பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

உலகின்கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள்
அடிக்கடி தங்கள் கருத்துக்களை யொருவரைகொருவர் வெளியிட்டுக் பொள்வது அவசியமாயிற்று. ஆகவே அவர்கள் கைவாய் முதலிய உறுப்புக்களாற் பலவிதச் சைகைகள் செய்து காட்டித் தங்கள் கருத்துக்களை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை 'இயற்கைப் பாஷை' யென்பர் சிலர்.
இவ்வியற்கைப் பாஷை முதலிற் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வியளவினும் பரவிற்று; அஃதாவது, சில ஒலிகளும் ஒலிக் கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாக அச்சைகைகளுடன் கூடின. அவ்வெளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவை தாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறி வகையானும் எழுதப்படும்.
பேச்சு நிலைக்கு வாராது சைகை நிலையில் நின்ற காலத்திலெல்லாம் தமிழ் மக்கள் புலி முதலியவற்றைக் கொன்று வேட்டைத்தொழில் செய்து வந்தனர். இவ்வேட்டைத் தொழிலைச் செவ்விபெற நடாத்துவதற்கு மிருகங்களின் ஒலிகளை யுற்றுக் கேட்டு நன்குணர்ந்து அவை போலத் தாமுங் கத்தி அவற்றை ஏமாற்றித் தம்வலைப் படுத்தினர். வேட்டையாடுதலைப் பயன் கருதியதோர் தொழிலாகவே முற்றும் மதித்தல் நேரிதன்று. இஃது ஆதிமக்களால் விளையாட்டுத் தொழிலாகவும் கருதப்பட்டு வந்தது. இக்காலத்தினும் வேட்டையாடுதல் பலர்க்குப் பிரீதியானதோர் விளையாட்டாம். இவ்வாறு ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதாற் பலவகைப்பட்ட மிருகங்களினொலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே யவற்றை யறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றுங் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோற்கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் 'போறல் வகை' யானெழுந்தன வென்க.
மக்கள் சுவையுடையாராதலின், அவற்றிற்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவாயின், சில குறிப்புச் சொற்கள் தாமாகக் கூறுவரன்றே? வெறுப்புச் சுவையிற் 'சீ' யென்றும், வெகுளிச் சுவையிற் 'போ' வென்றும், உவகைச் சுவையில் 'வா' வென்றும் கூறப்படுஞ் சொற்களைக் காண்க. 'ஐ' யென்பது வியப்பினாலும், 'ஓ' வென்பது அவலத்தினாலும் 'ஐயோ' வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க. இவைகளெல்லாஞ் 'சுவை வகை' யானுண்டாகிய சொற்களாம்.
' அறிகுறி வகை' யானெழுந்த பகுதிகள் மிகச் சிறப்புடையனவாம். இவைகள் 'நாவின் சைகை' என்பதனடியாக முதலிற் பிறந்தன. இஃது அடிக்கடி, பல், உதடு முதலிய வாயின் பகுதிகளைச் சுட்டுதற்குரிய 'கைச்சைகை'களைக் கவனிக்குமாறு கூவுங் கூச்சலோடு தொடங்கும். வேண்டு மென்றெழாது அநுதாபத்தினா லுதவிசெய்ய வெழுந்த நாவின் சைகை இயற்கையாகவே கைச்சைகையைப் பின்பற்றிவரும். அதன்மேற் கைச்சைகை மிகையென்று சிறிது சிறிதாகக் கைவிடப்படும். உதாரணமாக, கவனிக்குமாறு கூவிய கூச்சல் 'ஆ' வென்ற உருவங்கொண்டதாக வைத்துக் கொள்வோம். அப்படியானாற் 'பல்'லைக் குறிக்கும் நாவின் சைகை 'அடா' என்ற உருவங்கொள்ளும். இவ்வாறே தன்னைக் கவனிக்குமாறு பிறரை விளித்த 'ஏ' என்றிருந்ததாயின் பல்லைக்குறிக்கும் நாவின் சைகை 'ஏட' வென்றிருக்கும். ஈண்டுக் கூறியதற்கிணங்கவே, தமிழ்மொழியின் கண்ணே, 'அடா' 'ஏட' என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன. "ஏட வென்பது தோழன் முன்னிலை" என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க.
வல்லாள னொருவன் எளியவனுக்கு உதவி செய்யப்புகுந்து சின்னாள் அவனைப் பாதுகாத்துப் பின்னர் அவன் மேற்கொண்ட தொழிலை நன்றாக நடத்தாமை கண்டு அவனைத் தள்ளிவிட்டுத் தான் அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தாற்போல, நாவின் சைகையும் கைச் சைகையி னுதவிக்காக வந்து அதனைச் சின்னாள் பாதுகாத்துப் பார்த்தும் அதுகருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால் அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. புகுந்து தான் நடாத்தினதிற் சொற்கள் பலவுண்டாயின.
சில தன்மை, முன்னிலைப் பகுதிகள் அறிகுறிவகையா லெழுந்திருக்கலா மென்றெண்ணுதற் கிடனுண்டு. அதுதானும் உச்சரிக்கச் சுலபமாகவும் எழுத்துக்களிற் பிரதானமாகவுமுள்ள 'ம', 'ப' என்ற எழுத்துக்களின் சம்பந்தமுடையதாம். இவ்விரண்டெழுத்துக்களும் குழந்தைகளான் முதன்முதல் உச்சரிக்கப் படுவனவாம். இவ்விரண்டும் குழந்தைகட்கு அருகிருந்து உதவி செய்யுந் தாய் தந்தையரைக் குறிப்பிக்குஞ்சொற்களாகிய 'அம்மா' 'அப்பா' என்றன பிறப்பதற்கு முதற் கருவியாய் நிற்பன. மேலும் மகாரம் பல பாஷைகளிலுந் தன்மைச் சொற்களை ஒருமையிற் குறித்தறக ணுபகாரப்படா நிற்ப, தமிழ்மொழியின் கண்ணே அவற்றைப் பனமையிற் குறித்தற்கணு பகாரப்படா நின்றது. 'மாம்' (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. 'யாம்' 'எம்மை' யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை. எவ்வாறாயினும் மகாரந் தன்மைக்கண் உபகாரப் படுகின்றதென்பது மலையிலக்கே. இனி இதனொடு தாயைக் குறிக்கும் 'அம்மா' என்ற சொல்லின் கண்ணும் மகாரம் உபகாரப்படுதலை உற்று நோக்கின் தாய் குழந்தைக்குத் தன்னவளாயினள். இதைக் கவனிக்குமிடத்துத் தந்தை சிறிது தன்னினின்றும் விலகினவனாக மதிக்கப்படுவதற்கு அறிகுறியாகக் பகார சப்தத்தினால் 'அப்பா'என்றழைக்கப் படுகின்றனன்.
தமிழப் பாஷையின்தோற்ற விஷயமாக, யாம் மேற்கூறிய போந்தன வனைத்தும் எவ்வாறு கருதப்படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சி யானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகள் உண்டாத லியலுமென்பது யாவரும் மறுக்க முடியாத்தோர் பாஷை நூலுண்மை. இவ்வுண்மையை யொட்டியே தமிழ்ப் பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர். "ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்" எனவும், "தழற்புரை நிழற்குவு டந்தமிழ்" எனவும், "வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற் கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற், குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்" எனவும், " இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்" எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க.
யாம் மேற்கூறிப் போந்தவாறு மக்களாக்கப் பொருளாய்விளைந்த தமிழ்ப்
பாஷையானது தமிழ்மக்கள் யாவருக்கும் ஒருங்கே விளங்குவதாயிற்று, என்றதோர் ஆசங்கை இடையிலெழுதல் இயல்பே. இது வெகு சுலபமாக விடுக்கப்படும். யாவருக்கும் விளங்கத்தக்க சைகைகள் இடைநின்று சொற்களை ஐயமுண்டான காலங்களின் விளக்கினமையின் தமிழ்ப்பாஷையின் சொற்பொரு ளுணர்ச்சி தமிழ் மக்கள் யாவருக்கும் உண்டாகித் தமக்குள்ளே யறிந்து கொண்டனர்.
இதுகாறும் தமிழ்மொழியின் தோற்றத்தைப்பற்றிப் பேசினோம். இனித்
தமிழ்மொழியின் தொன்மையைப் பற்றிக் கூறப்புகுவாம்.
இவ்வுலகத்தின் கண்ணே பேசப்படுவன ஏறக்குறைய தொள்ளாயிரம் மொழிகளாம். அவற்றுள்ளே நாலைந்துபாஷைகள் தாம் 'தொன்மொழிகள்'; என்னும் பெயர்க்குரியனவாய்க் கருதப்படுகின்றன. அந்நாலைந்துள்ளும், தமிழ் மொழியும் ஒன்றுகொல்? இதுவே யாம் இப்பொழுது ஆராய வேண்டுவது.
பரவை வழக்கற்று ஏட்டுவழக்காய்மட்டில் நிற்பனவே தொன்மொழிகள்; மற்று இக்காலத்திற் பரவை வழக்காய் விளங்குவன வெல்லாந் தொன் மழிகளாகாவென்பது சிலர் துணிபு. இகத்துணிபு தருக்கநூற் குற்றமே. பாஷைகள் பரவை வழக்கற்றுப் போதற்குக் காரணம் இலிபிக ளேற்படாமையும், பாஷை பேசுவோர் பல்வேறிடங்கட்குப் பிரிந்து செல்லலும், இடங்கட்குத் தக்கபடி புது இலிபிகள் வகுத்துக்கோடலும் பிறவுமாம். ஏட்டு வழக்குப் பாஷைப் பேச்சு வழக்குபாஷைக்கிணங்கி வாராவிடில் முன்னது பரவை வழக்கற்றுத் தன்னிலை வேறுபடாது ஒருநிலைப்பாடடைந்து நிற்கும். பின்னது விரிந்து கொண்டேபோய் முன்னதினின்று மிகவும் வேறுபட்டு அதன் வழிமொழியாகக் கருதப்படும். ஆகவேபேச்சு வழக்கோ டிணங்கி வராதன வெல்லாந் தொன்மொழிகளோ? அல்ல.
தமிழ் மொழியில், 'ட்,ண்,ர், ல்,ள், ழ்,ற், ன்,' என்ற எட்டு மெய்யெழுத்துக்களையுங் கொண்டு சொற்கள் தொடங்குகின்றில: அஃதாவது, இவ்வெட்டும் மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களாம். இவைகளேன் மொழிக்கு முதலில் வரவில்லை? இவ்வெட்டும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி மிகுதியா யிருத்தலின் அவ்வெட்டு மெய்களும் மொழிக்கு முதலில் வாராவாயின. இவ்வுண்மை கொண்டு, பண்டைக்காலத்தே, வழங்கிய மக்களுக்கு உறுப்புக்கள் உரமேறி அரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே முற்பட்டுத் தோற்ற முற்றெழுந்த மொழி தமிழேயா மென்று கூறி, அதன் தொன்மை மாட்சி நிறுத்தி விட்டேமென மகிழ்வாருமுளர்.
"பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள்! போய்க் காண்பீர்" என வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும் வியாத முனிவரும் 'மகாபாரதத்' தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும்பற்றிக் கூறுகின்றமையானும்,பாண்டியர் ஆண்டநாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க.
இற்றைக்குச் சற்றேறக் குறையப் பதினாயிரம் வருஷங்கட்கு முற்பட்ட பழமையான எழுத்துச் சாதனங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் கி.மு. எண்ணாயிர வருஷங்களுக்கு முன்னரே மக்களுக்குள் நாகரிகம் தொடங்கியிருக்க வேண்டும். இவ்வளவுகாலம் முன்னரென்பது வரையறுத்துரைக்க முடியாதாயினும் எழுத்து வழக்கு இதற்கும் முன்னரே யேற்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறாயின் பாஷைத் தோற்றத்தின் காலம் இத்துணையாயிரம் ஆண்டுகட்கு முன்னரென்பது யாவரான் வரையறுத்துக் கூறவியலுமோ? அறியேம். பாஷை முலம் நதிமூல ருஷி மூலங்கள் போலும்.!
இனித்தமிழ் நூல்களிற் பல இடைச்சங்கமிருந்த கபாடபுரங் கடல் கொள்ளப்பட்ட காலத்தில் அழிந்துபட்டனவெனக் கூறக் கண்டுனேம். அஃதன்றியும் தமிழில் மிகப்பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த 'சிலப்பதிகார'த்திற் காடுகாண் காதையில் ஆசிரியர் இளங்கோ வடிகள்
"வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்றார்; இனி, வேனிற்காதையில், "நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும்" என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் "அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும, நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்" என்று கூறினார். இன்னும் "புறநானூற்றிற்" பாண்டியன் பல்யாக
சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் "பஃறுளியாறு" வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப் பட்டுள்ளது. சின்னாண் முன்னர் வெளிப்பட்ட 'செங்கோன்றரைச் செலவு என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடி யார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ்தெங்கநாடு முதலிய நாடுகளைச் சார்ந்து 'பெருவள நாடு' முதலிய பிறநாடுகளும், 'மணிமலை' முதலிய சிலமலைகளும், 'முத்தூர்' முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், 'பெரு நூல்', 'இயனூல்' எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் கலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது,
"செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான்
துங்கள் றமிழ்ந்தாப் புலித்தொடரா -லங்கிசைத்தான்
சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி
யக்கரக்கோ நாமஞ்சு வாம்"
என்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றது.
இவையனைத்தும் உற்று நோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நeடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழ்நூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையனவாம். 'இந்துமகா சமுத்திரம்' இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி, 'மோரீசத்தீவு'க்கும் 'பம்பாய்' நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள 'கெர்கியூலன்' என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை'யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் மடகாசிகர்தீவு' முதற் 'சுமாத்திரா', 'ஜாவா' முதலியவற்றை யுள்ளடக்கிய சந்தாத்தீவுகள்' அளவும் விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.
இக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் 'இலெமுரியா' என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழாங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும், பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர். இது கேட்பதற்கு இனிதாகவும் விஞோதமாகவு மிருக்கின்றது. அதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க.
தோற்றமும் தொன்மையும் முற்றிற்று