கந்தவேள் காட்சி தருதல்

bookmark

அந் நிலையில், பெருமான் சூரனை நோக்கி, "கருமேகத்தின் இடையே தோன்றி மறையும் மின்னலைப் போல எம் கண்ணெதிரே எண்ணரிய உருவம் கொண்டாய் அவற்றையெல்லாம் அறிந்தோம். இனி நமது வடிவத்தை நீ காண்பாயாக" என்று திருவாய் மலர்ந்து கடலும் கடல் சூழ்ந்த உலகமும், புவனமும், அண்டமும், வானமும் பிறவும் தமது திருமேனியில் அமைந்தனவேயன்றி வேறில்லை என்னும்படி சிறந்ததோர் உருவம் கொண்டார். அனந்தகோடி சூரியர்கள் ஒருங்கே உதித்தாற் போன்று அவிர் ஒளி வீசிநின்ற அழகிய திருவுருவை நோக்கிய தேவரும் திடுக்கிட்டார். அவர்க்கு அபயம் அளித்தார், ஆறுமுக வள்ளல்.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதி வடிவத்தைக் கருமேகம் போன்ற சூரனும் கண்டு வியப்புற்று நின்றான். அப்போது மெய்ஞ்ஞானியரும் அறிய வொண்ணாத முருகப் பெருமான் அவனுக்குச் சற்றே மெய்யுணர் வளித்தார். அந்நிலையில், "என்னே! இஃதென்னே! கோலமா மயிலிற் குலவிய வேலனைப் பாலன் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன். இவன் பெருமையை அறிந்திலேனே! மாயவன் மலரவன் முதலிய தலைவர்க்கும், வானவர்க்கும் பிற உயிர்களுக்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தியன்றோ? விருப்பு வெறுப்பற்ற பரம் பொருளாகிய இறைவனே முருகன் என்று என்னிடம் தூது வந்த வீரவாகு கூறினான். அன்று அச் சொல்லின் உண்மையை உணர்ந்தேனில்லை; இவனே இறைவன் என்று இன்று அறிந்தேன். ஆயிரங் கோடி காமதேவருடைய அழகெல்லாம் திரண்டு ஒன் றாகி வந்தாலும் அறுமுகப் பெருமானது திருவடிவிற்கு இணை யாகாது என்றால், இவரது எல்லையற்ற அழகிற்கு உவமை கூற வல்லார் யார்? என் அகந்தை அகன்றது; மெய்யறிவு மனத்திற் புகுந்தது; வலத் தோளும் கண்ணும் துடித்தன; புவனங் களெல்லாம் புலனாகின்றன; தேவதேவனது திருவுருவம் காணப் பெற்றேன். இஃது என் தவப்பயன் அன்றோ? என் கால்கள் இவரைச் சுற்றி வலம் வரவேண்டும், கைகள் குவிந்து தொழவேண்டும்; தலை தாழ்ந்து வணங்கவேண்டும்; வாய் வழுத்த வேண்டும்; தீமை யெல்லாம் ஒழிந்து நான் அடிமையாக வாழ வேண்டும். இவ்வாறு செய்ய மனம் முந்துகின்றது; ஆனால் மானம் என்னும் ஒன்றுதான் தடுக்கின்றது. "தேவரை நான் சிறை செய்தது தவறு என்று சொன்னார் பலர்; எனினும், அச் செய்கையாலன்றோ மறைகளும் பிரமனும் மற்றுமுள்ள வானவரும் காணுதற்கரிய இறைவன் இங்கு வரப்பெற்றேன்? நான் செய்த செயல் நன்றாயிற்று" என்று பலவாறாகப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அந் நிலையில் முருகவேள் தமது பெருவடிவத்தை நீத்தார்; முன்போல் மயில்மீது ஏறிவந்தார்; சூரனுக்கு அளித்த மெய்யறிவையும் மாற்றினார்; அவனை முன்னிருந்த வண்ணம் ஆக்கினார்.

சூரன் இருளுருவம் கொள்ளுதல் 
மெய்யுணர்வு நீங்கியபொழுது சூரன் மனத்தில் சீற்றமும் பகைமையும் நிறைந்தன. "குன்றம் எறிந்த குமரனைப் பிறகு பார்த்துக்கொள்வேன். முன்னே இக் கடும் போரை மூட்டிய வானவரைச் சாடி முடித்துச் சற்றே சீற்றம் தீர்வேன்” என்றான், சூரன் அக்கருத்தை நிறைவேற்றுமாறு மீண்டும் ஒரு மாய மந்திரத்தை ஓதினான். மண்ணும் விண்ணும் காரிருள் செறிந்தது. அதனுள்ளே மறைந்து நின்றான் சூரியன். கதிரவனும் அவ் விருளைக் கண்டு பயத்து பதுங்கினான். அமர் செய்யக் கருதி அந்தரத்தில் எழுந்தான் அசுரர் கோமான். அதனைத் தம் அறிவாலும், குறிப்பாலும் தெரிந்த வானவூர் சிதறி ஓடினர்; காலனைக் கண்ட உயிர்போல் கலங்கினர். "அடியவர்க்கு இனிய ஆண்டவனே, ஒலம் மெய்ஞ்ஞானமாகி மிளிக்கின்ற முதல்வனே, ஒலம் முனிவர்தம் தலைவனே, ஒலம் கருதுதற்கரிய பெரியோய், ஒலம்! எல்லாம் படைத்த இறைவா, ஒலம்! கண்ணுதற்பெருமான் அருளிய கடவுளே, ஒலம்! தேவ தேவா, ஒலம்! பகைவரைத் தகர்க்கும் பரமனே, ஒலம்! வேற்படை எடுத்த விமலா, ஓலம்! பாவலர்க்கு எளியாய், ஒலம் பன்னிரு கரத்தாய், ஓலம்! மூவரும் ஆகி நின்ற முழு முதற் பொருளே, ஒலம்! ஒலம்! அடியேம் படும் பாட்டை நீ சிறிதும் அறிகிலை போலும் இன்னும் சற்றே காலம் தாழ்ப்பின், மாய இருளில் மறைந்து நின்று சூரன் உலகமெல்லாம் அழித்திடுவான். ஆதலால், இன்னே அவனுயிரைக் கவர்ந்து எம்மைக் காத்தருள்க" என்று வேண்டினான், மயில் வாகனமாக நின்ற இந்திரன்.