கல்வெட்டுக்களும் சைவசமயமும்

bookmark

சைவத்தின் பழைமை 
சைவ சமயம் உலகப் பழைய சமயங்களுள் ஒன்று. அஃது இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்துக்கும் (ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு) முற்பட்ட பழைமை உடையது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.  இச்சமயத்தின் சிறப்பு வழிபாடு லிங்க வழிபாடாகும். இந்த லிங்க வழிபாடு ஆரியர் வருகைக்கு முற்பட்டதாகும். இதனை முதலில் வெறுத்த ஆரியர், பின்பு கைக்கொண்டனர். மாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் சிவன் மகாதேவனாக்கப்பட்டான். இதற்குக் காரணம் ஆரியர்க்கு முற்பட்ட இந்திய மக்களுள் மிகப் பலர் லிங்க வழிபாட்டை மேற் கொண்டிருந்ததேயாகும்? 
---------

மிகப்பழைய லிங்கங்கள் 
கஜினி முகம்மதுவால் அழிக்கப்பட்ட சோமநாதபுரத்து லிங்கம், அல்டாமஷ் என்பவரால் அழிக்கப்பட்ட உச்சயினியில் இருந்த மகா காள லிக்கம். உச்சயினியில் உள்ள அமரேசுவர லிங்கம், ஸ்ரீசைல லிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்கார நாதலிங்கம், வங்கத்திலுள்ள வைத்யநாதலிங்கம். நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவரலிங்கம், கௌத மேசலிங்கம், காசி விசுவேசுவரலிங்கம், திருக் கேதாரலிங்கம், தச்சினியிலுள்ள பீமசங்கரலிங்கம், இராமேசுவர லிங்கம் என்னும் பன்னிரண்டும் மிக்க பழைமை வாய்ந்தவை என்று நூல்கள் கூறும். திருப்பதியை அடுத்துள்ள குடிமல்லம், களத்தூர், குடிமீயான்மலை இவற்றில் உள்ள லிங்கங்கள் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையை உடையவை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

குப்தர் காலத்தில் சைவம் வட இந்தியாவில் நன்கு வளர்ச்சி பெற்றது. கி.பி.6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரர் என்ற வானநூல் வல்லார் லிங்கங்களை அமைக்கும் முறை பற்றி மிக நுட்பமாக எழுதியுள்ளார். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருமூலர் லிங்கங்கள் அமைப்பது பற்றித் தமது திருமந்திரத்தில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

கோவில்கள்
கி.பி.7-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அப்பர் சம்பந்தர் பாடல்களை நோக்க, தமிழகத்தில் வைப் புத்தலங்கள் உட்பட ஏறத்தாழ 500 சிவன் கோவில்கள் இருந்தன என்று கூறலாம். அவையனைத்தும் அழியத்தக்க செங்கல், மண், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை. ஆதலால் 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட மகேந்திரவர்மன் முதலிய பல்லவர்கள் கற்கோவில்களை அமைத்தனர்; மலைச் சரிவில் நடுப்பகுதியைக் குடைந்து மண்டபம் போன்ற கோவிலை அமைத்தனர். இக்கோவில்கள் குடைவரைக் கோவில்கள் எனப்படும். சிறிய பாறைகளைக் கோவில்களாகவே குடைந்து அமைத்தனர்; இவை ஒற்றைக் கற்கோவில்கள் எனப்படும். இவையே இன்று மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று தவறாகக் கூறப்படுகின்றன பின் வந்த பல்லவர்கள் பாறைகளைக் கற்களாக உடைத்து, இக்காலத்திலுள்ள கற்கோவில்களைப் போல அமைக்கத் தொடங்கினர். கயிலாச விமானம், தூங்கு ஆனை விமானம் என்ற இருவகை விமானங்களும் இக்கோவில்களில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் முதன்முதல் கட்டப்பட்ட கற் கோவில் காஞ்சி கயிலாசநாதர் கோவிலாகும். அது பல்லவர் காலத்துக் கட்டடக் கலைக்கும் சிற்ப வளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பல்லவப் பேரரசு அழிந்து சோழப் பேரரசு ஏற்பட்டதும் சிறந்த சிவபக்தரான சோழ மன்னர்கள் பாடல்பெற்ற கோவில்களை எல்லாம் அழியாத கற்கோவில்களாக மாற்றினர்; தாமும் வானளாவிய விமானங்களைக்கொண்ட பெரிய கோவில்களை எடுப்பித்தனர்; பல்லவர் காலத்தில் இருந்த கோவில் ஆட்சியை விரிவுபடுத்தினர். சோழர்கட்குப் பின் வந்த விஜயநகர வேந்தர்கள், விமானங்களை உயர்த்தாது, வானளாவிய கோபுரங்களைக் கட்டி மகிழ்ந்தனர்; மிகப் பெரிய திருச்சுற்றுக்களையும் ஆயிரக்கால் மண்டபங்களையும் அழகுற அமைத்தனர்.

திருப்பதிகங்கள்
சுந்தரர் காலத்திலேயே திருவல்லம் திருக்கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யப்பட்டது என்று *கல்வெட்டு கூறுகின்றது. சோழர்கள் காலத்தில் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன; செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. பாடல் பெற்ற கோவில்களில் எல்லாம் திருப்பதிகங்கள் பாடும் ஓதுவார் நியமிக்கப்பட்டனர். இசையோடு பொருளுணர்ந்து பாடத்தக்க ஓதுவார்கள் நியமனம் பெற்றனர். திருவெற்றியூர்க் கோவிலில் தேவரடியார் பதினாறு பேர் திருப்பதிகம் ஓதினர். திருஆமாத்தூரில் குருடர் 16 பேர் *ஓதுவாராக இருந்தனர். திருத்தவத்துறையில் பிராமணர் இருவர் தேவாரம் ஓதினர். தஞ்சைப் பெரிய கோவிலில் 48 பேர் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தனர். இவ்வாறு பெரும்பாலான கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பட்டு வந்தன. ஓதுவார்களை மேற்பார்வையிடத் தேவார நாயகம் என்ற அரசாங்க உயர் அலுவலாளர் ஒருவர் இருந்தார் என்பது தெரிகின்றது. பெரிய கோவில்களில் `திருக்கைக் கோட்டி` என்னும் பெயர் கொண்ட மண்டபங்கள் இருந்தன. அவற்றுள் திருமுறை நூல்கள் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. அழிந்தவற்றைப் புதுப்பிக்கவும், ஏடுகளைப் பூசிக்கவும் அவற்றை மேற்பார்வையிடவும் ஒருவரிருந்தார். அவர் `தமிழ் விரகர்` எனப்பட்டார். அவருக்கு மானியம் விடப்பட்டிருந்தது. சீகாழி, திருக்காராயில், திருவீழிமிழலை,திருவுசாத்தானம் போன்ற கோவில்களில் இத்தகைய மண்டபங்கள் இருந்தன என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

நாயன்மார் திருமேனிகள்
ஒவ்வொரு நாயனாரும் வாழ்ந்துமறைந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அவருக்குச் செம்பிலும் கல்லிலும் உருவங்கள் அமைக்கப்பட்டன; அவ்வுருவங்கள் பூசிக்கப்பட்டன. அவருக்கு விழா நடைபெற்றது. அப்பர், சம்பந்தர்,சுந்தரர் போன்ற சிறப்பு அடியார் உருவங்கள் பல கோவில்களில் எழுந்தருளப்பெற்றன. சுந்தரர் உருவச் சிலையோடு அவர் மனைவியர் உருவச் சிலைகளும், அவ்வாறே சிறுத்தொண்டர், அவர் மனைவியார், மகனார் உருவச் சிலைகளும் சில கோவில்களில் எழுந்தருளப்பெற்றன. சில செப்புத் திருமேனிகளுக்கு அடியில், ”உலகாண்ட மூர்த்தி.” தத்தா, நமரே காண் என்ற மிலாடுடையார்.” என்பன போன்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டன.

நாயன்மார் ஓவியங்கள் 
தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச் சுவரொன்றில் சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட்கொள்ளும் வரலாறும், சுந்தரர் யானைமீதும், சேரமான் குதிரை மீதும் கயிலைசெல்லும் காட்சியும் அழகொழுகும் ஓவியங்களாகத் திகழ்கின்றன. சுந்தரரும் சேரமானும் தலைமுடியும் தாடியும் வைத்திருத்தல் பண்டைக்கால மயிரொப்பனையும்,அவர்கள் பலவகை அணிகளை அணிந்திருந்தமை அக்கால அணிவகைகளையும் நமக்கு நன்கு விளக்குவனவாகும்.

நாயன்மார் சிற்பங்கள் 
ஒவ்வொரு நாயனார் வரலாற்றிலும் உயிர் நாடியாகவுள்ள நிகழ்ச்சியைச் சிற்பமாகக் குறிக்கும் வழக்கம் சோழர் காலத்தில் உண்டாயிற்று. மேலைக் கடம்பூர்ச் சிவன் கோவிற் கருவறையின் புறச்சுவர்களில் இத்தகைய சிற்பங்களைக் காணலாம். இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சரத்தில் எல்லா அடியார் நிகழ்ச்சிகளையும் ஒருங்கே கானலாம். கண்ணப்பர் வரலாறு பற்றிய சிற்பங்கள் தஞ்சைப் பெரிய கோவில் நடு மண்டபச் சுவரில் பல காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. சண்டீச நாயனார் சிவபெருமானால் கொன்றை மாலை அணிவிக்கப்பட்டுச் சண்டீசப் பதம் கொடுக்கப்பெற்ற காட்சியே அந்நாயனார் வரலாற்றில் சிறப்புப் பகுதியாகும். இக்காட்சியை இராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்சரத்தில் இன்றும் கண்டு களிக்கலாம். நாயன்மார் திருமேனிகளும், அவர்தம் வரலாற்றுச் சிற்பங்களும் பொதுமக்கள் பார்வையிற் பட்டு அவர்களைச் சிவநெறிச் செல்வர்களாக்க வேண்டும் என்பதே சோழ மன்னர்களின் விருப்பமாகும்:

நாயன்மார் விழாக்கள் 
செங்காட்டங்குடியில் சிறுதொண்ட நம்பி விழாவும், சீகாழியில் ஞானசம்பந்தர் விழாவும் திருவாரூரில் சுந்தரர் விழாவும், திருவதிகையில் திருநாவுக்கரசர் விழாவும், சிறப்பாக நடைபெற்றன. இவ்வாறே பல கோவில்களில் அவ்வத்தலத்து நாயனார் விழாக்கள் நன்கு நடைபெற்றன. அவை நன்கு நடைபெறக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன என்று பல கல்வெட்டுகள் கூறுகின்றன. பெருங்கோவில் விழாக் காலங்களில் திருத்தொண்டத் தொகை முதலிய பதிகங்களும், மார்கழித் திங்களில் திருவெம்பாவையும் ஓதப்பட்டு வந்தன.

நாயன்மார் பெயர்கள் 
சோழர் காலச் சைவ மக்கள் நாயன்மார்மீது அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்க, அவர்தம் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு வழங்கியதிலிருந்து அறியலாம். சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, பரவை நங்கையார், திருவெண்காட்டு நங்கை, கண்ணப்ப தேவர், ஐயாற்றடிகள், புகழ்த்துணையடிகள், காரிவேளார்,கோட்புலி, சிங்கன் கலியன், காமன் தாயன், ஆரூரன் கம்பன், நம்பிவிடங்கன், அணுக்க வன்றொண்டன், உடைய நம்பி, கலையன் குமரன், ஆலால சுந்தரப் பல்லவரையன், தண்டியடிகள், கம்பன் மதுராந்தகன், திருநீலகண்டன்,இளையான்குடி கிழவன், கலியன் மன்றாடி, பரசமயகோளரி, மானி, கலையன் மாணிக்கம் போன்ற எண்ணிறந்த பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

அக்கால சைவ மக்கள் நாயன்மார் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு வழங்கியதோடு மட்டும் நில்லாது, இடங்களுக்கும் அப்பெருமான்களின் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தியாகும். கண்ணப்ப தேவர் கமுகந்தோப்பு, திருஞான சம்பந்த நல்லூர், திருஞானசம்பந்த மங்கலம் என்னும் இடப்பெயர்கள் இங்குக் குறிக்கத்தக்கவை. பல மடங்களின் பெயர்கள் நாயன்மார் பெயர்களைத்தாங்கியிருந்தன. பரஞ்சோதி மடம்,திருவரகீசன் மடம், தில்லைவாழ் அந்தணர் மடம், நம்பி திருமுருகன் திருமடம், நமிநந்தியடிகள் மடம், பரசமயகோளரி மடம், திருத்தொண்டத் தொகையான் திருமடம், திருமூலதேவர் மடம், சிறுத்தொண்டர் திருமடம் என்பன குறிக்கத்தக்கவை.

திருமுறைகளும் மக்களும் 
அக்கால மக்கள் திருமுறைகளிடம் கொண்டிருந்த அளப்பரிய பற்றைப் பின்வரும் மக்கட்பெயர்களும், ஊர்ப் பெயர்களும் நன்குணர்த்தும். தேவாரம் அழகியான், ஆண்டார் திருத்தொண்டத் தொகையான், திருமுறைத் தேவாரச் செல்வன், திருத்தொண்டைத் தொகை நல்லூர், திருத்தொண்டத்தொகை மங்கலம் என்பன போன்ற பெயர்களைக் காண்க.

திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அக்காலச் சைவ நன்மக்கள் நாயன்மார் பயன்படுத்திய சொற்றொடர்களை மக்களுக்கும் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் பெயர்களாக வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் சில கீழே காண்க:

(1) சிவாய "நமவென்று நீறணிந்தேன்" என்பது அப்பர் தேவாரம். "நீறணிந்தான் சேதிராயன்" என்பது ஒரு சிற்றரசன் பெயர். (2) "நச்சுவார்க்கினியர் போலும் நாகையீச் சுவரனாரே" என்பது அப்பர் வாக்கு. "நச்சினார்க் கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்" என்பது ஓர் அரசியல் அலுவலன் பெயர். (3) "மழபாடி வயிரத்தூணே என்றென்றே நான் அரற்றி" என்பது அப்பர்வாசகம். "ஆனைமங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண்" என்பது ஒருவன் பெயர். (4) அரசாள்வர் "ஆணைநமதை" என்பது சம்பந்தர் வாக்கு. "ஆணைநமதெ"ன்ற பெருமான் என்பது ஒருவன் பெயர். (5) "பொன்னார் மேனியனை" என்பது சுத்தரர் சொற்றொடர். "பொன்னார் மேனி விளாகம்" என்பது ஓரிடத்தின் பெயர். (6) கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்) திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில், "பிச்சன் என்று பாடச் சொன்னான்" என்ற பெயர் கொண்ட ஊதுகொம்புகள் இரண்டு இருந்தன.

சமய நூல் விளக்கம்
பல கோவில்களில் சைவசமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. பாரதம் இராமாயணம், சிவதர்மம், திருஞானம், சோம சித்தாந்தம் என்பன பல கோவில்களில் பேசப்பட்டு வந்தன. ஆளுடைய நம்பி ஶ்ரீபுராணம் (பெரிய புராணம்) திருவொற்றியூரில் படிக்கப் பட்டது. அதனைச் சோழன் இரண்டாம் இராசாதிராசன் இருந்து கேட்டு மகிழ்ந்தான் என்று திருவொற்றியூர்க் கல்வெட்டுக் குறிக்கின்றது. திருநீடூரில் `புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை` ஒன்று முதற் குலோத்துங்கன் காலத்தில் இருந்ததாகத் தெரிகின்றது.

ஆடலும் பாடலும்
கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல்களையும் பாடல்களையும் நிகழ்த்த ஆடல் பாடல்களில் வல்ல மகளிர் அமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை எண்ணிறந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இராசராசசோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோவிலில் மட்டும் 400 கலைவாணிகளை அமர்த்தியிருந்தான். அவர்கள் தமிழகத்துப் பல்வேறு கோவில்களிலிருந்து வருவிக்கப் பட்டவர்கள். ஓவ்வொருத்திக்கும் ஒரு வேலி நிலமும் ஒரு வீடும் வழங்கப் பட்டன. இவ்வாறு பல கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணியாற்றினர். இவருள் `பதியிலார்`ஒருவகையினர் : `ரிஷபத் தளியிலார்` (சிவன் கோவிற் பெண்டுகள்) மற்றொரு வகையினர் ; திருவொற்றியூர்க்கோவிலில் சொக்கம், சந்திக்குணிப்பம் என்னும் நடன வகைகளைப் பதியிலார் ஆடும்போது, ரிஷபத்தளியிலார் மிழற்றுப் பாடலை வழங்கினர். ரிஷபத்தளியிலார் அகமார்க்கம், வரிக்கோலம் என்னும் நடன வகைகளை நடித்துக் காட்டினர். பதியிலார் திருப்பதிகக் கருத்துகட்கும், திருவெம்பாவைக் கருத்துகட்கும் ஏற்றவாறு நடித்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகின்றது. இத்தகைய திருப் பதிகத்திற்கு ஏற்ற நடன வகைகள் இன்று இல்லா திருத்தல் வருந்தற்குரியது.

தேவரடியார்
கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர்களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல்,திருமெழுக்கிடல், திருவமுதுக்குரிய அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக்களில் ஏந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்மனுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், `கவரிப்பிணா` என்றும் அழைக்கப்பட்டனர். இங்ஙனம் தேவரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதியரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பிணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் `தேவரடியார்` என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவனொருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினான் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித்தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலனாகின்றது.

மடங்கள்
பௌத்த மதத்திற்கும், சமண மதத்திற்கும் அச்சமயக் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்ததுபோலவே, சைவ சமய வளர்ச்சிக்குக் கோவில் களை அடுத்தும், தனித்தும் தமிழகத்தில் பல மடங் கள் இருந்தன. அப்பர், சம்பந்தர் கால முதலே மடங்கள் சிவப்பணியைச் செய்துவந்தனவாயினும் சோழர் காலத்தில் மிகப் பல மடங்கள் தோன்றிச் சமயத் தொண்டினை நன்கு ஆற்றலாயின. திருவா வடுதுறையில் மட்டும் திருநீல விடங்கன் மடம், சிவலோக நாயகன் மடம்,சர்வதேவன் மடம், பஞ்சநதிவாணன் மடம், சங்கரதேவன் அறச்சாலை, பிரமாண வாசகன் மடம்,நாற்பத்தெண்ணாயிரவன் மடம், முந்நூற்றிருபத்து நால்வன் மடம், பெருந் திருவாட்டி அறச்சாலை என்பன இருந்தன. இவ்வாறு பல பெருங் கோவில்களை அடுத்திருந்த மடங்களுக்குப் பக்கத்தில் மருத்துவ மனைகளும் அமைப்புண்டிருந்தன.

இவற்றுள் காலாமுகச் சைவர்களின் மடங்கள் சில; காபாலிகச் சைவர் மடங்கள் சில; வீர சைவ மடங்கள் மிகச்சில; வடநாட்டுக் கோளகி மடத்தைச் சேர்ந்த கிளை மடங்கள் சில; வாரணாசிக் கொல்லா மடத்துக் கிளைகள் சில தமிழகத்து இருந்தன; வாரணாசி பிக்ஷா மடத்துக் கிளை மடங்கள் சிலவும் இருந்தன. இவை அனைத்திலும் மேற்சொன்ன பல வகைச் சமய நூல்கள் பொதுமக்களுக்குப் படித்து விளக்கப்பட்டன.

தமிழ்ச் சைவ மடங்கள்
மாளிகை மடத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த மடங்கள் சில; சண்பைக்குடி முதலியார் சந்தான மடங்கள் சில;மருதப் பெருமாள் சந்தான மடங்கள் சில; இச் சைவ மடத்துத் தலைவர்கள் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும், சைவத் திரு முறைகளிலும் சிறந்து விளங்கினர்; மக்களை நல் வழிப்படுத்தினர். இச் சைவ மடாதிபதிகளின் செல்வாக்குத் தமிழகத்தில் மிகுந்து பரவியது. தமிழகத்துச் சைவம் சாதிபேதமற்றது; `அன்பே சிவம்` என்ற கொள்கையால் அனைவரையும் ஒரு தாய் ஈன்ற மக்களாகக் கருதும் விரிந்த மனப் பான்மையுடையது. ஆதலால், பெரும்பாலரான தமிழ் மக்கள் இச் சைவ மடத்துத் தலைவர்களின் அருளுரைகளில் பெரிதும் ஈடுபட்டனர். இச்சைவ மடங்களைப்பற்றி ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுதல் காண்க.*
-----------------

இங்ஙனம் சோழப் பேரரசர் ஆதரவில் சைவ சமயம் படிப்படியாக வளர்ச்சியுற்றுக் கி.பி.13 ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பல மடங்களைத் தமிழ்நாடெங்கும் பெற்றிருந்தது. அந்த மடங்களின் தலைவர்களாக இருந்த சைவத் துறவிகள், பெரும்பாலான தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தனர். புகழ் பெற்ற அத்வைத ஆசிரியரான சங்கராச்சாரியார் இதே தமிழகத் திலிருந்து பக்தி நெறியைப் பரப்பியவர். ஆனால், அவர் சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்யவேண்டுமென்று வற்புறுத்தினார். இவ்வறிவுரைக்கு மாறாகச் சைவ சமயம் காணப்பட்டது; சாதி வேறுபாட்டைக் கருதாது, எல்லா மக்களையும் பக்தி ஒன்றையே அடிப்படையாகக்கொண்டு, தன்பால் அணைத்துக் கொண்டது. இதனால் வைதிகப் பிராமணர் சைவத்திற் கலக்கமுடியவில்லை; ஆயின், பிராமணரல்லாத வகுப்பாரனைவரும் சைவத்தைத் தழுவினர். இதன் பயனாக, முன் சொன்னவாறு சைவ மடங்கள் நாடெங்கும் விளங்கின. அவை, பிராமணரான திரு ஞானசம்பந்தர் பெயரைத் தாங்கியும் அப் பிராமணரான திருநாவுக்கரசர் பெயரைத் தாங்கியும் மிகப்பலவாக விளங்கின.

சோழர்க்குப் பிற்பட்ட நாயக்கர் காலத்தில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் மெய்கண்ட சந்ததிமடம் ஒன்றிருந்தது. இம்மெய்கண்ட சந்ததியில் வந்த நமசிவாய தேசிகரால் ஏற்படுத்தப்பட்டதே திருவாவடுதுரை ஆதீனம். அதே சந்ததியைச் சேர்ந்த ஞானசம்பந்த தேசிகரால் உண்டானது தருமபுர ஆதீனம்.

சைவ மடங்கள் ஏறத்தாழக் கி. பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கோவில் ஆட்சியையும், சமய வளர்ச்சியையும் கவனித்து வந்தன. இவை சமய யாத்திரிகர்களுக்குப் புகலிடமாய் விளங்கின; சமயக் கல்வியையும் சமயவொழுக்கத்தையும் பொதுமக்களிடையே வளர்த்தன. பிணியாளர்களும் இம்மடங்களில் மருந்து முதலியன பெற்றனர்.

குகைகள்
இப்பெயர் கொண்ட ஒருவகை மடங்கள் பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. சீகாழி, சிதம்பரம்,திருப்புகலூர் முதலிய பலவூர்க் கோவில்களில் இவையிருந்தன. இவை பாதுகாப்பு மிக்கவை; திருமுறைகளில் வல்ல சைவத் துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. இத்தலைவர்தம் சீடர்கள் பல கோவில்களிலிருந்து திருமுறைகளை ஓதினார்கள். சில குகைகளில் தவசிகள், ஆண்டார்கள், யாத்திரீகர் முதலியோர் உண்பிக்கப்பட்டனர். இத்தகைய குகைகளாலும் முன்சொல்லப்பட்ட மடங்களாலும் சைவசமயம் நன்கு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். 

மக்கள் தொண்டே சமயத்தொண்டு
பெருங்கோவில்களில் பொதுமக்கள் நலனுக்காக நூல் நிலையம் இருந்து வந்தது. அதனைச் `சரசுவதி பண்டாரம்` என வழங்கினர். சில பெரிய கோவில்களை அடுத்து மருத்துவமனைகள் இருந்தன. அவற்றுள் மருத்துவரும்,சல்லியக்கிரியை பண்ணுவாரும் (Surgeon), தாதிமாரும் (Nurses), மருந்துப் பொருள்களைக் கொண்டு வருபவரும், மருந்துகளைச் செய்வோரும் இருந்தனர். நோயாளிகளுக்குப் படுக்கைகள் இருந்தன.. ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுக் குடிமக்கள் தவிக்கும்போது, அவ்வூர்க் கோவிலில் உள்ள வெள்ளி, பொன் நகைகளையும் பாத்திரங்களையும் உருக்கி ஊரார்க்குக் கடனாக உதவுவதும், பஞ்சம் நீங்கிய பிறகு உதவிய கடனை மீட்டுப் பெறுவதும் வழக்கமாக இருந்தது என்பது ஆலங்குடிக் கல்வெட்டால் தெரிகின்றது.

இங்ஙனம் கோவில்கள் பொருளாதாரத் துறையிலும், உடல்நலத் துறையிலும், அறிவுத் துறையிலும், சமயத் துறையிலும் பொது மக்களுக்குத் தொண்டு செய்துவந்தமையாற்றான், தமிழகத்தில் சைவ சமயம் மக்களுக்குப் பயன்படத்தக்க சமயமாக விளங்கியது. இப்பண்டை நிலை மீண்டும் புதுப்பிக்கப்படுமாயின், சைவ சமயம் மக்கள் சமயமாக மலர்ச்சிபெறும். திருக்கோவில் வழிபாடும் தாய் மொழியில் நடைபெறுதல் வேண்டும். திருவொற்றியூர்க் கல்வெட்டில் கண்டபடி, திருப்பதிகங்கள், திருவாசகம் இவற்றின் கருத்துக்களைப் புலப்படுத்தும் நடன வகைகளும் வளர்ச்சி பெறுதல் வேண்டும். தமிழ் நடன ஆசிரியர்களும், தமிழ் நடனப் பெண்மணிகளும் இத்துறையில் விரைந்து கவனஞ் செலுத்த வேண்டும்.

இந்நிலை ஒவ்வொரு கோவிலிலும் ஏற்படுமாயின், நம் திருமுறைகளின் உண்மைச் சிறப்பினை மக்கள் உணர்ந்து பயன்பெறுதல் கூடும். இம் முறையைப் பின்பற்றாமல், தமிழ் மக்களுக்கே புரியாத மொழியில் தமிழகத்துக் கோவில்களில் வழிபாடு நடைபெறுவதால், மன வொருமைப்பாட்டுக்குரிய திருக்கோவில்கள் அப்பணியைச் செய்யத் தவறியவை ஆகின்றன. ஆதலால் நாட்டிலுள்ள சைவ நன்மக்களும், மக்கள் நலனுக்காக விளங்கும் அரசாங்கமும் இத்துறையில் கவனஞ் செலுத்தி, தமிழகத்துத் திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை நடைமுறையில் கொணர்தல் வேண்டும். இங்ஙனம் தமிழில் வழிபாடு நடைபெறும் நன்னாளே நம் சைவம் தழைத்தோங்கும் பொன்னாளாகும்.