வேற்படையின் வெற்றி

bookmark

அப்படியே கிரவுஞ்ச மலையுடன் கலந்து, அளவிறந்த மாயா வடிவங்களைக் கொண்டான் தாரகன். எங்கும் நிறைந்து நின்றான். முருகப்பெருமான் இதனைக் கண்டு, அவனுயிரை அழிக்கத் திருவுளம் கொண்டு, தம் திருக்கையில் அமைந்த வேலாயுதத்தை நோக்கி, "தாரகன் என்னும் பெயருடைய அசுரனையும், சஞ்சலம் விளைக்கும் கிரவுஞ்ச மலையையும், ஒரு நொடிப் பொழுதி னுள்ளே பிளந்து, உயிருண்டு, புறத்தே போந்து, பூதர்களையும் நூறாயிரத்தொன்பது வீரரையும் மீட்டு இங்கு வருக” என்று கூறி விட்டார்.

அவ் வேல், ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் கனல் போல் எழுந்து, மலையோடு சேர்ந்து தாரகன் இயற்றிய மாயைகளையெல்லாம் அழித்து ஒழித்தது; மேலும், தாரகன் மார்பென்னும் பெரிய மலையைப் பிளந்து, கிரவுஞ்ச கிரியைத் தாக்கி ஊடுருவிச் சென்று வீரமும் புகழும் கொண்டாற்போலக் குருதியும் துகளும் கொண்டு மீண்டது. அங்ஙனம் மீண்ட வேல், மாய மலையில் மயங்கிக் கிடந்த வீரரை எழுப்பிவிட்டு, ஆகாய கங்கையிற் படிந்து, தூய வடிவத்துடன் முருகவேள் திருக்கரத்தில் முன்போல் அமர்ந்தது. அப்பொழுது மயக்கம் தீர்ந்த வீரர் அனைவரும் விரைந்து சென்று, முருகவேள் திருவடியை வணங்கித் துதித்து நின்றார்கள்.

வானவர் முருகனைப் போற்றுதல் 
"ஐயனே! கொடுமையே உடைய தாரகாசுரன் இன்றளவும் எம்மை வருத்தினான்; அதனால் துன்பம் உற்றோம். அன்னவனை மாயமலையோடு மாய்த்தருளினீர் எமது துயரம் தீர்த்த உமக்கு வழிபாடு செய்ய போற்றுதல் விரும்புகின்றோம். இம் மலையிடத்தே எழுந்தருளி யிருத்தல் வேண்டும்" என்று வேண்டி நின்றனர், திருமால் முதலிய தேவர்கள்.

தாரகன் மனைவி சவுரி புலம்பல் 
முருகவேள் அதற்கு இசைந்தருள, பிரமன் ஆதிய தேவரும் முனிவரும் அருகே நெருங்கி ஆறெழுத்தமைந்த அரிய மந்திரத்தை ஓதித் திருமஞ்சனம் ஆட்டினர். பின்பு, பெருமானை அரியாசனத்தில் எழுந்தருளச் செய்து, நாமாவளி சொல்லி, நல்ல மலர்களால் அருச்சித்து, கற்பக மாலையும் சூட்டினர். இவ்வாறு வணங்கி ஏத்தும் பொழுது, தாரகன் மனைவியாகிய சவுரி, தாரை தாரை யாகக் கண்ணீர் வடித்துப் புலம்பினாள்; "ஐயோ! நாதா எங்கே சென்றாய்? ஆழிப்படையை உனக்கு அணியாகத் தந்த திருமாலும், இந்திரனும் வானவரும், கூற்றுவனும், பிறரும் இன்று கவலை தீர்ந்தாரோ? நறுஞ்சாந்தம் பூசிய பெருந்தோள் அசுரர் புடைசூழ, நறுமணம் கமழும் அரியாசனத்தில் வீற்றிருந்த ஐயனே! சிந்தை வருந்திச் செருக்களத்தில் இறந்தாயே! இதுவும் ஒரு காலமோ? மழுவேந்திய பெருமான் அளித்த வரத்தின் திறத்தையே நினைத்தாய்! மாற்றார் செய்த சூழ்ச்சியைச் சிறிதும் மனத்திற் கொள்ளாது மடிந்தனையே! ஏழையேன் உன்னை இனி என்று காண்பேன்" என்று வருந்தினாள்,

மைந்தன் துயரம் 
பின்பு, தாரகன் மைந்தனாகிய அசுரேந்திரன், இறந்து கிடந்த தந்தையைக் கண்டான்; பெருமூச்செறிந்தான்; கலங்கி அழுதான்; கரங்களை உதறினான்; அளவிறந்த சோகத்தில் அழுங்கினான்; நெருப்பை உண்டவன் போலத் துயர் உற்று நிலத்தில் விழுந்தான். மயங்கினான்; தெளிந் தான்; தந்தை இறந்த் செய்தியைச் சூரபதுமனிடம் சொல்லுமாறு மகேந்திர நகர்க்கு விரைந்து சென்றான். மனம் தளர்ந்து, இயற்கையான ஒளி இழந்து, உடல் நலிந்து, வறியவன்போல் விரைந்து போந்த மைந்தனை அங்குள்ள அசுரர் கண்டனர். "இவன் வஞ்சமும் கொலையும் செய்யமாட்டான்;அதனால், தந்தையாகிய தாரகன் வெஞ்சினம் கொண்டு இவனை வெளியேற்றினான் போலும்!” என்பார்,சிலர். "தஞ்சமாகவுள்ள தாரகன் கொடுமையைக் கண்டு அஞ்சித் தானாகவே அவனை நீத்து இங்கு வந்தடைந்தானோ” என்பார், சிலர். ”முன்பு நம் அரசன் தங்கையின் கையை ஒருவன் வாளால் அறுத்தலால், வானவரையும் சயந்தனையும் அவன் சிறையில் அடைத்தான். இன்று இவனும் துன்புற்று வந்தடைந்தான்; தேவர்க்கு மேலும் துயர் விளைப்பான் போலும்" என்பார், சிலர்.

சூரன் சீற்றம் உறுதல் 
அப்பொழுது அசுரேந்திரன், மன்னர் மன்னனாகிய சூரபன்மனை அடைந்து, அவன் அடிகளில் விழுந்து கைகளால் பாதங்களைப் பற்றி, "ஐயகோ" என்று அழுது கதறினான். அது கண்ட சூரன், "குழந்தாய்! வருந்தாதே! என்ன நிகழ்ந்தது சொல்” என்றான். "என் ஐயனே! இந்திரன் செய்த தந்திரத்தால் சிவகுமாரனாகிய கந்தவேள் வலிய பூதப் படைகளுடன் வந்து, உன் தம்பியையும் கிரவுஞ்ச மலையையும் வேற் படையால் அழித்து மேலும் வந்து கொண்டிருக்கின்றான்” என்று புலம்பினான், அசுரேந்திரன் நிலையில் சூரன் சீற்றமுற்றான். நெரிந்த புருவங்கள் நெற்றிக்கு மேலே சென்றன; பற்கள் உதட்டை மடித்துக் கடித்தன; உதடும் வாயும் நெருங்கித் துடித்தன. அண்ட கூடத்தை இடிக்க நினைத்தது அவன் உள்ளம்.

அமைச்சன் அறிவுரை கூறுதல் 
"என் தம்பியின் உயிரைக் கவர்ந்த கந்தன் வலிமையை அடக்கி வெற்றி பெற்று வரல் வேண்டும்; நொடிப் பொழுதில் வருக தேர்; தருக படைக்கலம்” எனப் பணித்தான், சூரன். அச் செயல் கண்ட அமோகன் என்னும் அமைச்சன், அரசன் அடி பணிந்து "அடியேன் ஒன்று கூறுகிறேன்; அதனைக் கேட்டருளல் வேண்டும்; கொடுஞ் சினம் கொள்ளலாகாது” என வேண்டிக் கொண்டு, சொல்லத் தொடங்கினான்.:

"பகைவர்மேற் படையெடுத்துச் செல்லும் அரசர், மாற்றார் வலிமையை முற்றும் அறிதல் வேண்டும். அவர் வரத்தில் வலியரோ? மாயத் திறத்தில் வலியரோ? கை வரிச்ையில் வலியரோ? படைக்கலத்தில் வலியரோ? கல்வியிலும் மனத் திட்பத்திலும் வலியரோ? அறிவொடு சேர்ந்த ஊக்கத்தில் வலியரோ? இவற்றையெல்லாம். ஆராய்தல் வேண்டுமன்றோ? நீ பகைவர் வன்மையை உணர்ந்தா யில்லை; அவர் சேனையின் ஆற்றலை அறிந்தா யில்லை; நின் அரும்பெருந் தலைமை நிலையையும் நினைந்தா யில்லை; நின் நலம் பேணும் அமைச்சரோடும் ஆக வேண்டியவற்றை ஆரர்ய்ந்தா யில்லை. வெறுமையாய்ச் சீற்றம் கொண்டு செல்லுதல் வீரத்தின்பாற் படுமோ? கலகல என்று ஒலிக்கும் தண்டையணிந்த சிறுவன், வேழத்தலையுடைய தாரகவீரனைக் கொன்றது. வியப்பன்று. வலியவரும் ஒரு காலத்தில் வன்மையை இழப்பர்; மிக்க மெலியவரும் ஒரு காலத்தில் வீரராக விளங்குவர். ஒப்பற்ற அரசே! அச் சிறுவன்மீது நீ போர் புரியக் கருதிச் செல்லுதல் புகழன்று. அவனுடைய சிறப்பையும் திறத்தையும் பிறவற்றையும் உணர்ந்து, பின்னர் அவனினும் சிறந்த வீரரைப் படையோடு போக்கி வெற்றி பெறுவாயாக" என்று கூறினான், அமைச்சன்.

முருகன் திறன் அறியச் சூரன் ஒற்றரை ஏவுதல் 
அப்போது சூரன் விரும்பியவாறு ஒற்றர்கள் வந்து அடிபணிந்தர்கள். அவர்களை நோக்கி, "நீர் விரைந்து சென்று நிலவுலகத்தில் வந்துள்ள ஒற்றரை ஏவுதல் கந்தன தனமையும, பூதப்படையின் பெருக்கமும்,பிறவும் அறிந்து வருக” என்று ஏவினான், சூரன்.

முருகவேள் சிவபதிகளை வணங்குதல் 
மேகங்கள் உலாவும் வானத்தில் தோன்றிய சூரியன், தன் கதிர்களாகிய கரங்குவித்து வணங்குவான் போலச் செல்ல, முருகவேள் போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டுப் பெருஞ்சேனையும் தேவரும் சூழப் போயினார்; பாம்பணையிற் பள்ளிகொண்டு கண்வளரும் திருமாலுக்கும், மங்கை பங்கனாகிய சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை மானிடர் அறியும் வண்ணம் வியாச மாமுனிவர் தம் எடுத்த கையினால் உணர்த்தியருளிய காசிப்பதியைக் கண்டார்; உலகத்தைப் பெருங்கடல் மூடும் பிரளய காலத்திலும் அழிவின்றித் திருமால் பிரமன் முதலிய தேவருக்கு இருப்பிடமாய், திருக்கயிலாய மலையை ஒத்ததாய், எம்பெருமான் மாமர்த்தடியில் வீற்றிருந்தருளும் பெருமையுடையதாய் உள்ள பம்பை நதி சூழ்ந்த காஞ்சி மாநகரைக் கண்டார்: "எனக்கு நிகராவார் எவரும் இலர் என்று தனித்தனி திருமாலும் பிரமனும் எண்ணிப் பிணக்குற்றபோது அவ் விருவருக்கும் நடுவே, அடியும் முடியும் காணலாகாத அனற் பிழம்பாய்த் தோன்றி, நினைப்பவர்க்கெல்லாம் விரைவில் முத்தியளிக்கும் தன்மையில் நிகர் அற்றதாய் விளங்கும் திரு அண்ணாமலையைத் தரிசித்தார்; நடுநாட்டு மன்னனாகிய நரசிங்க முனையரையன் நடத்திய திருமணத்தைத் தடுத்து, மணமகனாய சுந்தரமூர்த்தியை ஆட்கொள்ளும் வண்ணம் ஒரு முதிய வேதியனாக வந்து, அடிமைச் சீட்டைக் காட்டி, வழக்கில் வென்று அருளிய சிவபெருமான் அமர்ந்த பெண்ணையாறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரையும் கண்டார்; இனிய செழுஞ்சோலை சூழ்ந்த தில்லையம்பதியிலே யுள்ள பொன்னம்பலத்தில் சிவகாமி யம்மையார் வணங்க, விராட்புருடனது இதய கமலத்தில், அண்டரும் மதித்தற்கரிய முறையில் ஈசன் ஆடும் அற்புதத் தனிக் கூத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து களிப்புற்று வணங்கிச் சென்றார்; அகத்திய முனிவரது கமண்டலத்தினின்று நீங்கிப் பூமியிலே பாய்ந்து, பல கிளைகளாய்ப் பிரிந்து, பற்பல பெயர்களைத் தாங்கி, சோழ நாட்டிற் கன்னலும் செந்நெல்லும் விளைக்கும் காவிரியாற்றின் வடகரையில் உள்ள மண்ணி நதியின் மருங்கே வந்தார், முருகப்பெருமான்.

இந்திரன் அடைந்த இன்பமும் துன்பமும் 
கார்மேகங்கள் திரண்டு செல்ல, ஆங்கமைந்த மதில் சூழ்ந்த மாநகரின் வளத்தினை நோக்கிய முருகவேள் "இது அதை நாம் இருத்தற்கேற்ற நல்ல இடம்" என்றார். அம்மொழி கேட்ட வானவர்,அழகெலாம் ஒருங்கே வாய்ந்த, அந் நகர்க்குச் சேய்ஞலூர் என்று பெயர் இட்டார்கள். கொடிய திறம் படைத்த தாரகன் மாய மாமலையொடு மாய்ந்து ஒழிந்தமையால் இந்திரன் துன்பம் நீங்கி இன்பம் நிறைந்த மனத்தினனாய் இருந்தான்.

மேனி வருந்தாமல் அமிர்தத்தைப் பெற்று அருந்தியவ்ன் போல், இந்திரன் அங்கமெல்லாம் குளிர்ந்திருந்தபோது, சீகாழியிலுள்ள வன்த்தைக் காக்கும் தெய்வம் அவனிடம் போந்து வணங்கிற்று. சூரன் கொடுமைக்கு அஞ்சி விண்ணுலகம் விட்டு வந்த நாளில் சீகாழி வனத்தில் தன்னிடம் ஒப்புவித்த இந்திரன் நகைகளையும் இந்திராணியின் நகைகளையும் முடிப்பாகக் கொண்டுவந்து முன்னே வைத்து, "ஐயனே! சிவபெருமான் வீற்றிருந்தருளும் சீகாழிப் பதியில் இந்திராணியுடன் போந்து நீர் தவம்செய்த நாளில், என்னிடம் கொடுத்துவைத்த நகைகள் இவை; பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று அத் தெய்வம் கூறிற்று.

இந்திராணியின் நகைகளைக் கண்டபோது, நெய்யிட்ட நெருப்புப் போல இந்திரன் மனத்தில் காதல் நோய் மேலிட்டது. அந் நகையினைப் பார்த்து அவன் இரங்கினான்; ஏங்கினான்; விம்மினான்;வெதும்பினான்; பெருமூச்சு விட்டான்; மயக்க முற்றான். "காமமே தீமையெல்லாம் தரும்; சிறப்பையும் செல்வத்தையும், க்ெடுக்கும்; நல்லறிவைத் தொலைக்கும்; நன்னெறியை விலக்கி நரகத்திற் சேர்க்கும்; ஆதலால், அதனினும் பெரும்பகை வேறுண்டோ?” என்று எண்ணி அவ்வுணர்ச்சியைத் தவிர்த்தற்காக முருகவேள் முன்னே சென்றான், இந்திரன்.