சோழநாட்டுத் திருப்பதிகள்- 40

1. திருவரங்கம் பெரிய கோயில்
சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்
சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ?-ஆர்வம்
ஒருவரங்கக் கோயி லுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு. (1)
நான்முகன் முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும், என்னுடைய புன்மையான சொற்களால், தன்னைச் சரணமென்று சேர்ந்தவரை அன்போடு ஆட்கொள்ளும் திருவரங்கன் கோயிலின் சிறப்பைச் சொல்ல முடியுமோ?
2. திருவுறையூர்
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல
மறப்புடைய நாயேன் மனத்துள் - உறப்போந்
தறந்தையா நின்ற வரங்கா! திருவாழ்
உறந்தையாய்! இங்குறைந்த தோது! (2)
உறையூர் என்னும் திருப்பதியில் உறைந்திருக்கும் அரங்கனாகிய பெருமானே, சிறந்த திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருப்பது போல், மிகத்தாழ்ந்தவனான என் மனத்திலும் புகுந்து அகலாமல் உறைந்திருப்பது எவ்வாறு? சொல்வாயக!
3. திருத்தஞ்சை
ஓதக்கே ணெஞ்சே! உனக்குமிது நன்றெனக்கும்
மேதக்க நன்மையினி வேறில்லை - போதப்
பெருந்தஞ்சை மாமணியைப் பேணி வடிவம்
பொருந்தஞ்சை மாமணியைப் போற்று. (3)
4. திருவன்பில்
போற்றிசெய வோர்குடைக்கீழ்ப் பொன்னாடு மிந்நாடு
நாற்றிசையு மாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா
எந்தையன்பி லாதி யிணைத்தா மாரையடிக்கே
சிந்தையன்பி லாதார் சிலர். (4)
பிறப்பிலியான எந்தை அன்பில் எம்பெருமானின் அடியிணையில் அன்பில்லாதவர்கள், எல்லாரும் போற்றும்படி ஒரு குடையின் கீழ் எல்லா உலகங்களையும் ஆண்டாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.
5. திருக்கரம்பனூர்
சிலமா தவஞ்செய்துந் தீவேள்வி வேட்டும்
பலமா நதியிற் படிந்தும் - உலகில்
பரம்பநூல் கற்றும் பயனில்லை நெஞ்சே!
கரம்பனூ ருத்தமன்பேர் கல். (5)
6. திருவெள்ளறை
கல்லிருந்தான் றந்தை கலத்தோ னக்கமலத்
தில்லிருந்தான் றந்தையரங் கேசனென்றே - தொல்லைமறை
உள்ளறையா நின்றமையா லுள்ளமே! கள்ளமின்றி
வெள்ளறையான் றாளே விரும்பு. (6)
7. திருப்புள்ளம்பூதங்குடி
விரும்பினவை யெய்தும் வினையனைத்துந் தீரும்
அரும்பரம வீடு மடைவீர்--பெரும்பொறிகொள்
கள்ளம்பூ தங்குடிகொள் காயமுடை யீர்!அடிகள்
புள்ளம்பூ தங்குடியிற் போம். (7)
8. திருப்பேர்நகர்
போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8)
9. திருவாதனூர்
இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார்--கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென் னாரமலன்
ஆதனூ ரெந்தையடி யார். (9)
10. திருவழுந்தூர்
அடியாராய் வாழ்மி னறிவிலாப் பேய்காள்!
செடியார் வினையனைத்துந் தீரு--முடிவில்
செழுந்தூரத் தன்னெனினுஞ் செங்கண்மா லெங்கள்
அழுந்தூரத் தன்னணிய னாம். (10)
11. திருச்சிறுபுலியூர்
ஆமருவி மேய்த்த வரங்ரெதி ரார்நிற்பார்?
தாமருவி வாணனைத்தோள் சாய்த்தநாள்--சேமம்
உறுபுலியூர் வன்றோ லுடையா னுடைந்தான்
சிறுபுலியூ ரெந்தைமேற் சென்று. (11)
12. திருச்சேறை
சென்றுசென்று செல்வஞ் செருக்குவார் வாயிறொறு
நின்றுநின்று தூங்குமட நெஞ்சமே! - இன்றமிழைக்
கூறைகுஞ் சோற்றுக்குங் கூறாதே பேறாகச்
சேறைக்கு நாயகன்பேர் செப்பு! (12)
13. திருத்தலைச்சங்கநாண்மதியம்.
செப்புங்கா லாதவனுந் திங்களும்வா னுந்தரையும்
அப்புங்கா லுங்கனலு மாய்நின்றான் - கைப்பால்
அலைச்சங்க மேந்து மணியரங்கத் தம்மான்
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)
14. திருக்குடந்தை
தானே படைத்துலகைத் தானே யளித்துநீ
தானே யழிக்குந் தளர்ச்சியோ - வானில்
திருமகுடந் தைக்கச் சிறுகுறளாய் நீண்ட
மெரும!குடந் தைக்கிடந்தாய்! பேசு. (14)
15. திருக்கண்டியூர்
பேசவரிற் றென்னரங்கன் பேரெல்லாம் பேசுவாய்;
கேசவனைக் காண்கவிழி; கேட்கசெவி; - ஈசனார்
உண்டியூர் தோறு முழன்றிவர மற்றவிர்த்தான்
கண்டியூர் கூப்புகவென் கை. (15)
16. திருவிண்ணகர்
கையு முரையுங் கருத்துமுனக் கேயடிமை
செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா!
திருவிண் ணகராளா! சிந்தையிலு மெண்ணேன்
பெருவிண் ணகராளும் பேறு. (16)
17. திருக்கண்ணபுரம்
பேறு தரினும் பிறப்பிறப்பு நோய்மூப்பு
வேறு தரினும் விடேன்கண்டாய் - ஏறுநீர்
வண்ணபுரத் தாய்!என் மணம்புகுந்தாய்! வைகுந்தா!
கண்ணபுரத் தாய்!உன் கழல். (17)
18. திருவாலி
கழன்றுபோம் வாயுவினைக் கட்டாமற் றீர்ந்தம்
உழன்றுபோ யாடம லுய்ந்தேன் - அழன்று
பொருவாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து. (18)
19. திருநாகை
சேர்ந்துனக்குக் குற்றவேல் செய்திலனென் சிந்தையினீ
ஆர்ந்ததற்கோர் கைம்மா றறிகிலேன் - பூந்துவரை
மன்னா!கை யாழி வலவா! வலம்புரியாய்!
தென்னாகை யாய்!அருளிச் செய் (19)
20. திருநறையூர்
செய்ய சடையோன் றிசைமுகத்தோன் வானவர்கோன்
ஐயமறுத் தின்ன மறியாரே - துய்ய
மருநறையூர் வண்டுழாய் மாயோன்செவ் வாயோன்
திருநறையூர் நின்றான் செயல். (20)
21. திருநந்திபுரவிண்ணகரம்
செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)
22. திருவிந்தளூர்
நாடுதும்வா! நெஞ்சமே! நாராய ணன்பதிகள்
கூடுதும்வா! மெய்யடியார் கூட்டங்கள் - சூடுதும்வா!
வீதியிந்த ளத்தகிலின் வீசுபுகை வாசமெழும்
ஆதியிந்த ளூரா னடி. (22)
23. திருச்சித்திரகூடம்
அடியா லுலகெல்லா மன்றளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியே னெஞ்சே!-கொடிதாய
குத்திரகூ டங்கி கொளுந்தாமுன் கோவிந்தன்
சித்திரகூ டங்கருதிச் செல். (23)
24. திருச்சீராமவிண்ணகரம்
செல்லுந் தொறுமுயிர்ப்பின் செல்லு மிருவினையை
வெல்லு முபாயம் விரும்புவீர்!-தொல்லரங்கர்
சீராம விண்ணகரஞ் சேர்மின்!பின் மீளாத
ஊராம விண்ணகர முண்டு. (24)
25. திருக்கூடலூர்
உண்டுகேட் டுறுமோந் துப்பார்க்கு மைவர்க்கே
தொண்டுபட லாமோ?உன் றொண்டனேன் - விண்டிலங்கும்
ஆடலூர் நேமிமுத லைம்படையாய்! அன்புடையாய்!
கூடலூ ராய்!இதனைக் கூறு! (25)
26. திருக்கண்ணங்குடி
கூறுபுகழ்த் தன்னடிகே கூட்டுவனோ? இன்னமென்னை
வேறுபடப் பல்பிறப்பில் வீழ்த்துவனோ?- தேறுகிலேன்
எண்ணங் குடியா யிருந்தானின் றான்கிடந்தான்
கண்ணங் குடியான் கருத்து. (26)
27. திருக்கண்ணமங்கை
கருத்தினால் வாக்கினா னான்மறையுங் காணா
ஒருத்தனைநீ நெஞ்சே! உணரில் - பெருத்தமுகில்
வண்ணமங்கை கண்கால் வனசந் திருவரங்கம்
கண்ணமங்கை யூரென்று காண். (27)
28. திருக்கவித்தலம்
காணியு மில்லமுங் கைப்பொருளு மீன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேருறவும் - சேணில்
புவித்தலத்தி லின்பமும் பொங்கரவ மேறிக்
கவித்தலத்திற் கண்டுயில்வோன் கால். (28)
29. திருவெள்ளியங்குடி
காலளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற
நூளலவே யன்றி நுவல்வாரார்? - கோலப்
பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த
திருவெள்ளி யங்குடியான் சீர். (29)
30. திருமணிமாடக்கோயில்
சீரே தருங்கதியிற் சேருகைக்கு நானுன்னை
நேரே வணங்கினே னெஞ்சே!நீ - பாரில்
அணிமாடக் கோயி லரங்கனார் நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு. (30)
31. திருவைகுந்த விண்ணகரம்
வணங்கேன் பிறதெய்வ மாலடி யாரல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் - இணங்கிநின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவே னீதன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு. (31)
32. திருவரிமேயவிண்ணகரம்
வாழு மடியார் மடநெஞ்சே! நம்மளவோ?
தாழுஞ் சடையோன் சதுமுகத்தோன் - பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு. (32)
33. திருத்தேவனார்தொகை
ஆர்க்கும் வலம்பரியா வண்டமு மெண்டிசையும்
கார்க்கடலும் வெற்புங் கலங்கினவால் - சீர்க்கும்
திருத்தேவ னார்தொகைமால் செவ்வாய்வைத் தூதத்
தருத்தேவ னார்தொகையுஞ் சாய்ந்து (33)
34. திருவண்புருடோத்தமம்
சாய்ந்த திருவரங்கந் தண்வேங் கடங்குடந்தை
ஏய்ந்த திருமா லிருஞ்சோலை - பூந்துவரை
வண்புருடோத் தமமாம் வானவர்க்கும் வானவனாம்
ஒண்புருடோத் தமன்ற னூர் (34)
35. திருச்செம்பொன்செய்கோயில்
[தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல்]
ஊர்வேண் மடலை யொழிவேன் மடநாணம்
சேர்வேன் கரிய திருமாலைப் - பாரறிய
அம்பொன்செய் கோயி லரங்கனணி நாங்கூர்ச்
செம்பொன்செய் கோயிலினிற் சென்று (35)
36. திருத்தெற்றியம்பலம்
சென்றது காலந் திரைநரைமூப் பானவினி
என்றுகொல்? சாவறியோ மென்னெஞ்சே! - கன்றால்
உருத்தெற்றி யம்பலத்தை யோர்விளவின் வீழ்த்தான்
திருத்தெற்றி யம்பலத்தைச் சேர்! (36)
37. திருமணிக்கூடம்
சேராது முன்செய்த தீவினைபின் செய்வதுவும்
வாரா தினிநீ மடநெஞ்சே!--நேராக்
குருமணிக்கூ டத்தானைக் கொம்புபறித் தானைத்
திருமணிக்கூ டத்தானைச் செப்பு. (37)
38. திருக்காவனம்பாடி
செப்பேன் மனிதருக்கென் செஞ்சொற் றமிழ்மாலை
கைப்பேன் பிறதெய்வங் காண்பாரை--எப்போதும்
காவளம்பா டித்திருமால் தாற்றா மரைதொழுது
நாவளம்பா டித்திரிவே னான். (38)
39. திருவெள்ளக்குளம்
நானடிமை செய்யவிடாய் நானானே னெம்பெருமான்
தானடிமை கொள்ளவிடாய் தானானான்--ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாயிரு வருந்தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து. (39)
40. திருப்பார்த்தன்பள்ளி
ஒத்தமர ரேத்து மொளிவிசும்பும் பாற்கடலும்
இத்தலத்திற் காண்பரிய வென்னெஞ்சே!- சித்துணர்ந்த
தீர்த்தன்பள் ளிக்கிருந்து செப்பவெளி நின்றானைப்
பார்த்தன்பள் ளிக்குட் பணி. (40)
சோழநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.