவிருத்தம்' என்ற அகப்பொருளிலக்கிய நூல்கள் வெளிப்போந்தன. ஐயனாரிதனார் என்பவர் 'புறப்பொருள் வெண்பா மாலை' என்ற நூல் வகுத்தனர்.
இவ்வாறு நால்வகை யிலக்கணமே சிலகாலம் வழங்கி வந்தன. அதன்மேல் வடநூல்வாணரோடு ஊடாடி ஐந்தாவது வகை யிலக்கணமாகிய அணியதிகாரத்தையுந் தமிழ்ப் புலவர்கள் விருத்தி செய்து கொள்ளப் புகுந்தனர். 'அணிநூல்', 'தண்டியலங்காரம்' முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுட் பின்னதே தமிழ் மக்களுட் பயிற்சிமிக்குடையதாய் விளங்குகின்றது. இந்நூலாசிரியர் பொது வணியியல், பொருளனியியல் சொல்லணியியல் என்ற மூன்று பிரிவினில் தம்நூலை முடித்திருக்கின்றனர். பொதுவணியியலிற் பொதுவாகப் பலவகை கலப்பாடுகளும் புனைவு முறைகளுங் கூறப்பட்டுள.
பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந்தணிகள் கூறப்பட்டுள. இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல்,
"உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வாங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே"
என்ற அவரது 'சித்திரமீமாஞ்சைக்' கூற்றினான் விளங்கும். இனிச் சொல்லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள.
மற்று, ஐந்திலக்கணங்களையும் முற்றத் தனித்தனி கூறும் நூல்கள் மிகச் சிலவே. அவைதாம் 'வீரசோழியம்', 'இலக்கண விளக்கம்', 'தொன்னூல் விளக்கம்' என்பனவாம். வீரசோழியம் பெரும்பாலும் வடநூல் முறையையே தழுவிச் செல்வது. இலக்கண விளக்கமுடையார் யாப்பணிகளைப் பின்னூல்கள்போல விரித்துக் கூறினும் அவற்றைப் பொருளதிகாரத்தின் கண்ணேயே யடக்கிக் கூறினர். தொன்னூல் விளக்கமுடையோர் பொருளதிகாரத்தைச் சுருகிக் கூறிலும் யாப்பணிகளை விளங்கக் கூறினர். தண்டியலங்காரம்போலத் தனியே அணியிலக்கணங் கூறுவதாய், ஆனால் அதனினும் விரிந்ததாய், 'மாறனலங்காரம்' என்றதோர் நூல் ஏற்படுவதாயிற்று. இது மிகச் சிறந்ததோர் நூல். அதன் மேற் 'குவலயாநந்தம்' என்ற வடமொழி யலங்காரசாஸ்திரம் தமிழின்கண் மொழிபெயர்க்கப் படுவதாயிற்று. இது புதுமை வழியிலியன்றதோ ரினியநூல். இதன்கண்ணே உவமையணி முதல் எதுவணியீறாக நூறணிகள் கூறப்பட்டுள.
இவ்வாறு தமிழ்மொழி ஐவகை யிலக்கணமு முடையதாய நிலைமை யெய்தி விளங்கா நின்றது. பவணந்தி முனிவர்செய்த 'நன்னூல்' எழுத்துஞ் சொல்லுந் தெளிவாகவும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறுகிறது. 'நேமிநாதம்' என்றதும் அப்படியே.
இனிப் 'பாட்டியல்' என்னுமோ ரிலக்கணப் பகுதியுளது. அதனியல்பு சற்றே விரித்துரைக்கற் பாலது. அது தமிழிற் கூறப்படும் தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களி னிலக்கணங்களும், பாடுவோனுக்கும் பாடப்படுவோ னுக்கு முள்ள எழுத்துப் பொருத்தம் மங்கலப்பொருத்தம், முதலியனவும், ஈச்செழுத்து அமுதவெழுத்தென்ற பாகுபாடும், ஆனந்தம் முதலிய குற்றங் களும் இவை போல்வன பிறவும் விரித்துக் கூறுவதாகும். 'வெண்பாப்பாட்டியல்,' 'வரையறுத்தபாட்டியல்' என்ற நூல்களெல்லாம் பாட்டியல் கூறுவனவே. இலக்கண விளக்கத்தி னிறுதியிற் 'பாட்டியல்' என்றதோரியலும் யாத்துக் கோக்கப்பட்டுளது.
அணிகளுட் சொல்லணிகளே விசேடமாய் நல்லிசைப் புலவர்களான் மதிக்கப்படுவனவல்ல. முற்காலத்துச் சங்கச் செய்யுட்களிலெல்லாம் சொல்லணிகள் காண்டலரிது. இச்சொல்லணிகளிலும் சித்திரகவிகள் மிகவு மொதுக்கப் படுவனவாயின. 'காஞ்சிப்புராண' மாதிய சிலநூல்களே யிவற்றுட் சில கொண்டியங்குகின்றன. மடக்குகளெல்லாம் விசேடமாய் நூல்களிற் பயின்று வராமல் அவற்றுள் ஆங்காங்கு வரும். இடைக்காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் நாடுபவராய்ச் சொல்லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள் யமகம், திரிபு முதலிய செய்யுட்கள் பல வியற்றினர். பின்னர்த் திரிபந்தாதிகளும் யமக வந்தாதிகளும் சிலேடை வெண்பாக்களும் அளவிறந்தன வெழும்பின. இவையனைத்தும் பெரும்பாலும் பொருட்செறிவிலவாய் வீண் சப்தஜாலங்களாய்மட்டில் முடிந்தன. இக்காலத்தினும் தென்னாட்டிற் புலவர் பலர் யமகந்திரிபு பாடுதலையே பெரிதாகவெண்ணிவாணாளை வீணான் கழிப்பர்.
சொன்னலத்திலும் பொருணலமே சிறந்ததெனப் பேரறிவாளர் யாவருங்
கூறுவர். யமகந்திரிபுள்ள பாடல்களை ' உயிரில்லாப் பாட்டுக்கள்' என்றும்
கருத்துநலம் வாய்ந்த கற்பனையுள்ள பாடல்களை 'உயிருள்ள பாட்டுக்கள் என்றும் அறிவுடையோர் பலர் கூறக்கேட்டிருக்கினறனம். இஃதுண்மையே யென்பது திண்ணம். இவ்வாறவர்கள் கூறுதற்குற்ற காரணங்கள் யாவென்று ஆராய்வோம். முதலாவது: மிறைக்கவிகள் பாடுமிடத்து மிக்க காலஞ் செல்லும்; அப்படிக் காலஞ் சென்றும் சிற்சில வேளைகளில் அவைகள் பாடுவோரிஷ்டப்படி யமையாமற் போவதுமுண்டு. இவ்வாறு முற்கிமோதி முனைந்தடித்து மிறைக் கவிகளைச் சொல்லளவால் ஒருவாறமைத்து முடித்த பின்னரும் அவை சிறந்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றின்கட் பொருணலமில்லை. இரண்டாவது: கவிகளியற்றுவது யாவர்க்கும் பயன்படல் வேண்டுமென்பது கருதி. அக்கவிகளினும் சில, திரிசொற்களா லமைத்து விட்டாற் படிப்பவருட் பலர் திகைப்பர். இவ்வாறிருக்கச் செயல்படுங் கவிகளோ மிறைக்கவிகள்; அம்மிறைத் தன்மையோடு இலக்கணச்சந்திகளுஞ் செறிந்தன. எதிர்பாராதபடி
சொற்கள் பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக் கிடந்தன. இப்படியென்றால் இம்மிறைக் கவிகள் யாருக்கபயோகம்? மிறைக் கவிஞன்தானே மகிழ்ந்து
கொள்ளதற்கு அவை ஒரு வேளை பயன்படலாம். 'வகையுளி' என்றதற்கு
வேண்டிய உதாரணங்கள் இம்மிறைக் கவிகளிற் காணலாம். மூன்றாவது: இத்தகைய மிறைக்கவிகள் படிப்போனது காலத்தையும் வீணாக்கிப் பலவிடங்களினும் அவனை மயங்க வைக்கின்றன. இத்தன்மையான இடர்ப்பாடுகள் நிரம்பிய மிறைக்கவிகள் நந்தமிழ்ப் புலவர்கள் மனங்களைக் கவராதொழிவனவாக.
இவ்வாறே முற்கூறிய பாட்டியலுட் கூறப்பட்டுள பொருத்தங்கள் முதலியனவும், ஆனந்தக் குற்றம் முதலியனவும் நாளாவட்டத்திற் பயனிலவாய்க் கழிந்துபடுமென்பது தோன்றுகிறது. அநேகர் இக்காலத்தில் அவற்றைக் கவனிப்பதில்லை. கருநாடகப் புலவர்களு இரண்டொருவர் மட்டில் அவற்றைப் பிடித்துக்கொண்டு அவஸ்தைப்படுகின்றனர். அவர்களும் அவற்றை விரைவிற் கைவிடுவார்களென்பது சொல்லமலே யமையும். இனிப் 'பத்துப்பாட்டுரை'யில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் "நூற்குற்றங்கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே 'தன்னானொரு பொருள் கருதிக்கூறல்' என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினுங் கொள்ளா ரெனமறுக்க" என்றுரைத்த வுரை யாவருங் கவனிக்கத்தக்கது.
இதுகாறும் தமிழ் மொழியின் ஐவகை யில்கணங்களையும் குறித்துக்
கூறினோம். இனித் தமிழ்மொழியின் தோற்றமும் தொன்மையும் பற்றி விரித்துரைப்பாம்.
ஐவகை இலக்கணம் முற்றிற்று