த.கொ. செட்டி கதை

bookmark

ரஸிகசிரோமணி:- "முன் கதையை எந்த இடத்தில் நிறுத்தினேன்? பளிச்சென்று ஞாபகம் வரவில்லை. உனக்கு ஞாபக மிருந்தால் அடியெடுத்துக் கொடு" என்று கேட்டது.

குயில் அடியெடுத்துக் கொடுக்கிறது:- "தட்டிக்கொண்டான் செட்டி தஞ்சாவூரிலே மதுரை மாணிக்கஞ் செட்டி என்பவனுடைய குமாஸ்தாவாக இருக்கையில் யஜமானுடைய பணத்தில் பெருந் தொகையை அழுத்திக் கொண்டு கள்ளக் கணக்கனுப்பினான். தனக்கு நேரிட்ட அநியாய நஷ்டத்திலிருந்து ஒருவாறு தப்பவேண்டுமென்று யோசனை செய்து மதுரை மாணிக்கஞ்செட்டி மானி அய்யன் என்ற பிராமணனை வரவழைத்துத் தஞ்சாவூருக்குப் போகும்படி சொல்லுகிறான். அந்த இடத்தில் உன் கதையை நிறுத்தினாய். மேலே நடத்து" என்றது. 

ரஸிகசிரோமணி பின்வருமாறு கதை சொல்லலாயிற்று.

அந்த மாணிக்கஞ் செட்டி சொல்லுகிறான்:- "ஐயரே, நீர் உடனே புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போக வேண்டும். அங்கே தட்டிக் கொண்டான் செட்டி வீடெங்கே என்று கேட்டால் யாவரும் சொல்லுவார்கள். நடுத்தெருவிலே கிழக்கோரத்து வீடு. அவனிடத்தில் எப்படியேனும் சிநேகம் செய்து கொண்டு, அவன் வீட்டில் நெருங்கிப் பழக வேண்டும். நமக்கு அவன் கள்ளக் கணக்கு அனுப்பியிருக்கிறான். என்றாலும், தனது சொந்த உபயோகத்தைக் கருதி நியாயமான கணக்கு அவசியம் எழுதி வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்குச் சுவடியை என்ன தந்திரம் பண்ணியேனும் இங்கே கொண்டு வந்து விடவேண்டும்." 

இதைக் கேட்டு மானி அய்யன்: "சரி; யோசிக்க வேண்டியதில்லை, நான் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறேன்" என்றான். பிறகு அவன் மாணிக்கஞ் செட்டியினிடம் தன் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தான், தலையை மொட்டையடித்தான். காவி வேஷ்டியும் கட்டிக் கொண்டான். செட்டியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

பிற்பகல் வேளை, செட்டி ஏதோ பக்ஷணம் தின்று தாக சாந்தி செய்துகொண்டு வெற்றிலை சுவைக்கிறான். "நாராயணா" "நாராயணா" என்ற உச்சாடணத்துடன் ஸந்நியாசி அவன் முன்னே போய் உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு ஸமாதியிலே ஆழ்ந்து விட்டான். பத்து நிமிஷம் கழிந்த பிறகு கண்ணைத் திறந்தான். அப்போது தட்டிக்கொண்டான் செட்டி அவன் காலிலே ஸாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமிகளுக்கு எவ்விடம்? அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளியதன் நோக்க மென்ன?" என்றான்.

ஸந்நியாசி சொல்லுகிறான்:- "வீடு நமக்குத் திருவாலங்காடு. விமலர் தந்த ஓடு நமக்குண்டு. வற்றாத பாத்திரம்" என்றார் பட்டினத்தடிகள். எல்லா வூரும் நம்முடைய வூர், எல்லா நாடும் நம்முடைய நாடு. இந்த உலகம் வெறும் நாம ரூபங்களைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த நாமரூபங்களெல்லாம் பொய். பூர்வாசிரமத்தில் மயிலாப்பூரிலே பிறந்து வளர்ந்தோம். குருகிருபையால் இந்த ஆசிரமம் கிடைத்தது. இந்த ஊருக்கு வந்ததில், ஸாதுக்களிடத்திலே தங்களுக்கு மிகவும் அபிமானமென்று கேள்விப்பட்டோம். வெறுமே தங்களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தோம். தங்களால் நமக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமேயில்லை. நம்மால் தங்களுக்கு ஏதேனும் அனுகூலம் கிடைக்க வேண்டுமென்ற கருத்திருந்தால் தெரிவிக்கலாம்" என்றான்.

செட்டி சிறிது நேரம் யோசித்த பிறகு:- "சாமிகளுக்கு ஆரூடம் வருமோ?" என்றான்.
ஸந்நியாசி புன்சிரிப்புடன்:- "ஏதோ சொற்பம் வரும்" என்றான்.

தட்டிக்கொண்டான் செட்டி சொல்லுகிறான்:- "நான் அவசரத்தைக் கருதி ஒரு காரியம் செய்தேன். கெட்ட காரியமென்று உறுதியாகச் சொல்ல முடியாது. கிளியை அடித்தால் பாவம், ஓநாயை அடித்தால் பாவமா? ஒருவாறு நான் செய்தது நல்ல காரியந்தான். அதிலிருந்து எனக்கேதேனும் தீங்கு வரக் கூடுமோ என்ற பயமுண்டாகிறது இந்த விஷயத்தில் பின்வரும் விளைவைச் சாமிகள் அரூடத்தினால் கண்டு சொல்ல வேண்டும்" என்று பணிவு காட்டினான்.

ஸந்நியாசி மறுபடி கண்ணை மூடிச் சில நிமிஷங்கள் வாயை முணுமுணுத்தான். 

பிறகு சொல்லுகிறான்:- "மாமாவுக்கு நஷ்டம் வருகிறது. த.கொ.வுக்கு லாபம் வருகிறது" என்றான்.

செட்டி இதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மதுரை மாணிக்கஞ் செட்டிக்கு நஷ்டமென்றும், தட்டிக்கொண்டான் செட்டிக்கு லாபமென்றும் ஆரூடம் சொல்வதாகத் தெரிந்து கொண்டு, இந்தச் சாமியாரை நான்றாகப் பரீக்ஷிக்க வேண்டுமென்ற கருத்துடன், "சாமிகளே, அவ்விடத்தில் உத்தரவு செய்வது எனக்கு நேரே அர்த்தமாகவில்லை. விளங்கச் சொல்லவேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு ஸந்நியாசி: "செட்டியாரே, ஆரூடம் நாம் சொல்வதில்லை. நமக்குப் பிரம்ம வித்தையொன்றுதான் தெரியும். மற்றதெல்லாம் வீண் வித்தை, நம்முடைய நாக்கில் இருந்து கொண்டு ஒரு யக்ஷிணி தேவதை இந்த ஆரூடம் சொல்லுகிறாள். அதன் குறிப்புப்பொருளை நாம் கவனிப்பதே கிடையாது. கவனித்தாலும், சில சமயங்களில் அர்த்தமாகும். சில சமயங்களில் அர்த்தமாகாது. கேட்பவர் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அர்த்தம் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்" என்றான்.

செட்டி தனது ரகஸ்யத்தைச் சாமியார்கூடத் தெரிந்து கொள்ளாதபடி, அவ்வளவு நயமாகத் தனக்கு அனுகூலம் சொல்லிய யக்ஷிணி தெய்வத்தினிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவனாய் ஆனந்த பரவசனாய் விட்டான். சாமியாரிடத்திலும் அவனுக்குச் சொல்ல முடியாத மதிப்புண்டாயிற்று. 

ஒரு தட்டு நிறைய பலவிதமான பழங்களும், காய்ச்சின பாலும் கொண்டு வரும்படி 
செய்து சாமியார் முன்னாலே வைத்து, "திருவமுது செய்தருள வேண்டும்" என்றான்.

ஸந்நியாஸி ஒரு வாழைப்பழத்திலே பாதியைத் தின்று, அரைக் கிண்ணம் பாலைக் குடித்துவிட்டு `போதும்` என்று சொல்லிவிட்டான்.

அப்போது செட்டி ஸந்நியாசியை நோக்கி, "ஏதேனும், மடத்துக் கைங்கரியமானாலும், கோயில் திருப்பணியானாலும், சுவாமிகள் என்ன கட்டளையிட்டபோதிலும் என்னாலியன்ற பொருளுதவி செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.

சாமியார் தலையை அசைத்து, - "பிரம்மமே ஸத்தியம், ஜகத் மித்யை; மடமேது, கோயிலேது? பரமாத்மா கட்டை விரலளவாக ஹிருதயத்திலுள்ள குகையில் விளங்குகிறான், எல்லாம் நமக்குள்ளேதானிருக்கிறது. உம்மால் நமக்கு எவ்விதமான பொருளுதவியும் வேண்டியதில்லை" என்றான்.

இப்படி இருக்கையில், ஒரு வேலையாள் வந்து, "கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர் வந்திருக்கிறார். எஜமானைப் பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறார்" என்று செட்டியிடம் தெரிவித்தான்.

செட்டி சாமியாரை நோக்கி "வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

சந்நியாசி : "ஆக்ஷேபமென்ன?" என்றான்.

"வரச் சொல்லு" என்று செட்டி உத்தரவு கொடுத்தான்.

தட்டிக்கொண்டான் செட்டியும், ஆரூட ஸ்வாமிகளும் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயரும், மூன்று பேருமாக சம்பாஷிக்கலானார்கள்:-

க.கா.க: "ஸ்வாமிகளுக்கு எவ்விடம்?"

ஆ.ஸ். : "சந்நியாசிக்கு இடமேது. வீடேது?"

த.கொ.செ. : "ஞானத்தினுடைய கடல், உபாஸனையே திருவடிவம், பக்திக் கோயில். ஸ்வாமிகளுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றுந் தெரியும்."

க.கா.க: "இலக்கணத்தின் கருத்தே அது."

ஆ.ஸ்: "உண்மையான துறவி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்கலாகாது. ஒரு முறை புசித்த வீட்டில் மறுமுறை புசிக்கலாகாது. பிரம்மம் ஒருமை. உலகம் பன்மை."

த.கொ.செ. : "பிரம்மம் ஒருமை, பிரம்மங்கள் பன்மை என்று உத்தரவாக வேணும்."

ஆ.ஸ். ; "அது இலக்கணப்படி. நான் வேதாந்த அர்த்தம் சொல்லுகிறேன்."

த.கொ.செ: "சரிதான், சரிதான். மேலே உத்தரவாகட்டும்."
ஆ.ஸ். : "மழைநாளில் மாத்திரம் ஸந்நியாசி ஒரே இடத்தில் தங்கலாம். ஆகாசமே மேற்கூரை; பூமி கட்டில், மெத்தை. வெளியில் பனியெல்லாம் சந்தனம், பனிநீர். கவிராயரே கவனிக்கிறீர்களா?"

க.கா.க : "சன்னிதானத்தின் மீது ஒரு ஆசுகவி இயற்றுகிறேன், இயற்றி யாயிற்று, இதோ உரைக்கிறேன்."