செங்குட்டுவன் சமகாலத்தரசர்

bookmark

செங்குட்டுவன் காலத்தே, தமிழ்ப் பெருவேந்தர்களாகிய சோழபாண்டியரோடு அவர் கீழடங்கிய சிற்றரசர் பலரும் மிகுந்திருந்தனர். தமிழ்ப்பெருவேந்தருள்ளும் பலகிளையினர் தத்தம் நாட்டின் ஒவ்வொருபகுதிகளைப் பிரித்தாண்டு வந்தனரென்பது முன்னூல்களால் உய்த்தறியப்படுகின்றது. சேரரில் தொண்டியையும் மாந்தையையும் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவர்களை முன்னரே குறிப்பிட்டோம். இவ்வாறே சோழபாண்டியரிலுமிருந்தனரென்பது புறநானூறு முதலியவற்றை நோக்குமிடத்துப் புலப்படக்கூடியதே. ஒரு புலவர் ஒரே வேந்தர்வமிசத்திற் பலரைப்பாடும்படி நேர்ந்ததற்கு இதுவே காரணமாகும். இவ்வாறு கொள்ளாவிடத்து, பலவரசர் ஒரே வமிசத்தில் ஏககாலத்தில் இருந்தவராகக் காணப்பட்டுச் சரித்திரவொற்றுமை பெறுவதில் மயக்கங் கொள்ள நேரும். இங்ஙனம் மூவேந்தர் வமிசங்களும் தனித்தனிக் கிளைகளுடையனவாயினும், செங்குட்டுவன் காலத்துச் சோழ பாண்டியருள்ளே தலைசிறந்துநின்ற அரசர்சிலரை நாம் முன்னூல்களினின்று குறிப்பிடலாகும். அன்னோரகளை அடியில் வருமாறு காண்க :--
[சோழர்]
செங்குட்டுவன்காலத்திற் சோணாடாண்ட அரசர்கள் பலராயினும், முக்கியமாக, உறையூர்ச்சோழரும் புகார்ச்சோழருமென இருபகுதியினராகக் கொள்ளலாம். "மாடமதுரையும் பீடா ருறந்தையும் - ஒலிபுனற் புகாருங் கலிகெழுவஞ்சியும்"(சிலப்பதி. 8: 3-4.) எனச் சோணாடு தங்காலத்தில் இரண்டு இராஜதானிகளு டையதாயிருந்ததை இளங்கோவடிகளும் குறிப்பிடுவர்.(கரிகாற்பெருவளத்தான், உறையூரை நீங்கிப் புகாரைத் தன் தலைநகராகக் கொண்டானென்று பட்டினப்பாலை (அடி. 285.) குறிப்பிக்கும் செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மானும் சோழன் மணக்கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டு வந்தனன்.(புறம். 44, 45, 47-ம் பாடல்கள்) இவ்வுறையூர்ச் சோழர்க்கும் புகார்ச்சோழர்க்கும் பெரும்பகைமூண்டு போர் நிகழ்ந்து வந்ததாகப் புறநானூற்றால் அறியப்படுகின்றது. புகார்ச்சோழரென்பவர், கரிகாலன்மகனாகக் கருதப்படும் கிள்ளிவளவனும் (இவனே, மணிமேகலையிற் கண்ட சோழன்.) அவன் தம்பியாகிய நலங்கிள்ளியுமாவர். இவருடன் காரியாற்றங்கரையில் நடந்த போரிலே, செங்குட்டுவனம்மானாகிய நெடுங்கிள்ளி இறந்தான் என்பது, "காரியாற்றுத் துஞ்சிய" என அவன் விசேடிக்கப்படுதலாலும்(புறம். 47.) அப்போரில் கிள்ளிவளவன் தம்பியே வெற்றிபெற்றவனென்பது, "ஆர்புனை தெரிய விளங்கோன்றன்னால்,காரியாற்றுக்கொண்ட காவல் வெண்குடை, வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி" எனச் சாத்தனார் மணிமேகலையிற் கிள்ளிவளவனைக் கூறுதலாலும் (மணி. 19: 126-128.) புலப்படுகின்றன.செங்குட்டுவன் அம்மானாகிய நெடுங்கிள்ளி இங்ஙனமிறந்ததும், அவன் மகனான பெருங்கிள்ளி உறையூரிற் பட்டமெய்தினன். திருக்கோவலூர்ச் சிறறரசனும் பெருவீரனுமாகிய மலையமான் திருமுடிக்காரி (இவனே கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய காரி.) என்பவன் உறையூர்ச் சோழர்க்குச் சேனாபதியாகவிருந்து உதவிபுரிந்து வந்தான்; ஆனால்,இவனும் அதிர்ஷ்டவீனத்தால் இடையில் இறந்து விட்டான். விடவே,ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பெருநற்கிள்ளிக்கு விரோதமாக அவன் ஞாதியரசரெல்லாம் கிளம்பிப் பெருங்கலகம் விளைப்பாராயினர். இக்காலத்தே, அவ்விளஞ் சோழன் தனக்குப் பெருந்துணைவனாக- விருந்த மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. இவனை இவ்வாபத்துக்காலத்திற் காத்துவந்தவன், முற்கூறிய மலைய மான்மகன் திருக்கண்ணன் என்பான்.*இங்ஙனம் தன் அம்மான்மகனுக்கு நேர்ந்த ஆபத்தைக் கேட்டதும்,செங்குட்டுவன் விரைந்துசென்று,அவனுக்குப் பகைவராய்த் தோன்றிய சோழரொன்பதின்மரை உறையூரையடுத்த நேரிவாயிலில் அழித்துத் தன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவினான்.†இச்செய்தி முன்னரும் விளக்கப்பட்டது. இங்ஙனம் செங்குட்டுவன் செய்தது, அவன் இரண்டாமுறை வடநாடு சென்று வந்ததற்கு இரண்டொரு வருஷங்கட்கு முந்தியதாகும்;அஃதாவது -அவனது 45-ம் வயதை ஒட்டியதாதல் வேண்டும். இவ்வாறு,செங்குட்டுவனால் உதவி புரியப்பெற்றவனே,பிற்காலத்தில் பெருவீரனாய்,"இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி" எனச் சிறப்பிக்கப் பெற்றவன் எனத் தெரிகின்றது. ‡இவனே,செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த செய்திகேட்டுத் தானும் உறையூரிற் கோயிலொன்றுகட்டி,அப்பத்தினிக்குத் திருவிழாவெடுத்துச் சிறப்பித்தனன்.$ செங்குட்டுவனம்மானையும்.
----------
* .(புறநானூறு.174-ம்பாட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுதல் காண்க.)
†(சிலப்.27:118-23)‡ (புறம்.16). $(சிலப். உரை பெறு கட்டுரை.)

அம்மான் சேயையும் பற்றி யாமீண்டெழுதியவற்றிற் சில புறநானூறு முதலியவற்றைக் கொண்டு ஊகித்தனவாம்; ஆதலின்,அறிஞர் அவற்றை ஏற்றபெற்றி ஆராய்ந்துகொள்ளக் கடவர். இவற்றால், செங்குட்டுவன் காலத்துச் சோழரை
அடியில்வருமாறு குறிக்கலாம்.

[உறையூர்] [புகார்]
மணக் கிள்ளி கரிகாற்பெருவளத்தான்
| |
(காரியாற்றுத் துஞ்சிய) |
நெடுங்கிள்ளி கிள்ளிவளவன்
| |
(இராசசூயம் வேட்ட) (சேட்சென்னி)
பெருநற்கிள்ளி. நலங்கிள்ளி.
-----------
[பாண்டியர்]
இனிச் செங்குட்டுவன்காலத்து விளங்கிய பாண்டியர் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனும், அவன் தம்பியோ மகனோவாகிய வெற்றிவேற் செழியனுமாவர்.செங்குட்டுவன் சிறிய தந்தையும் இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன் தம்பியுமாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும்,ஆரியபடை தந்த நெடுஞ்செழியனும் சமகாலத்தவராகத் தெரிகின்றது.* பிற்கூறிய செழியனே கோவலனை அநியாயமாகக் கொல்வித்து அவ்வநீதியை உணர்ந்து தன்மனைவியுடன் உயிர்விட்டவன். "வடவாரியர் படைகடந்து,தென்றமிழ்நா டொருங்குகாணப், புரைதீர்கற்பிற் றேவிதன்னுடன், அரசுகட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று இவனைச் சிறப்பித்துக் கூறுவர் இளங்கோவடிகள்.**
-------------------
* இது, சிலப்பதிகாரம் கட்டுரைகாதையில் வரும் பராசரனென்னும் பார்ப்பான் வரலாற்றால் அறியப்படும்.)
** சிலப்.மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை

இப்பாண்டியன் பெரிய வீரனும் அரியபுலமையும் உடையவன். இவன்பாடிய பாடலொன்று புறநானூற்றிற்(183) காணப்படுவது கொண்டு, இவனது புலமையும் தருமசிந்தையும் அறியலாம். இச்செழியன் கண்ணகிவழக்கைக் கேட்டு இறந்ததும், கொற்கையில் இளவரசாய் ஆட்சிபுரிந்துவந்த வெற்றிவேற்செழியன் தென்னாட் டாட்சிக்கு உரியவனாயினன்.செங்குட்டுவன் வடக்கே யாத்திரை சென்றிருந்த காலத்தில், இச் செழியனுக்கு முடிசூட்டுற்சவம் நடைபெற்றது.+ இவன் பட்டமெய்தியதும், ன்மாறன் என்னும் வேறுபெயர் பூண்டனனென்று கருதப்படுகிறது. கோவலன் கொலையுண்டமைக்குப் பொற்கொல்லனே காரணமாயிருந்தமையால் அச்சாதியா ரனைவர்மேலும் இப்பாண்டியன் பெருஞ்சீற்றங்கொண்டு, அவர்களு ளாயிரவரைக் கண்ணகியின்பொருட்டுக் களவேள்விசெய்து கொன்றானென்றும்,அதற்கு அப்பத்தினி உவந்தருளினளென்றுங் கூறுவர்.** இவ்வரசன் சிலகாலமாட்சி புரிந்து இறந்ததும், இவன்மகனாய்ப் பட்டமெய்தியவன் நெடுஞ்செழியன் என்பவனாகத் தோற்றுகின்றான். மிகச்சிறுபிராயத்திலே சிறந்தவீரனென்று பேர்பெற்றவன், இச்செழியன். தன்னுடனெதிர்த்த தமிழரசர் எழுவருடன் இவன் அதிபால்யத்தில் தலையாலங்கானம் என்றவிடத்துநிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற செய்தி முன்னூல்களிலே பெரிதும் புகழப்படுகின்றது.++
-------------------------
+ சிலப்.27:114-138 ** இந்நூல். பக் - 96.
++ புறம்.77;அகம்-36.சின்னமனூர்த் தாமிர சாஸனமும் இவன் போர்ச்செய்தி
கூறுதல் அறியத்தக்கது. (Vide Madras G.O. No. 508 Public dated 27-6-07.))

இந்நெடுஞ்செழியனுக்குப் பின் பட்டமெய்தியவன் உக்கிரப்பெருவழுதி என்பவனாதல் வேண்டும்.கடைச்சங்கமிருந்த பாண்டியருள் இவனையே இறுதியில்வைத்து நூல்கள் கூறுதல் காண்க.* இச் செழியன்,கானப்பேர்†என்ற ஊரைப்பிடித்து அதன் தலைவனான வேங்கைமார்பனைப் போரில்வென்றவன்,எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு தொகுத்தவனும் இவ்வரசனேயாவன்.செங்குட்டுவன் அம்மானாகிய பெருநற்கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும்,இவ்வுக்கிரப்பெருவழுதியும் மிக்கநட்பாயிருந்த செய்தி ஔவையார் பாடலொன்றால்‡ (*புறம்.367) அறியப்படுகின்றது. இவற்றால்,நம் சேரர் பெருமான்காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியரை அடியில் வருமாறு கொள்ளலாம்.

ஆரியப்படைதந்த நெடுஞ்செழியன்
|
வெற்றிவேற்செழியன் என்ற நன்மாறன்
|
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
|
கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி.
----------------------
* இறையனார் களவியல் உரைப்பாயிரம். † இஃது, இப்போது பாண்டி
நாட்டுள் காளையார்கோயில் என வழங்கும் தலமாகும். ‡ புறம்.367.

[சேரர் கிளையினர்]
செங்குட்டுவனுடைய மாற்றாந்தாய்மக்களையும் அவன் ஞாதியரான இரும்பொறைகளையும் "சேரவமிசத்தோர்" என்னும் பகுதியுள் விரித்துக் கூறினேம்.

இவருள், மாற்றாந்தாய்ச் சகோதரரான நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், ஞாதியராகிய செல்வக்கடுங்கோவும் பெருஞ்சேரல் என்பவனும், செங்குட்டுவன் காலத்தவராகத் தெரிகின்றனர். மேலேகூறிப்போந்த முறையே, பண்டைநூல்களிற் கண்ட செய்திகள் பலவற்றுக்கும் மிகப் பொருந்துவதென்பது, அறிஞர் நுணுகி அறியத்தக்கது*.
----
*காலஞ்சென்ற ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள் தம் "1800- வருஷத்துக்கு முற்பட்ட தமிழர்" (The Tamils 1800 - years ago)என்னும் அரியநூலில், செங்குட்டுவன் மரபை முற்றும் வேறுபடக் குறித்திருப்பதோடு, ஏனைச் சோழர்வமிசத்தையும் சிறிது மாற்றியெழுதியிருக்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் தந்தை - செல்வக்கடுங்கோ வாழியாதனும், தாய் - கரிகாலன் மகளுமாவர்.ஆனால், பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தில் "குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி" மகளீன்ற மைந்தன் எனச் செங்குட்டுவன் கூறப்படுகின்றான். இதனால், இவன்றந்தை நெடுஞ்சேரலாதனென்பதும், தாய் மணக்கிள்ளியின் மகளென்பதும் விளக்கமாகும்.இனிப் பிள்ளையவர்கள், மாந்தரஞ்சேர லிரும்பொறையைச் செங்குட்டுவன் மகனாகக் கருதினர். செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலென்பது பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தால் நன்கறியப்படும். மாந்தரஞ்சேரல், சேரர் கிளையினராய்த் தொண்டியாண்ட இரும்பொறை மரபினனாவன். இம்மாந்தரன் மகனாகப் பெருஞ்சேரலிரும்பொறையைப் பிள்ளையவர்கள் குறித்திருப்பதும் மாறாகும். இப்பெருஞ்சேரல், செல்வக்கடுங்கோ-வாழியாதன் மகனாவான். இஃது அவனைப் பற்றிய 8-ம்பத்துப் பதிகத்துவரும்"பொய்யில் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக்கோமான் பதுமன் தேவியீன்ற மகன்" என்னுந் தொடரால் விளக்கமாம். ஆகவே, இந்நூலின் முதலிற்குறித்த முறைப்படி சேரர் மரபினரைக்கொள்ளுதலே பெரிதும் பொருத்தமென்பது ஆராய்ந்தறியத்தக்கது. இனிச் சோழர்மரபினரை முன்குறித்தபடி இருபகுதியினராகக் கொண்டு, உறையூர்ச் சோழர் கிளையில்,மணக்கிள்ளியையும், அவன் மகனாக நெடுங்கிள்ளியையும்,அவன் மகனாகப் பெருநற்கிள்ளியையும் காட்டுதலும்;புகார்ச்சோழர்கிளையில்,கரிகாலன், கிள்ளிவளவன்,நலங்கிள்ளி என்பவரை முறையே காட்டுதலும் பொருத்தமாம். மணக்கிள்ளியின் மகளும் நெடுங்கிள்ளிக்குடன்பிறந்தவளுமாகிய நற்சோணை, செங்குட்டுவன்தாயென்பதுங் குறிக்கத்தக்கது. பாண்டிய வமிசாவளியாகப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டவை, முன்னூல்களோடு பொருந்தும்.

[வேறு அரசர்கள்]
இனிச் சேரன்-செங்குட்டுவன் காலத்திருந்த அந்நியரான அரசர்கள்:-- (1) கொங்கிளங்கோசர், (2) கயவாகு, (3) நூற்றுவர் கன்னர், (4) அறுகை என்போர். இவருள் கொங்கிளங்கோசரென்போர் குடகுநாட்டை ஆண்டவர்கள்.*கயவாகு இலங்கையை ஆட்சிபுரிந்தவன். நூற்றுவர்கன்னர் என்போர் கங்கையின் வடகரையிலுள்ள பிரதேசங்களையும் மாளுவநாட்டையும்† ஆட்சிபுரிந்தோர். அறுகையென்பவனும் அவ்வட நாட்டரசரில் ஒருவனாகத் தெரிகின்றது. இவரெல்லாம் செங்குட்டுவனுக்கு மிக்க நட்பாளராக விளங்கியவரென்பது சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலியவற்றால் தெளிந்தது. இன்னோர் செய்திகள் "செங்குட்டுவன் காலவாராய்ச்சி" என்ற பகுதியினும் விரிவாக வருதலால், இங்குக் கூறப்பட்டில.
---------------
*இதனால்,முற்காலத்துக் கொங்குதேசம், குடகுநாடாயிருந்தமை பெறப்படும்.
† "குடகக் கொங்கரு மாளுவவேந்தரும்" என்புழி இளங்கோவடிகள் குறித்த மாளுவவேந்தர், செங்குட்டுவன் நட்பரசரான கன்னரேயாதல் வேண்டும். ஏனெனில்,கண்ணகியின் சிலைக்கு மிகவும் உதவிசெய்த கன்னர், அப்பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருக்கத் தவறாராதலால்,அவர் வருகையை அடிகள் குறியாதிரார் என்க.

இவர்களன்றித் தமிழ்நாட்டில் செங்குட்டுவன் காலத்து விளங்கிய சிற்றரசரும் பலராவர். புறநானூறு அகநானூறு முதலிய சங்கச் செய்யுள்களை ஆராயுமிடத்து, அவற்றிற் குறிக்கப்பட்ட சிற்றரசரில் அநேகர் இவன் காலத்தவராக அல்லது இவன்காலத்தை ஒட்டியிருந்தவராகவே புலப்படும்.அவரையெல்லாம் ஈண்டுக் காட்டின் விரியும். இனிச் செங்குட்டுவனுக்குப் பகையரசராய் இருந்தவரைப்பற்றி இவனது போர்ச்செய்தி கூறப்பட்டவிடத்தும் பிறவிடங்களிலும் கூறியுள்ளோம்.