பாண்டியநாட்டுத் திருப்பதிகள்-18

bookmark

1. திருமாலிருஞ்சோலை
பணிந்தேன் றிருமாலைப் பாமாலை தாளில்
அணிந்தே னருட்டஞ்ச மாகத்--துணிந்தேன்
திருமா லிருஞ்சோலை சேர்ந்தே னெனக்கு
வருமா லிருஞ்சோதி வான். (41) 

2. திருக்கோட்டியூர்
வான்பார்க்கும் பைங்கூழ்போல் வாளாவுன தருளே
யான்பார்க்க நீபார்த் திரங்கினாய்--தேன்பார்ப்பின்
ஓசைத் திருக்கோட்டி யூரானே! இன்னமுமென்
ஆசைத் திருக்கோட்டி யான். (42) 

3. திருமெய்யம்
[பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்]
ஆளா யுனக்கன்பா யாசையாய் நாணிலிலாய்
வாளா மனைவியென்று வாழ்வேனைக்--கேளாய்
திருமெய்ய மாயா! சிலைகால் வளைத்து
வருமெய்ய மாயா மதன். (43)

4. திருப்புல்லாணி
மதயானைக் கோள்விடுத்து மாமுதலை கொன்ற‌
கதையா லிதயங் கரையும்--முதலாய‌
புல்லாணி மாலே! புறத்தோர் புகழிருப்பு
வல்லாணி யென்செவிக்கு மாறு. (44) 

5. திருத்தண்காலூர்
[தலைவனை பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி யிரங்கல்]

மாறுப‌ட‌ வாடையெனும் வ‌ன்கால்வ‌ந்தென் முலைமேல்
ஊறுப‌ட‌ வூர்ந்த‌ வுளைவெல்லா--மாறத்
திருத்த‌ண்கா லூரான் றிருத்த‌ண் டுழாயின்
ம‌ருத்த‌ண்கா லூராதோ வாய்ந்து. (45) 

6. திருமோகூர்
[அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல்]
வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ?
மேயாம லப்பால் விரையுமோ? - மாயன்
திருமோகூர் வாயின்று சேருமோ? நாளை
வருமோ? கூர் வாயன்னம் வாழ்ந்து (46)

7. திருக்கூடல்
வாழ்விப்பா னெண்ணமோ? வல்வினையி லின்னமென்னை
ஆழ்விப்பா னெண்ணமோ? அஃதறியேன் - தாழ்விழாப்
பாடலழ கார்புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடும்
கூடலழ கா!நின் குறிப்பு. (47)

8. ஸ்ரீவில்லிபுத்தூர்
குறித்தொருவர் கொண்டாடுங் கொள்கைத்தோ? கோதை
நிறத்தவூர் விண்டுசித்தர் நீடூர் - பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூரென் றைவர்க்குத் தானிரந்தான்
வாழ்வில்லி புத்தூர் வளம். (48)

9. திருக்கூர்
வளந்தழைக்க வுண்டாலென்? வாசமணந் தாலென்?
தெளிந்தகலை கற்றாலென்? சீசீ - குளிர்ந்தபொழில்
தண்குருகூர் வாவிச் சடகோப னூரெங்கள்
வண்குருகூ ரென்னாத வாய். (49)

10. திருத்தொலைவில்லிமங்கலம்
வாயு மனைவியர்பூ மங்கையர்க ளெம்பிராற்
காயுதங்க ளாழிமுத லைம்படைகள் - தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள்புருவ மேனி
மலைவில்லி மங்கலந்த வான். (50)

11. ஸ்ரீவரமங்கை (வானமாமலை)
வானோர் முதலா மர‌மளவா வெப்பிறப்பும் 
ஆனேற் கவதியிட லாகாதோ? - தேனேயும்
பூவர மங்கை புவிமங்கை நாயகனே!
சீவர மங்கையர‌ சே! (51)

12. திருப்பேரை
அரைசாகி வையமுழு தாண்டலு மின்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் - முரைசாரும்
தென்றிருப்பே ரைப்பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப்பே ரைப்பதியா தார். (52)

13. ஸ்ரீவைகுந்தம் 
[தலைவியின் இளமை கண்ட செவிலி இரங்கல்]
தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையிவள்
நேருடுத்த சிந்தை நிலையறியேன் - போருடுத்த 
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத் துழாய்நாடும்
சீவைகுந்தம் பாடுந் தெளிந்து. (53)

14. திருப்புளிங்குடி
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
தெளியும் பசும்பொற் சிறைக்காற்று வீச
விளியுந் துயர்போய் விடுமே - எளியேற்
கருளப் புளிங்குடிவா ழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்குவந்தக் கால். (54)

15. திருவரகுணமங்கை
[பாங்கு வெறிவிலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடுநிற்றல்]
காலமு நோயுங் கருதாத வன்னைமீர்!
வேலன் வெறியை விலக்குமின்கள்! - மாலாம்
வரகுண மங்கையன்றாள் வண்டுழாய் மேலே
தரகுண மங்கை தனக்கு. (55)

16. திருக்குளந்தை
தனக்குடலம் வேறான தன்மை யுணரான்
மனக்கவலை தீர்ந்துய்ய மாட்டான் - நினைக்கில்
திருக்குளந்தை யாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தை யாமலிருந் தால். (56)

17. திருக்குறுங்குடி
தாலத் திழிகுலத்துச் சண்டாள மானாலும்
மேலத் தவரதனின் மேன்மைத்தே - கோலக்
குறுங்குடிவாழ் மாயன் குரைகழற்கா ளாகப்
பெருங்குடியாய் வாழ்வார் பிறப்பு. (57)

18. திருக்கோளூர்
பிறப்பற்று மூப்புப் பிணியற்று நாளும்
இறப்பற்று வாழ விருப்பீர்! - புறப்பற்றுத்
தள்ளுக்கோள் ஊராவிற் றாமோ தர‌ன்பள்ளி
கொள்ளுங்கோ ளூர்மருவுங் கோள்! (58)

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் முற்றும்