கோடங்கிப் பாட்டு

bookmark

கோணங்கிகள் குறி சொல்லுவார்கள். கிராமத்தில் உடல் நோய் கண்டவர்கள் கோணங்கியை வருவித்து குறி கேட்பார்கள். இவர்கள் மாடன், கறுப்பன், முனியன், காளி, மாரி போன்ற சிறு தெய்வங்களின் தெய்வங்கொண்டாடிகளாக இருப்பார்கள். சிறு நோயாக இருந்தால், கோணங்கி திருநீறு மந்திரித்துப் பூசுவார்கள். கடுமையான நோயாக இருந்தால் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பூசைபோட்டுக் குறி கேட்டு பரிகாரம் சொல்லுவார்கள்.

பூசையில் ஒரு வாழையிலை விரித்து, அவல் பொரிகடலை பரப்பி, விளக்கேற்றி,தேங்காய் உடைத்து, உடுக்கடித்து `சாமி` வருத்துவார்கள். கையில் பிரம்பு அல்லது வேப்பங்குழை ஏந்தி, நோயாளியை உட்கார வைத்து அதை அவன் முன்வீசிப் பாட்டுப் பாடுவார்கள்.

பாட்டின் முதல் பகுதியில் சாமியை வீட்டுக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்ளுவார்கள். சாமி வந்ததும், உடல் நடுங்கி ஆடிக் கொண்டே, சுவாமி சொல்லுவதாக நோய்க்குக் காரணத்தைச் சொல்லுவார்கள். பின்னர் சாமி நோயைக் குணப்படுத்த ஒரு சேவலோ, தங்கநகையோ, சுங்கடிச்சேலையோ தர வேண்டுமெனக் கேட்கும். சில நாள் பூசைபோட வேண்டுமெனவும் கேட்கும்.

மதுவிலக்குச் சட்டம் வருமுன் சாராயம் கேட்பதுமுண்டு. சட்டம் வந்ததும் குடி வழக்கத்தை சாமிகளும் கைவிட்டு விட்டனர் போலும். ஏனெனில், இப்பொழுது சாராயம் கேட்பதில்லை. இடையிடையே யாராவது பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டுவிட்டால், சாமி உடனே எல்லை தாண்டி மலையேறிப் போய்விடும். இத்தகைய நம்பிக்கை இன்னும் மறையவில்லை. விஞ்ஞானக் கருத்துகள் கிராம மக்களிடம் பரவினால்தான் இவ்வழக்கங்கள் ஒழியும். சுவாமி வருத்துவதையும், சுவாமி குறி சொல்லுவதையும், நிவாரணம் சொல்லுவதையும் பாட்டில் கோணங்கி சொல்லுவான்.

இப்பாட்டின் உருவத்தை மேற்கொண்டே பாரதி `புதிய கோணங்கி`ப் பாட்டு பாடியுள்ளார். இந்தியாவின் வருங்காலத்தையே பாரதி குறியாகச் சொல்லுகிறார். அத்தகைய கோணங்கிகள் நமது வருங்காலத்தைச் சொல்ல இன்றும் வருகிறார்கள். அவர்கள் பழைய உடைகளையே கூலியாகக் கேட்கிறார்கள். நம்மைப் புகழ்ந்து,வருங்காலத்தில் சீரும் சிறப்பும் உண்டாகும் என்று கூறியவுடனே, நாம் உச்சி குளிர்ந்து அவர்கள் கேட்டதைக் கொடுத்து விடுகிறோம்.
--------------