பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை

bookmark

சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்:-
"கேளாய் ராஜனே, புருஷனுக்கு ஸ்திரீ உடம்பில் பாதி. நீ என்னை வெறுத்த போதிலும் எனக்கு உன்னைத் தவிர வேறு புகல் கிடையாது. நீ என்னிடம் வைத்திருந்த அன்பையெல்லாம் மறந்து விட்டாலும் என் நெஞ்சு உன்மீதுள்ள அன்பை மறக்கவில்லை. இன்னொரு சிங்கியென்றால் நீ செய்துவரும் அவகாரியத்துக்கு உன்னை முகங்கொண்டு பார்க்கமாட்டாள். நான் ஐயோ பாவமென்று உன்னை க்ஷமிக்கிறேன். ஆயினும், நான் இப்போது கதை சொல்ல ஆரம்பித்தால் நீ பொறுமையுடன் கேட்கமாட்டாய் என்ற சந்தேகம் எனக்கு உண்டாகிறபடியால் இப்போது சொல்ல வேண்டாமென்று யோசிக்கிறேன்" என்றாள்.

உத்தண்டி `பொறுமையுடன் கேட்கிறேன்" என்று சத்தியம் பண்ணினான். 

பிறகு சிங்கச்சி பின் வரும் கதையை உரைக்கலாயிற்று:

"ஓர் ஊரிலே ஒரு பிராமணப் பாட்டியிருந்தாள். அவளுக்கொரு பிள்ளையுண்டு. அந்தப் பிள்ளை வீட்டில் யாதொரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் தண்டச்சோறு தின்பதும் ஊர் சுற்றுவதுமாக இருந்தான். அந்தப் பாட்டி தோசை, இட்லி, முறுக்கு, கடலைச் சுண்டல் வியாபாரம் பண்ணி அதில் வரும் லாபத்தால், குடும்ப ஸம்ரக்ஷணை செய்து கொண்டிருந்தாள். 

அவன் நாளுக்கு நாள் அதிக சோம்பேறியாய் நேரத்தை நாசம் பண்ணிக் கொண்டிருந்தான்.

அப்போது பாட்டி ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு:-"அடா மகனே, ஒரு தொழிலும் செய்யாமல் சும்மா தின்று கொழுத்துக் கொண்டு எத்தனை நாள் இப்படி என் கழுத்தை அறுக்கலாமென்று யோசனை பண்ணுகிறாய்? நான் உயிரோடிருக்கும் வரை எப்படியாவது பாடுபட்டு உன் வயிற்றை நிரப்புவேன். எனக்குப் பிற்காலம் நீ எப்படி ஜீவிப்பாய்? நான் சாகு முன்னே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டுச் சாகலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் பக்கத்துத் தெருச் செட்டியாரிடம் மாசம் ஒரு ரூபாய் சீட்டுப் போட்டுக் கொண்டு வருகிறேன். நீ அந்தப் பெண்டாட்டியை எப்படி வைத்துக் காப்பாற்றுவாய்? சீ, நாயே, ஓடிப்போ, எங்கேனும் வடதேசத்துக்குப் போய் நாலு சாஸ்திரம் படித்துக் கொண்டுவா" என்றாள். 

அந்தப் பையனுக்கு சாஸ்திரம் என்றால் இன்ன பதார்த்தம் என்ற விஷயமே தெரியாது. ஆனாலும் அவன் மனதில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தது. ஆதலால் பெண்டாட்டியைக் காப்பாற்ற சாஸ்திரம் படிக்க வேண்டுமென்று தாயார் சொல்லியதைக் கேட்டவுடன் அவனுக்குச் சாஸ்திரப் பயிற்சியில் விசேஷமான ஆவல் மூண்டது. அன்று பகல் சாப்பிட்டவுடனே தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். போகும் வழியிலே ஒரு பனைமரம் நின்றது.

"எங்கே போகிறாய் அப்பா?" என்று இந்தப் பிள்ளையை நோக்கி அந்தப் பனைமரம் கேட்டது. "நான் சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான்.

அப்போது அந்தப் பனைமரம் சொல்லுகிறது:- "ஓ ஹோ ஹோ; சாஸ்திரமா படிக்கப் போகிறாய்? அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன், தெரிந்துகொள்" என்றது. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.

அப்போது பனைமரம் "நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தைச் சொல்லிற்று. இந்த வாக்கியத்தைப் பையன் திரும்பத் திரும்பத் தன் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே போனான்.

அங்கே ஒரு பெருச்சாளி வந்தது. அந்தப் பெருச்சாளி இவனை நோக்கி, "அடா பார்ப்பாரப் பிள்ளாய், எங்கே போகிறாய்?" என்று கேட்டது. "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்று இவன் சொன்னான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் சொல்லுகிறேன், படித்துக் கொள்" என்று பெருச்சாளி கூறிற்று. பையன் உடம்பட்டான்.

"பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்ற சாஸ்திரத்தை அந்தப் பெருச்சாளி சொல்லிக் கொடுத்தது. இவன் மேற்படி இரண்டு சாஸ்திரங்களையும் வாயில் உருப் போட்டுக்கொண்டே நடந்து சென்றான்.

வழியில் ஒரு குளம் இருந்தது. அதில் இறங்கி ஜலம் குடிக்கப்போனான். நடுக் குளத்தில் ஒரு கோரைப் புல் நின்றது. அது இவனை நோக்கி: - "ஐயரே, எங்கிருந்து வந்தாய்? எந்த ஊருக்குப் போகிறாய்?" என்று கேட்டது. இவன் தன்னுடைய விருத்தாந்தங்களைச் சொல்லி, "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்பிக்கிறேன். படித்துக் கொள்" என்று கோரை சொல்லிற்று. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.

"நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை அது கற்றுக் கொடுத்தது. இவன் மூன்று வாக்கியங்களையும் பாராமல் சொல்லிக் கொண்டு பின்னும் நடந்து சென்றான். அங்கே ஒரு நரி வந்து அவனை நோக்கி:- "எங்கே போகிறாய்? என்ன சங்கதி?" என்று விசாரணை பண்ணிற்று. இவன் "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். 

"ஓகோ! சாஸ்திரம் படிக்கவா போகிறாய்! நல்லது, உனக்கு நான் சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன். தெரிந்து கொள்" என்று நரி சொல்லிற்று. இவன் உடம்பட்டான்.

"ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை நரி போதித்தது. 

இவன் "ஆஹா! புறப்பட்ட தினத்திலே நமக்கு நாலு சாஸ்திரமும் தெரிந்து போய் விட்டதே, என்ன அதிர்ஷ்டமப்பா, நமக்கு; இந்த நான்கு சாஸ்திரத்தையும் மறக்காமல் வீட்டில் தாயாரிடம் போய்சொன்னால் அவள் நமக்குக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுப்பாள்" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே தன் ஊரை நோக்கிச் சென்றான். 

போகும் வழியில் இரவாகி விட்டது. ஊர் நெடுந்தூரத்துக்கப்பால் இருந்தபடியால் இடையே இருந்த ஒரு கிராமத்தில் அவ்விரவு தங்கி, மறுநாட் காலையில் அங்கிருந்து புறப்படலாமென்று நினைத்து, அங்கு ஒரு வீட்டு வாசல் திண்ணையிலே போய்ப் படுத்துக் கொண்டான். விடிய ஒரு ஜாமம் ஆனபோது, இவன், கண்ணை விழித்துக் கொண்டு, தான் படித்த நாலு வாக்கியங்களையும் பாடம் பண்ண ஆரம்பித்தான். அப்போது அந்த வீட்டின் கொல்லைப்புரத்தில் கள்ளர் வந்து கன்னம் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் சத்தம் போட்டுச் சந்தை சொல்லிக் கொண்டிருந்தான். 

முதலாவது: `நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே` என்றான். 

இவன் கூவின சத்தத்தைத் திருடர் கேட்டு "ஓஹோ! நாம் இங்கு நிற்பதைக் கண்டு வீட்டிலுள்ளோரை எழுப்பும் பொருட்டாக எவனோ இப்படிக் கூவுகிறான்" என்றெண்ணிப் பயந்தார்கள். 

அந்தச் சமயத்தில் இவன்: "பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்று கூவினான்.

இதைக் கேட்டுத் திருடர்: "அடே! நாம் கன்னம் வைக்கிறதைக் சுண்டுதான் இவன் இப்படிக் கூவுகிறான்" என்று கை கால் நடுங்கத் தொடங்கினார்கள்.

அப்போது இவன்: "நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற தனது மூன்றாம் சாஸ்திரத்தை ஓதினான்.

கள்ளர்: "அடா, நாம் அவசியம் ஓடிப்போக வேண்டும். நாம் இங்கே திகைப்புடன் விழித்துக்கொண்டு நிற்கிறோமென்பதை அந்த மனிதன் சயிக்கினையாகச் சொல்லுகிறான்" என்று பேசிக்கொண்டு சிலர் ஓடத் தொடங்கினர். இதற்குள் திருடருடைய சத்தம் இவன் காதிலும் படவே, "கொல்லைப் புறத்தில் ஏதோ பலர் காலடிச் சத்தமும், முணுமுணுக்கிற சத்தமும் கேட்கிறது. என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை திருடராக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் போய்ப் பார்ப்போம்" என்று யோசனை பண்ணிக்கொண்டு வந்தான். வரும்போதே தனது சாஸ்திரப் பாடத்தை மறக்காமல், "ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்று கூவிக்கொண்டே வந்தான். 

திருடர் தாங்கள் வேறோரிடத்திலிருந்து திருடிக்கொண்டு வந்த நகைப் பெட்டிகளையும், பணப் பெட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடிப்போயினர். இவன் பிறகு வீட்டிலுள்ளாரை எழுப்பி அந்தப் பெட்டிகளைக் காட்டினான். 

வீட்டிலுள்ளார் `நடந்த விஷயமென்ன?` என்று விசாரித்தார்கள். இவன் நடந்த விஷயத்தைச் சொன்னான். அப்போது வீட்டார் இவனாலேயன்றோ திருடர் கன்னம் வைத்துத் தமது வீட்டுப் பொருளைக் கொள்ளையிடாமலும், தமதுடம்பிற்குத் தீங்கு செய்யாமலும் ஓடினார்கள் என்ற நன்றியுணர்ச்சியால் அந்த நகைப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் இவனுக்கே கொடுத்துவிட்டார்கள். 

இவன் அந்தத் திரவியத்தையெல்லாம் தாயாரிடம் கொண்டு கொடுத்து:- "எனக்குக் கல்யாணம் பண்ணி வை அம்மா" என்றான். 

அவள் இவனை நோக்கி: "மகனே உனக்கு இந்த நிதியெல்லாம் எங்கே கிடைத்தது?" என்று கேட்டாள். இவன் நடந்த விவரங்களையெல்லாம் கூறினான். தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டு, அவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் மகளைக் கல்யாணம் செய்வித்தாள். பிறகு எல்லாரும் சௌக்கியமாக நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருந்தனர்." என்று சிங்கச்சி காமாக்ஷி கதை சொன்னாள். 

அப்போது உத்தண்டி: "இந்தக்கதையை என்ன நோக்கத்துடன் சொன்னாய்?" என்று கேட்டான்.

"உன் மனதிலிருந்த ஆயாசத்தை மாற்றி உனக்கு ஆறுதல் உண்டாக்கும் பொருட்டாகக் கதை சொன்னேன், வேறு நோக்கம் ஒன்றுமில்லை" என்றாள்.

"பார்த்தாயா! நாம் சண்டை தோற்று மானத்தையும் தேசத்தையும் பிராணனையும் சத்துருவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே, அதற்கென்ன வழி செய்யலாமென்று கலங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில் இவள் நம்மிடம் குழந்தைக் கதை பேசுகிறாள்! பார்த்தாயா! பெருச்சாளியாம், கோரையாம், பனைமரமாம், நரியாம்! என்ன பச்சைக் குழந்தை வார்த்தை!" என்று சொல்லி மிகவும் கோபத்துடன் உத்தண்டி அப்போது ஒரே பாய்ச்சலாக மனைவியின் மீது பாய்ந்து தன் நகங்களை அவளுடைய கழுத்தில் அழுத்தினான். 

சிங்கக் காமாக்ஷி லாவகத்தால் கழுத்தை திமிறிக்கொண்டு தன் கழுத்திலிருந்து இரத்தம் பொழிவதைக் கண்டு கோபத்துடன் தன் முன் வலக்காலால் உத்தண்டியின் முகத்தில் ஓங்கி அடித்தது. 

உத்தண்டி பெருஞ்சினத்துடன் கண்ணில் தீப்பொறி பறக்க, மீசை துடிக்க, ஹா! என்று கர்ஜனை புரிந்து "அடி பேயே, உன்னை இந்தக் கணத்திலே கொன்று போடுகிறேன் பார்!" என்று சொல்லித் தன் மனைவியின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கலாயிற்று. காமாக்ஷி உத்தண்டியின் காலைப் பல்லினால் கவ்வி இரத்தத்தை உறிஞ்சத் தொடங்கிற்று. அப்போது சண்டையில் உண்டான சப்தத்தைக் கேட்டு காமாக்ஷியின் பாங்கிச் சிங்கங்கள் சில அங்கோடி வந்தன. அவற்றைக் கண்டு உத்தண்டியும் காமாக்ஷியும் வெட்டுப் பற்களை மீட்டுக் கொண்டன. உத்தண்டி அந்தப்புரத்தை விட்டு வெளியே சென்றான். 

பேய்க்காட்டு விஷயம் இப்படி இருக்க, உத்தண்டியிடமிருந்து அவனுடைய மாமனாராகிய குண்டோதர ராஜன் அரசு செலுத்தும் கடம்பவனத்துக்குத் தூது சென்ற நரிச்சி நல்லதங்கை எப்படியானாள் என்பதைக் கவனிப்போம். 

நரிச்சி கடம்ப வனத்திற்குப் போன போது தன் பல்லக்கு பரிவாரங்களுடன் நேரே குண்டோதரராய சிங்க மகாசிங்கருடைய மாளிகையில் போய் இறங்காமல் ஏதோ மனதுக்குள் ஒரு தந்திரத்தை எண்ணித் தனக்கு முந்திய நட்புடையவளாகிய விருத்திமதி என்ற எருமைச்சியின் வீட்டிலே போய் இறங்கினாள். 

விருத்திமதி பொன்னங்காட்டரமனைக்கு முன்னொரு முறை சென்றிருந்த போது அவளுக்கு வீரவர்மராஜன் பலவிதமான பரிசுகள் கொடுத்துத் தனது ராஜ பதவியைக் கருதாமல் மிகவும் அன்பான வார்த்தைகள் கூறி விடுத்ததை அந்த எருமைச்சி தன் வாழ்நாளில் மிகப் பெரிய விசேஷ மென்றெண்ணி வீரவர்மனிடம் பேரன்பு பூண்டவளாய் எப்போதும் அவனையே ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். எனவே நரிச்சி நல்ல தங்கை வந்தவுடன் எருமைச்சி விருத்திமதி அவளிடம் "வீரவர்மனும் அவனுடைய ராணி மாகாளியும் குழந்தைகளும் க்ஷேமந்தானா?" என்று விசாரித்தாள். 

அப்போது நரிச்சி நல்லதங்கை தான் வீரவர்மனிடமிருந்து பிரிந்து அவனுக்குத் துரோகியாய் உத்தண்டி ராஜாவிடம் வேலை பார்ப்பதாகத் தெரிந்தால் எருமைச்சி தன்னைத் துரத்திவிடுவாள் என்று யோசித்து "ஆம், எல்லாரும் க்ஷேமந்தான்" என்றாள். 

"நீ இப்போது நேரே பொன்னங்காட்டிலிருந்து தான் வருகிறாயா?" என்று விருத்திமதி கேட்டாள்.

நல்லதங்கை: "அன்று; நான் பேய்க்காட்டிலிருந்து வருகிறேன்" என்றாள்.

விருத்திமதி: "அங்கே எதற்காகப் போயிருந்தாய்?" என்றாள்.

நல்லதங்கை: "பேய்க்காட்டுக்கும் பொன்னங்காட்டுக்கும் சண்டையென்று நீ கேள்வியுற்றிருக்கக் கூடும். அந்தயுத்தம் நடப்பதை எப்படியேனும் தடுக்க வேண்டுமென்று கருதி, என்னை மாகாளி ராணி (வீரவர்மன் பத்தினி) சில செய்தி சொல்லிப் பேய்க்காட்டு ராணியாகிய காமாக்ஷியிடம் அனுப்பினாள். வந்த இடத்தில் காமாக்ஷி உங்கள் நாட்டரசனாகிய தன் பிதாவிடம் ஒரு ரகஸ்யமான செய்தி சொல்லி வரும்பொருட்டாக என்னை இங்கே அனுப்பினாள்" என்றதும்,

"என்ன ரகஸ்யம்?" என்று விருத்திமதி கேட்டாள். 

நல்லதங்கை: "காரியம் நிறைவேறு முன்னே அதை மிகவும் பிராண சிநேகிதராக இருப்போரிடத்திலேகூட அனாவசியமாகச் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போகும். ஆதலால் பொறு, நிறைவேறினபின் சொல்லுகிறேன்" என்று வாக்களித்தாள். நல்லதென்று சொல்லி விருத்திமதி தன்வீட்டுக்கு விருந்தாக வந்த நரிச்சிக்கு ராஜோபசாரங்கள் செய்தாள். பரிவாரங்களுக்கும் யதேஷ்டமாக ஆகாரம் கொடுத்தாள். 

பிறகு சாயங்காலமானவுடன் நரிச்சி நல்லதங்கை விருத்திமதியை நோக்கி "இப்போதெல்லாம் நீ அடிக்கடி அரண்மனைக்குப் போய் வருவதுண்டோ?" என்று கேட்டாள்.

விருத்திமதி ஆமென்றாள்.

"உங்கள் குண்டோதர சிங்கனுக்கு நான்கு மனைவிகள் உண்டன்றோ?" என்று நரிச்சி கேட்டாள்.

விருத்திமதி தலையசைத்தாள்.

"பட்டத்து ராணியின் பெயர் யாது?" என்று நரிச்சி கேட்டாள்.

"பட்டத்து ராணி பெயர் சுவர்ணாம்பா" என்று சொன்னாள்.

"பேய்க்காட்டு காமாக்ஷி தனது தாயின் பெயர் மீனாக்ஷி என்று சொன்னாளே" என்றாள் நரிச்சி.

அதற்கு விருத்திமதி: "ஆமாம். அந்த மீனாக்ஷி மூன்றாவது ராணி. பட்டத்து ராணியைக் காட்டிலும் மீனாக்ஷியினிடத்திலே தான் குண்டோதரராய சிங்க மகாசிங்கருக்கு அதிகப் பிரியம்" என்றாள்.

நரிச்சி நல்லதங்கை: "உனக்கு எந்த ராணியுடனே அதிக சிநேகம்?" என்று கேட்டாள். 

"பட்டத்து ராணியுடன்" என்று விருத்திமதி சொன்னாள்.

"உனக்கும் மீனாக்ஷிக்கும் பேச்சுண்டோ இல்லையோ?" என்று நரிச்சி கேட்டாள்.

விருத்திமதி: "பேச்சு வார்த்தை இல்லாமலென்ன? அதெல்லாம் உண்டு. போனால் வா என்று கூப்பிடுவாள். மஞ்சள் குங்குமமும் கொடுப்பாள். ஆனால் சுவர்ணாம்பா என்னிடம் தன்னுடைய அந்தரங்கங்களையெல்லாம் சொல்லுவது போலே மீனாக்ஷி சொல்ல மாட்டாள்" என்றாள்.

அப்போது நரிச்சி நல்லதங்கை: "அந்த மீனாக்ஷிக்கு அந்தரங்கமான சிநேகம் யார்?" என்று கேட்டாள்.

விருத்திமதி: "மல்லிச்சி மாணிக்கவல்லிக்கும் மீனாக்ஷிக்கும் உடம்பு இரண்டு, ஆனால் உயிர் ஒன்று" என்றாள்.

இப்படி இவ்விருவரும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று குண்டோதர ராய சிங்க மகாசிங்கருடைய சிப்பாய்கள் வந்து நரிச்சி நல்லதங்கையைக் கைது பண்ணி விலங்கு போட்டுக் கொண்டு போய்ச் சிறைப்படுத்தி விட்டனர். விலங்கு பூட்டும்பொழுது நரிச்சி கோவென்றழுதாள். விருத்திமதி "நல்லதங்காய், நீ பயப்படாதே. ஏதோ தவறுதலாக இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் போய் சுவர்ணாம்பாவிடம் சொல்லி உடனே உன்னை மீட்கிறேன்" என்று சொல்லி அரண்மனைக்குப் போனாள்.