கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை

குயில் சொல்லுகிறது:-
"கேளாய் ரஸிக மாமா, கங்காதீரத்தில் ராமநகரம் என்ற ஊரில் ஒரு வண்ணான் வீட்டிலே `பக்திவிஸ்தாரன்` என்றொரு கழுதை இருந்தது. தாய் சொன்ன வார்த்தையும் தட்டாது. யார் சொன்ன வார்த்தையும் தட்டாது. சிறு பிள்ளைகள் கல்லெறிந்தால் கனைத்துக் கொண்டு ஓட வேண்டாமோ? அதுகூடச் செய்யாது பொறுமையே அவதாரம் செய்தாற்போன்ற கழுதை.
இந்தக் கழுதை ஒருநாள் நதிக்கரையிலே புல் மேய்ந்து கொண்டிருக்கையிலே பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மேல் இரண்டு காக்கைகள் பின் வருமாறு சம்பாஷணை செய்து கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளையெல்லாம் கழுதை கவனத்துடன் கேட்டது.
ஒரு காகம் சொல்லுகிறது:- "பிரயாகையில், கங்கையும், யமுனையும் வந்து சேரும் இடத்தில் ஒருவன் போய் விழுந்து பிராணனை விடும்போது அடுத்த ஜன்மத்தில் என்ன பிறவி வேண்டுமென்று நினைத்துக் கொள்ளுகிறானோ, அதே பிறவி அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். இந்த விஷயம் உனக்கு இதுவரை கேள்வியுண்டா?"
இதற்கு இரண்டாங் காகம்:- "உனக்கு யார் சொன்னார்கள்?" என்று கேட்டது..
முதற் காகம்: "இன்னார் சொன்னார்களென்பதை உன்னிடம் சொல்லக்கூடாது. அது ரகஸ்யம். ஆனால் உண்மைதான், எனக்கு நிச்சயமாகத் தெரியும்."
இரண்டாங் காகம்: "உன்னிடம் சொல்லியது யார்?" என்று மறுபடியும் வற்புறுத்திக் கேட்டது.
முதற் காகம்: "அட நம்பிக்கையில்லாத ஜந்துவே! உனக்கு நல்ல கதி ஒரு நாளும் ஏற்படாது! யார் சொன்னதென்றா கேட்கிறாய்? என்னுடைய குரு சொன்னார். அவரைப் போன்ற ஞானி பிரம்ம லோகத்திலே கூடக் கிடையாது. ஒரு காலத்தில் பிரமதேவனுக்குப் படைப்புத் தொழில் சம்பந்தமாக ஒரு சந்தேகமேற்பட்டது. உடனே பிரம்மா நாரதரை அனுப்பி என் குருவை அழைத்து வரச் சொல்லித் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார்."
இந்த வார்த்தையைக் கேட்டவுடனே இரண்டாங் காகம் கலகலவென்று சிரித்து, அங்கிருந்து பறந்தோடிப் போய்விட்டது. சம்பாஷணை முழுதையும் மிகுந்த சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழுதை உடனே அவ்விடத்திலிருந்து புறப்பட்டு, இராப்பகலாக நடந்து "திரிவேணி சங்கமம்" (அதாவது, பிரயாகையில் கங்கையும் யமுனையும் கூடுமிடம்) வந்து சேர்ந்தது.
அந்த இடத்திலே போய்க் கழுதை பின்வருமாறு நினைத்துக் கொண்டு முழுகிப் பிராணனை விட்டது: "இந்த வடதேசத்திலே எனக்கு சந்தோஷமில்லை. அடுத்த ஜன்மம் தென்னாட்டிலே பிறக்க வேண்டும். ஒரு விதமான குடும்பத் தொல்லையு-மில்லாமல், எல்லா இடங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சாரம் செய்துகொண்டு, எல்லா ஜனங்களும் இனாமாகப் போடும் போஜனத்தைத் தின்றுகொண்டு, சந்தோஷத்துடன் வாழும் ஒரு மனித ஸந்நியாஸியாகப் பிறக்க வேண்டும். ஆனால் இந்தக் கழுதைப் புத்தி மாறாதபடி இருக்க வேண்டும். வெளிக்கு ஸந்நியாஸி போலிருந்து எல்லாரும் உபசாரங்கள் செய்தபோதிலும், என் மனதிற்குள்ளே `நாம் கழுதை` யென்ற ஞாபகம் நிலைபெற்றிருக்க வேண்டும்."
இவ்விதமான தியானத்துடன் இறந்துபோன கழுதை மறு ஜன்மத்திலே தென்னாட்டிலே ஒரு ஊரில் ஒரு நல்ல குடும்பத்திலே ஆண் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தது. தாய் தந்தையர் இந்தப் பிள்ளைக்கு "முத்துசாமி" என்று பெயர் வைத்தார்கள். முத்துசாமி மனத்திலே தான் கழுதையென்ற ஞாபகம் பரிபூர்ணமாக இருந்தது.
பூர்வ ஜன்மத்தைப்பற்றி வேறு யாதொரு நினைவுமில்லை ஆனாலும், தான் மற்ற மனிதர்களைப் போலில்லையென்பதும், உள்ளுக்குள்ளே கழுதையென்பதும் அவன் சித்தத்தைவிட்டு நீங்கவில்லை.
பதினாறு வயதாகு முன்பாகவே இவன் ஸந்நியாஸியாகி காவி வஸ்திரம் தரித்துக்கொண்டு ஊரூராகப் பிச்சை வாங்கியுண்ணும் துறையிலே இறங்கிவிட்டான். முத்துசாமி என்ற பெயரைத் துறந்து கர்த்தப ஸ்வாமிகள் என்று பெயர் வைத்துக் கொண்டான். கர்த்தபமென்றால் ஸம்ஸ்க்ருத பாஷையில் கழுதைக்குப் பெயர்.
இவனுக்குத் தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டு பாஷையும் தெரியும். வயிரவர் உபாஸனையுண்டு. உலகத்திலுள்ள பாஷைகளெல்லாம் ஸம்ஸ்க்கிருதத்திலிருந்து வந்ததாகவும், அது தமிழிலிருந்து முளைத்ததாகவும் ருஜூப்படுத்தி ஒரு புஸ்தக மெழுதினான். இப்போது பரத கண்டத்திலே நாலாயிரம் ஜாதிகளாகக் குறைந்து போய்விட்டது நியாயமில்லை யென்றும், ஆதியிலே நாற்பதினாயிரம் ஜாதிப் பிரிவுகள் இருந்தன வென்றும், அந்த ஏற்பாட்டை மறுபடி ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும், ருஜூப்படுத்தி மற்றொரு நூல் செய்யுளாக எழுதினான்.
நிகண்டைப் பார்த்து அதிலுள்ள தெய்வப் பெயர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, இவையெல்லாம் தன்னுடைய இஷ்ட தேவதையாகிய வயிரவ மூர்த்தியின் திரு நாமங்களென்று சொல்லி ஒரு நாமாவளி ஏற்படுத்தினான்.
பூணூல் போடும்வரை, பிராமணப் பிள்ளை சூத்திரனாகவேயிருப்பதால், அவன் பார்க்க மற்ற பந்துக்கள் ஆகாரம் பண்ணுவது கொடிய அநாசாரமென்று ஒரு கக்ஷி கொண்டு வந்தான். பூணூல் போடாத பிராமணக் குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்படி நேரிட்டால், பின்பு ஸ்நானஞ் செய்யாமல் வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவள் ரௌரவாதி நரகங்களுக்குப் போவதுடன், அந்தக் குடும்ப முழுமைக்கும் அதோ கதி நேரிடுமென்று ஸ்தாபனம் செய்தான்.
இவனுக்கு வேண்டிய மட்டும் சிஷ்யர்கள் சேர்ந்து விட்டார்கள். பணமும் சேர்ந்தது. ஒரு மடம் கட்டினான். "நாற்பதினாயிர-ஜாதிபேத-பூர்வ திராவிட-வயிரவ-கர்த்தப-பிராமண-சிசு- பஹிஷ்கார-மஹா-மடம்" என்று அந்த மடத்துக்குப் பெயர் வைத்தான். இந்த மடத்துக்கு ரோஜாப் பூ என்ற பாம்புப் பெண் வந்து சேர்ந்தாள்.