கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

bookmark

தென்னாட்டிலே சாலிவாடி புரத்தில் கர்த்தப ஸ்வாமி மடங்கட்டித் தனது சீடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் அங்கே ரோஜா என்ற பாம்புப் பெண் வந்தாள். எலுமிச்சம் பழத்தைப் போலே நிறம்; மானைப்போலே விழி; பூர்ண சந்திரன்போலே முகம்; உடம்பிலே லாவகமும், கட்டும், பெண் புலியைப் போலே.

ஒரு நாள் மாலை நேரம்; சாமியார் பகற் சோறு தின்று, அந்த சிரமத்தினால் நாலைந்து மணி நேரம் தூங்கி விழித்த பிறகு, அந்த ஆயாஸம் தீரும்பொருட்டு நாலைந்து தோசைகளைத் தின்று, அரைப்படி பாலைக் குடித்துவிட்டு, வாயிலே வாஸனைப் பாக்குப் போட்டு மென்று கொண்டு இரண்டு சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். 

சாமியார் சொல்லுகிறார்:-

"கேளீர், சீடரே,
`ஜன்மநா ஜாயதே சூத்ர;
கர்மணா ஜாயதே த்விஜ;"

பிறக்கும்போது சூத்திரன்; பூணூல் போட்ட பிறகு தான் பிராமணன். இந்த விதிக்கு விலக்கே கிடையாது. உபநயனம் செய்த பிறகுதான் பிராமணப் பிள்ளைக்குப் பிராமணத்துவம் உண்டாகிறது. இதில் சந்தேகமில்லை. உபநயனம் செய்யும்வரை அவனுக்கு எச்சில், தீண்டல் ஒன்றுமேயில்லை. சண்டாளனைப் போல் வளருகிறான். அப்படிப்பட்ட குழந்தையை அவனுடைய தாயார் தீண்டி விட்டுப் பிறகு ஸ்நானம் செய்யாமல், மடைப் பள்ளியைத் தொட்டுச் சமையல் செய்தால், அந்த அன்னம் ஸ்வாமி நைவேத்தியத்துக்கு உதவாது. அவ்விதமான அன்னத்தை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வோர் குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வது போலே, பூஜை பண்ணப் போய்ப் பாவத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்." என்றிவ்வாறு, பல நியாயங்களைக் காட்டிச் சாமியார் தான் எடுத்த கக்ஷியை ஸ்தாபனம் செய்து கொண்டிருந்தார். 

சீடர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் தலையை அசைத்தசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தத் தருணத்திலே பாம்புப் பெண் வந்து சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணினாள். 

"உட்காரம்மா" என்று சாமியார் மெதுவான குரலிலே சொன்னார். உட்கார்ந்தாள். 

"நீ யார்?" என்று சாமியார் கேட்டார். 

பாம்புப் பெண் சொல்லுகிறாள்: "தாமரைப் பூ சேற்றிலே பிறக்கிறது. வண்டு காட்டிலே பிறக்கிறது. தாமரையைத் தேடி வண்டு வருகிறது. நான் சிங்கள தேசத்து ராஜன் மகள். பரத கண்டத்திலே, பற்பல இடங்களில் யாத்திரை செய்து கொண்டு, இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். அம்மன் சன்னிதித் தெருவிலே இறங்கியிருக்கிறேன். இந்த ஊரில் தாங்கள் பெரிய பக்திமானென்றும், யோகி யென்றும், ஞானி யென்றும் கேள்விப்பட்டேன். தங்களிடம் வந்து ஆத்மா கடைத்தேறும் படியான மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டு போகலாமென்ற கருத்துடன் வந்தேன்" என்றாள். 

சாமியாருக்கு உச்சந் தலையிலே பூமாரி பொழிந்தது போல், உடம்பெல்லாம் புளகமாய்விட்டது. சிங்கள தேசத்து ராஜன் மகள் சீடப் பெண்ணாக வந்தால் யாருக்குத்தான் ஆனந்தமேற்படாது?

"இப்போதே மந்திரோபதேசம் பண்ணட்டுமா?" என்று சாமியார் கேட்டார். அவசரம் வாரிக் கொண்டு போகிறது அவருக்கு!

அதற்கு ரோஜா சொல்லுகிறாள்; "நல்ல நாள், நல்ல லக்னம் பார்த்துச் செய்ய 
வேண்டும். மேலும், குருவுக்குப் பாதகாணிக்கை வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; நாள் பார்த்துச் சொல்லுங்கள்" என்றாள். 

சாமியாருடைய சந்தோஷம் கரை கடந்து விட்டது. சாமியார் சோதிடம் பார்க்கிறார்:-

"இன்றைக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக் கிழமை. நாளைக்குத் திங்கட்கிழமை, ஸோமவாரம், நல்ல நாள். காலையிலே ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரைக்கும் ராகுகாலம்; அது முடிந்தவுடனே நல்ல லக்னம் வருகிறது. செவ்வாய் மிதுன ராசியிலே பிரவேசிக்கிறான். அவனைக் குரு பார்க்கிறான். அப்போது மந்திரம் கூறுவதற்குப் பொருத்தமான வேளை. `சுபயோக-சுபகரண-ஏவங்குண-விசேஷண-விசிஷ்டாயாம்` என்று சாஸ்திரம் முறையிடுகிறது. நம்முடைய மந்திரமோ வைரவ மந்திரம். எல்லாவிதமான தேவநாமங்களும் வைரவ நாமத்துக்குள் அடங்குமென்பதற்குச் சூடாமணி நிகண்டிலே தக்க ஆதாரமிருக்கிறது. `முத்தனே, குமாரன்` பிள்ளை என்று நிகண்டுக்காரர் சொல்லுகிறார். இந்த மந்திரோபதேசம் பெற்றவருக்கு இந்த ஜன்மத்திலே முக்தி" என்று சாமியார் சொல்லி நிறுத்தினார். 

ரோஜா ஒரு புன்சிரிப்புக் காட்டினாள். சாமியாருடைய ஆனந்தம் ஏறக்குறைய ஜன்னி நிலையிலே வந்து நின்றது. 

சாமியார் பின்னும் சொல்லுகிறார்: "கேளாய், சிங்கள தேசத்து ராஜகுமாரியே; உன் பெயரென்ன? ரோஜாவா? ஆ ஹா ஹா! குலத்துக்கும் ரூபத்துக்கும் பொருத்தமான பெயர். கேளாய், ரோஜாவே, ஜன்மங்கள் கோடானு கோடி.

`புல்லாகிப் பூடாய்ப் புழுவாய், மரமாகிப் 
பல்விருக்க மாகிப் பறவையாய் பாம்பாகிக் 
கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் 
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பொருமான்`

என்று திருவாசகம் சொல்லுகிறது."

மேற்படி பாட்டைச் சாமியார் தனது பெயருக்கும் இயல்புக்கும் பொருந்திய குரலிலே பாடிக் காட்டினார். 

இந்தப் பாட்டிலே `பாம்பு` என்ற சொல் வந்தது. இருந்தாலும், ரோஜாவுக்குப் பயமுண்டாகவில்லை. இவன் முழுமூட னென்பது அவளுக்கு ஆரம்ப முதலாகவே தெரிந்து விட்டது. `என்றாலும் குற்றமில்லை. நாம் இவனை விடக் கூடாது. இதுவரை எத்தனையோ மனிதர் கை தவறிப் போய்விட்டார்கள்; இந்த மடத்தை நாம் இஷ்டப்படி ஆளலாம். இதுதான் சரியான புள்ளி` என்று பாம்புப்பெண் உறுதி செய்து கொண்டாள். 

சாமியார் சொல்லுகிறார் :- "கேளாய், ரோஜாப் பெண்ணே! சிங்களராஜன் கண்ணே! ஜன்மங்கள் எண்ணத்தொலையாது - ஆற்று மணலைப் போலே; வானத்திலுள்ள நக்ஷத்திரங்களைப் போலே. `புனரபி ஜனனம், புனரபி மரணம்` என்று சங்கராசாரியர் சொல்லுகிறார். இந்த ஜன்மங்களிலே மனித ஜன்மம் சிறந்தது. கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்திலே இத்தனை மேலான நரஜன்மத்தை எடுத்துத் தக்க குருவைத் தேடியடைந்து மோக்ஷத்துக்குப் போகும் உபாயத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் மறுபடி தாய் வயிற்றிலே பிறந்து பத்து மாதமிருந்து துயரப்பட்டு, மண்ணிலே பிறந்து பலவகைத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உனக்குத் தெரியாத விஷயமொன்று-மில்லை. நம்முடைய வைரவ மந்திரம் உனக்குக் கிடைக்கப் போகிறது. நீ பெரிய பாக்கியசாலி" என்றார். 

கதையைச் சுருக்கி விடுகிறேன்.

மறுநாள் காலையிலே பாம்புப் பெண் ஒரு நாகரத்தினத்தைக் கொண்டு வந்து சாமியார் 
காலிலே காணிக்கையாக வைத்து மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டாள். சில தினங்களிலே சாமியார் இவள் சொல்லியபடி யெல்லாம் கூத்தாடுகிற நிலைமைக்கு வந்துவிட்டார், என்று மதுகண்டிகை என்னும் குயில் ரஸிக சிரோமணியிடம் சொல்லிற்று.

குயில் சொல்லுகிறது:-

"கர்த்தப ஸ்வாமி யென்பவன் பாம்புப் பெண்ணுடைய வஞ்சனையில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு மிகுந்த பழியுண்டாயிற்று. ஊரார் அவனை மடத்திலிருந்து துரத்தினார்கள். பிறகு பாம்புப் பெண்ணும் அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின், அவ்விருவரும் உலக வாழ்க்கையிலே பலவகைத் துன்பங்களுக்கு இரையாகி முடிந்தனர்" என்றது. 

அப்போது, ரஸிகசிரோமணி, "இக் கதையை எதன் பொருட்டாகச் சொன்னாய்?" என்று கேட்டது.

குயில் - "உங்கள் ஜாதிக்கே பிறர் வார்த்தையை எளிதாக நம்பி மதிமோசம் போவது வழக்க மென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேன். ஆனால் நீ அப்படியில்லை. நீ கழுதையாக இருந்தாலும் புத்திசாலிதான்; நியாயத்தைச் சொன்னால் கட்டுப்படுகிறாய். தஞ்சாவூர் தட்டிக்கொண்டான் செட்டி கதையை மேலே சொல்லு" என்று வேண்டிற்று.