திருமந்திரம் – குறிப்புக்கள்

bookmark

திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும்,திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறை அவர் இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. "இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி" என்ற அவரது பாடல் வரிகள் உலகின் முதல் மனிதராகவும், முதல் சித்தராகவும், தமிழுக்கு ஆசானாகவும் வாழ்ந்துள்ளார். மேலும் "அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்" என்ற மற்றொரு பாடலில் அவர் எழுதியுள்ளார். ஆயினும் நமக்குக் கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம், முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பதும் மற்றொரு கருத்து. திருமந்திரத்தில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள `கடவுள் வாழ்த்து` என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது:

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது.இதனால், பல பாடல்களின் கருத்துக்கு  வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. `மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது` என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம்.

வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். 

நூல் பெருமை: இந்த நூல் பண்டைய சித்தர்களின் அறியக் கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி, பசு, பாசம் என்பனவற்றின் இணைப்பையும், உயர்ந்த முறையில் நமது வாழ்க்கை வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும், வழிகாட்டி நூலாகவும், சாத்திர நூலாகவும் போற்றப்படுகிறது. சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம், குண்டலினி யோகம், மருத்துவம், நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும். தோத்திரத்திற்குத் திருவாசகம், சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.