திருக்குறள் ஆட்சி

திருக்குறள் ஆட்சி பன்னிரண்டுக்குமேல் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன. ஈண்டு இரண்டு மட்டும் காண்பாம்:
7.1 தொழு தெழுதல்
மாதாம்பிகை என்னும் பெண்மணி கொழுநனைத் தொழுது எழுவாளாம்: “பைந்தொடி கொழுநன் தொழு தெழு தொழிலாள்". (9-21)
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (55)
என்னும் குறள் கருத்து இதில் உள்ளது.
7.2 உடுக்கை யிழந்தவன் கை
அல்லம தேவர், உடையிழந்தவன் கைபோல, அடியர்களின் துன்பம் துடைப்பாராம்:
“உடையிழந்த ஒருவன் கரமெனக்
கடிதடைந்து களைந்தருள் செய்யுநாள்” (13.2)
என்னும் பாடல் பகுதியில்,
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (788)
என்னும் குறள் கருத்து அடங்கியுள்ளது. இவ்வாறு பல உள.