சிவகாசிக் கொள்ளை-5

சீர்வளரும் திருநெல்வேலி ஜில்லாவை
சேந்த சிவகாசி கொள்ளை தன்னை
பேர் வளரும் கும்மி பாட ஐங்கரண்
பிள்ளை மலர் பாதம் காப்போமே.
தேசம் புகழ் காசியின் சிங்காரம்
செப்ப வேணு மென்றால் ஒப்பனையாய்
வாசனும், ஆதிகேசலும் ஆயிரம்
வாயினால் சொல்ல முடியாதே
நீல மணி முத்து மாடங்களாம் அண்ட
கோளம் அளாவிய கூடங்களாம்
செல்வம் மிகுந்திடும் வெள்ளாளர் நாயக்கர்
செட்டி மறவர்க்கும் நாடார்க்கும்
பல் வகையாய்ச் சிவன் கோயில் விஷயமாய்
பார வழக்கு நடந்ததுவே.
96-ம் வருடத்தில் கார்த்திகை
சோம வாரம் அந்த உற்சவத்தில்
திண்ணமாய் நாடார்க்கும் பிள்ளை மார்க்கும் ஒரு
செய்தி நடந்ததைச் சொல்லுகிறேன் :
வெள்ளாளர் சாமியை எழுந்தருளச் செய்து
வீதி வலமாய் வருகையிலே
மெள்ளவே நாடார்கள் பத்திர காளிக்கு
மேலான உற்சவம் செய்ய வென்று
தாங்களும் சாமி எழுந்தருளச் செய்து
சந்தியிலே அவர் முந்திக் கொண்டு
பாங்காகச் சாமியைப் போக விடாமல்
பலத்த கலகங்கள் செய்தனராம்
கல்லெறிந்து சிலர் சில்லரை செய்கின்ற
காலத்தில் ஆறுமுகம் பிள்ளை
மெல்லவே தந்தியடிக்கக் கலைக்டரும்
மேவும் போலீஸ் காரர் தான் வரவே
கெட்டிக்காரர் சுத்துப் பட்டி மறவர்க்கும்
கிள்ளாக்கு வட்டிப் பிள்ளை அவர்
அட்டி இல்லாமல் அனைவரும் வந்து
அழகாய்த் திருவிழாத் தான் நடத்த
வந்த தேவ மாரைக் கொள்ளை செய்தாரென்று
வல்ல நாடார்கள் பிராது செய்தார்
தந்திரமாய் மேஜிஸ்ரட்டார் பிராதை
தள்ளி விட்டார் வெகு துல்லியமாய்
நாராயண சாமி பிள்ளை டிப்டி மேஸ்திரி
நியாய வழக்கைத் தான் உரைத்தார்
தோரணையான அதிகாரத்தால் கட்சி
தோன்றா திருந்தது சில காலம்
வல்ல அதிகாரி போன பின்பு-ஜூலை
வளரும் 18-ல்
மெள்ளவே நாடார்கள் கோயிலுக் குள்ளேதான்
மேவிட எண்ணம் துணிந்தாரே
ஆலயத்துக்குள் புகும் போது வெண்டர்
ஆறுமுகம் பிள்ளை மற்றவரும்
ஆலயம் தேடி ஈசன் சன்னதி
வழி மறித்துக் கொண்டார் அந்நேரம்
அன்று காளியம்மன் நந்தவனத்தை
அழித்தார் தேவமார்கள் எல்லோரும்
சென்று நாடார்களைக் கொள்ளை செய்வோமென்று
சிந்தனை செய்தும் இருந்தாரே
இந்தப்படி சிலர் செய்திடவே வெண்டர்
பிள்ளை முதலான மற்றவரும்
சென்றுமே அந்தக் கவர்ன் மெண்டாருக்கும்
தெரியாத ரிக்கார்டு தான் முடித்தார்.
நாடாக்கமார்கள் கொடுத்த பிராதுகள்
நன்றாச்சு கட்சி இரண்டாச்சு
வாடாதருள் பெற்ற கோயில் அடைத்துமே
வாழ் நகர் விட்டுச் சிலர் போனார்
வெள்ளாளர் நாயக்கர் செட்டிமார்கள் அவர்கள்
வேதியர் பஞ்சமச் சாதியர்கள்
துள்ளின மாடு பொதி சுமக்கும்
என்று சொல்லிய பழமொழி போல்
இந்த விதமிங்கு தானிருக்கக் கலி
இன்னொன்று செய்தானே மாபாவி
சந்தமுள மாஜிஸ்திரார் கோர்ட்டினில்
சாணார் கமுதியில் தான் நடக்க
ஆயிரம் பேருக்கு நாடார்
ஆலயத்துக்குள் வந்திருந்து
வாசல் வழியாய் வந்து புகுந்து கொண்டோம் என்று
வழக்கும் என்ற கை முழுக்கும் இட்டார்
அன்று முதல் கோயில் அடைபட்டுக் கொண்டது
அய்யோ ஆயிரம் காலத்து மாபாவி
சென்று சிவகாசி பட்டணத்தவர்கள்
செய்ததைக் கேளுங்கள் மானிடரே
சுத்துக் கிராமத்து நாடார்கள் செய்திட்ட
தொல்லைகளும் சில சொல்லுகிறோம் :
எத்து களாய்ச் சில சொத்துக்களை
ஏமாத்தம் செய்தார் சாலை ஓரம்
நாயக்கர் கம்பள மீனம் பட்டி வழி
நாடிய கைம் பெண் ஒருத்தி
மத்தியானத்தில் ஒருத்தியைக் கொன்றானாம்
மூவர்கள் நாடார்கள் கொலை செய்த கைதிக்கு
ஏழுவருடம் கொடிய தண்டனைகள் தான் முடித்து
உலகில் சுத்துப் பட்டி நாயக்கர் தேவர்க்கும்
ஓங்கிய கோபம் தணியவில்லை
மாரினேரி ஓரம் பள்ளரைக் கொலை யொன்று
பத்து மணிக்குச் செத்ததனால்
காரியம் இல்லாக் குடும்பர்க்குக்
கோபம் இருந்தது சில நாளாய்
ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி
எனும் சிவகாசி மறவர் வாய்ப்புடன்
கடை கட்டும் அந்த வேலை வகுத்தார்
நாடார் விரோதங் கொண்டு
நாடார் சிலபேரும் கடைக் கெட்ட விடாமல்
தடுத்துக் கொண்டு
சண்டை பேட்டையில் தாக்கினான் அக்கினி
ஊக்கமாய் வல் உலகனும் மறவரும் சேர்ந்துமே
வன்மை நாடார்களைத்தான் விரட்டி மெல்லவே
காளியம்மன் பேட்டையில் தீ வைத்து
வேடிக்கை செய்தார் அந்நேரம்
சிங்கக்குட்டி ரெங்கா ராவுத்தர் பெற்றிடும்
செகு முகம்மது காசியும்
சங்கையில்லாமல் வாள் ஆயுதம் கொண்டார்
சாடின நாடார்கள் ஓடிவிட்டார்
வட்டார வழக்கு: கிள்ளாக்கு-கிளார்க்கு ; மாஜிஸ்திரார்-மாஜிஸ்டிரேட் ; கெட்ட-கட்ட.
குறிப்பு : இப்பாடல் நாடார்களுக்கு விரோதமான கட்சியார் எழுதிய பாடல்.
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
------------