திருக்கோவில் வளர்ச்சி

bookmark

முன்னுரை 
நாயன்மார் காலத்தில் (கி.பி. 300 - 900) மிகச் சிறியனவாக இருந்த கோவில்கள் அழிந்துவிடத்தக்க மண், மரம்,செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இவற்றால் கட்டப்பட்டவை. எனவே, அவை அழிந்துவிடும் இயல்பின. பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள் (கி.பி. 900 - 1300) இவ்வுண்மையை உணர்ந்து, இவற்றைக் கருங்கற் கோவில்களாக மாற்றினர். பாடல்பெற்ற கோவில்களுட் பல மலையில்லாத சமவெளிப்பகுதியில் இருந்தனவாயினும், மலைப் பகுதிகளிலிருந்து சோழர்கள் கற்களைக் கொண்டு சென்று, பண்டைக்கோவில்களைக் கற்றளிகளாக மாற்றினர்; இங்ஙனம் மாற்றியதோடு அமையாது, பழங்கோவில்களைப் பெரியனவாகவும் அமைத்தனர்.

கோவில் வளர்ச்சி 
சாதாரணமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, நடுமண்டபம் இவற்றைப் பெற்றிருந்தது; பின்னர் முகமண்டபம் அமைந்தது. கோவிலைச் சுற்றிலும் முதல் திருச்சுற்றும் மதிலும் அமைந்தன. முதல் திருச்சுற்றில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் அமைந்தது. அத்திருச்சுற்றில் வலம் வரும் முறையில் தென் கிழக்கில் சூரியனும், தென் மேற்கில் கணேசரும் சப்த கன்னியரும், மேற்கில் சுப்பிரமணியர், வடமேற்கில் ஜேஷ்டர், வடக்கே சண்டேசுவரர், வடகிழக்கில் சந்திரன் இடம் பெற்றிருந்தனர். இத் திருச்சுற்றுக் கோவில்கள் சில கோவில்களில் தனித்திருந்தன; சில கோவில்களில் மதிலையொட்டி அமைந்த கட்டிடத்திற்குள் இருந்தன. மதில், ஒன்று முதல் நான்கு வாயில்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு பெற்றிருந்தது. வாயில் மீது சிறிய கோபுரங்கள் எழுந்தன, முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலம் வரை கருவறைக்கு மேலுள்ள விமானமே வானளாவக் கட்டப்பட்டது. பிற் காலங்களில் விமானம் தாழ்த்தப்பட்டுக் கோபுரங்கள் உயர்த்தப்பட்டன. கோவிலைச் சுற்றிலும் பல இடங்களில் நந்தவனங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கோவிலுக்குள்ளும் நந்தவனங்கள் உண்டாக்கப்பட்டன. பெரிய கோவில்களில் திருக்குளங்களும் இவ்வாறே தோண்டப்பட்டன. பெரிய கோவில்களில் இரண்டு முதலிய திருச்சுற்றுக்கள் கட்டப்பட்டன. அவற்றில் நாடாண்ட அரசர்களும் சிற்றரசர்களும் பிறரும் எடுப்பித்த சிறிய கோவில்கள் நாளடைவில் இடம் பெற்றன.

மண்டபங்கள் 
கோவில்களில் செல்வாக்குப் பெருகப் பெருக நாளடைவில் அவற்றுள் பல மண்டபங்கள் ஏற்பபட்டன. செங்காட்டங் குடியில் `சிறுத்தொண்ட நம்பி மண்டபம்` திருவெற்றியூர்க் கோவிலில் `வக்காணிக்கும் மண்டபம்` (சமய வாதம் புரியும் மண்டபம்), ` மண்ணைக்கொண்ட சோழன்`, `இராசராசன்`, `இராசேந்திரன்` என்ற பெயர்களைக் கொண்ட மண்டபங்கள், ` இலக்கண விளக்க மண்டபம்`, என்பன இருந்தன. நடன மண்டபம், நாடக மண்டபம்`, திருப்பதிகம் பாடவும் எழுதவும் பயன்பட்ட திருக்கைக் கோட்டி மண்டபம், நூற்றுக் கால் மண்டபம் என்பன பல கோவில்களில் இடம் பெற்றன. திருவக்கரையில் ஆயிரக்கால் மண்டபம் இருந்தது.

மாளிகை மடம் முதலியன 
சில கோவில்களில் மாளிகைகள் இருந்தன. நீடூர்க் கோவிலில் இருந்த மாளிகை `புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை` எனப் பெயர் பெற்றது.

`திரு மாளிகைத் தேவர்` `மாளிகை மடத்து முதலியார்` என்னும் பெயர்களைக் காண, இம்மாளிகைகள், சைவ சமயப் பெரியோர்கள் தங்கியிருக்கவும் மக்கட்குச் சமய போதனை வழங்கவும் பயன்பட்டவை என்பது தெரிகிறது. பல பெரிய கோவில்களில் மடங்கள் இருந்தன. அவற்றில் சைவ சாத்திரங்களில் வல்ல துறவிகளும், சாத்திர மாணவர்களும் இருந்தனர். அத்தகைய மடங்கள் இருந்த கோவில்களில் `சரசுவதி பண்டாரம்` என்ற நூல் நிலையம் இருந்தது. திருமுக்கூடல், எண்ணாயிரம், திரிபுவனை, திருவொற்றியூர், வேம் பற்றூர், திருவாவடுதுறை என்ற இடங்களில் கல்லூரிகள் இருந்தமையால், அங்கு நூல் நிலையங்கள் அமைந்திருந்தன என்று கூறுதல் மிகையன்றோ?

அம்மனுக்குத் தனிக்கோவில் 
பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழர்காலத்து முதற்பகுதியிலும் சிவன் கோவிலில் அம்மனுக்கென்று தனிக்கோவில் ஏற்படவில்லை. இறைவன் கருவறையிலேயே `போக சக்தி அம்மன்` எனத் தனித்திருமேனி வைத்து வழிபடப்பட்டது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதல் ராஜேந்திரனது எண்ணாயிரங் கல்வெட்டே முதல் முதலாக அம்மன் தனிக் கோவிலைப் பற்றிக் குறிக்கின்றது. அதன் பிறகே அம்பிகைக்குத் தனிக் கோவில்கள் எடுக்கப்பட்டன. பின்னரே அம்மன் கோவில்கள் சிவன் கோவில்களில் புதியனவாக ஏற்பட்டன என்பதைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

விநாயகர் கோவில் 
பாடல்பெற்ற கோவில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வமல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுதொண்ட நாயனார் சாளுக்கியர் தலைநகரமான வாதாபியை கைப்பற்றிய போது, இப் புதிய கடவுளை அங்குக் கண்டார்; தாம் முன்னர்க் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று, அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராள தேவன் கோவிலில் வைத்து வழிபடலானார்.1 அதுமுதல் சீராள தேவன் கோவில் `கணபதீச்சரம்` எனப் பெயர்பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப் புதிய கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் உறவு முறை கற்பிக்கப்பட்டது; அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார்
-------------

`மூத்தபிள்ளையார்` என்று 11-ஆம் திருமுறையில் இவர் இடம்பெறலானார். இவரைக் கணங்களுக்குப் பதியாகவும், துன்பந் துடைப்பவராகவும் தமிழர் கருதித் தங்கள் வழிபாட்டில் முதல் வணக்கத்தை இவர்க்கு உரிமையாக்கினர். இதனாற்றான் பெரிய புராணம் முதலிய பிற்பட்ட நூல்களில் விநாயகர் வணக்கம் தோற்றமெடுத்தது. இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை, "வாதாபி கணபதி, பஜேம் பஜேம்" என்னும் தோத்திரத்தாலும் நன்குணரலாம். இவர் சிவனுக்கு மகனானமைபற்றி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் இவருக்குத் தனிக்கோவில் ஏற்பட்டது.

முருகன் கோவில் 
முருகன் தமிழ் நாட்டுத் தெய்வம்; குன்று தோறாடுங்குமரன்; இப்பெருமான் குறவர் கோமான் மகளாகிய வள்ளியம்மையை மணந்தது இயல்பே. ஆனால் வடமொழியாளர் தமிழகத்திற்கு வந்து கலந்தபிறகு, முருகன் சுப்பிரமணியன் ஆக்கப்பட்டான்; அதன் பயனாக, இந்திரன் மகளாகிய தெய்வானையம்மை அவனுக்கு மற்றொரு மனைவியாகக் கிடைத்தாள். வட நாட்டில் வேத காலத்தில் இல்லாத சுப்பிரமணியன், இதிகாச காலத்தில் தெய்வமாக வழிபடப்பட்டான். சைவ வழிபாடு பெருகப் பெருக, வடவர் கலப்பு மிக மிக, இருவரது சமயச் சேர்க்கையின் பயனாக முருகன் சுப்பிரமணியானாகிச் சிவனுக்கு இரண்டாம் திருக்குமரனாகும் பேறு பெற்றான்.  இதிகாசங்களிலும் முருகப் பெருமான் "சிவபெருமான்" என்றே கூறப்படுகின்றான்.  எனவே, அப்பர் "சேந்தனை மகனாகக் கொண்டார்" "குமரன் தாதை" "தம் மகனார்முகம் ஆறு" என முருகனைத் தம் பாக்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே, புராணப் பெருக்கம் ஏற்பட்ட பிற்காலச் சோழர் காலத்தில் ( விநாயகருக்கு அமைந்தது போலவே) முருகப்பெருமானுக்கும் சிவன் கோவிலில் தனிக்கோவில் ஏற்பட்டது. இதனைத் திருவொற்றியூர்ச் சிவன் கோவிற் கல்வெட்டால் அறியலாம்.

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் ( கி. பி. 1012-1042) அப்பெருங்கோவில்களில் பிள்ளைசுப்பிரமணியர்,திருவட்டப்பிறைப் பிடாரியார், காராணை விடங்கதேவர், படம்பக்க தேவர், க்ஷேத்திர பால தேவர், சூரிய தேவர், அரிஞ்சீசுவரமுடையார், கம்பீசிவரமுடையார், விடேல்விடுகீசுவரர், துர்க்கையார், அணுக்கப் பிள்ளையார் என்ற பல தெய்வங்களுக்குச் சிறு கோவில்கள் ஏற்பட்டன என்று கல்வெட்டுக் கூறுகின்றது.4 இவற்றுள் திருவட்டப்பிறைப் பிடாரியார் என்பது காளியின் பெயர். அரிஞ்சயன் என்ற சோழன் எழுப்பிய லிங்கம் `அரிஞ்சீசுவரமுடையார்` எனப் பெயர் பெற்றது. `விடேல் விடுகு` என்பது `விடை வெல் விடுகு` என்ற பல்லவரது நந்தி முத்திரையைக் குறிப்பது. இதனை முதல் தொடராகக் கொண்ட பல்லவ அதிகாரி ஒருவனால் கட்டப்பட்ட சிறிய சிவன் கோவிலே `விடேல் விடுகு` எனப்பட்டது. சூரியனுக்கு மட்டும் தனித்த சிறுகோவில் கட்டப்பட்டதை இங்குக் காண்க.
-----------

ஒரே கோவிலில் பல மூர்த்தங்கள் 
திருவாரூர்ப் பூங்கோவில் இட அமைப்பில் மிகப் பெரியது. அதன் பெரிய திருச்சுற்றின் நான்கு பக்கங்களிலும் பல சிறு கோவில்கள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறு கோவிலிலும் ஒரு லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே பல பெரிய கோவில்களில் திருச்சுற்று மேடைமேல் பல சிவலிங்கங்கள் இருத்தலைக் காணலாம். இவை ஏன் ஒரே கோவிலில் பலவாக இருக்கின்றன? சோழர் கால அரசாங்க அலுவலரும் பிறரும் தம் ஊரில் வழிபட்டு வந்த லிங்கத்தை நினைவிற்கொண்டு, தாம் புதிதாகப் பதவியேற்ற ஊர்க் கோவில்களிலும் அத்தகைய லிங்கங்களை அமைத்து வழிபடுதல் அக்கால மரபாக இருந்தது என்பதைப் பல கல் வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, இவ்வுண்மையை உணர்ந்தவர் ஒரே கோவிலில் பல லிங்கங்களும், பல விநாயகர் உருவச் சிலைகளும் முருகன் உருவச் சிலைகளும் இருத்தலைக் கண்டு குழப்பமடையார்; காலப்போக்கில் அவற்றுட் பல உருவச் சிலைகள் பூசையும் பொலிவும் இழந்து நிற்கும் பரிதாபக் காட்சியைக் காணும்போது, இவ் வரலாற்றை உணர்ந்தால் ஆறுதல் அடைவார்.

கல் தச்சருக்கு நன்றி
பல்லவர் காலத்தில் செங்கற்கோவில்களாகவும் சிறிய உருவினவாயும் இருந்த பல கோவில்கள் சோழர் காலத்தில் இங்ஙனம் கற்றளிகளாகவும் பெரிய உருவினவாகவும் மாறியதற்குச் சோழர் காலச் சைவசமய வளர்ச்சியே காரணமாகும். அவற்றைக் கற்றளிகளாக மாற்றிய கல் தச்சர்களின் பக்தியும் தொழில் திறமையும் பாராட்டத் தக்கன அல்லவா? சோழர் அத்தச்சர்களைப் பாராட்டினர்; நிலங்களை மானியமாக வழங்கினர். திருவா வடுதுறைக் கோவிலைக் கட்டிய கற்றளிப் பிச்சன் உருவம் அக்கோவிலில் இன்றும் இருக்கக் காணலாம்.

சூரியனார் கோவில் 
சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம்பட்டனத்திலிருந்த பல கோவில்களுள் `உச்சிக்கிழான் கோட்டம்` (கனாத்திரம் உரைத்த கதை) என்பது ஒன்று.

`உச்சிக்கிழான்` என்பது சூரியனுக்குப் பெயர். அவனுக்கொரு தனிக்கோவில் அப்பழங்காலத்தில் இருந்தது. ஆனால் சிலப்பதிகாரத்திற்குப் பின்னர் நாயன்மார் காலத்திலோ, கி.பி.10-ஆம் நூற்றாண்டு வரையிலோ, தமிழகத்தில் சூரியனுக்குத் தனிக்கோவில் இருந்தமை தெரியவில்லை. முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஆடுதுறைக்குப் பக்கத்தில் சூரியனார் கோவில் என்ற பெயரில் சூரியனுக்குத் தனிக்கோவில் கட்டப்பட்டது என்று ஒரு *கல்வெட்டு கூறுகின்றது.5 கருவறை மேற்குப் பக்கத்தை நோக்கியுள்ளது. கருவறையில் மூலக் கடவுள் சூரியனே. அதன் பக்கத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி உருவச் சிலைகள் உள்ளன. சூரியனுக்கு எதிரில் கருவறைக்கு முன்பாகப் பிரஹஸ்பதி சிலை காணப்படுகிறது. கருவறையின் முக மண்டபம் மட்டும் கருங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. நவக்கிரகங்களில் சூரியனும் பிர ஹஸ்பதியும் நீங்கலாகவுள்ள இராகு, சுக்கிரன், கேது, சந்திரன், அங்காரகன், புதன், சனி என்ற எழுவர்க்கும் கருவறையைச் சுற்றிச் செங்கற்களாலான தனிக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 
-----------------

இக் கோவில் முழுவதும் `குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம்` எனப் பெயர் பெற்றது என்று *கல்வெட்டு கூறுகின்றது. `இச்சூரியனார் கோவிலில் காசிவிசுவேசுவரர் சிலையும், விசாலாட்சி சிலையும் இருத்தலை நோக்க, காசியிலிருந்து *குலோத்துங்கன் காலத்தில் சூரிய வணக்கம் தமிழகத்தில் நுழைக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கருதுதல் பொருந்தும். சோழர் காலத்தில் கன்னோசி நாட்டை ஆண்ட `காஹடவால` அரசர்கள் சூரிய *வணக்கத்தைச் சிறப்பாகக் கொண்டவர்கள். குலோத்துங்கன் ஆட்சியில் சூரியனுக்கு என்று ஒரு தனிக் கோவில் கட்டப்பட்டதை நோக்க, குலோத்துங்க சோழனுக்கும், `காஹடவால` அரசருக்கும் அரசியல் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும்," என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். 
-----------------

தனித்தனியே இருந்த விநாயகர், முருகன், அம்மன் இவர்கள் காலப் போக்கில் சிவன் கோவிலுக்குள் இடம் பெற்றாற்போலவே, (சூரியனுக்கும் பிற கிரகங்களுக்கும் மேற்குறிப்பிட்டவாறு தனிக் கோவில் ஏற்பட்ட பிறகு) சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள் சிவன் கோவிலில் நாளடைவில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருந்தும்.

கோவிலுக்காக உயிர் துறத்தல்
(1) கோவில் வளர்ச்சியில் தமிழ் மக்கள் தம் செல்வத்தைச் செலவிட்டாற் போலவே தம்முயிரையும் தியாகம் செய்துள்ளனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. திருவக்கரை சிவன்கோவிலில் சோழர் காலத்தில் ஆயிரக்கால் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அது கட்டி முடிவதற்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றைக் கண்டு பொறாத சைவ நன்மகன் ஒருவன் அவ்விடையூறுகளுக்குப் பலியாகவும் மண்டபம் கட்டி முடிக்கப்படவும் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்று திருவக்கரைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. 

(2) மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் இலக்கியப் பழமை வாய்ந்தது. அங்குள்ள முருகப்பெருமான் பத்துப்பாட்டு, *பரிபாடல் என்னும் சங்கநூல்களில் பாராட்டப்பட்ட தெய்வம். பிற்காலத்தில் திருப்பரங்குன்றம் மலையில் குடைவரைக்கோவில் ஏற்பட்டது. அதற்குப் பின்பு குடைவரைக் கோவிலை அடுத்து மண்டபங்களும் பிறவும் கட்டப்பட்டன. சோழரும் பாண்டியரும் பின் வந்த நாயக்க மன்னரும் அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தனர். எனவே, அங்கு பல கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன.

கி.பி.1792-ஆம் ஆண்டு ஆங்கிலப் படைவீரர் திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றிக் கோவிலை நோக்கி விரைந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட *அர்ச்சகர், அவர்கள் நுழைவால் கோயிலின் தூய்மை கெடுமென்று அஞ்சினர்; குட்டி என்ற ஒரு தமிழனை, அப்படை வீரரைத் தடுக்க உயிர்த் தியாகம் செய்யும்படி வேண்டினர். உடனே அத் தமிழன் கோவில் கோபுரத்தின்மேல் ஏறினான்; அங்கிருந்து கீழே விழுந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்ட ஆங்கிலப் படைவீரர் அவனது தியாகத்தைப் பாராட்டிக் கோவிலுள் நுழையாது சென்றுவிட்டனர்.  இச் செய்தியை அக் கோவிற் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இத்தியாக வீரர்களுக்கு நமது வணக்கம் உரியதாகுக.