சூனியக் குகையில் மந்திராலோசனை

bookmark

உபாயவஜ்ரன் தெரிவித்துக் கொள்ளுகிறது:-
பிறகு நள்ளிரவில், காரிருள் நேரத்திலே நானும் கரடிச்சாத்தானுமாக நாகமலையிலுள்ள சூனியக் குகையில் போய் இருந்து கொண்டு ஆலோசனை செய்யலானோம். எடுத்தவுடனே சாத்தான் தக்ஷிணை விஷயம் பேசினான். கையிலே கொண்டு போயிருந்த வஸ்துவை அவன் மடியில் வைத்தேன். அதை உடனே ஒரு பொந்துக்குள்ளே சென்று நுழைத்து வைத்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தான். பிறகு கொஞ்சம் பிணங்கத் தொடங்கினான். "துஷ்ட நிக்ரஹத்திலே கூட ஒரு வைப்பு வரம்பிருக்க வேண்டும். ஸ்வாமித் துரோகம் செய்யலாகாது. வீட்டுமனும், துரோணனும் உள்ளத்தில் பாண்டவரை உகந்தாலும், உயிரைத் துரியோதனனுக்காக இழந்தனர். ஆதலால் தண்டி ராஜனுடைய சரீரத்துக்கு ஹானி வராதபடி என்னாலாகவேண்டிய உதவியைக் கேட்டால் நான் செய்வேன்" என்றான். 

"தண்டிராஜனை எங்கள் நாகமலையிலுள்ள காசுக் குகையிலே கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்" என்றேன்.

"சீச்சீ! கோழைகளா!" என்றான்.

வாளை உருவினேன்.

கும்பிட்டு மன்னிக்கும்படி கேட்டான். பிறகு "அந்தக் காரியம் செய்யமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

"ஹோமத்துக்கு வருவானா?" என்று கேட்டேன்.

"வருவான்" என்றான்.

"உடன் வரும் படை எத்தனை?" என்று கேட்டேன்.

"பரிவாரமாகப் பத்துப் பன்னிரண்டு புலி நாய்கள் வரும். படை வராது" என்றான்.

"என்னுடன் சிநேகப்படுத்தி வைப்பாயா?" என்று கேட்டேன்.

"செய்கிறேன்" என்றான். 

"கோள் வார்த்தை ஏதேனும் தண்டிராஜன் செவியில் எட்டுவதாக இருந்தால் உனக்கு உயிர்ச் சேதம் நேரிடும்" என்றேன்.

`தக்ஷிணை, தக்ஷிணை`யென்று முணுமுணுத்தான்.

"நானும் தண்டிராஜனும் தனியிடத்தே பேசும்படி நீ செய்வித்தவுடன் உனக்குத் தந்ததில் மும்மடங்கு தரப்படும்" என்றேன்.

இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே திடீரென்று ஏதோ யோசனை பண்ணி என்னை மூச்சைப் பிடித்துக் கொல்லத் தொடங்கினான். 

நான் அவனுடைய அடி வயிற்றிலே எனது பிடிவாளை மூன்றங்குல ஆழம் அழுத்தினேன். கோவென்று கூவிக் கைகளை நெகிழ்த்துக் கொண்டான். நானும் வாளை உருவிக் கொண்டேன்.

உடனே மண்ணைப் பிறாண்டி வயிற்றிலே திணித்து இரத்த மொழுகாதபடி அடைத்துக் கொண்டு, என்னிடம் திரும்பி வந்து, "இதென்ன தம்பி? முத்தமிட வந்தால் அடி வயிற்றில் வாளைக் கொண்டு குத்தினீரே? நியாயமா?" என்று கேட்டான்.

"கை தெரியாமல் பட்டுவிட்டது. மூன்று லக்ஷத்து முப்பது தரம் மன்னித்துக் கொள்ளவேண்டும்" என்றேன்.

அன்றிரவு மந்திராலோசனையை இவ்வளவுடன் நிறுத்திக் கொண்டு குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தானுடைய யாக சாலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிந்தது. 

சக்திவேல்! வீரவர்ம ராஜனே, நானும் அந்தக் கரடிச் சாத்தானும் சூனியக் குகையில் 
வாய்ச் சண்டை கைச்சண்டையாகிப் பிறகு சமாதானப்பட்டு அன்றிரவு அங்கிருந்து வெளிப்பட்டுக் குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தான் வளர்க்கும் ஹோமசாலைக்குத் திரும்பி வந்து, கொஞ்சம் நித்திரை செய்தோம். மறுநாள் பொழுது விடிந்தது. தண்டிராஜன் தனது சைனியத்துடன் நாகமலைப் பாகத்துக்கு வந்துவிட்டான். கரடிச் சாத்தானைத் தனது கூடாரத்துக்குத் தருவித்தான். இவனும் அவனும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையிலே என்னை அழைப்பித்தார்கள். நான் அங்கே போகுமுன்பு ரணகுமாரனிடம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லித் திடப்படுத்தி விட்டுத் தண்டிராஜன் முன்னே சென்றேன். கரடிச் சாத்தானிடம் ஒரு மோதிரத்தைக் காண்பித்தேன். அவன் தனக்கு தாகவிடாய் தீர்த்துவர வேண்டுமென்று முகாந்திரம் சொல்லி வெளியே போனான். நானும் தண்டிராஜனும் தனியே இருந்தோம். நமஸ்காரம் பண்ணினேன். 

"யார் நீ?" என்று கேட்டான். "விகாரனுடைய குமாரன், என் பெயர் உபாய வஜ்ரன். விகார மாமா சொன்னார். அவர் உத்திரவின்படி இங்கு வந்தேன்."

"நாகமலையில் காசுக்குகையில், தங்கக்காசு மகரிஷி என்ற சித்தர் இருக்கிறார். அவர் கல்லைப் பொன்னாக்குவார். அவரிடத்தில் பொன் வாங்கிக்கொண்டு போக வீரவர்மன் வருவான். மேல்படி தங்கக் காசு மகரிஷியை விகார மாமா நம்முடைய கக்ஷிக்கு அனுகூலம் ஆகச் செய்து விட்டார். அவர் வீரவர்மனை மதுவிலே மயக்கி வைப்பார். அவன் களியுண்டிருப்பான். அந்த க்ஷணத்தில் நாம் அங்கே யிருக்க வேண்டும். வீரவர்மனைப் பிடித்துக் கட்டி வந்து விடலாம். இதுவெல்லாம் விகார மாமா சொல்லிக் கொடுத்த ஏற்பாடுகள், சொன்னேன்.” அவன் நம்பவில்லை. யாரையெல்லாமோ கலந்து பேசினான். கரடிச் சாத்தானைக் கலந்து வார்த்தை சொன்னான். 

பிறகு மாலையில் என்னை மறுபடி அழைப்பித்து உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்று சொன்னான். நான் அவர்கள் குலத்து மூலமந்திரத்தை உச்சரித்தேன். உடனே பகவான் கிருஷ்ணனை ஸ்மரித்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொண்டேன். நம்முடைய மகா சக்தி மந்திரத்தை அதன் பின் ஸ்மரித்தேன். அவனுக்கு நம்பிக்கை பிறந்து அவனுடன் ஐந்து பேரைச் சேர்த்துக் கொண்டு காசுக் குகைக்கு வந்தான். அங்கு ரணகுமாரன் ஒருவனே ஐந்து பேரையும் அடித்துத் துரத்திவிட்டு தண்டிராஜனையும் குண்டுக் கட்டாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு வந்தான்" என்றது. 

"இங்ஙனம் உபாயவஜ்ரன் என்ற நரியின் வார்த்தையைக் கேட்டு மிகவும் மெச்சிச் சிங்கம் தனது சபையைக் கலைத்து விட்டது. பிறகு சிறிது காலத்துக்கப்பால் மறுபடி சண்டை தொடங்கிற்று" என்று விவேக சாஸ்திரி தன் மக்களிடம் சொல்லி வரும்போது, "தண்டிராஜனைப் பிடித்துக் கைதியாக்கின பிறகு சண்டை எப்படி நடக்கும்?" என்று அவருடைய மூன்றாவது குமாரனாகிய ஆஞ்சனேயன் கேட்டான்.

அப்போது விவேக சாஸ்திரி சொல்லுகிறார்:-

தண்டி பிடிபட்டான் என்ற செய்தி தெரிந்த உடனே பேய்க் காட்டில் ராஜ்யப் புரட்சி உண்டாகிக் குடியரசு நாட்டுக்குக் கரடிச் சாத்தானைத் தலைவனாக நியமித்தார்கள். சகோதரத்வம், சமத்வம், சுதந்திரம் என்ற மூன்றையும் தந்திரமாகக் கரடிச்சாத்தான் ஊர்தோறும் பறையறைவித்தான். இந்தச் செய்தி தெரிந்த வீரவர்மன் தனது படையை அனுப்பிக் கரடிச் சாத்தானைப் பிடித்து வரும்படி செய்தான். கரடியின் வாலை யறுத்து வேறொரு காட்டுக்குத் துரத்திவிட்டான். தண்டியின் தம்பியாகிய உத்தண்டியைக் குடியரசின் தலைவனாக நியமனம் செய்தான். தண்டியைப் பொன்னங்காட்டுக் கோட்டையிலே கைதியாக வைத்துக் கொண்டான்.

பொன்னங்காட்டில் ஒரு நரிக் கூனி உண்டு. அவள் பெயர் நரிச்சி நல்ல தங்கை. அந்த நரிச்சி நல்லதங்கையானவள் வீரவர்மன் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் அரண்மனையில் ஏவல் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் வீரவர்மன் விளையாட்டாகக் கல் வீசிக்கொண்டு இருக்கையிலே, ஒரு கல் நரிச்சி நல்லதங்கையினுடைய முதுகில் வந்து விழுந்து விட்டது. நல்ல தங்கையின் முதுகு அதுமுதல் ஒடிந்துபோய் அவளுக்குக் கூனிச்சி நல்லதங்கை என்ற பெயர் உண்டாயிற்று. ஆஹா! இப்படி இவளை முதுகை ஒடித்து அலங்கோலமாகச் செய்தோமே என்ற பச்சாதாபத்தால் வீரவர்மன் அவளிடம் மிதமிஞ்சின தயை செலுத்தினான். `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.` அவள் எவ்விதமான குற்றங்கள் செய்த போதிலும், நீதிப்படி தண்டிக்காமல் அரைத் தண்டனை, கால் தண்டனையாக விட்டு வந்தான். அவள் இவனை க்ஷமிக்கவேயில்லை. இவனுக்குத் தீங்கு செய்வதையே விரதமாகக் கொண்டு வந்தாள். அவள் பெரிய தந்திரி. வீரவர்மனுக்குக் கெடுதி சூழ்ந்து கொண்டே காலத்தைக் கருதிக் காத்துக் கொண்டிருந்தாள். காலமும் அனுகூலமாக வாய்ந்தது. 

பேய்க்காட்டு நாயகனாகிய உத்தண்டி தனது தமையன் ஸ்தானத்தில் தானே அரசனென்று சொல்லி வீரவர்மன் மீது போர் தொடுத்தான். ராஜ்யத்தை இத்தனை சுலபமாக இழந்த தண்டி மூடனைக் குடிகள் வெறுத்து உத்தண்டியை அரசனாகக் கொண்டு பேய்க்காட்டை அவமதிப்புக் கிடமாகச் செய்த வீரவர்மனையும் தண்டிக்கும் பொருட்டு உத்தண்டி தொடுத்த போரில் மிகவும் மகிழ்ச்சி கொண்டாடினர். 

இத்தருணத்தில் கூனிச்சி நல்லதங்கை ரகஸ்யமாக விகாரனிடத்திலும், 
தண்டிராஜனிடத்திலும் கலந்து தனித்தனியாக சம்பாஷணைகள் செய்து கொண்டு, பொன்னங் காட்டுக் கோட்டை, கொத்தளம், படை பரிவாரங்களைக் குறித்துத் தனக்குத் தெரிந்த ரகஸ்யங்களைச் சொல்லி உத்தண்டிக்கு உதவி செய்யும் பொருட்டாகப் பேய்க்காட்டுக்குச் சென்றாள். இங்ஙனம் விவேக சாஸ்திரி தம்முடைய மக்களுக்குக் கதை சொல்லி வருகையிலே ஆஞ்சனேயன் கேட்கிறான்:-

"பக்திமான் பிழைகளும் செய்வானோ?"

விவேக: "மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்."

ஆஞ்ச: "கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?"

"விவேக: "பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். அந்த நிலைமையை வீரவர்மன் பெறவில்லை."

ஆஞ்ச: "கூனியினுடைய மனம் வீரவர்மனைக் கண்டு ஏன் இளகவில்லை?"

"சாக்ஷாத் பகவான் ராமாவதாரம் செய்து பூமியில் விளங்கினான். அந்தக் கூனி மனம் அவனிடம் அன்புறவில்லை; மகிமையைக் கண்ட மாத்திரையில் எல்லாருடைய நெஞ்சும் வசமாய் விட்டது. சூரியனைக் கண்டவுடன் குருவிகள் பாடிக்கொண்டு வெளியே பறக்கும்; ஆந்தைகள் இருட்டுக்குள்ளே நுழையும், எல்லா மனிதரையும் வசப்படுத்தக்கூடிய தெய்வ பக்தி இதுவரை மனுஷ்ய ஜாதியில் காணப்படவில்லை. இனி மேல் தோன்றக் கூடும்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.

விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "கேளீர், மக்களே, முன்பு நரிச்சி நல்லதங்கை என்பவள் வீரவர்மனிடம் இருந்து ஓடிப்போய்ப் பேய்க்காட்டில் உத்தண்டி ராஜனைச் சரண் புகுந்தாள். அவனிடம் அந்த நரிச்சி பொன்னங்காட்டு ராஜ்யத்தின் சேனாபலம், மந்திரி பலம், பொருள் வலி முதலிய ரகஸ்யங்களை யெல்லாம் தெரிவித்தாள். அப்போது இரண்டு ராஜ்யங்களுக்கும் யுத்தம் தொடங்கி விட்டது. அந்த யுத்தத்தில் வீரவர்மன் பக்கத்தில் இருந்த சைந்யங்கள் பின்வருமாறு:- 

புலிப்படை ஆயிரம், கரடிப்படை ஆயிரம், ஓநாய் ஆயிரம், யானை ஆயிரம், ஒட்டகை ஆயிரம், சுமை தூக்குகிற கழுதை பதினாயிரம், உளவு பார்க்கிற காக்கை இரண்டாயிரம், மேலும் பாம்புப்படை பதினாயிரம், கழுகுப்படை மூவாயிரம், பருந்துப் படை பதினாயிரம்.

எதிர்ப்பக்கத்தில் (உத்தண்டி பக்கத்தில்) இந்த சைனியத்திலே எட்டிலொரு பங்குகூடக் கிடையாது.

எனவே முதல் இரண்டு ஸ்தலங்களில் உத்தண்டியின் படைகள் முறியடிக்கப்பட்டன. உத்தண்டி மிகவும் விசனத்துடன் தனது மாளிகையில் உட்கார்ந்து யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான். அப்போது நரிச்சி நல்லதங்கையை அழைத்து யோசனை கேட்போம் என்ற எண்ணங்கொண்டவனாய் அவளைக் கூட்டிவரச் செய்தான். அவ்விருவரும் சம்பாஷணை செய்கிறார்கள்.

உத்தண்டி சொல்லுகிறான்: - "நீ உளவுகள் சொல்லியும், நமது சேனாபதி திறமை யில்லாமையால் இரண்டு ஸ்தலங்களில் வந்து படைகள் தோற்று விட்டன. என்ன செய்வோமென்பது தெரியவில்லை. நான் உன்னையே நம்பியிருக்கிறேன். என்னுடைய சைந்யம் வீரவர்மனுடைய சைந்யத்தில் எட்டில் ஒரு பங்குகூட இல்லையென்பது தெரிந்தும் உன்னுடைய வலிமையையும் நம்பி நான் இந்தப் போரில் மூண்டேன். இத்தருணத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நீதான் சொல்லவேண்டும்" என்றான். 

அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: - "ராஜாதி ராஜனே, உத்தண்டி பூபாலனே, சத்ரு சிங்க மண்டல விநாசக ஜய கண்டனே, கேளாய்; நானோ ஸ்திரீ. அதிலும் தங்களைப் போன்ற சிங்கக் குலமில்லை.நரிக் குலம். முதுகு புண்பட்டவளாய்த் தங்களிடம் சரணமென்று வந்தேன். எனக்குத் தெரிந்தவரை பொன்னங்காட்டு சைந்யம் படை முதலிய உளவுகளெல்லாம் சொன்னேன். தங்களுடைய சைந்யம் அளவில் சிறிதாக இருந்தபோதிலும் தந்திரத்தால் வீரவர்மனுடைய படைகளை வென்று விடலாமென்று தாங்களும் தங்களுடைய முக்கிய மந்திரி, பிரதானிகளும் சேனாபதிகளும் இருந்து யோசனை செய்து முடித்தீர்கள். இப்போது என்னிடம் யோசனை கேட்கிறீர்கள்! நான் எப்படிச் சொல்வேன்? மேலும், ஒரு வேளை நான் யுக்தி சொல்லி அதனால் நீங்கள் ஜயிப்பதாக வைத்துக் கொண்ட போதிலும், பிறகு என்ன கைம்மாறு தருவீர்கள்? அதைச் சொன்னால் நான் எனக்குத் தெரிந்தவரை யோசனை சொல்லுகிறேன். ஜயத்துக்கு நான் பொறுப்பில்லை. ஒரு வேளை நான் சொல்லும் யோசனையால் வெற்றி கை கூடினால் எனக்கு நீர் என்ன பிரதியுபகாரம் செய்வீர்? அதைத் தெரிவித்தால், பிறகு நான் என்னால் கூடிய யோசனை சொல்லுகிறேன்" என்றது. 

அப்போது உத்தண்டி சொல்லுகிறது: "நீ எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றது.

அப்போது நரிச்சி நல்லதங்கை: "ஹே, உத்தண்டி ராஜனே, நான் சொல்லும் யோசனையால், உனக்கு வெற்றி கிடைத்தால், நீ என்னை மணம் செய்து கொண்டு உன்னுடைய பட்டது ராணியாக்குவாயா?" என்று கேட்டது. 

இதுகேட்டு உத்தண்டி கோபத்துடன், "சீச்சீ மூட நரியே, நீ வீட்டில் ஏவல் தொழில் செய்தவள். கூனிச்சி, கிழவி. நாமோ ராஜகுலம். நல்ல யௌவன தசையில் இருக்கிறோம். நம்முடைய அந்தப்புரத்தில் இருக்கும் சிங்கச்சியோ கடம்ப வனத்து ராஜனாகிய மகாகீர்த்தியுடைய குண்டோதரன் மகள் காமாக்ஷியென்று பூமண்டலமெங்கும் கீர்த்தி வாய்ந்தவள். அவளைப்போல் அழகும் கல்வியுமுடைய பெண் சிங்கச் சாதியில் எங்குமே கிடையாது. இதையெல்லாம் உணர்ந்தவளாகிய நீ என்னிடம் என்ன மூடவார்த்தை சொன்னாய்? உளறாதே. நீ பெண்ணாகையால் விட்டேன். ஆணாக இருந்து இப்படி வார்த்தை சொன்னால் இதற்குள் தலையை வெட்டிப் போட்டிருப்பேன்" என்று சொல்லிக் கர்ஜனை புரிந்தது.

அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "கேளாய் உத்தண்டி ராஜனே, எனக்கு உன்னை மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற உட்கருத்து கிடையாது. சும்மா, உன்னைச் சோதனை போடுவதற்காகப் பேசிய வார்த்தையே யன்றி வேறொன்றுமில்லை. சிங்கச் சாதிப் பெண்களுக்குள்ளே அழகில் மாத்திரமேயல்லாது கல்வியிலும் சிறந்தவளாகிய காமாட்சி தேவி (சிங்க ராணி)யை மனையாளாகக் கொண்ட நீ இப்படிப்பட்ட ஆபத்து நேரத்தில் அவளிடம் யோசனை கேட்காமல், கேவலம் ஒரு கிழ நரிச்சியிடம் கேட்க வந்தாயே, அது பிழை என்பதை உனக்குத் தெரிவிக்கும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேன். 

உன்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எனக்குக் கனவிலே கூடக் கிடையாது. உன்னைக் கேலிபண்ணி உன்னுடைய ராணி காமாட்சியை நீ இந்த யுத்த பயத்தினால் மறந்திருக்கும் செய்தியை நினைப்பு மூட்டி உன்னை அவளிடம் யோசனை கேட்கும்படி தூண்டிவிடும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேனேறொயல்லாது வேன்றுமில்லை. 

ஆனாலும் உன் வார்த்தைகளில் இருந்த சில அசம்பாவிதங்களை நீக்க விரும்புகிறேன். நரி ஜாதி ஸ்திரீயை சிங்க ஜாதி புருஷன் மணம் செய்வது கூடாதென்றா சொல்லுகிறாய்? ரிஷி மூலம், நதி மூலம் விசாரணை செய்யக் கூடாதென்று கேள்விப்பட்டிருக்கிறாயா? மேற்குல ரிஷிகள் கீழ்க்குல ஸ்திரீகளை மணந்து பல ரிஷி வம்சங்கள் மங்கியிருக்கின்றன. பகவான் ஸ்ரீமந் நாராயணன், அகண்டாதீதன், சூக்ஷ்மாத்மா, புருஷோத்தமன், உலகத்துக்கு மூதாதை. அவனே ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் மகளையும், டில்லி பாதுஷா மகளையும் மணஞ் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில்கிறான். ஹே, உத்தண்டி ராஜனே, ஜாதி பேதமா கற்பிக்கிறாய்? சிங்கம் மேல் ஜாதியென்றும், நரி கீழ் ஜாதியென்றும் நீ நினைக்கிறாயா? அப்படித்தான் அந்த மூடனாகிய வீரவர்மன் நினைத்தான். அது நிற்க.

"ஹே, உத்தண்டி ராஜனே, வயதில் மூத்த பெண்ணை இளைய பிள்ளை மணம் செய்து கொள்ளத் தகாதென்று சொன்னாய்! அது மகா மூடத்தனமான வார்த்தை! புதிதாக வருகிற ஒவ்வொரு இந்திரனுக்கும் ஆதிமுதல் பழைய இந்திராணிதான் மாறாமல் இருந்து வருகிறாள். கூனிச்சி என்று சொல்லி என்னை நகைத்தாய். உடம்புக்கா பிரேமை செய்கிறோம். அரசனே, உயிருக்கு அன்பு செலுத்துகிறோம். இதுவெல்லாம் நீ அறியாத விஷயம். இது நிற்க.

"உத்தண்டி ராஜனே, இவ்வளவுக்கு மேலும் உனக்கு வெற்றி பெற உபாயங் கற்றுக் கொடுத்தால் நீ எனக்கு வேறே என்ன கைம்மாறு தருவாய்?" என்று கேட்டது.

அப்போது உத்தண்டி ராஜன் சொல்லுகிறது:- "நீ விவாகத்தைத் தவிர வேறென்ன தானம் கேட்டபோதிலும் கொடுப்பேன்" என்றது. 

அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறது - "நீ முதல் தடவையும் இப்படித்தான் எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றாய். பிறகு வாக்குத் தவறினாய். நீ மறுபடியும் வாக்குத் தவறலாம் என்ற சந்தேகம் எனக்கு ஜனிக்கிறது" என்றது. 

அப்போது உத்தண்டி "பயப்படாதே! வேறென்ன கேட்டாலும் தருகிறேன்," என்றது. 

"உன்னுடைய ராஜ்யத்தில் பாதி கொடுப்பாயா?" என்று நரிச்சி நல்லதங்கை கேட்டாள். 

உத்தண்டியும் இதைக் கேட்டு மனவருத்தமடைந்தான். ராஜ்யத்தில் பாதி கொடுக்க அவனுக்குப் பெரும்பாலும் சம்மதமில்லை. ஆனாலும் என்ன செய்யலாம்? தனது சேனாபதிபதிகள் இனியேனும் போரில் வெல்வார்களென்ற நம்பிக்கை அவனுக்குக் கிடையாது. எப்படியேனும் நரிச்சி நல்லதங்கை ஒரு வழி கண்டுபிடித்துச் சொல்வாளென்றும் அதனால் தனக்கு வெற்றியேற்படலாமென்றும், அவனுக்கு நம்பிக்கையிருந்தது. மேலும் இரண்டாம் முறை வாக்குத் தவற வெட்கப்பட்டான். ஆதலால் அவளிடம் "நீ சொல்லுகிற உபாயத்தை அனுசரித்து அதனால் எனக்கு வெற்றி கிடைத்தால் உனக்குக் கட்டாயம் என் ராஜ்யத்தில் பாதி தருவே"னென்று வாக்குக் கொடுத்தான்.

அப்போது நரிச்சி சொல்லுகிறாள்:-

"கொலம்பஸ் கோழி முட்டையை உடைத்துக் காட்டின மாதிரி வந்து சேரும்" என்றாள்.

"அதென்ன வர்த்தமானம்?" என்று உத்தண்டி என்ற சிங்கராஜன் கர்ஜனை செய்தது.

நல்ல தங்கை சொல்லுகிறாள்: "ஒரு கோழி முட்டையை - அடபோ, கொலம்பஸ் என்கிற பூகோளப் பேர்வழியும் அவனோடு சுமார் முப்பத்தேழு சிநேகிதர்களும் ஒரு நாள் போஜனம் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது கொலம்பஸ் கேட்டான்: - "இங்கே யாராவது ஒரு கோழி முட்டையை மேஜையின் மேல் யாதொரு ஆதாரமுமில்லாமல், அசைவில்லாமல் நட்டமாக நிறுத்தி வைக்கக் கூடுமா? நான் செய்வேன். வேறு யார் செய்வார்?" என்றான். 

அப்போது கொலம்பஸ் உடன் இருந்த நண்பர் பலவிதங்களில் முயற்சி பண்ணியும் கோழி முட்டையை மேஜை மேல் ஆதாரமில்லாமல் நட்டமாக நிறுத்தச் சாத்தியப்படவில்லை. கடைசியாக அவர்களெல்லாம் தோல்வியை ஒப்புக்-கொண்டார்கள். 

அப்போது கொலம்பஸ் எழுந்து நின்றான். கோழி முட்டையைக் கையில் எடுத்தான். ஒரு ஓரத்தைச் சீவிவிட்டு, மேஜைமேல் நட்டமாக நிறுத்திவிட்டான். நண்பர்களிலே பலர் அவனுடைய சமத்காரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். 

ஆனால் சில மூடர்கள் மாத்திரம் `ஓகோ இதென்ன ஏமாற்றுகிற மாதிரி. கோழி முட்டையில் ஓரத்தைத் துளிகூட உடைக்காமல் நிறுத்தவேண்டுமாக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். உடைத்து நிறுத்தலாம் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் அப்போதே செய்திருக்கமாட்டோமா?` என்று சொல்லி முணுமுணுத்தார்களாம்" என்று நரிச்சி சொன்னாள். 

"இவ்வளவுதானா?" என்று உத்தண்டி கேட்டான்.

"ஆமாம், இவ்வளவுதான்" என்று நரிச்சி சொன்னாள். 

அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "அப்படியானால் கொலம்பஸ் சுத்த அயோக்யன்! அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட சிநேகிதர்கள் பரம மூடர்கள்" என்றான். 

அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "அந்த மாதிரிதான் எனக்கும் சொல்லிப் பாதி ராஜ்யம் கொடுப்பதாக வாக்களித்ததை அழித்துப் போடுவாயோ?" என்றாள்.

உத்தண்டி ராஜன்:- "மாட்டேன்! நீ யோசனை சொல்லு. அது எத்தனை சாமான்யமாகப் பின்பு புலப்பட்ட போதிலும் அதனால் வெற்றி கிடைப்பது மெய்யானால் உன்னிடம் நன்றி மறக்காமல் உனக்குப் பாதி ராஜ்யம் கொடுத்து விடுவேன்" என்றது.

அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "உத்தண்டி மகாராஜனே, தங்களுடைய மாமனார் குண்டோதர ராஜனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். அதில் வேறொன்றும் எழுதக்கூடாது. ஆபத்து சமயம். சைந்யம் வேண்டும். நரிச்சி நல்லதங்கையை நம்பு என்று மூன்று வரி மாத்திரம் எழுதினால் போதும். இப்போதே எழுதிக்கொடு. நான் அப்பால் சைந்யம் கொண்டு வந்து வீரவர்மனுடைய மமதையையும், அகங்காரத்தையும் தொலைக்கிறேன். உன் பெயரை, சிங்க சரித்திரத்தில் எக்காலத்திலும் அழியாமல் நிறுத்தி வைக்கிறேன்" என்றாள். 

அப்படியே உத்தண்டி ஓலை எழுதி நரிச்சி கையிலே கொடுத்தான். அதை வாகிக் கொண்டு கூனிச்சியாகிய நரிச்சி நல்லதங்கை பல்லக்குப் பரிவாரங்களுடன் உத்தண்டி ராஜனுடைய ஸ்தானாதிபதி என்ற பதவியில் மாமனார் குண்டோதர ராயசிங்க மகா சிங்கருடைய ராஜதானிக்கு வந்து சேர்ந்தாள்.

இது நிற்க.

பேய்க்காட்டில் உத்தண்டி தன் மனைவியாகிய சிங்கச்சி காமாக்ஷியினிடம் போய் நடந்த வர்த்தமானத்தையெல்லாம் சொன்னான். அவள் மிகவும் கோபத்துடன்:- "என்னுடைய பிதாவிடமிருந்து சைந்ய பலம் தருவிக்க வேண்டுமானால், அதற்கு என் அனுமதியில்லாமல் நரிச்சி நல்லதங்கையை அனுப்பினால் நடந்துவிடுமென்று நீ நினைக்கிறாயா?" என்றாள்.

அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "உனக்கு ராஜ நீதியே தெரியவில்லை; காமாக்ஷி, ராஜ்ய அவசரத்தைக் கருதி இரண்டாம் பேரிடம் சொல்லாமல் எத்தனையோ காரியம் செய்ய நேரிடும்" என்றான்.

"ராஜ்ய அவசரத்தைக் கருதிச் சரியான மந்திராலோசனையில்லாமல் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தோற்றுப்போவதே வாடிக்கையாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள்" என்று காமாக்ஷி சொன்னாள்.

"ஆபத்து சமயத்திலே ஏசிக் காட்டுவது பாவிகளான ஸ்திரீகளுடைய வழக்கம்!" என்று உத்தண்டி சொன்னான். 

"நாலு சாஸ்திரம் படிக்கப்போன பிராமணப் பிள்ளையின் கதை தெரியுமா?" என்று சிங்கச்சி காமாக்ஷி கேட்டாள்.

"நான் ஆபத்தான நிலைமையில் இருக்கும்போது நீ கதை சொல்ல வருகிறாயா! அதென்ன?" என்று உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.

"வீரவர்மன் தன்னுடைய பத்தினியிடத்தில் தேவதா விசுவாசம் வைத்திருப்பதாகவும் அவளை எப்போதும் சிடுசிடுப்பதே கிடையாதென்றும், தனது பிரதான ராஜ்யகாரியங்களில் எதையும் தனது பத்தினியாகிய மாகாளியிடம் கேட்காமல் செய்வதில்லையென்றும், முன் அந்த சமஸ்தானத்திலிருந்து வந்த கரடி ஸந்நியாசி ஒருவர் சொன்னாரே; ஞாபகமிருக்கிறதா?" என்று காமாக்ஷி கேட்டாள்.

"நான் சங்கடக் குழியில் விழுந்து வெளியேற வழி யறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் நீ சத்துருவின் புகழ்ச்சியை என் செவியில் பேசுகிறாயே உனக்குத் தகுமா?" என்று உத்தண்டி வினவினான்.

"ஸ்திரீகளை அவமரியாதை பண்ணுவோர் மனிதரில் மிருகங்கள் என்று சண்டி நீதி சொல்லுகிறதே, அது ஞாபக முண்டா?" என்று காமாக்ஷி கேட்டாள்.

"நான் இப்போது எவ்விதமாகவும் அவமதிப்புச் செய்யவில்லை" என்றான் உத்தண்டி.

"என்னிடம் ஒரு வார்த்தைக்கூடக் கேளாமல் நீ என்பிதாவுக்கு சைந்யம் வேண்டுமென்ற பிரார்த்தனை அனுப்பினாயே! அது என்னை அவமதித்ததாக மாட்டாதா?" என்றாள் காமாக்ஷி. 

"அது போனால் போகிறது. இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பேசுவோம்" என்று உத்தண்டி சொன்னான்.

"மேல் நடக்க வேண்டிய காரியம் யாதோ?" என்று சிங்கச்சி கேட்டது.

அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "மேல் நடக்க வேண்டியது யுத்தம். மேல் நடக்க வேண்டியது, ஜயம்!"

"போர் எந்த இடங்களில் தோற்றது? போர் தோற்ற சேனாபதிகளின் பெயர் என்ன?" என்று சிங்கச்சி கேட்டது.

"நாகமலையிலே தோற்றோம். வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றோம். நாகமலையில் தோற்ற சேனாபதி கரடி வேலப்பன், வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றவன் புலி பொன்னம்பலம்" என்று உத்தண்டி சொன்னான்.

"அந்த வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் நாளை சூரியோதயமாய் ஒரு ஜாமத்துக்கு முன்பு சுட்டுக் கொன்று விடவேண்டும்." என்று சிங்கச்சி காமாக்ஷி சொன்னாள்.

உத்தண்டி: "சாத்தியப்படாது" என்றான். 

அவள் "ஏன்?" என்றாள். 

அவன்: "அவ்விருவரும் பெரிய வம்சத்துப் பிள்ளைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் தேசத்துப் பிரபுக்கள் நமக்கு விரோதமாகத் திரும்புவார்கள்" என்றான்.

அவள்; " இப்போது இந்த தேசத்தில் உமக்கு அனுகூலமாக எத்தனை பிரபுக்கள் இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.

அப்போது உத்தண்டி: "என் நாட்டிலுள்ள பிரபுக்கள் அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்களே. எதிர்க்கட்சி யாருமே கிடையாது!" என்றான். 

"நாளைப் பொழுது விடிந்து ஒரு ஜாமத்துக்கு முன்பு வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் சுட்டுக் கொன்று விடவேண்டும். அது செய்தால், மேலே ஜயத்துக்குரிய உபாயங்கள் நான் சொல்லுகிறேன்" என்று காமாக்ஷி சொன்னாள்.

"நான் ஒரு போதும் அதற்கு இணங்க மாட்டேன்" என்றான் உத்தண்டி.

அப்போது உத்தண்டி என்ற சிங்க ராஜனிடம் பத்தினியாகிய சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறது: "ஸ்திரீகளை அவமதிப்புச் செய்வோன் ஆண்மக்களுக்குள்ளே முதல் வீரனாக விளங்க மாட்டான். பெண்ணைத் தாழ்வாக நினைப்பது அநாகரிக ஜாதியாருடைய முதல் லக்ஷணம். 

நீ என் வார்த்தையைத் தட்டுகிறாய்; உனக்குச் சண்டை ஜயிக்காது. நீ என்னை எப்போதும் அலட்சியம் பண்ணுகிறாய். 

எனது பிதா உனக்குத் துணைப்படைகள் என்னையறியாமல் அனுப்பும்படி செய்ய முடியுமென்று நினைத்தது உன் ஆலோசனைக் குறைவைக் காட்டுகிறது. உன்னை அழிய விடுவதில் எனக்குச் சம்மதமில்லை. 

நீயோ மதிக் குறைவினாலும், மூட மந்திரிகளின் உபதேசத்தாலும், மகா வீரனாகிய வீரவர்மனைப் பகைத்துக் கொண்டாய். என்னிடத்தில் மந்திராலோசனை கேட்கமாட்டாய்; நரிச்சி நல்லதங்கையிடம் கேட்பாய்! அந்தக் கூனற் கிழவிக்கு மாலையிடச் சம்மதப்படவில்லையே! நீ அந்த மட்டில் புத்திசாலிதான்! அவளுக்குப் பாதி யரசு கொடுப்பதாகச் சொல்லி விட்டாய்? உன்னுடைய புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வேன்?" என்றது. 

இது கேட்டு உத்தண்டி சொல்லுகிறான்: "ஆகா! நான் நரிச்சி நல்லதங்கையிடம் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததை உனக்கு யார் சொன்னார்கள்? உன்னுடைய தூண்டுதலின் மேலேதான் அவள் என்னிடம் அப்படிக் கேட்டாளோ?"

காமாக்ஷி: “இல்லை, நீ யன்றோ அவளைக் கூப்பிட்டனுப்பி வார்த்தை சொன்னாய்! நீ இப்படி அழைப்பித்துக் கேட்பாய் என்ற விஷயம் எனக்கு முன்னமே தெரிந்திருந்தா லன்றோ நான் தூண்டி விட்டிருக்கக் கூடுமென்று சொல்லலாம்!”

உத்தண்டி: "பின்னே, உனக்கெப்படித் தெரிந்தது? நான் முந்தியே முதல் நினைத்தேன்; என்னுடைய ஒற்றர்களை யெல்லாம் நீ வசப்படுத்தி வைத்திருக்கிறாய், எனக்குத் தெரியாமல் நீ வேறு தனியாகப் பல ஒற்றர்களை வைத்திருக்கிறாய்.

என் மந்திரிகளிலும் சேனாபதிகளிலும் பெரும்பாலோர் எனக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அதிகமாக உனக்கு அஞ்சி நடக்கிறார்கள். எனக்குத் தெரியாத ஒரு ரஹஸ்ய சங்கத்துக்கு நீ தலைவி யென்று தோன்றுகிறது. உன்னை வஞ்சனை செய்யவேண்டு-மென்ற எண்ணம் எனக்குக் கிடையாது.

ஆனால், என்னுடைய ராஜ்யத்தில் என் வார்த்தைக்கு யாதொரு மதிப்பில்லாமலும் எல்லாக் காரியங்களுக்கும் உன் இஷ்டப்படியாகவும் இருப்பது எனக்கு ஸம்மதமில்லை" என்றான்.

அப்போது சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்: 

“ஓஹோ! என்னிடத்தில் இவ்வளவு பயத்தை மனதில் வைத்துக்கொண்டு, என்னை லஷ்யமும் பண்ணாமல் நீ இருப்பது ஒரு ஆச்சர்யந்தான்; எனக்கு விரோதிகளான வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் ஸேனாபதிகளாக நியமித்தாய், எனக்கு வேண்டிய ஸேனாபதிகளை விலக்கினாய்; போர் தோற்றது. இன்னமும் என்னை அவமதிக்கிறாய். என்னுடைய யோசனை கேட்டபடியால் உனக்கு இந்த ராஜ்யம் கிடைத்தது. பட்டங் கட்டின மறுநாளே நீ நன்றி கெட்டவன் என்பதை நான் கண்டுகொண்டேன்” என்றாள்.

உத்தண்டி: "உன்னை நான் அவமதிக்கவில்லையே" என்றான்.

"அரை நாழிகைக்கு முன்புகூட என்னைத் துரும்புக்கு ஸமானமாக எண்ணி நடத்தினை யன்றோ?" என்றாள் சிங்கச்சி.

"என்ன செய்தேன்?" என்று சொல்லி உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.

“நான் ஒரு கதை சொல்லத் தொடங்கினேன், உனக்கு நல்லறிவு புகட்டும் பொருட்டாக. அதைக் கேட்கக்கூட உனக்குப் பொறுமை யில்லை. என்னைச் சள்ளென்று விழுந்தாய், என்னைக் கண்டால் உனக்கு முகத்தில் கடுகு வெடிக்கிறது. என் வார்த்தை கேட்டால் உனக்குக் காதில் நாராசம் காய்ச்சிவிட்டதுபோல ஆய்விடுகிறது" என்றாள் சிங்கச்சி.

"அதென்னவோ கதை என்றாயே! பெயர் மறந்து போச்சு! ஹாம்! ஹாம்! பிராமணப் பிள்ளை நாலு சாஸ்த்ரம் படித்த கதை! அதைச் சொல்லு, கேட்கிறேன்” என்றான் உத்தண்டி.