தெய்வ வணக்கம்

பாரோர்கள் நற்புகழும்
பட்டண மருதூர் வாழும்
பதி னெட்டாம் படிக் கறுப்பா!
பதி னெட்டாம்படிக் கறுப்பா!
ஊருக்கு மேல் புரமாம்:
ஒத்த உடை மரமாம்
உடை மரத்தின் கீழிருக்கும்,
உத்தமனே வாருமையா!
சாலைப் பாதை மேல்புரமாம்
சமர்த்தா குடியிருக்கும்
கொத்தளத்து வாழ் கறுப்பா, கூவியழைத்தேனையா
துண்டிக் கறுப்பா;
துடியான வாள் வீரா
சுற்றி வர கம்மாக் கரை;
சூழ வர கம்மாக் கரை;
சூழ வர உடங்காடு
உடங்காட்டு மத்தியிலே
உத்தமனே தனியிருக்கும்
எண்ணெய்த் தலையழகும்;
எழுத்தாணி மூக்கழகும்
கையிலே வீச்சறுவா;
காலுலே வீரத் தண்டை
நெத்தியில் பொட்டுமிட்டு,
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டு பளபளென
பாடகக்கால் சேராட;
தோள் மேலே பச்சைக் கிளி
தோழனழைத் தேனிப்பம்
கரு நாயும் சங்கிலியும்;
கைப்பிடித்து வாருமிப்போ,
வெள்ளக் குதிரை ஏறி
வெடி வாலும் சீனிமட்டம்
நெத்தியிலே சுட்டு கட்டி;
நீல வர்ணப் பூச்சூடி
மத்தியான வேளையிலே
மாதர்களைத் தானடக்கும்
பக்தியுள்ள ஏ கறுப்பா
பதினெட்டாம் படியோனே.
ஏமமும், சாமமும்
எந் நேர வேளையிலும்
அந்தி சந்தி வேளை யெல்லாம்
ஐயா துணையிருந்து
கேட்ட வரம் நீ கொடுக்கும்
கிருவையுள்ள ஏ கறுப்பா!
வாலைக் கறுப்பா
வாருமையா இது வேளை.
முன்னோடி ஏ கறுப்பா
முன்னிலையில் வாருமிப்போ
ஏழை அழைத்தேனையா
இது சமயம் வாருமிப்போ
பாலன் அழைத் தேனையா
பாரும் குழந்தை முகம்
அஞ்சிலே ரெண்டறியேன்
அடியேன் சிறுகுழந்தை
பத்திலே ரெண்டறியேன்
பாலன் சிறு குழந்தை
பாடம் படிப்பறியேன்
பாட்டின் வகை நானறியேன்.
ஏடும் எழுத்தறியேன்
எழுத்து வகை நானறியேன்.
எண்ணாது எண்ணுகிறேன்
எண்ணி மனம் வாடுகிறேன்.
கார்மேக என்பெருமான்
காத்தாய்ப் பறந்து வாரும்
மன்றுக்கு நானழைத்தேன்
மன்னவரே வாருமிப்போ.
அண்ணாவே என் குருவே
ஆசானே நீர் துரையே
ஏழை அழைத்தேனைய்யா
என்னிடத்தில் வாருமிப்போ,
கோர்ட்டில் வழக்காடும்
கொத்தளத்து வாழ் கறுப்பா
ஐகோர்ட் சட்சி ஐயா
அதிகாரி வாருமிப்போ
கேட்ட குறி தனக்கு
கிருபையுள்ள ஏ கறுப்பா
வாக்குத் தவறாமல்
வன் பிணிகள் வாராமல்
ஏவல் பில்லி சூனியங்கள்
என்னை வந்து சேராமல்
மாற்றானுட வஞ்சனைகள்
மன்னவனே சாடாமல்
தன்னந்தனியிருக்கும்
தற்பரனே வாருமையா!
ஐயப்பன் மலை மேலே
அதிகாரம் கொண்டவரே
ஐயா அழைத் தேனிப்போ
அதிகாரி வாருமிப்போ
வாவூர் மலை மேலே
வழக்காடும் புண்ணியரே
சன்யாசி ஏ கறுப்பா
சமர்த்தனழைத் தேனிப்போ
குறிக்கு அழைத் தேனிப்போ
குறி முகத்தில் வாரதெப்போ
ஈப்போல் வடிவு கொண்டு
என் இருதயத்தினுட் புகுந்து
சொன்ன சொல் தவறி டாமல்
சொற் குற்றம் வந்திடாமல்
சாஸ்திரத்தை நீரெடுத்து
சமர்த்தா வருவ தெப்போ!
பக்கங் குறி கேட்பவர்க்குப்
பதிலே உரைப்ப தெப்போ
வைத்த குறிகேட்பவர்க்கு
உடைத் தெறியும் சட்டமதை
சட்டம் நிலைக்க வேணும்
சன்யாசி ஏ கறுப்பா
கேட்ட கேட்ட கேள்விக்கெல்லாம்
கிருபையுடன் சொல்லுமையா
பூசை முடியும் மட்டும்
புண்ணியனே உன் காவல்
மண்டு முடிய மட்டும்
மன்னவனே உன் காவல்
வாழை இலை விரித்தேன்
வைத்தேன் இலை பாக்கு
கொளுத்தினேன் நற் சூடம்
கொண்டேன் சிறு அமுது
பால் பழமும் நற்தேங்காய்
படைத்தேனிது வரைக்கும்
தட்சணையும் முன்னே வைத்து
தேவா உமையழைத்தேன்
வைத்ததொரு தட்சனைக்கு
வகை பிரித்துச் சொல்லுமிப்போ
சொல்லி வரங் கொடுக்கும்
சுந்திரனே ஏ கறுப்பா
எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி மனம் வாடுகிறேன்
ஆறு பிழை நூறு குற்றம்
அடியேன் செய்த போதிலுமே
குற்றம் பிழை பொறுத்து
குடியிருக்க வாருமிப்போ
சின்னஞ் சிறு மதலை
சிறுவனுமதடிமை
மன்னாதி மன்னவரே
மகா தேவா என் பெருமாள்
அண்ணாவே வாருமிப்போ
அதிகாரி ஏ கறுப்பா
எல்லை கடந்து வாரும்
எல்லை கல்லு தாண்டி வாரும்
ஆறு கடந்து வாரும்
அதிகாரி ஏ கறுப்பா
ஊறுதடம் பிடித்து
உத்தமனே வாருமிப்போ
தெற்கு பார்த்த வீட்டிற்கு
தேவா உமையழைத்தேன்
வடக்கு பார்த்த எல்லைக்கு
வல்லவனே உமையழைத்தேன்.
மேற்க பார்த்த தன் பதிக்கு
மேக `உமையழைத்தேன்`
கிழக்க பார்த்த எல்லைக்கு
கிளி மொழியே நானழைத்தேன்
குறிப்பு: வீடு எந்தப்பக்கம் பார்த்திருக்கிறதோ அதற்கேற்றாற்போல்,
தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று சொல்லுவார்கள்.
--------------